search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94580"

    ஜூலி அன்னே ஜெண்டர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
    வெலிங்டன் :

    நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆஸ்பத்திரி இருப்பதால் அவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார்.

    பிரசவ வலியுடனேயே அவர் சைக்கிளை ஓட்டி ஆஸ்பத்திரி போய் சேர்ந்தார். அங்கு சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு ஆழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளனர்.

    இதனிடையே பிரசவ வலியோடு சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர் “முக்கியமான செய்தி! இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது. ஆச்சரியப்படும் விதமாக இப்போது எங்களிடம் நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை உள்ளது. அவளின் தந்தையை போலவே” என குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம்.
    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து சேரச் சொல்லலாம்.

    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சிசேரியன் முடிந்த பிறகு தாய்மார்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சுகபிரசவம் செய்த பெண்கள் சீக்கிரமே தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவர். ஆனால், சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம்தான். என்னென்ன பராமரிப்புகள், வழிமுறைகள், டிப்ஸ் (C-Section Recovery Tips) போன்றவை இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

    * குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள். சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.

    * தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

    * டாக்டர் உங்களை நடக்கலாம் என சொன்னதும், நீங்கள் நடக்கத் தொடங்கிவிடுங்கள். நடப்பது நல்லது. குறைந்தது 20-30 நிமிடங்களாவது நடப்பது நல்லது.

    * உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம். குறிப்பாக, சத்தான உணவு வேண்டும். புரோக்கோலி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.

    * கர்ப்பக்காலம், பிரசவத்துக்கு பின் சில காலம் வரை மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கும். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் கால்களுக்கு சின்ன ஸ்டூல் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மலம் கழிக்க சுலபமாக இருக்கும்.

    * முதல் 6 வாரத்துக்கு அதிக எடையை தூக்க வேண்டாம். வலி முழுமையாக நீங்கிய பின் உங்களது தினசரி வேலைகளை செய்யலாம்.

    * சி-செக்‌ஷன் செய்த பிறகு, குழந்தை பிரசவித்த பிறகு ஒருவித மோசமான மனநிலை இருக்கும். இது இயல்புதான். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உங்கள் துணையுடன், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். மாம்ஸ் கம்யூனிட்டியில் சேர்ந்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    * சில வாரங்கள் வரை வஜினல் டிஸ்சார்ஜ் இருக்கும். குழந்தை வயிற்றில் இருந்த போது உள்ள தேவையில்லாத திசுக்கள், ரத்தம் ஆகியவை வெளியேறும். முதல் வாரம் அடர்சிவப்பாக வெளியேறும் பிறகு பிங்க், பிரவுன், மஞ்சள் என நிறம் மாறி வரும். அப்புறம் தானாக டிஸ்சார்ஜ் நின்றுவிடும். இதற்காக பயம் தேவையில்லை.

    * கொலஸ்ட்ரம் என்ற சீம் பால், உங்கள் குழந்தைக்காக உங்களது மார்பகங்களில் உருவாகுவதால் வீக்கமாக இருக்கலாம். இது இயல்புதான்.



    * சி-செக்‌ஷன் சர்ஜரி என்பது பெரிய சர்ஜரிதான். உடல் தன்னை சரிசெய்து கொள்ள நேரத்தை எடுத்துக்கொள்ளும். 6 வாரங்களுக்கு அவ்வப்போது ஓய்வு எடுங்கள். குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்குங்கள். குழந்தையின் துணி, டயாப்பர் மாற்ற உங்களது துணை, உறவுகள் ஆகியோர் உதவும்படி கேட்டு கொள்ளுங்கள்.

    * 6-7 வாரங்களுக்கு பிறகு நீங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். மிதமான, மெதுவான முறையில் ஈடுபடுவது நல்லது.

    * மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

    * முதல் 4-6 வாரங்கள் வரை ஸ்விம்மிங், டப்பில் சூடாக குளியல் போன்றவற்றைத் தவிர்க்கவும். அனஸ்திஷியா, மருந்துகள் ஆகியவை உடலிருந்து வெளியேற தினமும் ஒரு டம்ளர் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சை சாறை குடியுங்கள். இதனால் உடலில் சேர்ந்துள்ள மருந்து கழிவுகள் வெளியேறும்.

    * புரதம், இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். புரத உணவுகளை சாப்பிட்டால் திசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காயம் விரைவில் மறையும். ரத்தப்போக்கை ஈடு செய்ய இரும்புச்சத்து உணவுகள் உதவும். விட்டமின் சி உள்ள உணவுகள் தொற்றுகள் வராமல் பாதுகாக்கும்.

    * பட்டைத் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டையும் குழம்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இளநீர் குடிப்பது நல்லது. செம்பருத்தி டீ குடிக்கலாம். கர்ப்பப்பையை சுத்தமாக்கும்.

    * தழும்பின் மீது ஃப்ரெஷ் ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்துங்கள். ஸ்கரப் செய்ய கூடாது. மைல்டான பாடிவாஷ் பயன்படுத்துங்கள். தழும்பின் மீது விட்டமின் இ காப்சூலில் உள்ள எண்ணெயைத் தடவலாம்.

    * முதல் 3-4 மாதங்களுக்கு உங்கள் முடி அதிகமாக உதிரும். அடர்த்தி குறைந்து போகலாம். இதுவும் இயல்புதான். ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுகிறது. சிவப்பான, அடர் ஊதா நிறத்தில் கூட ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கலாம். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

    * நீங்கள் தும்மும் போது, இரும்பும் போது, சிரிக்கும்போது ஒரு கையால் உங்கள் வயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்.

    * 2-3 மூச்சுகள் ஆழ்ந்த மூச்சாக இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இதை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். இதனால் நுரையீரல் உள்ள அடைப்புகள் நீங்கும். படுத்துக்கொண்டே இருப்பதால் உள்ள அசௌகரியம் நீங்கும்.

    * மருத்துவர் அனுமதித்த பிறகு மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். யோகா, ஜிம் செல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். 
    ஒரு குழந்தை எடை குறைவோடோ, ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
    கருவுற்றிருக்கும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் இது. இதனை நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொண்டால் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். ஒரு குழந்தை எடை குறைவோடோ அல்லது ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

    1. முழுமையாக 37 வாரங்கள் முடிவதற்கு முன்னரே குழந்தை சில சமயம் பிறப்பதால் எடை குறைவு ஏற்படக்கூடும். அதாவது குழந்தை குறை மாதத்தில் பிறந்துவிடுவது. இதற்குக் காரணம் தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் எடை கடைசி மூன்று மாத கர்ப்பகாலத்திலே போதிய எடை வளர்ச்சியை அடையும். இது நிகழாத போது, குழந்தையின் எடை நிச்சயம் குறைவாகத் தான் காணப்படும்.

    2. ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கருவில் சுமக்கும் போது இத்தகைய எடை குறைவு ஏற்படக்கூடும். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் கருத்தரித்திருந்தால் குழந்தைகளுக்குப் போதுமான சத்துணவு கிடைக்காமல் 2500 கிராமிற்கும் கீழே எடை குறையக்கூடும். ஏனென்றால் ஒரு குழந்தைக்குச் செல்ல வேண்டிய சத்துக்கள் இன்னொரு குழந்தைக்குச் சென்று விடலாம். அதனால் ஏதாவது ஒரு குழந்தை பலவீனமாக இருக்கலாம் அல்லது ஏனைய குழந்தைகளும் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.ஆக இந்தக் குழந்தைகள் பிறக்கும்போது எடைக் குறைவோடே காணப்படுவார்கள்.

    3. கருவுற்றிருக்கும் தாய் அதிக இரத்தக் கொதிப்போடு பிரசவ காலத்திலிருந்தால் அது குழந்தையைப் பாதிக்கக் கூடும். இதனால் குழந்தை குறைந்த எடையோடு பிறக்கக்கூடும். இதனைத் தவிர்க்கத் தாய் கர்ப்பகாலத்தில் அமைதியான மனநிலையோடு இருப்பதோடு ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதும் நல்லது.அதே கருவில் வளரும் குழந்தையின் எடை வளர்ச்சிக்கு நல்லது.

    4. கருவுற்றிருக்கும் பெண் புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும் வாழ்க்கைமுறைப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது குழந்தையின் எடை குறைபாட்டிற்குக் காரணம். மேலும் பதப்படுத்திய உணவுகளை உண்பது, துரித உணவுகளை அதிகம் உண்பது போன்ற விசயங்கள் எல்லாம் குழந்தைக்குப் போதுமான பிராண வாய்வு கிடைக்காமலும் போதிய சத்து கிடைக்காமலும் போகும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன. இதனால் கருவில் இருக்கும் குழந்தை எடை குறைவோடு பிறக்கும் சதவீதம் அதிகம்.

    5. கருவுற்றிருக்கும் தாயிற்கோ அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கோ சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் கர்ப்ப காலத்தில் உள்ளது. இதனால் குழந்தை பிறக்கும் போது எடை குறைவு அல்லது அதீத எடை போன்ற பிரச்சனைகளோடு பிறக்கக்கூடும்.இதைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் உணவு மேலாண்மையைக் கையாள வேண்டும்.



    6. கருவுற்றிருக்கும் தாய்க்குக் கருப்பையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தை எடை குறைவோடு பிறக்கக்கூடும். இதனால் வேறு பல பிரச்சனைகளும் குழந்தைக்கு ஏற்படக்கூடும். இது மருத்துவ பரிசோதனைகளும், ஆலோசனைகளும் மிக முக்கியம்.

    7. கருவுற்றிருக்கும் தாய் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக சத்தான கீரை வகைகள், பழங்கள், காய் மற்றும் பசும் பால் போன்ற ஊட்டச்சத்து நிரம்பிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தை சீரான உடல் எடையோடு பிறக்கும்.

    8. தாய் கருவுற்றிருக்கும் போது தாயிற்கோ அல்லது குழந்தைக்கோ நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் குழந்தை பிறக்கும் போது உடல் எடை குறைபாட்டோடு பிறக்கக்கூடும். இதனால் கர்ப்ப காலத்தில் நோய்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் தாயிற்கு ஏற்படும் எந்த வித நோய்ப் பாதிப்புகளும் கருவில் வளரும் குழந்தையையும் தாக்குகின்றன. இதன் விளைவாக அந்த குழந்தை பிறக்கும் போது உடல் எடை குன்றியே காணப்படுகிறது.

    9. சரியான பருவத்தில் தாய் கருவுற வேண்டும். குறைந்த வயதிலோ அல்லது அதிக வயதிலோ ஒரு பெண் கருவுற்று குழந்தை பெற எண்ணினால், அதுவும் உங்கள் குழந்தை எடை குறைபாட்டோடு பிறக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். அதனால் பெண்கள் இயன்ற வரை உரிய வயதில் தாய்மை கொள்வது நல்லது.

    10. கருவுற்றிருக்கும் பெண் முடிந்த வரை மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் தனது கர்ப்ப காலத்தில் இருக்க வேண்டும். தாய் மனச் சோர்வோடும் மன அழுத்தத்தோடும் இருந்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக் கூடும். ஆக தாய் மனத் தெளிவோடு எந்த ஒரு விசயத்திற்கும் கவலை கொள்ளாது தன் கர்ப்ப காலத்தைக் கழித்தால் பிறக்கும் குழந்தை போதிய எடையோடு நிச்சயம் இருக்கும்.

    இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் புரிந்து கொண்டு தன் குழந்தை சரியான உடல் எடையோடும் ஆரோக்கியத்தோடும் பிறக்க உதவ வேண்டும். 
    உங்களுக்குக் குழந்தைப் பிறந்து விட்டதா? தற்போது மன அழுத்தத்தோடு எப்படி உங்களது வேலைகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு பெண்ணும், தான் கருவுற்றிருக்கும் காலத்திலேயே எப்படி நாம் குழந்தை பிறந்த பின் சூழலைச் சமாளிப்பது, மேலும் தங்களது வேலைகளை எளிதாக்கிக் கொண்டு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

    உங்களுக்குக் குழந்தைப் பிறந்து விட்டதா? தற்போது மன அழுத்தத்தோடு எப்படி உங்களது வேலைகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? கவலை வேண்டாம்! உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் குழந்தை, கணவர் மற்றும் குடும்பத்தினர்களுடன் வாழ துணைபுரியும் குறிப்புகளை பார்க்கலாம்.

    * சத்தான உணவு (Nutritious food)

    முதலில் உங்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முடிந்த வரை புரதம், உயிர்ச்சத்துகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த வேலை இருந்தாலும் சரியான நேரத்திற்குப் பசித்தவுடன் சாப்பிட வேண்டும். இது உங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவும்.

    * போதுமான தூக்கம் (Enough sleep)

    உங்கள் குழந்தை மட்டும் போதுமான நேரம் தூங்கினால் பற்றாது. நீங்களும் தூங்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தையை நீங்கள் நன்றாக வளர்க்க முடியும். நீங்களும் ஆரோக்கியத்தோடும் நல்ல சிந்தனைகளோடும் அவனை/அவளை வளர்க்க முடியும். முடிந்த வரை உங்கள் குழந்தை தூங்கும் போதே நீங்கள் தூங்கி விடுங்கள். மற்ற வீட்டு வேலைகளை ஒத்தி வையுங்கள்.

    * உடற்பயிற்சி (Exercise)

    இது முக்கியமான ஒன்று. அநேக தாய்மார்கள், குழந்தை பிறந்தவுடன் தங்கள் உடல் தோற்றம் மற்றும் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதில்லை. இதனால் அவர்களது உடல் எடை சராசரிக்கும் அதிகமாக ஆவதோடு, பல நோய்களும் காலப்போக்கில் ஏற்படுகின்றன. அதனால் முடிந்த வரை தினமும் 10 முதல் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.

    * பெரிய வாழ்க்கை மாற்றங்களைத் தள்ளி வையுங்கள் (Postpone major changes in life)

    குழந்தை பிறந்தவுடன் அநேக தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்ய முயற்சி செய்வார்கள். குறிப்பாக வீடு மாறுவது, வேலை மாற்றம், இட மாற்றம், வெளி நாட்டிற்குக் குடி பெயருவது என்று மேலும் பல. ஆனால் நீங்கள் குழந்தை பிறந்தவுடன் அத்தகைய மாற்றங்கள் செய்ய முயலும் போது உங்கள் உடலும் மனமும் அதிக வேலைச் சுமையாலும் அதிக பொறுப்புகளாலும் சக்தி இழக்கின்றன. இதனால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கக் கூடும்.

    * மகிழ்ச்சியாக இருங்கள் (Be happy)

    ஒவ்வொரு பெண்ணும், குழந்தையைச் சுமக்கும் போது மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது, அவள் குழந்தை பிறந்த பிறகுதான் அதிக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, குழந்தை, கணவன் மற்றும் தன்னையும் சரியாகக் கவனித்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.

    * உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் (Prepare yourself)

    குழந்தை பிறப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரே உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், தாய் மற்றும் பாட்டி உட்படப் பலரிடம் ஆலோசனை மற்றும் சில அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவை சமயத்தில் உங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு எளிதாக வேலையைச் சமாளித்து மகிழ்ச்சியாக வாழ உதவும்.

    * உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் (Hire a maid)

    அனைத்து வேலைகளையும் நீங்களே செய்ய முயற்சி செய்யாதீர்கள். குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு போதுமான ஓய்வு தேவை. அந்த ஓய்வுக் காலத்தில் உங்கள் தளர்ந்த எலும்பு மற்றும் உடல் உறுப்புகள் இழந்த சக்தியை மீண்டும் பெற்று உரிய ஆரோக்கியத்தை அடையும். அதனால் உங்களுக்கு உதவ ஒருவரை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.

    * போதுமான நீர் பருகுங்கள் (Drink enough water)

    நம்மில் பலர் நீர் அருந்துவதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நீங்கள் போதுமான நீரைப் பருகும் போது உங்கள் உடல் நல்ல சக்தி பெறும். உங்கள் மனமும் தெளிவு பெறும். இதனால் மன அழுத்தம் குறையும்.

    * யோகா மற்றும் தியானம் செய்யுங்கள் (Practice yoga and meditation)

    நீங்கள் தினமும் சில நிமிடங்கள் யோகா மற்றும் தியானம் செய்வதால் உங்கள் மன அழுத்தம் பெரிய அளவில் குறைந்து தெளிவான மனதோடும், சிந்தனையோடும், ஆரோக்கியத்தோடும் இருப்பீர்கள். இதனால் நீங்கள் உறுதியாக மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

    * இசை (Music)


    மன அழுத்தத்தைக் குறைக்க இசை பெரிய பங்கு வகிக்கிறது. உங்களுக்குப் பிடித்த மற்றும் உங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரின் இசையை அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதோ அல்லது வீட்டு வேலை பார்க்கும்போதோ கேளுங்கள். உங்கள் மனம் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள். மேலும் உங்கள் குழந்தையும் அந்த இசையை இரசிக்கத் தொடங்கும். இது உங்கள் குழந்தையை நீங்கள் சமாதானப்படுத்த மற்றும் விரைவில் தூங்க வைக்க ஒரு எளிதான வழியாக இருக்கும்.

    இங்குக் கொடுக்கப்பட்டுள்ள 10 குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இனி நீங்கள் தேவை இல்லாமல் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மருத்துவரை அணுகுவது என்று எதுவும் செய்யத் தேவை இல்லை. இந்த எளிய முறைகள் நிச்சயம் உங்களுக்கு நல்ல மகிழ்ச்சியான சூழல், உடல் நலம் மற்றும் மன நலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் நீங்கள் உங்கள் குழந்தையோடு மகிழ்ச்சியான நேரத்தைக் கழிப்பதோடு உங்கள் கணவருக்கும் நல்ல நேரத்தை ஒதுக்க முடியும்.
    பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பப்பை இறக்கத்தால் பாதிக்கப்படுகிற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
    கருவில் குழந்தையை சுமக்கும் அனைத்து பெண்களும் விரும்பும் விஷயம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பது தான். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும். 6 மாதத்திற்கு எந்த ஒரு கடினமான வேலையும் பார்க்கக்கூடாது என்று பாடாய் படுத்திவிடும் சிசேரியன் முறை குழந்தை பிறப்பு. எனவேதான் பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    சுகப்பிரசவம் ரொம்பவே நல்லதுதான். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பப்பை இறக்கத்தால் பாதிக்கப்படுகிற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேற்றுவது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்... இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை தளர்த்திவிடும்.

    பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும், அதிக எடை தூக்குதல், ரொம்பவும் உடம்பை வருத்துகிற மாதிரியான வேலைகளைச் செய்வதன் மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை பொதுவாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்து இறங்கிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றின் முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும், இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தைத்துவிடலாம். இதனால் கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.

    கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டால் அது தனக்குப் பக்கத்துல உள்ள சிறுநீர்ப்பை, மலப்பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும். சிறுநீர்ப்பை இறங்கத் தொடங்கினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், முழுமையாக சிறுநீரை வெளியேற்றாத உணர்வும் ஏற்படும். தவிர, அந்தப் பைக்குள் எப்போதும் சிறுநீர் தங்கி, நோய் தொற்றினை ஏற்படுத்தும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

    இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்திலேயும் பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும்போது சிறுநீர் பை, மலப்பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் அவர்கள்.

    எதையுமே கவனிக்காமல் விட்டால், பிரச்சனை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம். பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாமல், கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள் பலவீனமாகி, அதன் விளைவாக, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமாக ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும் என்றும் ஆறுதலாக தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
    தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.
    மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலிகள், பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் இவற்றையெல்லாம் சந்திப்பது, பெண்களைப் பொருத்தவரை இன்றளவும் சவாலான விஷயங்களாகத்தான் இருக்கின்றன. தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.

    ஆனால், அது வசதி படைத்தவர்களுக்குத்தான் சாத்தியமாகிறது. சாதாரண மக்களுக்கும் சென்றடையும் வகையில், இப்போது பிஸியோதெரபி பயின்ற சில பெண் மருத்துவர்கள் வீடு தேடி வந்தும் கற்றுத் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.

    ‘‘கர்ப்பம் தரித்த முதல் மாதத்திலிருந்தே பெண்களுக்கு உடலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பத்தோடு தொடர்புடைய உடற்கூறு மாற்றங்களானது உடலின் வளர்ச்சி, நீரை தக்க வைத்து, பிரசவத்திற்குத் துணை புரியும் கட்டமைப்புகளை தளர்வடையச் செய்தல் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்கள் முதுகெலும்பு மற்றும் உடலின் எடையைத் தாங்கக்கூடிய மூட்டுகளில் மேலும் சுமையை அதிகரிக்கும்.   

    கருவின் வளர்ச்சிக்கேற்ப ஒரு பெண்ணின் அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதிகளில் தசைகளில் இறுக்கம் ஏற்படும். ஏனெனில், எடை அதிகரிக்க, அதிகரிக்க அப்பகுதிகளில் அழுத்தம் ஏற்படுவதால் தசைகள் வலுவிழந்து இறுக்கமடைகின்றன. தசைகள் வலுவடைவதற்கான இறுக்கமாக இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. எலும்பு மூட்டுகளை இணைப்பவையாகவும், மூட்டுகளில் முக்கிய ஆதரவாகவும் விளங்கும் தசை நார்கள் மென்மை அடைந்துவிடும்.

    தசைகளில் ஏற்படும் இந்த இறுக்கம் மற்றும் தசை நார்கள் வலுவின்மையால், 2-வது ட்ரைமெஸ்டர் காலங்களில் தோள் பட்டை மற்றும் கழுத்து வலி, கீழ் முதுகுவலி, இடுப்பு வலி, கணுக்கால்களில் வலி மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை என பல்வேறு பிரச்னைகளுக்கு மூல காரணமாகிறது. கர்ப்பம் ஒரு பெண்ணின் உடலில் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. மேலும், பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை திரும்பும்போது ஏற்படும் அழுத்தத்தை தாங்குவதற்கேற்றவாறு இடுப்பு தசைகள் விரிந்து கொடுப்பதும், பிறப்புறுப்பின் தசைகள் தளர்வடைவதும் அவசியம்.

    பிஸியோதெரபி மருத்துவர் உதவியோடு கருவுற்ற தாயின் சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் குடல் ஆகியவற்றை ஆதரிக்கும் முக்கிய தசைகளுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம், கர்ப்ப காலத்திலும், அதற்குப் பின்னரும் ஏற்படும் வலிகளைத் தடுக்க முடியும். கர்ப்ப காலத்திலேயே தசைகளுக்கு வலுவூட்டுவதன் மூலம் பிரசவ வலி மற்றும் பிரசவத்திற்குத் தயாராகும் தசைகளை (வயிறு, இடுப்பு மற்றும் பின்புற தசைகள்) கட்டுப்படுத்துவதற்கான திறனைப் பெற முடியும். பிரசவ நேரத்தில், எப்படி இடுப்புப்பகுதியில் (Pelvic floor) திறம்பட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இயன்முறை மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

    சரியான அழுத்தம் கொடுப்பதால் Pelvic floor-ல் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் பிரச்னைகளின் வாய்ப்பை குறைக்கும். ஏனெனில், பிரசவ நேரத்தில் இடுப்பில் ஏற்படும் அதிர்ச்சி, ஒரு பெண்ணுக்கு உடலுறவின்போது வலி, சிறுநீர் வெளியேற்றம் கட்டுப்படுத்துவதில் சிரமம் (Urine incontinence) மற்றும் இடுப்பு உறுப்பு பிறழ்வு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

    இடுப்பு மண்டலத்தில் உள்ள தசைகள், இணைப்பு திசுக்கள் மற்றும் நரம்புகளை மதிப்பிடுவதற்கு இயன்முறை மருத்துவத்தில் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் உள்ளன. ஒரு இயன்முறை மருத்துவர் உதவியோடு இந்தப் பயிற்சிகளை செய்வதால் பிரசவ நேரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை கர்ப்பிணிப்பெண் எளிதில் சமாளித்துவிடலாம்.

    கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்குப் பின்னரும், இடுப்பு மற்றும் வயிற்று தசைகள் உள்ளிட்ட இடுப்பு உறுப்புகளை ஆதரிக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் ஒரு பெண் எந்த அளவிற்கு, விரைவாக தன் உடல் செயல்பாட்டை துவங்க ஆரம்பிக்கிறாள் என்பதைப் பொறுத்தே பிரசவத்திற்குப்பின் அவளது முந்தைய உடலமைப்பை விரைவில் மீட்டெடுக்க முடியும்.

    குழந்தை பிறந்த பிறகு பிரசவத்தின் போது இழந்த ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உங்கள் உடல் மீட்டெடுக்கும். முதல் மாதத்தில், ஒரு நாற்காலியிலிருந்து எழுவது, தொட்டிலிலிருந்து குழந்தையை தூக்குவது, தாய்ப்பால் கொடுப்பது, குளிப்பது போன்ற வழக்கமான தினசரி பணிகளைச் செய்வதற்கு ஏதுவானதாக உங்கள் உடல் இருந்தாலே போதுமானது.

    2, 3-வது மாதங்களில் உங்கள் உடல் கொஞ்சம் தேறிய பின்னர், 10 நிமிடங்கள் வரை செய்யக்கூடிய மிதமான பயிற்சிகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அதுவும் உங்கள் மருத்துவரின் ஆலோசனை மற்றும் பிஸியோதெரபிஸ்ட்டின் உதவியோடு செய்வது நல்லது. 4, 5 மாதங்களுக்குப்பிறகு, வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை படிப்படியாக அதிகரித்து செய்யலாம். 
    கர்ப்ப கால மிகை வாந்தி நோயினால் அளவுக்கதிமான வாந்தி இருந்துகொண்டே இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சாதாரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்கள் முதல் சில வாரங்களுக்கு வாந்தி எடுப்பார்கள். காலை வேளைகளில் இது ஓரிரு முறை இருக்கும். தாய்மார்களின் உடல் நிலையினை இது பாதிக்காது. இவர்கள் நன்கு உணவினை எடுத்துக்கொள்வார்கள். மேலும், எடை குறையமாட்டார்கள். ஆனால், கர்ப்ப கால மிகை வாந்தி நோயினால் அளவுக்கதிமான வாந்தி இருந்துகொண்டே இருக்கும்.

    இது, முதல் பிரசவத்திற்குத்தான் அதிகபட்சமான தாய்மார்களிடையே காணப்படும். இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இந்த கர்ப்ப கால மிகை வாந்தி நோயில், வாந்தி வரும் உணர்வும் வாந்தியும் உணவைக் கண்டால் ஒரு ருசியற்ற நிலையும் இருப்பதோடு அது சிறிது சிறிதாக அதிகரித்து அதனால் ஏற்படும் பட்டினியால் தாயின் உடல் நலத்தையே பாதித்துவிடும். இதனால் அத்தாய் உடல் எடையை இழப்பதோடு தோலெல்லாம் சுருங்கி, அவர்கள் செய்யக்கூடிய சாதாரண வீட்டு வேலையைக் கூடசெய்ய முடியாமல் படுக்கையில் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

    நோய் முற்றிய நிலையில் அத்தாய் மிகவும் மெலிந்து? கண்களெல்லாம் குழிவிழுந்து, தோல் உலர்ந்து, கண்களெல்லாம் மஞ்சள் பூத்து, நான்கு உலர்ந்து, உதடுகள் வெடித்து இருக்கும். வயிற்றில் மேல் பகுதி வலிக்கும். காபி நிறத்தில் வாந்தி வரலாம். பின்னர், நோயாளிக்குச் சிறுநீர் போவதும் குறைந்து மயக்க நிலைக்கு வந்து விடுவார்கள். நாடித்துடிப்பு வேகமாகவும் மெல்லியதாகவும் இருப்பதோடு இரத்த அழுத்தம் குறைந்துவிடும். உடல் வெப்பம் குறைந்து முழுமையான மயக்க நிலையினை நோயாளிகள் அடைந்து இறந்துவிடும் வாய்ப்புகள்கூட உண்டு. ஆனால், மருத்துவம் முன்னேற்றமடைந்த இன்றைய காலகட்டத்தில் இதனால் நோயாளிகளின் இறப்பு என்பது நிகழக்கூடியது அல்ல.

    கர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை

    இந்நோய்க்கு, சாதாரண உணவு மாற்றங்களும், நம்பிக்கை அளித்தலுமே போதுமானதாகும். ஆரம்பக் கட்ட கர்ப்பத்தில் வாந்தி வருவது சாதாரண நிகழ்ச்சியே என்பதை எடுத்துச் சொலி, உணவு விஷயத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். நீண்ட இடைவெளிய்ல் அதிக அளவு உணவு உட்கொள்வதை விடுத்து சிறிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக உணவினைச் சாப்பிடுவது நல்லது. அதோடு மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சாப்பிட்டாலேயே இந்நோய் குணமாகிவிடும். கடுமையான நோயுடைய தாய்மார்களுக்குச் சிரை (இரத்தக்குழாய்) வழியாக குளுகோஸ் கொடுக்க வேண்டியதாயிருக்கும்.
    'எபிடியூரல் டெலிவரி' என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.
    மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது.

    பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

    1. குழந்தையின் எடை.
    2. கருவறையில் குழந்தையின் நிலை.
    3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.
    4. சுருங்கும் தன்மையின் வலிமை.
    5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு

    என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார்கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.

    இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் 'எபிடியூரல் டெலிவரி' என்பது!

    'எபிடியூரல் டெலிவரி' என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.

    நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.

    எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.

    ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார்கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும் ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.



    எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!

    குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.

    ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.

    இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.

    ''இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘

    ''எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவு கள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘

    தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்கும். ''பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘

    ''பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். 
    குறைபிரசவத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் எச்சரிக்கையாக இருந்தால் அதை தள்ளி போடலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குறைபிரசவம் என்றால் என்ன?

    பொதுவாக கருவின் வயது 40 வாரங்கள் என வரையறுக்கபட்டுள்ளது. ஆனால் இந்த 40 வாரங்கள் முற்று பெறாமல் 37 வாரங்களிலோ அல்லது அதற்கு முன்போ பிரசவம் தொடங்கி விட்டால் அதை குறைமாதபேறு அல்லது குறைபிரசவம் என சொல்கிறார்கள். கர்ப்பிணி பெண்களில் குறைந்தது 10% பேருக்கு இந்த குறைமாத பேறு உண்டாகிறது.

    குறைபிரசவம் எதனால் ஏற்படுகிறது?

    குறைபிரசவம் உண்டாவதற்கான சரியான காரணம் இது தான் என வரையறுக்க முடிவதில்லை. சில சமயம் பெண்களின் இயக்குநீர்கள், நச்சுக்கொடி, வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம் என சொல்லபடுகிறது. கீழ்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்று குறைமாதபேறு உண்டாவதற்கு காரணமாக சொல்லபடுகிறது.

    1. கர்ப்ப பையின் வாய்ப்பகுதி பலமில்லாமல் இருந்தால்
    2. கர்ப்ப காலத்தின் தொடக்க காலத்தில் ரத்த போக்கு உண்டாகியிருந்தால்
    3. இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருந்தால்
    4. சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால்
    5. கர்ப்ப காலத்தில் சரியான சத்து மிகுந்த உணவை உட்கொள்ளாமல் இருந்தால்.

    குறைபிரசவம் ஏற்பட போகிறது என்பதை எவ்வாறு கண்டறிவது?

    குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பது முன்பே தெரிந்துவிட்டால் மருத்துவரை அணுகி உங்களின் பிரசவத்தை சில நாட்களுக்கு
    ஒத்தி வைக்கலாம். கீழ்காணும் இந்த அறிகுறிகள் குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பதன் முன்னறிவிப்பாகும்.

    1. பிறப்புறுப்பிலிருந்து நீரானது ரத்தகசிவுடன் வெளியாவது

    2. அளவுக்கு அதிகமான அழுத்தமானது இடுப்பு மற்றும் அடிவயிற்றில் ஏற்படுவதால்

    3. பிரசவ காலத்தில் ஏற்படும் கர்ப்பபை சுருங்கி விரியும் நிகழ்வு இப்போதே ஏற்படும்.

    குறைபிரசவத்தை எவ்வாறு தடுக்கலாம்?

    குறைபிரசவத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் எச்சரிக்கையாக இருந்தால் அதை தள்ளி போடலாம். உங்கள் மகபேறு மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் சந்திப்பது நல்லது. இதற்கு முன்பே குறைமாத பேறு ஏற்பட்ட பெண்களுக்கு மருத்துவர் ப்ரோஜெஸ்டிரான் ஊசியை போடுவதன் மூலம் குறைமாத பேறு ஏற்படாமல் தடுப்பார்.

    மேலும் கனமான பொருட்களை கையாள கூடாது, சிரமம் நிறைந்த வேலைகளை செய்யகூடாது மேலும் உடலுறவு கொள்ள கூடாது. இவற்றை கடைபிடித்தால் குறைபிரசவத்தை தள்ளி போடலாம்.

    எல்லாக் குழந்தைகளுக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தந்தையும் முக்கியம்தான். பிரசவத்தின் போது மனைவிக்கு மனதளவில் தயாராக கணவன் உதவ வேண்டும்.
    கர்ப்பம் என்பது நோயல்ல அச்சப்படுவதற்கு... அது பெண்ணுக்கே கிடைத்துள்ள ஓர் அற்புதமான அனுபவம் உணர்ந்து ரசிப்பதற்கு! கர்ப்பிணியானவள் தான் தாயாகப் போகிறோம் எனும் மகிழ்ச்சி ஒருபுறம், சுகப்பிரசவம் ஆக வேண்டும் எனும் எதிர்பார்ப்பு மறுபுறம் மனதை அழுத்த, இரு வேறு மனநிலைகளையும் சமாளித்துக்கொண்டு, தன்னைக் கவனித்துக்கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவையும் பேணிக்கொண்டு வருகிறாள்.

    குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார் எனும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் கர்ப்பிணியைப்போல் கணவருக்கும் தொற்றிக் கொள்வதுண்டு. கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மனைவிக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையே உதிர்க்க வேண்டும். முக்கியமாக மூன்றாவது டிரைமெஸ்டரின்போது, மனைவிக்கு ஆதரவாகவே பேச வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் வாக்குவாதம் கூடாது. மனதளவில் காயப்படுவதற்கு வாய்ப்பே தரக்கூடாது.

    ஒருவேளை மனைவிக்கு சிசேரியன் தேவைப்படுமானால், அதற்கு அவர் மனதளவில் தயாராக உதவ வேண்டும். கணவரும் அதற்குத் தயாராகிவிட வேண்டும். மருத்துவர் அனுமதித்தால், பிரசவத்தின்போது மனைவியின் அருகில் கணவர் இருக்கலாம். கணவருக்கு இது ஒரு புதிய அனுபவமாகவும் மனைவிக்கு ஆறுதலாகவும் இருக்கும்.

    எல்லாக் குழந்தைகளுக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தந்தையும் முக்கியம்தான். எனவே, குழந்தை பிறந்தவுடன், எவ்வளவு விரைவில் குழந்தையைத் தூக்கிவைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவில் தூக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தந்தைக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு வலுப்படும். குழந்தை பிறந்த பிறகும் மனைவிக்கு உணர்வுபூர்வமாக மிகுந்த ஆதரவை அளிக்க வேண்டும். குழந்தையின் வளர்ப்பிலும் பங்கெடுத்துக்கொள்ளலாம். இவ்வாறான உதவிகள் தாயின் மனதில் உற்சாகத்தைக் கொடுக்கும். அது தேவையான தாய்ப்பால் சுரப்புக்கு உதவும்.
    ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போவதை சில அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
    பிரசவத்தில் மிகவும் சிக்கலானது குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக நிகழும் பிரசவம். அதாவது 37 வாரங்களுக்கு முன்னதாக நடக்கும் இத்தகைய பிரசவம் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது. இதனைக் குறை பிள்ளைப்பேறு என்றும், இப்படி குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தை என்றும் அழைப்பார்கள்.

    ஆரோக்கிய குறைபாடு, சுவாசிப்பதில் சிரமம், போன்ற பாதிப்புகள், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற தொற்று பாதிப்புகள் போன்றவற்றை இந்த குறைபிரசவ குழந்தைகள் எதிர்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

    குறை மாத பிரசவத்திற்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

    கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இந்த கருப்பை சுருக்கம் உண்டாகும். இந்த சுருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி அதிகரித்த அளவு இருந்தால் அது குறை மாத பிரசவ அறிகுறியாக இருக்கலாம். வயிற்றைச் சுற்றி இறுக்கமாக ஒரு கயிற்றால் கட்டுவது போன்ற வலி தோன்றும். இந்த வலி விட்டு விட்டு வரும். கீழே படுப்பதால் அல்லது உங்கள் அங்க நிலைகளை மாற்றுவதால் இந்த பிரசவ வலி குறையாது.

    கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இடுப்பில் ஒரு வித அழுத்த அவ்வப்போது உண்டாகும். ஆனால் இந்த அழுத்தம் மிக அதிகம் உணரப்படும்போது, அது குறை மாத பிரசவ வலியின் அறிகுறியாக இருக்கலாம். இடுப்பு வலி ஏற்படுவதன் காரணம், குழந்தை வெளியில் வர முயற்சிப்பது ஆகும். குழந்தை பிறக்கக் கூடிய நிலைக்கு வந்துவிட்டதை இந்த வலி உணர்த்தும்.

    பிறப்புறுப்பில் திடீரென்று அதிக நீர் வெளியேற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். குறைமாத பிரசவத்தின் மற்றொரு அறிகுறி, சிவப்பு இரத்தம் வெளியேற்றம் அல்லது நீர் வெளியேற்றம். கர்ப்பப்பை வாய் அல்லது பிறப்புறுப்பு வாய் திறந்து கொள்வதால் இந்த நீர் வடிதல் ஏற்படலாம்

    மாதவிடாய் வலியை ஒத்த வலி பிரசவத்தின் அறிகுறியாகும். மோசமான வயிற்று வலியைப் போல் தொடங்கும் இந்த வலி பிரசவ வலியின் ஆரம்ப அறிகுறியாகும். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வலி குறையாது.

    முதுகுத் தண்டின் கீழ் பகுதியில் அதிக வலி, மற்றும் உங்களால் எங்கும் அசைய முடியாத வலி, உட்கார முடியாமல் நிற்க முடியாமல் வலி ஆகியவை இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. வலியுடன் கூட, கீழ் முதுகு பகுதியில் ஒரு வித அழுத்தத்தை நீங்கள் உணர முடியும். அதிக பாரத்தை சுமக்கும்போது உண்டாகும் உணர்வு போல் இந்த உணர்வு இருக்கும்
    ×