என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபம்"

    • இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.
    • 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

    காங்கயம் :

    கார்த்திகை தீபத்திருநாள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் தான். அன்றைய தினம் வீடுகள் தோறும் விதவிதமான அகல் விளக்குகள் கண்ணைக் கவரும் வகையில் வரிசை கட்டியிருக்கும். வருகிற 6-ந் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அகல் விளக்குகள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, காங்கயம், அவிநாசி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட கைவினை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    காங்கேயம் பகுதியில் சம்பந்தம்பாளையத்தில் பாரம்பரியமாகமண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் கடந்த இரு மாத காலமாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வண்டல்மண், செம்மண் மற்றும் காற்றுமண் என்று சொல்லப்படும் மணல்கலந்த மண் சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சக்கர உருளையில் வைத்து நேர்த்தியாக பல்வேறு விதமான அகல்விளக்குகளை வார்த்தெடுக்கின்றனர்.

    இவ்வாறு தயாரான அகல்விளக்குகளை சூளையில் வைத்து சுட்டு பக்குவப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த 25ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்கள்தோறும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இருந்தபோது மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்குகள் பண்டமாற்று முறையில் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது மண்பாண்டங்களுக்கு பதில் பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்ததால் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான குடும்பத்தினர் வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதால் பண்டமாற்று முறை போய் ரொக்கத்திற்கு அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் மழைக்காலங்களில் அகல் விளக்குகள் தயாரிப்பு குறைவாக உள்ளது. போதிய களிமண் இல்லாத சூழலும், இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் தேவைக்கேற்ப காங்கயம்,திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தீபங்கள் தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. சிறிய விளக்குகள் ரூ.1 முதல் ரூ.3 வரையிலும், பெரிய மண் விளக்குகள் ரூ.5 முதல் ரூ.8 வரையிலும், ஐந்து முக தீபங்கள் ரூ.15 வரையிலும், குத்து விளக்கு போன்ற தீப வகைகள் ரூ.20க்கும் விற்க்கப்படுகிறது.

    இதுகுறித்து சம்பந்தம்பாளையத்தைச் சேர்ந்த மண்பாண்ட கைவினை கலைஞர் ஒருவர் கூறுகையில், நாங்கள் 5 தலைமுறையாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அருகில் உள்ள குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் செம்மண், காற்றுமண் கலந்து பிசைந்து உருவாக்கி வருகிறோம். நாளொன்றுக்கு தலா ஆயிரம் அகல் விளக்குகள் வரை தயாரித்து வருகிறோம்.

    இதில் சாதாரண விளக்கு, பஞ்சமுக அகல்விளக்குகள், கோயில்களில் ஏற்றப்படும் பெரிய அளவிலான விளக்குகள் என பல்வேறு வகையிலான விளக்குகளை தயாரித்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் விளக்குகளை காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இந்த சீசனில் மட்டும் 3 லட்சம் விளக்குகளுக்கு மேல் சப்ளை செய்வோம். ஆனால் களிமண் போதிய அளவில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மண் கொண்டு வருவதற்கு பல கெடுபிடிகள் உள்ளது.

    தாலுகா விட்டு பக்கத்து தாலுகாவுக்கு மண் கொண்டு செல்ல முடிவதில்லை. அடையாள அட்டையை காண்பித்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் களிமண் கொண்டு வரலாம் என அரசு அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டு குறைந்த அளவில் மண் கிடைத்ததால், உற்பத்தியும் குறைந்தது. இதனால் 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

    பாரம்பரியமாக தொன்று தொட்டு இந்த தொழிலை செய்து கொண்டு வருகிறோம். மக்கள் அனைவரும் களிமண்ணால் கையால் செய்த விளக்குகளை வாங்கி பயன்படுத்தினால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறவும் அவர்களின் வாழ்வாதாரம் காக்கவும் வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.

    • தீபவழிபாட்டில் சிறப்பானது ‘கார்த்திகை தீபம் ஆகும்.
    • முருகப் பெருமானைக் கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர்.

    தீபவழிபாடு பண்டைய காலம் தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது. சைவர், வைணவர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும் தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.

    இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் தெற்கே தீபவழிபாடு 'கார்த்திகை தீபம்' என்றும் கொண்டாடப்படுகிறது. தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. தீபவழிபாட்டில் சிறப்பானது 'கார்த்திகை தீபம் ஆகும். இது கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவதாகும். பண்டைய காலத்தில் சூரியன், சந்திரன், நெருப்பு இம்மூன்றையும் தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

    இன்று தினமும் காசியிலும், ஹரித்து வாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 'கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள்' என்ற பொய்கையாழ்வார் கார்த்திகை தீபத்தை பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார். காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதி யின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்தி ருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாக கூறியுள்ளார். மாணிக்கவாசகர், 'சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே' என்று சிவபெருமானை குறித்து பாடியுள்ளார்.

    குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் லட்சுமிகரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றி வைத்து கோவில்களில் தொண்டு செய்ததாக பெரிய புராணம் கூறுகிறது. அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு' என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன. இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகும். இந்த அறிவொளியைத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.

    முருகப் பெருமானைக் கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்தி கேயன் ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது. வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்று கருதி, அருட் பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் 'நமசிவாய' மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.

    ரிக்வேதத்தில் இந்திரனுக்கு அடுத்த படியாக அக்னி பகவான் முக்கிய இடம் பெறுகிறார். கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.

    கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மாலையில் தீபம் ஏற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

    • திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.
    • மலைமுகட்டில் சூட்சுமமாக ஒளிர்கின்ற ஜோதியைப் பார், என்பதே அதன் பொருளாகும்.

    திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது மட்டும்தான் தீப ஜோதியின் தரிசனம் கிட்டுகின்றது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் சூட்சமமாக திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு வேத சத்திய வாக்காகும்.

    மலை உச்சியைப் பார்! என்று ரமணர் உட்பட, பல மகான்களும் சொல்கின்ற பொழுது, மலை உச்சியில் மலைமுகட்டில் சூட்சுமமாக ஒளிர்கின்ற ஜோதியைப் பார், என்பதே அதன் பொருளாகும். எனவே, திருவண்ணாமலையை நோக்கியவாறே கிரிவலம் வருகின்ற பொழுது சர்வேஸ்வரனுடைய நெற்றிக் கண்ணில் ஒளிர்கின்ற ஜோதி சக்தியின் அணுவுள் அணுவாய், அணுவின் பிரிவாய் ஒளிர்கின்ற அந்த ஜோதியை உள்ளூர ஆத்ம ஜோதியாகத் தரிசிக்கின்றோம் என்பது இதன் பொருளாகும். இதுவே ஸ்ரீஅகஸ்திய பெருமான் அளிக்கின்ற ஜோதி தரிசன கிரிவல முறைகளுள் ஒன்றாகும்.

    ஆத்ம ஜோதி தரிசனத்திற்கு வழிவகுக்கின்ற உத்தமமான ஜோதி யோக முத்ரா கிரிவல முறை இது. ஆனால், இதற்கு தினம்தோறும் இல்லத்தில் விளக்கு தீப ஜோதியைத் தியானித்து தரிசிக்கின்ற வழக்கத்தைக் கைக்கொண்டால்தான் சூட்சும ஜோதியை ஓரளவேனும் உணர முடியும்.

    நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றோமே எங்களால் திருவண்ணாமலை கிரிவலம் வர முடியாதே என்று பலர் நினைக்கக்கூடும். உங்கள் ஊர் ஆலயத்தில் பெரும்பாலும் மூலவருக்குப் பின்னால் கோஷ்ட மூர்த்தியாக லிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றார் அல்லவா. தினந்தோறும் ஸ்ரீலிங்கோத்பவ சன்னதியில் மூன்று அகல் விளக்கு ஜோதிகளை ஏற்றி அதனைத் தியானித்து தரிசித்து வாருங்கள்.

    எங்கெல்லாம் ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றாரோ அங்கெல்லாம் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப ஜோதியின் சக்தி விரவி உள்ளது என்பதை உணருங்கள்.

    • மங்கலப் பொருட்களில் காமாட்சி விளக்கும் ஒன்று.
    • குத்து விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    விளக்குகளில் இது புனிதமானது. எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.

    பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர்.

    புதுமனை புகும்போதும், மணமக்கள் மணப் பந்தலை வலம் வரும் போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனை வருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப் படும் விளக்கும் காமாட்சியம்மன் திருவிளக்கே. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, 'நிறைநாழி' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கின் மீது தீபம் ஏற்றப்படும்.

    பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும்போது காமாட்சியம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.

    குத்து விளக்கு

    குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.

    ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்க ளுடன் கிடைக்கின்றன. உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.

    • எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும்.
    • இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தரும்.

    திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று ஒரு முறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள்.

    அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.

    தேவியும் அண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம் மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார். அந்த தினமே கார்த்திகை தீப திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம், ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது.

    தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார்.முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது.

    ஒருநாள் அகங்காரத்துடன் கோவிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங் கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கர வர்த்தி இருகை கூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கி அருளுமாறு வேண்டினார்.

    "தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் கோவிலில் தீப வரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப் போக்கில் உன் நோய் நீங்கும்" என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோவிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய்த் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது.

    இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து இனத்தவர்களும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது.

    ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும் வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும். எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும். என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அபிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.

    தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபாக உள்ளது.

    • அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் விளக்காகிறது.
    • கார்த்திகை மாதம் முழுவதுமே விளக்குகளை ஏற்றுவது நல்லது.

    கார்த்திகை சீர்

    கார்த்திகை தீபத்தைக் கொண்டாடுவதில் பெண்களே அதிகமான ஆர்வம் காட்டுகின்றனர். பெண்களுக்கு "கார்த்திகைச் சீர்" கொடுப்பதை மகிழ்ச்சியான கடமையாக சகோதரர்கள் கருது கின்றனர். கல்யாணமோ கார்த்திகையோ! என்று இந்தப் பண்டிகையை சுபமங்கள வைபவமாக கொண்டாடுகின்றனர்.

    பெரிய கார்த்திகை

    பண்ணிரெண்டு தமிழ் மாதங்களிலும் கிருத்திகை வருகிறது. எனினும் கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியுடன் சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆகவே, இதனை, "பெரிய கார்த்திகை" என்று போற்றுகின்றனர். கார்த்திகை மாதம் முழுவதுமே தினசரி மாலையில் அகல் விளக்குகளை ஏற்றுவது நல்லது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இவ்வழக்கம் இன்றும் உள்ளது.

    தீப ஒளி ஏன் ?

    ஐப்பசி மாதம் முழுவதும் அடைமழைக் காலமாகும். இதனால் மழை ஓய்ந்த பிறகு நோய்க் கிருமிகள் உற்பத்தியாகிவிடும். அவை வளர்ச்சி அடைந்து மார்கழியில் காலரா முதலான நோய்களை ஏற்படுத்தும். கார்த்திகை விழாவில் இல்லந்தோறும் நூற்றுக் கணக்கில் நல்லெண்ணை தீபங்களை ஏற்றினால் நோய்க் கிருமிகள் நம் அருகில் வராமல் விரட்டி விடலாம். இது நம் முன்னோர் கண்டு பிடித்த ஆச்சரியமான அறிவியல் உண்மையாகும். கோயில்களில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றின் சுடரின் பயனாக நோய்க்கிருமிகள் அழிந்து போகின்றன.

    விளக்கு வந்த கதை

    மனித நாகரிகத்தின் வளர்ச்சியே, அவன் விளக்கைக் கண்டு பிடித்த நாளில் தான் தொடங்கியது. மரக்கட்டைகளையும், விலங்குகளின் கொழுப்பையும் கொண்டு ஆதிமனிதன் விளக்கேற்றினான். பின்னர் சங்கு, கிளிஞ்சல் போன்ற பொருட்களை விளக்கு ஆக்கினார்கள். அதன்பின் மனிதன் கண்டு பிடித்த அகல்விளக்கு இன்று வரை பயன்பட்டு வருகிறது.

    எது விளக்காகிறது?

    அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் விளக்காகிறது. அதுபோல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் வாழ்க்கையின் பலன்கள் ஆகும். அவற்றைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிகளால் பெறலாம். நமிந்தி அடிகள், கலியநாயனார் போன்றவர்கள் திருவிளக்கேற்றும் திருப்பணியைச் செய்து இறைவன் அருளைப் பெற்றனர்.

    குப்பைக் கார்த்திகை

    கார்த்திகைப் பண்டிகையின் முதல் நாள் பரணி தீபம். இரண்டாம் நாள் கார்த்திகைத் தீபத்திருவிழா. மூன்றாம் நாள் "குப்பைக் கார்த்திகை" என்று கொண்டாடப்பட வேண்டும். அன்று, மாட்டுக் கொட்டகை, கொல்லைப்புறம், குப்பைத் தொட்டி ஆகிய எல்லா இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றுவதை தமிழர்கள் பல நூற்றாண்டு பாரம்பரிய பழக்கமாக வைத்துள்ளனர்.

    • விளக்குக்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும்.
    • தீபம் ஏற்றும்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் போட வேண்டும்.

    கார்த்திகைத் திருநாளன்று காலையில் குளித்த பிறகு சிவனைத் துதிக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து வில்வ இலையால் அர்ச்சிக்க வேண்டும். பருப்பு வடை, பருப்பு வெல்லப் பாயசம், சாம்பார், அன்னம் முதலியவற்றைச் சமைத்துச் சிவன் பார்வதிக்கு படையலிட வேண்டும். இந்த நிவேதனங்கள் காளிக்கும் உகந்தவை என்பதால் அத்தெய்வத்தையும் திருப்தி அடையச் செய்யும் என்பது ஐதீகம்.

    அவல் பொரி, நெல்பொரி ஆகியவற்றில் பாகு சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும். உருண்டையாகப் பிடிக்க வராவிட்டாலும் பரவாயில்லை. வெல்ல அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றைச் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அகல் விளக்குகளைக் காலையில் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும். பின்னர் அவற்றை எடுத்துச் சுத்தமாகத் துடைத்து, ஆற விட வேண்டும். சந்தனம், குங்குமம் இட வேண்டும். பஞ்சு அல்லது நூல் திரி போட்டு, நல்லெண்ணெய்விட்டு விளக்குகளைப் பூஜை அறை அல்லது பூஜை அலமாரிக்கு அடியில், கோலமிட்ட மனைபலகையில் அழகாக அடுக்க வேண்டும். திரியின் நுனியில் கற்பூரத்துகள்கள் போட்டு வைத்தால், தீபத்தை எளிதில் ஏற்றிவிடலாம்.

    மலையில் அண்ணாமலை தீபம் ஏற்றியபின் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கத்தைச் சிலர் கொண்டிருப்பார்கள். அவ்வாறே தீபம் ஏற்றும்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் போட வேண்டும். தயாராக உள்ள பொரி உருண்டை, அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

    ஒவ்வோர் ஆண்டும், வெற்றிலை பாக்கு, பழம், பூ மற்றும் சன்மானத்துடன் சகோதரன் வாங்கிக் கொடுக்கும் புதிய விளக்குகளைத் தவறாமல் ஏற்ற வேண்டும். ஏற்றிய விளக்குகளை வாசலில் அணிவகுத்தாற் போல் வரிசையாக வைக்க வேண்டும். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் குளியல் அறை உட்பட அனைத்து இடத்திலும் ஒரு விளக்காவது வைக்க வேண்டும். தீபாவளிக்கு வாங்கிய மீதமுள்ள பட்டாசுகளை வெடித்துத் தீர்த்துவிடலாம். அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று சிவ தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை.

    • விளக்கு ஏற்ற சில விதிமுறைகள் உள்ளன.
    • அதிகாலை 4.30- 6மணிக்குள் விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்.

    விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.

    ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.

    சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.

    எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்

    தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

    திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

    திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.

    மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம்.

    விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

    வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

    எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவ ரீதியாகவும் ஒரு காரணம் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

    வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

    செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன.

    என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சர விளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

    • தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.
    • தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.

    எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

    • வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.
    • திரு விளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.

    ஐந்து முகக் குத்து விளக்கைப் பளிச்சென்று துலக்கி ஈரம் போகத் துடைத்து, ஐந்து முகங்களிலும் குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் பொட்டு வைக்க வேண்டும். பிறகு பீடத்திற்கும் குங்குமம், மஞ்சள், சந்தனப் பொட்டு வைக்க வேண்டும். பிறகு நல்ல வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.

    குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் பூச்சூட்டும் போது ஈன்ற தாயை, பிறந்த வீட்டை, அவர்கள் நலனை வேண்டி பூச்சூட வேண்டும்.

    நடுப்பகுதியில் பூச்சூட்டும் போது, கணவன், குழந்தைகள், புகுந்த வீட்டை நினைத்து, இல்லறம் நல்லறமாய் இருக்க பிரார்த்தனை செய்து பூச்சூட வேண்டும்.

    உச்சிப் பகுதியில் பூச்சூட்டும் போது, "தீப லட்சுமியே! உன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்" என்று மனமுருக வேண்டி பூச்சூட வேண்டும்.

    இவ்வாறு திரு விளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.

    விளக்கிற்கு ஏற்ற ஆசனம்

    விளக்குகளை வெறும் தரையில் வைக்கக்கூடாது! அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்சலோகம் முதலியவற்றால் ஆன ஒரு தாம்பளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினால் ஆன பலகையின் மீதாவது வைத்து, திருவிளக்கிற்கு ஏற்ற ஆசனத்தை அமைக்க வேண்டும்.

    விளக்கிற்கு பொட்டு இடுதல்!

    விளக்கிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் என உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும், அதன் கீழ் இரண்டும், அதற்கு அடியில் இரண்டுமாக, ஆக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.

    உச்சியில் இடும் பொட்டு நெற்றியில் இடுவதாகவும் அடுத்த மூன்று பொட்டும் முக்கண் முத்தீ என்கிற சூரியன், சந்திரன், அக்கினி என்று கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பொட்டுகள் கைகள் எனவும், கீழே இடும் பொட்டு இரு திருவடிகளாகவும் கருதி, இந்த எட்டு இடங்களிலும் பெட்டிட்டு வழிபட வேண்டும்.

    • அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.
    • கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது.

    அவினாசி :

    அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.இதையடுத்து இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் அறநிலையத்துறை ஒத்துழைப்புடன். இரண்டாம் முறையாக லட்சத்து எட்டு தீபத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் ,சமூக ஆர்வலர்கள், வழிபாட்டு குழுவினர் திரளானோர் ஆர்வமுடன் கோவில் பணிகளில் ஈடுபட்டனர். விருந்தாச்சலத்திலிருந்து லட்சத்து எட்டு அகல்விளக்குகள் கொண்டுவரப்பட்டது. தீபத்திருவிழாவிற்காக ஏராளமானோர் எண்ணை, திரி ஆசியவற்றை வழங்கினர். லட்சத்து எட்டு விளக்குகளில் பெண்கள் உள்ளிட்ட பலர் எண்ணை ஊற்றினர்.

    இதையடுத்து கோவில் சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவம் மண்டபம், கனகசபை கோயில்பிரகாரங்கள், தீபஸ்தம்பம், நடராசர் சன்னதி, அம்மன் சன்னதி. உள்பிரகார வழிநெடுகிலும் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட கோவில் வளாகம் முழுவதும், லிங்க வடிவம், நந்தி வடிவம் விளக்கு , வேல் உள்ளிட்ட பலவடிவங்களில் தீபம் பிரகாசித்து ஒளிர்ந்தது பக்தர்களை மிகவும் கவர்ந்தது.

    லட்சத்து எட்டு தீப திருவிழாவை காண அவினாசி,தெக்கலூர், கருவலூர், பழங்கரை, சேவூர், அன்னூர், திருமுருகன்பூண்டி, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் திரண்டனர்.முன்னதாக கோவை கவுமார மடாலய ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.இதையடுத்து கோவில் முன் | உள்ள தீபஸ்தம்பத்தில் கோவில் அர்ச்சகர் தீபம் ஏற்றிவைத்தார்.

    • தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும்.
    • திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை மாதம் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக சூரிய உதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30 முதல் 6 மணிக்குள்) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.

    மாலையில் தீபம் ஏற்றினால் திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மாலையில் வீடு முழுக்க விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகளுக்கு குறையாமல் ஏற்றுவதால் நிறைவான பலன்களைப் பெறலாம்.

    ×