என் மலர்
நீங்கள் தேடியது "Special articles"
- ரஜினி சார் என்றாலே எல்லோருக்கும் ஒரு விதமான பயம் கலந்த மரியாதை இருக்கும்.
- நயன்தாரா ஜோடியாக நடித்து இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென்று ஒருநாள் போனில் அழைத்தார்கள், 'மேடம், ரஜினி சாரை வைத்து ஒரு படம் தயாரிக்க போகிறோம். அந்த படத்தில் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம். கதை சொல்ல டைரக்டரை அனுப்பலாமா என்றார்கள்.
ரஜினி சார் என்றதும் உற்சாகம். எஜமான், முத்து, வீரா என்று அவரோடு நடித்த அத்தனை படங்களும் மெஹா ஹிட் படங்கள். அப்படியிருக்கும் போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு தேடி வந்தால் தவிர்ப்பேனா?
வரச்சொல்லுங்கள் என்றேன். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி சாரோடு இணைந்து நடிக்க வாய்ப்பு வருகிறது... என்கிற ஆசையில் கதை கேட்க ஆவலுடன் காத்திருந்தேன்.
டைரக்டர் சிறுத்தை சிவா வந்தார். கதை சொல்ல தொடங்கினார். அதுதான் 'அண்ணாத்த' படம்.
கதைப்படி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாது. நான், குஷ்பு இருவரும் அந்த படத்தில் உண்டு எனவும் இருவருக்கும் சகோதரிகள் பாத்திரம் தான் என்றார்.
நாங்கள் இருவருமே ரஜினி சாருக்கு ஜோடியாக நடித்தவர்கள். மேலும் முன்னணி நடிகைகள். எனவே ரஜினி சாருக்கு ஜோடி சேர்ந்த நாங்கள் துணை பாத்திரங்களில் நடித்தால் சரிவராது. ஆனால் இந்த படத்தில்தான் ரஜினி சாருக்கு ஜோடி இல்லையே. எனவே மற்ற பாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தவறில்லை என்றுதான் ஒத்துக்கொண்டோம்.
அதன் பிறகு சம்பளம் உள்ளிட்ட மற்ற செயல்கள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது. அந்த படத்தில் வக்கீல் கதாபாத்திரத்திற்கு யாரை போடலாம் என்ற பேச்சு வந்தபோது நாங்களே சிலரது பெயர்களை சொன்னோம். அந்த அளவு டைரக்டர் மற்றும் படக்குழுவுடன் நெருங்கிய நட்பில் தான் இருந்தோம்.
படப்பிடிப்பு தொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி சாருடன் நடித்தது. அதற்காக மேக்-அப் போட்டு விட்டு தனி கெட்டப்பில் நாங்கள்... அதேபோல் ரஜினி சார் தனி கெட்-அப்பில் வந்தார். ஒருவரை ஒருவர் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோடு அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இருந்தார்கள்.
'மருதாணி சிவப்பு... சிவப்பு' என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் ஏராளமாக ரோஜா இதழ்கள் கொட்டப்படும். அதில் நடந்து ரஜினி சார், நான், குஷ்பு ஆகியோர் டான்ஸ் ஆட வேண்டும். ரஜினி சார் ஆட தொடங்கியதும் பூவின் இதழ்கள் வழுக்கியதால் தடுமாறி நல்ல வேளையாக என் தோள் பட்டையில் சாய்ந்தார். அதனால் எனக்குத்தான் கையில் வலி.
அதை தொடர்ந்து ரஜினி சார் நடந்து ஆடும் காட்சியில் பூ தூவுவது ரத்து செய்யப்பட்டது. பாடலின் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் பூக்கள் தூவப்பட்டது.
ரஜினி சார் என்றாலே எல்லோருக்கும் ஒரு விதமான பயம் கலந்த மரியாதை இருக்கும். எனவே அருகில் சென்று பேசுவதற்கு தயங்குவார்கள். எனவே நாங்கள் இடைவேளையில் ஒரு பக்கத்தில் தனியாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். ரஜினி சார் சற்று தூரத்தில் தள்ளி தனியாக அமர்ந்து இருந்தார்.
எங்களை பார்த்ததும் 'ஏன், என்னை மட்டும் தனியா ஒதுக்கிட்டீங்க? வாங்க... என் அருகில் வாங்க... எல்லோருமே பேசிக் கொண்டிருக்கலாமே என்றார். அதன் பிறகு எல்லோரும் அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தோம். படப்பிடிப்பு ஜாலியாக போய் கொண்டிருந்தது.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்சிகளில் குறிப்பிட்ட நாட்களில் நடித்து வந்தோம். படப்பிடிப்பு முடியும் தருவாயில் தான் கதையில் மாற்றம் செய்து ரஜினிசாருக்கு ஜோடி சேர்த்து இருக்கிறார்கள். நயன்தாரா ஜோடியாக நடித்து இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்தது. அதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.
கதையில், கதாபாத்திரங்களில் எங்களுக்கே தெரியாமல் அப்படி ஒரு மாற்றத்தை செய்து எங்களை ஏமாற்றுவார்கள் என்று அப்போது நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ஆரம்பத்தில் தெரிந்து இருந்தால் படத்தில் நடிக்கவே ஒத்துக் கொண்டிருக்க மாட்டோம்.
படப்பிடிப்பே முடிந்த பிறகு பேசி எந்த பயனும் இல்லை என்பது தெரியும். இருந்தாலும் உடனே டைரக்டருக்கு போன் போட்டு கேட்டேன். அதற்கு மழுப்பலான பதில் தான் கிடைத்தது. நான் மட்டுமல்ல என்னைப்போல் குஷ்புவும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். அவர் எனக்கு போன் பண்ணி, 'ஏய், மீனா ரஜினிக்கு ஜோடி உண்டு என்று கதை மாற்றப்பட்டிருக்கிறது. நயன்தாராவை ஜோடியாக போட்டு இருக்கிறார்கள். உன்னிடம் ஏதாவது போனில் பேசினார்களா என்றார்.
நான் யாரும் பேசவில்லை என்றேன். அதை கேட்டதும் அவருக்கும் கடும் கோபம் வந்தது. இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்களே என்று அந்த சம்பவத்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன்.
அண்ணாத்த படம் வெளி வந்ததும் அதை பார்த்து என்னை பலரும் திட்டினார்கள். நீ ஏன் இந்த பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாய் என்று. என் நலம் விரும்பிகள் ஒவ்வொரு வரும்போன் போட்டு திட்டினார்கள்.
ஒவ்வொருவருக்கும் நடந்த சம்பவத்தை விளக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. என்ன செய்வது இந்த காலத்திலும் இப்படி ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று மனதுக்குள் நினைத்தேன். கோபப்பட்டேன், வருத்தப் பட்டேன். வேறு என்ன செய்வது? பின்னர் அதையும் மறந்தேன்.
அதன்பிறகு மந்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன?
அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்...)
- படிக்கும் குழந்தைகளுக்கு ஹயக்ரீவர் உபாசனையை செய்ய அறிவுறுத்துவார்கள்.
- மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களும், ஆக்கப்பூர்வ சிந்தனைகளும் வேண்டும்.
குதிரை: நல்ல கம்பீரமான குதிரையை பார்க்கும்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக குதிரைகளும் மனிதனுடன் வீட்டு விலங்காக இருந்து வருகின்றன. மனித சமுதாய வளர்ச்சியில் குதிரைகளுக்கும் பெரும் பங்கு உண்டு. குதிரைப் படை இல்லாத மன்னர்களே இல்லை.
வேகமும், சக்தியும் நிறைந்த இக்குதிரைகள் தாவர உணவினை உட்கொள்ளும். அதுவும் மிகச் சிறிய வயிறுதான் இவைகளுக்கு. மேம்புல் மேய்ந்தே வாழ்பவை.
குதிரைக்கு சிறப்பு பார்வைத் திறன் உண்டு. 3-ம் பார்வை திறன் உண்டு. இது குதிரையினை சுற்று வட்டாரத்தினைப் பற்றிய நல்ல விழிப்புணர்வோடு இருக்க உதவும். குதிரையின் வேக அசைவுகள் மின்னல் வேகத்தில் இருக்கும். நின்று கொண்டே கூட தூங்கும்.
மன்னர், மாவீரர் என சித்தரிக்கும்போது அநேகமாக அவர்கள் குதிரை மீது அமர்ந்து கையில் வீர வாளுடன் இருப்பது போலத்தான் வரைந்து இருப்பார்கள்.
இதனை ஆன்மீக ரீதியிலும் சக்தி, கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம், தன்னம்பிக்கை, ஆக்கப்பூர்வம் இவற்றினை குதிரை உணர்த்துவதாகக் கூறுவர்.
சுதந்திரம், கடமை இரண்டும் சேர்ந்தது. வீரம் மிக்கது.
கனவில் ஓடும் குதிரை வருவது வெற்றியினை குறிப்பதாகவும், நின்று கொண்டிருக்கும் குதிரை நாம் வெற்றியை அடைய முயற்சி எடுக்க வேண்டும் என்பதனை உணர்த்துவதாகவும் கூறுவர். இவைகளை நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனித வாழ்வில் குதிரை பெறும் முக்கியத்துவத்தை அறியவே இவை குறிப்பிடப்படுகின்றன.
* உலகில் எந்த கலாசாரத்திலும் குதிரையினை அதிர்ஷ்டமாகவே கருதுகின்றனர்.
* சீனர்கள் குதிரை சக்தி, பலம், அதிர்ஷ்ட சின்னமாகும்.
* ஆப்பிரிக்கர்களுக்கு குதிரை செல்வம் தரும் சின்னம்.
* வீரத்தின் சின்னம்.
* இந்து கலாச்சாரத்தில் ஹயக்ரீவப் (குதிரை முகம் கொண்ட விஷ்ணு அமைப்பு) பெருமாளை வழிபடுகின்றனர்.
* சூரிய பகவான்- குதிரைகள் பூட்டிய ரதத்தில் வருவதாகவே குறிப்பிடப்படுகின்றது.
* வெற்றிக்கும், வேகமாக செயல்கள் முடிவதற்கும் அஸ்வரூடா தேவியினை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.
7 குதிரைகள் வேகமாக ஓடி வருவது போன்ற படம், ஓவியம் இதனை ஒருவருக்கு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளில் பரிசாகக் கொடுப்பர். காரணம்- சில நம்பிக்கைகள் தான்.
* அதிர்ஷ்டம் * வளர்ச்சி ஆகும். * வெள்ளை நிறம் பளிச்சென்ற நிறம் (பிரவுன் போன்ற நிறங்களாயினும் நல்ல ஒளியோடு கூடிய படங்கள், ஓவியங்கள்). இதனை தொழில் செய்யும் இடங்களிலும் வைப்பார்கள்.
ஹயக்ரீவர்- விஷ்ணுவின் குதிரை முகம் கொண்ட அவதாரம் எடுத்தவர். மது என்ற அரக்கனை அழித்தவர். வேதங்களை காத்து மீட்டு பிரம்மனிடம் சேர்த்தவர்.
சரஸ்வதி தேவியின் குரு ஹயக்ரீவர்.
அறிவு, ஞானம் இவற்றினை அளிப்பவர். படிக்கும் குழந்தைகளுக்கு ஹயக்ரீவர் உபாசனையை செய்ய அறிவுறுத்துவார்கள்.
உடல் நலம், குறிப்பாக சரும பிரச்சினைகள் நீங்க இவரை வழிபடுவர்.
ஜபம் செய்தால் என்ன பலன்? இந்த கட்டுரையினை நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி சுவாமிகளை அநேகர் படித்திருப்பார்கள். அவரது ஆசிரமத்திற்கும் சென்றிருப்பார்கள். அவர் கூறிய அரிய கருத்தினை இங்கு பார்ப்போம்.
சேஷாத்ரி சுவாமிகள் இடைவிடாது மந்திரம் சொல்லிக்கொண்டே இருப்பார். அப்போது ஒருவர் அவரை அணுகி என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக் கேட்டார். அதற்கு சுவாமிகள். கர்மா ஒழிய வேண்டும். அதற்காக மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கின்றேன் என்றார். ஒரு லட்சம் ஆவிருத்தி பூர்த்தி ஆகி உள்ளது. இன்னும் அரை லட்சம் செய்ய வேண்டும். மந்திரம் சொல்லி சொல்லி கர்மாவை அழிக்கலாம் என்று மேலும் கூறினார்.
மேலும் 'வாழ்க்கைப் போக்கையே மாற்றி விடலாம். மந்திர ஜபம் மனசைச் சுத்தம் செய்யும். மனது சுத்தமாகி விட்டால் நீங்கள் எது கேட்டாலும் கிடைக்கும்' என்றும் ஜபத்தின் வலுவினை எடுத்துச் சொன்னார்.
கேட்டவர் ஆச்சரியப்பட்டனர். 'நாலு வார்த்தையை திருப்பித் திருப்பி சொல்வதால் எல்லா நன்மையும் கொண்டு வந்து தருமா?'

'அது வெறும் வார்த்தையல்ல. கந்தகம் என்பது ஒரு வகை மண்ணு. அது வெடிமருந்தாக மாறலாம். அந்த மாதிரி குறிப்பிட்ட சில வார்த்தைகள் உள்ளுக்குள் மாறுதல் நிகழ்த்தும்.
மந்திரம் சொல்ல சொல்ல மனசு ஒரு முகப்படும். ஒரு முகப்பட்ட மனசுக்கு அதிக சக்தி உண்டு.
சந்தேகப்படாம உடனே மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும். உனக்கு என்ன ஆயுசு விதிச்சிருக்கோ தெரியாது. அதனால் இந்த ஆயுசுலேயே நல்லது நடக்க மனதில் தெளிவு கிடைக்க இப்பவே மந்திரம் சொல்ல ஆரம்பித்து விடு'- சுவாமிகள்.
'ஒரு மணி நேரத்துக்கு மேலே ஜபம் பண்ண முடியலையே. அந்த ஒரு மணி நேரமும் மனது எங்கெங்கோ சுத்துகின்றதே என பலர் கேட்டனர்.
'பண்ணித்தான் ஆவேன் என்று உட்கார்ந்து விட வேண்டும். அதுதான் வைராக்கியம். என்ன தடுத்தாலும் எது குறுக்கிட்டாலும் தினம் ஒரு மணி நேரம் ஜபம் பண்ண ஆரம்பிக்கணும். அக்கறையோடு செய்தால் ஒரு மணி நேரம் போதாது.
மனசுக்கு பசிக்க ஆரம்பிக்கும். இன்னொரு மணி நேரம் செய். இன்னொரு மணி நேரம் செய் என மனது கேட்கும். ஆரம்பத்தில் ஆர்வம் இருக்காது. கஷ்டப்பட்டு ஆரம்பித்தால் ஆர்வம் அதிகமாகும்.
நான் 7 வயதிலேயே காலை, மாலை இரு வேளையும் ஒரு மணி நேரம் ஜபம் பண்ண ஆரம்பித்தேன். எல்லா விருப்பங்களும் ஜபத்தால் நிறைவேறும். இப்போது 10, 12 மணி நேரம் ஜபம் செய்கிறேன்-சுவாமிகள்
'ஜபம் பண்ணி என்ன கிடைத்தது?'- அடுத்த கேள்வி
என்னென்ன கிடைக்கும் என்று சொல்கிறேன், கேள்.
* மனது அமைதி படும். கோபம் குறையும்.
* ஜபம் கூடும்போது கோபம் அறவே நீங்கும்.
* காதில் இனிமையான சங்கீதம் கேட்கும்.
* நோய் உபத்திரங்கள் இருக்காது.
* உணவில் கவனமாக சாப்பிடத் தோன்றும்.
* ருசிக்காக நாக்கு அலையாது.
* உணவு குறையும். உள்ளம் பலமாகும்.
* கண் கூர்மையாகும்.
* உடலில் இருந்து தேஜஸ் விசிறி விசிறி அடிக்கும்.
* வாக்கு பலிக்கும்.
* எட்டு மணி நேரம் ஜபம் பண்ணினா நீ வேற, மந்திரம் வேற இல்லை.
* எல்லாம் சந்தோஷம் தான்.
* பசிக்காது, தூக்கம் வராது, யாரையும் அடையாளம் தெரியாது.
* கடவுளிடம் நெருக்கமாக போய் விடலாம். அப்புறம் அதுவே நம்மை இழுத்து போகும்.
* மனசு கட்டிலில் இருந்து விடுபடலாம்.
* உனக்கு வேண்டும் என்பதனை கடவுள் கொடுப்பார்.
* உன் வார்த்தை எல்லாம் கடவுள் வார்த்தை.
* ஜபம் சுவாசம் போல் இயல்பாக மாறும்.
-திரு. சேஷாத்ரி சுவாமிகள் அருளிய பதில்.
நச்சுத்தன்மை கொண்ட மக்கள் உறவுகள், நட்பு என்ற பெயரில் நம்மை சுற்றி இருப்பார்கள். அருகிலேயே இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து மீளத் தெரியாது. அநேகர் அந்த சூழ்நிலையில் மூழ்கி தவிப்போம். முதலில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
* உங்களை ஒருவர் ஓயாது குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களா? ஒரு காரணமும் இல்லாது கத்துவது, சண்டை போடுவது என இருக்கின்றார்களா?
* உங்களை வேலை சொல்லியோ அல்லது அலைய விட்டோ உடல் சக்தி, மன சக்தியினை பிழிந்து எடுத்து விடுகின்றார்களா?
* உங்களை குற்றவாளி போல் ஆக்கி விடுகின்றார்களா?
* இதனை செய்தும் ஒரு முறை கூட 'சாரி', 'வருந்துகிறேன்' என்று சொல்லாத ஜன்மங்களா?
* எதனையும் திரித்து பேசுகின்றார்களா?
* அழிவுப்பூர்வம் என்பதனைத் தவிர எதுவும் பேசுவதில்லையா?
* பிறரைப் பற்றி புரளி பேசுபவரா?
* பொய் மட்டுமே பேச்சாகக் கொண்டவரா?
* உங்கள் வெற்றி, சாதனை அவர்கள் நிம்மதியைக் கெடுக்கின்றதா?
* அவர்கள் பிரச்சினைக்கு நீங்களே காரணம் என்று கூறுபவரா? உன் முகத்தினை பார்த்து போனேன். போன காரியம் உருப்படவில்லை.
* உங்களை உலகில் எதுக்குமே லாயக்கு இல்லாதவர் போல் பேசுபவரா?
* தன்னுடைய பெருமைகளை தானே தட்பட்டம் அடிப்பவரா?
* மரியாதை என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாதவரா?
* உங்கள் நேரம், காலம் முக்கியம் என நினைக்காதவரா?
* உங்கள் தன்னம்பிக்கையினை கடப்பாரை கொண்டு உடைத்து நொறுக்குகின்றாரா?

கமலி ஸ்ரீபால்
இத்தனையும் போதாதா? இவர் கடும் நச்சுத்தன்மை மிக்கவர் என்று சொல்ல. இத்தகையோரிடம் தொடர்பு, பேச்சு எதுவுமே கூடாது. வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாது ஆகி விடும். ஆக இந்த நச்சுதன்மை கொண்டவர்களை நம் எண்ணம், பேச்சு எதிலும் இல்லாது ஒதுக்கி விடுங்கள். ஒதுக்குவது என்றுமே மிக பலவீனப்படும். உங்கள் வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாக மாற்றி விடலாமே.
மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களும், ஆக்கப்பூர்வ சிந்தனைகளும் வேண்டும். கண்டிப்பாக இவை ஒருவரின் வாழ்வினை வளமானதாக ஆக்குகின்றது என விஞ்ஞான ஆய்வுகள் கூறு கின்றன.
ஒரு பிரிவு நபர்களிடம் அவர்கள் கையில் ஒரு நீர் நிறைந்த டம்ளர் கொடுத்து ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகளை பேச, நினைக்கச் செய்தனர். அந்த நீரில் படிகங்கள் உருவாகின. அவை நேர்த்தியாக ஒளியுடன் இருந்தன.
மற்றொரு பிரிவு நபர்களிடம் அதே போல் ஒரு டம்ளர் நீர் கொடுத்து அழிவுப்பூர்வமான சிந்தனைகள் மற்றும் பேச்சு நிகழ்ச்சி செய்தனர். அந்நீரில் உருவான படிகங்கள் சிதறி ஒழுங்கற்று ஒளி இழந்து இருந்தன. நம் உடல் 70 சதவீதம் நீர் சத்து கொண்டது. அதன்படி நாம் நினைக்கும் நல்ல சிந்தனைகளும், பேச்சு, செயல்களும் நமக்கு நன்மையை அளிக்கும் அல்லவா. இந்த நிலை சிதறாமல் இருக்க வாழ்க்கையில் சிறந்த ஒழுக்க முறை தேவையாகின்றது.
- வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு மனிதனும் கற்றல் அனுபவங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
- ஒரு ஞானி, தான் ஞானத்தைச் சாலையில் பொதி சுமந்துசெல்லும் கழுதையிடம் இருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
வாழ்க்கையின் அனுபவங்களைப் பாடங்களாகக் கற்றுக் கொண்டிருக்கும் அன்பின் வாசகப் பெருமக்களே வணக்கம்!.
'கற்றல்' என்பது பள்ளி முதலான கல்விக்கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் பாடங்களைக் கற்பிக்க, அவற்றைக் கண்ணும் கருத்துமாய் மாணவராக இருந்து படிப்பது மட்டுமல்ல. கல்விக்கூடங்களில் கற்பது என்பது முறையாகப் படித்துத், தேர்வுகள் எழுதிப் பட்டங்கள் பெறுவது ஆகும்; இக்கற்றல் ஒரு குறிப்பிட்ட பருவநிலையோடு நின்றுபோய்விடும். படித்த படிப்பிற்கேற்ற பணி, பிறகு திருமணம், குடும்பம், பிள்ளை குட்டிகள் என்று ஆனபிறகு கற்றல் என்பது கேள்விக்குரியதாகவே ஆக்கப்படும். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் அன்றாடம் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும், அது துன்ப நிகழ்வாக இருந்தாலும், இன்ப மகிழ்வாக அமைந்தாலும் அவை ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள மனிதன் தயாராகும் போதுதான் அது அர்த்தமுள்ளதாக மாறி விடுகிறது.
வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு மனிதனும் கற்றல் அனுபவங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதனால்தான் கல்வியின் சிறப்பை எடுத்தியம்பும் வாக்கில் சாகும்வரை ஒவ்வொரு மனிதனும் கற்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
"யாதானும் நாடாமால் ஊராமால்
என்னொருவன்
சாந்துணையுங் கல்லாதவாறு".
கற்றல் மனோபாவம் ஒவ்வொரு மனிதனுக்கும் பணிவையும், அரிதின் முயலும் ஆர்வத்தையும் நல்குகிறது. இளம்பருவத்தில் கல்விக் கூடங்களில் கற்கும்போது, கற்பிக்கப்படுகிற பாடத்தின்மீது அக்கறையும், கற்பிக்கின்ற ஆசிரியர்மீது பயபக்தியும் தாமாகவே ஏற்பட்டுவிடுகின்றன. பள்ளிப் பருவம் முடித்து, குடும்ப வாழ்க்கைப் பயணம் தொடரும் போது, நமது உத்தியோகத்தால், அந்தஸ்தால், வயது மூப்பால், துன்பச் சூழல்களால் நம்மையும் அறியாத ஒரு உயர்வு மனப்பான்மை அல்லது ஆணவம் நம் எண்ணத்தில் தலைதூக்கி விடுகிறது. இதனால் தேவையற்ற மன உளைச்சல், வாழ்க்கையின் மீது ஆர்வமின்மை போன்ற எதிர்மறைப் போக்குகள் நம்மைப் பற்றிக் கொள்கின்றன.
வாழ்வின் எல்லா அனுபவங்களில் இருந்தும் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பும் ஆர்வம் நமக்குப் பணிவையும், புதுமை விரும்பும் போக்கையும் நல்கி, நம்மைப் புத்துணர்வோடு வைத்திருக்கிறது.
கல்விக் கூடங்களில் நமக்கு மேலான கல்வி கற்றவர்களிடமிருந்தே நாம் பாடம் படித்து வந்தோம். ஆனால், வாழ்வின் அனுபவத் தருணங்களில் நமக்கு மேலானவர், கீழானவர் என்கிற பேதமில்லாமல் எல்லோரிடமும், எல்லாவற்றைப் பற்றியும் கற்றுக் கொள்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
ஒரு ஞானி, தான் ஞானத்தைச் சாலையில் பொதி சுமந்துசெல்லும் கழுதையிடம் இருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். சுமையைத் தூக்கிவைத்தால் சுமப்பது!, யாராவது தொந்தரவு செய்தால் காலால் எட்டி உதைப்பது!, நேரங்கெட்ட நேரத்தில் கத்துவது! ஆகிய இவற்றைத் தவிர வேறு எதுவும் தெரியாத கழுதை எப்படி அந்தத் துறவிக்கு ஞானத்தைக் கற்றுத் தந்திருக்கும்?. துறவியிடம் கேட்டார் ஒருவர். அன்று காலை துவைப்பதற்காக முதுகில் அழுக்குத் துணி மூட்டையோடு ஆற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தது கழுதை. " பார்! பார்! நன்றாகப் பார்த்துக்கொள்!" என்றார் ஞானி. கேள்வி கேட்டவரை, மாலையும் வந்து என்னோடு இருந்து கழுதை ஆற்றில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்வதையும் பார்த்துச் செல்லவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
மாலை வந்தது; கழுதை, வெளுத்த துணிமூட்டையோடு திரும்பிக் கொண்டிருந்தது. துறவி அந்த நண்பரிடம் கேட்டார், "காலையில் நீ பார்த்த கழுதைக் காட்சிக்கும், இப்போது நீ பார்க்கும் கழுதைக் காட்சிக்கும் ஏதேனும் மாறுதல் உணருகிறாயா?".

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
தொடர்புக்கு 9443190098
" இல்லை! காலை ஆற்றுக்குப் போகும்போது எப்படிச் சென்றதோ அதே போலத்தான் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறது" என்றார் நண்பர். "இந்த ஞானத்தைத் தான் நான் கழுதையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். காலையில் அழுக்குத் துணிகளைச் சுமக்கிறோமே! என்று கழுதை வருந்தவுமில்லை; மாலையில் வெளுத்த துணிகளைச் சுமந்து செல்கிறோமே! என மகிழவுமில்லை!; இதுதான் ஞானம்!. துன்பத்தில் வருந்துவது; இன்பத்தில் மகிழ்வது ஆகிய இரண்டையும் ஒழித்துவிட்டு, இன்பம், துன்பம் இரண்டையும் ஒன்றுபோலவே பார்க்கிற சமநிலை ஞானத்தை நான் கழுதையிடமிருந்து கற்றுக்கொண்டேன்!" என்றார் ஞானி.
இயற்கையின் அனுசரணையில்தான் மனித வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. மனிதன் ஒவ்வொரு நொடியும் கற்றுக் கொள்வதற்கான அனுபவங்களோடு இயற்கையும் சக உயிர்களும் காத்திருக்கின்றன. நாம்தாம் கற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். இவர் யார் கற்றுத் தர? நாம் ஏன் கற்றுக் கொள்ளவேண்டும்? என்று உதாசீன உணர்வோடு இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற இன்பங்களைக்கூட நிம்மதியாக அனுபவிக்க முடியாது. இந்த உலகிலேயே அதிசிறந்த அறிவையும், ஆற்றலையும் உடையவராக நாம் இருக்கிறோம்! என்பது ஒருவகையில் உண்மையாகக்கூட இருக்கலாம்; ஆனால் ஒரு குருவி கட்டும் கூட்டை அதே நுட்பத்துடன் உருவாக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா? குருவிடமிருந்து கற்றுக்கொள்வது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்த பட்சம் குருவியிடமிருந்து கற்றுக் கொள்வதையாவது கற்றுக்கொள்வோம்.
மலையிடமிருந்து மன உறுதியையும், மண்ணாகிய பூமித் தாயிடமிருந்து பொறுமையையும், மென்மையை அனிச்சப்பூவிடம் இருந்தும் கற்றுக்கொள்ள நாம் சம்மதித்து விட்டால், தினையளவு உதவியையும் பனையளவாக மதிக்கும் செய்ந்நன்றியறியும் குணமும், மனத்துக்கண் மாசிலனாகும் மனமும், நல்லோரோடு இணக்கமாக வாழ்ந்து நட்பு பாராட்டும் நலமும், உலகத்தோடு ஒட்ட ஒழுகும் வாழ்நிலை அறமும் நமக்குத் தாமாகவே அமைந்து விடும் என்கிறார் வள்ளுவர்.
அலுவலகமாயினும், தொழில்கூடமாயினும் நமக்கு மேலுள்ளவர்கள் சொற்படி கேட்டுக், கற்றுக்கொண்டு நடக்க வேண்டியது விதியாகவே கருதப்படும். ஆனால் நமது சக பணியாளரிடமோ அல்லது நமக்குக் கீழே பணியாற்றக் கூடியவரிடமிருந்தோ கற்றுக் கொள்ளும் சூழ்நிலை வாய்த்தால் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். என்னுடைய தகுதி, தன்முனைப்பு இடம்கொடுக்க மறுக்கிறதே என்று விலகி நிற்க நேரிட்டால், உண்மையில் தோற்றுப்போக வேண்டிய சூழல் நமக்கு ஏற்பட்டுவிடும். இங்கே எல்லோரிடமும் கற்றுக் கொள்ளலாம் என்கிற தாராள மனப்பான்மை உருவானால் எல்லோரோடும் பேதமில்லாத சமத்தன்மை உருவாகிவிடும். எதிரிகளும் நண்பர்களாகிப் போகும் இன்பநிலை உண்டாகும்.
எல்லா விஷயங்களிலும் எல்லோரும் திறமையானவர்களாக இருக்க முடியாது. வீட்டையே எடுத்துக்கொள்வோம்; அம்மா சாம்பார் வைப்பதில் கெட்டிக்காரர் என்றால், புளிக்குழம்பு வைப்பதில் மனைவி புலியாக இருக்கலாம்; சாம்பார், புளிக்குழம்பு விஷயங்களில் மாமியாரும், மருமகளும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போய்க் கற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டால், வீட்டுச் சமையலறையே சொர்க்கமாக மாறிவிடும் அல்லவா? அலுவலகங்களிலும் அப்படித்தான். கற்றுக் கொள்வ தில் வேலை நிரவல்கள் ஏற்பட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுதான் பரிசாய் அமையும்?.
பல கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், மாணவர்களி டமிருந்து கற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்கள். உண்மைதான் அறிவுத் தேடுதல் உடைய ஒவ்வொரு மாணவனின் ஆழமான ஒவ்வொரு கேள்வி யுமே ஆசிரியரின் புதிய கற்றலுக்கான வாசல்களைத் திறந்து வைக்கின்றன.
ஆசிரியர் கற்கக் கற்க அவரும் மாணவர் ஆகிறார்; ஆசிரியரும், மாணவரும் அறிவுப் பங்காளிகள் ஆகிப்போகின்றனர். சில இடங்களில் புதிதாக வேலைக்கு வருவோரிடம் புதிய அறிவு வெளிச்சங்கள் நிரம்பிக் கிடக்கலாம்; மூத்தவர்கள், இளையோரிடமும் கற்றுக்கொள்ளச் சம்மதிக்கும்போது அந்த அலுவலகமே நட்புக் கூடமாக நளினம் அடைந்துவிடும்.
ஒரே வானம், ஒரே சூரியன், ஒரே நிலா, அதே மேகங்கள், அதே காற்று, அதே மழை, அதே மரம், செடி கொடிகள், அதே அருவி, அதே நதி, அதே பறவை, அதே மலை... என்று இயற்கை எப்போதும் ஒன்றுபோலவே இருந்தாலும் அவை எப்போதும் ஒன்றுபோலவே இருப்பதில்லை. நம்முடைய வருத்தம் மற்றும் இன்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் மனத்தை இலகுவாக்கிக்கொண்டு இயற்கையோடு ஈடுபடத் தொடங்கினால், அவற்றில் இருந்து கற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டால், நாமும் இயற்கையும் ஒன்றாகிவிடுவோம்!; புத்துணர்வில் நமது உள்ளத்திலும் பூப்பூக்கத் தொடங்கிவிடும்.
ஒரு குருவிடம் அவரது சீடர்கள், "உங்களது குரு யார்?" என்று கேட்டார்கள். "நான் எத்தனையோ பேரிடமிருந்து எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அவர்களில் மூன்று பேரை நான் குருவாக மதிக்கிறேன்" என்றார் குரு. அவரே சொன்னார்:
என்னுடைய முதல் குரு ஒரு திருடன்: ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் ஒரு வீட்டுக்குள் திருடப் புகுவதற்காக சுவற்றில் ஓட்டை போட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் 'இங்கு இரவு தங்குவதற்கு இடம் கிடைக்குமா?' என்று கேட்டேன். 'திருடனோடு தங்கச் சம்மதமா?' என்று கேட்டுவிட்டு, நான் 'சரி'யென்றதும் அவனோடு தங்க அனுமதித்தான். ஒருமாதம் தங்கியிருந்தேன்; இரவு முழுவதும் திருடப்போவான்; நான் ஓய்வெடுப்பேன். அதிகாலை வருவான்; 'ஏதாவது கிடைத்ததா?' என்று கேட்பேன். 'இன்று கிடைக்கவில்லை! நாளை நிச்சயம் கிடைக்கும்!' என்று நம்பிக்கையோடு சொல்வான். நாள்தோறும் கேட்கும் இந்த நம்பிக்கை வார்த்தைதான், என்னைத் தொடர்ந்து நம்பிக்கையோடு பிரார்த்தனை பண்ணக் கற்றுத்தந்தது.
இரண்டாவது குரு ஒரு நாய்: ஒருநாள் நண்பகல் வேளை. கடுமையான தண்ணீர் தாகம். தண்ணீர் பருகுவதற்காக ஆற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்; என்னோடு ஒரு நாயும் வந்தது; அதற்கும் நாவறட்சி; தண்ணீர் தேவைப்பட்டது. ஆற்றைப் பார்த்ததும் இறங்கி தாகம் தணியத் தண்ணீர் பருகினேன்; திரும்பி நாயைப் பார்த்தேன். அது அச்சத்தோடு ஆற்றை நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. நாயைப் பிடித்துத் தூக்கி ஆற்றுக்குள் போட்டேன்; ஆசைதீர தண்ணீர் பருகத் தொடங்கிவிட்டது. தண்ணீரைவிட்டு லேசில் வெளியே வரவும் மறுத்துவிட்டது. மனித மனமும் இப்படித்தான்; சிலவற்றில் ஈடுபடுவதற்கு அஞ்சி அஞ்சிச் செத்துக்கொண்டே இருக்கிறது. துணிச்சலுடன் தூக்கிப்போட்டுவிட்டால் சாதனைமேல் சாதனை புரியத் தொடங்கி விடுகிறது.
மூன்றாவது குரு ஒரு குழந்தை: அது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றியது; ஒளி எங்கிருந்து வந்தது? என்று கேட்டேன். விளக்கை ஊதியணைத்த குழந்தை இப்போது ஒளி எங்கு போனதோ அங்கிருந்து வந்தது! என்று சொல்லிச் சிரித்தது. அன்றோடு என் ஆணவம் சரிந்து தரைமட்டமாகிப் போய்விட்டது என்றார் ஞானி.
கற்றல் நம்மை நாமாக உணர வைக்கிறது; நம்மில் அனைவரும் எனும் உலகத்துவத்தை உன்னதப்படுத்துகிறது.
- எண்பதைத் தாண்டிய முதுமையிலும் மா.சு. சம்பந்தன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தார்.
- சொற்களிடையேயான தேர்தலில் அபேட்சகர் என்ற சொல் தோற்றுப்போய் வேட்பாளர் என்ற சொல் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது!
`திரு, திருமதி, வேட்பாளர்` போன்ற வார்த்தைகளைத் தமிழுக்குத் தந்த பெருமைக்குரிய தமிழறிஞர் மா.சு. சம்பந்தன் அவர்கள்.
தமிழக அரசின் மூன்று உயரிய விருதுகளைப் பெற்றவர், பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர், எல்லாப் புத்தகங்களும் அவற்றின் மதிப்புக் கருதி பற்பல அமைப்புகளால் விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டன.
`தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிய மா.சு. சம்பந்தன்` எனத் தாம் வாழ்ந்த சமகாலத்தில் பல உயர்நிலைத் தமிழறிஞர்களால் போற்றப்பட்ட பெருமைக்குரியவர்.
மா.சு. சம்பந்தன் கடின உழைப்பாளி. கடும் உழைப்பால் அவர் உடலே சற்றுக் கறுத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். உழைப்பை அவர் நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டதே இல்லை.
எண்பதைத் தாண்டிய முதுமையிலும் அவர் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தார். அவர் எழுதிய ஒவ்வொரு நூலும் கடின உழைப்புத் தேவைப்படுகிற நூல்கள்.
பல்கலைக் கழகங்கள் ஒரு குழு வைத்துச் செய்ய வேண்டிய பணிகள் பலவற்றை அவர் தனியொருவராகச் செய்து கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல.
ஸ்ரீமான் எம்.எஸ். சம்பந்தன் என்று எழுதிக் கொண்டிருந்த பெயரை திரு மா.சு. சம்பந்தன் என்று இன்று நாம் எழுதக் காரணம் மா.சு. சம்பந்தனேதான். (மாரம்பேடு சுப்பிரமணியன் மகன் சம்பந்தன் என்பதன் சுருக்கமே மா.சு. சம்பந்தன் என்பது.)
பெயர்களுக்கு முன் ஸ்ரீமான் ஸ்ரீமதி என்று எழுதுவதை எதிர்த்தார் அவர். தூய தமிழில் `திரு` என்றும் `திருமதி` என்றும் எழுத வேண்டும் என்ற தீர்மானத்தை சென்னை மாநகராட்சி அவையில் நிறைவேற்றினார்.
அதன்பிறகு ஸ்ரீமான்களும் ஸ்ரீமதிகளும் தமிழிலிருந்து அவசர அவசரமாக விடைபெற்றார்கள். திருவாளர்களும் திருமதிகளும் மகிழ்ச்சியோடு உலவத் தொடங்கினார்கள். இந்த முக்கியமான `திரு`த்தத்திற்குக் காரணம் மா.சு. சம்பந்தன்.
அபேட்சகர் என்ற சொல்லையும் ஒழித்தார். வேட்பாளர் என்ற அழகிய தமிழ்ச் சொல்லைத் தாம் தேர்தலில் போட்டியிட்டபோது பயன்படுத்தினார். அந்தச் சொல்லை இயல்பான வழக்குச் சொல்லாக உருவாக்கி விட்டார்.
சொற்களிடையேயான தேர்தலில் அபேட்சகர் என்ற சொல் தோற்றுப்போய் வேட்பாளர் என்ற சொல் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது! இன்று அபேட்சகர் என்று யாரும் எழுதுவதே இல்லை. வேட்பாளர் என்றுதான் எல்லாக் கட்சியினரும் குறிப்பிடுகிறார்கள்.
எழுத்திலும் பத்திரிகைத் தொழிலிலும் இளமை முதலே ஆர்வம் கொண்டிருந்தார். தொடக்கத்தில் `தமிழர் மலர்` என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். பின்னர் தமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய `முருகு, மதி` ஆகிய மாத இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து அவற்றை நடத்தினார். `எங்கள் நாடு` நாளேட்டில் சில ஆண்டுகள் துணையாசிரியராகப் பணியாற்றினார்.
அறிஞர் வ.ரா.வின் `பாரத தேவி` இதழிலும் இவர் எழுத்துகள் இடம்பெற்றன. இவரது `பண்டை நாகரிகமே வேண்டும்!` என்ற முதல் கட்டுரையே வ.ரா.வின் பாரத தேவி இதழில் தான் இடம்பெற்றது.

சி.பா. ஆதித்தனார்
சி.பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் இதழில் ஜி.டி.நாயுடு பற்றி இவர் எழுதிய கட்டுரை பலரின் கவனத்தை ஈர்த்தது.
`தமிழ் உலகம், போர்வாள்` போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். `தமிழர் கழகம்` என்ற மொழி நலன் சார்ந்த அமைப்பின் தலைவர்.
`தமிழர் பதிப்பகம்` என்ற வெளியீட்டகத்தை 1947முதல் நடத்தி வந்தவர்.
கா. அப்பாதுரை எழுதிய `வருங்காலத் தமிழகம்`, மு. வரதராசன் எழுதிய `கி.பி. 2000`, கி.ஆ.பெ. விஸ்வநாதன் எழுதிய `வானொலியிலே`, கவிஞர் தமிழ்ஒளி எழுதிய `வீராயி` போன்ற பல முக்கியமான நூல்களைத் தமது தமிழர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.
இவரே எழுதிய `சென்னை மாநகர், அச்சுக்கலை, அச்சும் பதிப்பும், சிறந்த பேச்சாளர்கள், தமிழ் இதழியல் வரலாறு, திரு.வி.க., இங்கர்சால், எழுத்தும் அச்சும், தொடர்பன் கட்டுரைகள்` போன்ற நூல்கள் அந்தந்தத் துறையில் முன்னோடி நூல்கள்.
இவர் தமிழ்நடை மட்டுமல்ல, தமிழுக்காக இவர் நடந்த நடையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ், பாட மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் நீதி மொழியாகவும் வளர வேண்டும் என விரும்பினார்.
தமிழுணர்ச்சி இல்லாத கால்நடையாகப் பெரும்பாலோர் இருப்பதை எண்ணி மனம் வருந்தினார். அவர்களுக்கு உண்மை நிலையை அறிவுறுத்த வேண்டி `எங்கும் தமிழ், எதிலும் தமிழ்` என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை கால்நடையாகப் பயணம் மேற்கொண்டார்.
இந்தத் தென்னாட்டு வினோபா நடந்தது மட்டுமல்ல, இவர் நினைத்ததும் நடந்தது. அவரது நடைப்பயணத்திற்குப் பின் தமிழ் மொழி அரியணை ஏறிற்று.
சென்னை கன்னிமாரா நூலகத்தில் சிறிது காலம் இளநிலை அலுவலராகப் பணிபுரிந்தார். தமிழர் பேரவை, ஒய்எம்சிஏ பட்டிமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார்.
அவரின் பெருமையை உணர்ந்து அறிஞர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மாநகராட்சித் தேர்தலில் நின்று மாநகராட்சி உறுப்பினராக ஆனார்.
கச்சாலீஸ்வரர் வட்டத்திலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1959 முதல் 64 வரை சென்னை மாநகராட்சியில் அங்கம் வகித்த பெருமையும் இவருக்கு உண்டு. இம் மாநகராட்சியிலிருந்து சென்னைப் பல்கலைக் கழகப் பேரவை (செனட்) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்ணாதுரையால் பாராட்டப்பட்ட இவரது `அச்சுக்கலை` நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசு பெற்றது. தமிழக அரசின் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் பரிசு வழங்கினார். தமிழில் வெளிவந்துள்ள அச்சுக்கலை தொடர்பான நூல்களில் மிக முக்கியமான முன்னோடி நூல் அது.
இவர் எழுதிய `அச்சும் பதிப்பும்` என்ற நூல் தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் முதல் பரிசைப் பெற்றது. அந்தப் பரிசை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் வழங்கினார்.
`பதிப்புக் கலைச் செல்வர்` என்ற உயரிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. `எழுத்தும் அச்சும், தமிழ் இதழியல் வரலாறு, தமிழ் இதழியல் களஞ்சியம், தமிழ் இதழியல் சுவடுகள், சிறந்த பேச்சாளர்கள், சென்னை மாநகர்` உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முக்கியமான நூல்களின் ஆசிரியர்.

திருப்பூர் கிருஷ்ணன்
மா.சு. சம்பந்தன் எழுதிய ஒவ்வொரு நூலும் தமிழ் மொழி வரலாற்றில் முத்திரை பதித்துச் சாதனை படைத்த நூல் என்பதுதான் அவரது பெருமை..
வேதாசலம் என்ற பெயர் மறைமலை அடிகள் எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற பெயர் பரிதிமாற் கலைஞர் எனவும் மாற்றம் பெற்றதுபோல், தொடக்க காலத்தில் சம்பந்தன் என்ற தம் பெயரை தனித் தமிழில் `தொடர்பன்` என மாற்றிக் கொண்டார். அந்தப் பெயரிலேயே சிறிதுகாலம் கட்டுரைகள் எழுதினார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை `திருச்சி விசுவநாதம்` என்ற தலைப்பில் நூலாக எழுதினார். அதில் நூலை எழுதியவர் பெயராக மா.சு. சம்பந்தன் என்ற பெயரும் அதன் கீழே அடைப்புக் குறிக்குள் `தொடர்பன்` என்ற பெயரும் அச்சிடப்பட்டிருந்தன.
பெரியார், சோமசுந்தர பாரதியார், பிரசண்ட விகடன் இதழாசிரியர் நாரண துரைக்கண்ணன், பெருந்தலைவர் காமராஜ், ரா.பி. சேதுப்பிள்ளை, எம்.வி. வேணுகோபாலப் பிள்ளை போன்ற தமிழகம் நன்கறிந்த உயர்நிலைப் பிரமுகர்களால் பாராட்டப்பட்டவர்.
அ.ச. ஞானசம்பந்தன்., துரை அரங்கனார், மா. இராசமாணிக்கனார் போன்ற தமிழ் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர் என்பது மட்டுமல்ல, அவர்களது மாணவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
தலைநகரத் தமிழ்ச் சங்கம் நடத்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைப்பட்டவர். தமிழுக்காகச் சிறை செல்வதைப் பெருமையாகக் கருதினார். தமது அழகிய தமிழ் நடையால் இலக்கிய ஆர்வலர்களின் அன்பு மனங்களில் சிறைப்பட்டவரும் கூட.
2011இல் அவர் திடீரென்று காணாமல் போனார். காணாமல் போவதற்கு 2 மாதங்கள் முன்பு வெளியே போனபோது மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டார். அங்கிருந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டுத் தகவல் சொன்னார்கள். பிறகு உடல்நலம் பெற்று வீடு வந்த அவர் நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருந்தார்.
கவிஞர் சுரதாவைப் போல், முதுமைக் காலத்திலும் எப்போதும் இலக்கியக் கூட்டங்களுக்குப் பேருந்தில்தான் செல்வார். இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது அவருக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.
உடல்நலம் தேறியபின் பழையபடி பேருந்தில் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்.
அவர் காணாமல் போனபோது அவர் வயது 89. தனித்தே பல இடங்களுக்குப் போய்வரும் அளவு ஆரோக்கியத்துடனேயே இருந்தவர், எங்கே எப்படிக் காணாமல் போனார் என்ற தகவல் எதுவும் தெரியவில்லை.
பதிமூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரைப் பற்றிய செய்தி எதுவும் கிட்டவில்லை.
அவர் காணாமல் போனாலும் தமிழில் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் உறுதியாய் நிலைபெற்று விட்டன. இன்று பல தூய தமிழ்ச் சொற்கள் நம்மிடையே புழங்குவதற்கு முக்கியக் காரணம் மாபெரும் தமிழறிஞர் மா.சு. சம்பந்தன்தான் என்பதுதான் தமிழ்சார்ந்த அவரது பல பெருமைகளில் மிக முக்கியமானது.
அவரது நூல்களின் பெருமையை உணர்ந்து தமிழ்நாடு அரசு அவர் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. தனி மனிதர்கள் ஓயாத கடும் உழைப்பால் மொழியை எப்படி வளப்படுத்த முடியும் என்பதற்கு மாபெரும் தமிழறிஞரான மா.சு. சம்பந்தன் ஒரு நிரந்தர எடுத்துக்காட்டு.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com
- நண்பர்கள் இருவரும் ஒரே ஊரில் இருந்தாலும் வேறு வேறு பகுதிகளில் இருந்த–தால் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை.
- நண்பனைச் சந்தித்து அவனிடமே விளக்கம் கேட்டான்.
விதியை வெல்லும் நற்செயல்கள் மற்றும் அடாத செயல்கள் என்ன என்பதை பார்த்து வருகிறோம்.
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்று வரம் வாங்கிய நண்பன் ஒருவனைப் பற்றி பார்த்தோம்.
மூன்று வரங்கள் பெற்ற நண்பர்களுள் ஒரு நண்பனின் கதை இது.
நண்பர்கள் இருவரும் ஒரே ஊரில் இருந்தாலும் வேறு வேறு பகுதிகளில் இருந்த–தால் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை.
மூன்று வரங்களையும் பயன்படுத்தி முடித்துக் கொண்ட முதலாவது நண்பன், தனது அந்த இரண்டாவது நண்பனைப் பார்க்கச் சென்றான்.
இரண்டாவது நண்பனுடைய வீடும் குடிசை வீடுதான்.
இன்று இவன் பார்க்கப் போகும்போது அந்தக் குடிசை வீடு ஒரு பெரிய மாளிகையாக மாறிவிட்டிருந்தது.
மூன்று வரங்களில் ஒன்றை பயன்படுத்தியிருப்பான் என இவனும் அதனைப் புரிந்து கொண்டான். உடனே இவனுடைய கண்கள் பக்கத்து வீட்டுக்காரனுடைய வீடு எப்படி உள்ளது என்று ஆய்வு செய்தன.
அந்த பக்கத்து வீட்டுக்காரனுடைய வீடும் குடிசை வீடுதான். ஆனால் அதுவும் இப்போது ஒரு மாளிகையாக மாறிவிட்டிருந்தது.
ஆனால் அது நண்பனுடைய வீட்டைப் போல் இரண்டு மடங்காக இல்லாமல், பாதியாகத்தான் இருந்தது.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
நம்முடைய நிலைமை என்னவென்றால், நமக்கு என்ன கிடைக்கிறதோ அதை–விட இரண்டு மடங்காக பக்கத்து வீட்டுக் காரனுக்கு கிடைக்கிறது.
ஆனால் நமது நண்பனுடைய நிலைமை அப்படியே தலைகீழாக அல்லவா மாறியுள்ளது.
நண்பனுக்குக் கிடைத்ததை விட இரண்டு மடங்கு கிடைக்காமல், பாதியாக அல்லவா கிடைத்துள்ளது. இறைவனிடம் பிரார்த்தனை செய்து வரத்தின் தன்மையை மாற்றிக்கொண்டானா?
நண்பனைச் சந்தித்து அவனிடமே விளக்கம் கேட்டான்.
அந்த நண்பனும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டான்.
"வரத்தைப் பெற்ற நாம் வீட்டுக்குத் திரும்பி வந்த அன்று நமது ஊரில் மழை இருந்ததல்லவா?...

ஸ்ரீ பகவத்
"அப்போது பக்கத்து வீட்டுக்காரன்
என்னிடம் வந்து, தனது வீடு மழையில் ஒழுகுவதாகவும், கூறையை மாற்றுவதற்கு ஐநூறு ரூபாய் வேண்டும் என்றும் கடன் கேட்டு வந்தான்...
"மறுநாள் தருவதாகக் கூறி அவனை அனுப்பி வைத்தேன். அன்று இரவு ஒரு வரத்தை பயன்படுத்தி அவனுடைய வீட்டை ஒரு நல்ல மாளிகையாக மாற்றிவிட்டேன்...
"நமது வரத்தின் தன்மைப்படி, எந்த வரமானாலும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு மடங்காகக் கிடைத்துவிடும் அல்லவா? வரத்தின்படி அவனுக்கு மாளிகை கிடைத்து விட்டது. அவனுக்கு நான்தானே பக்கத்து வீட்டுக்காரன். அதனால் அந்த மாளிகையை விட இரண்டு மடங்கு பெரிய மாளிகையாக எனக்குக் கிடைத்துவிட்டது!" என்று கூறினான்.
இறைவன் நமக்கு அறிமுகப்படுத்திய பக்கத்து வீட்டுக்காரன் யார்?
அடுத்தவர்களுக்கு நாம் உதவுவோம் என்றால், இரண்டு மடங்காக நன்மைகளைப் பெறும் அந்த பக்கத்து வீட்டுக்காரன் நாமேதான்.
தேவர்கள் அசுரர்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். தேவர்கள் நல்ல இயல்புகளும் நல்லசெயல்களும் உடையவர்கள் என்றும், அசுரர்கள் மோசமான இயல்புகளும் செயல்களும் உடையவர்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளோம்.
ஒரு முறை அசுரர்கள் இறைவனை குற்றம் சாட்டினார்கள்: "நீங்கள் ஓரவஞ்சனையாக நடந்து கொள்கிறீர்கள். தேவர்களுக்கு தேவையில்லாமல் முன்னுரிமை கொடுக்கி–றீர்கள். அசுரர்களான நாங்கள் எந்த வகையில் குறைந்தவர்கள்?"
அவர்களை அவர்களுக்கு உணரவைப்–பதற்காக இறைவன் ஒரு போட்டியை நடத்தினார்.
அந்தப் போட்டியின்படி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தனித்தனியே விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாப்பாட்டு மேஜையில் உணவு பரிமாறப் பட்டிருந்தது. ஒரேயொரு நிபந்தனையின் பேரில் அனைவருமே உணவைச் சாப்பிடலாம்.
அந்த நிபந்தனையின்படி, கைகளை மட்டும் மடக்கக் கூடாது.
கைகளை மடக்காமல் வைத்துக் கொண்டு உணவைச் சாப்பிட வேண்டும்.
எப்படி சாப்பிடுவது?
கைகளை மடக்காமல் உணவை எப்படி வாயினருகில் கொண்டு செல்வது?
அசுரர்களால் உணவைச் சாப்பிட முடியவில்லை.
சிலர் முன்னோக்கிக் குனிந்து வாயினால் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
சிலர் உணவை மேல் நோக்கி வீசிப் போட்டு வாயினால் கேட்ச் பிடித்து சாப்பிட்டார்கள்.
இதனால் சரியாக சாப்பிட முடியாமல் உணவு அங்குமிங்கும் சிதறி சேதமானது.
சோதனைக்கு வந்த இறைவனிடம் புகார் தெரிவித்தார்கள்.
"இப்படியா விருந்து வைப்பது? கைகளை மடக்காமல் உணவை எப்படிச் சாப்பிடுவது?"
இறைவன் அசுரர்களை, தேவர்கள் சாப்பிடும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.
தேவர்கள் எப்படி உணவைச் சாப்பிட்டார்கள்?
அவர்கள் உணவை ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்டார்கள்.
அடுத்தவர்களுக்கு உணவை ஊட்ட கைகளை மடக்கத் தேவை இல்லை.
உணவுக்கும் எந்த ஒரு சேதாரமும் ஏற்படவில்லை.
அசுரர்களால் தங்களை மட்டுமே எண்ணிப்பார்க்க முடிந்தது.
தேவர்களால் மட்டுமே அடுத்தவர்களை எண்ணிப் பார்த்து அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடிந்தது.
அது தான் தெய்வீகமானது.
ஏழைகளுக்கு உதவி செய்வது உயர்ந்தது. ஆனால் அவர்களுக்கு உதவி செய்யும் அளவில் நமக்குப் பொருளாதார வசதி இல்லை. நாம் எப்படி அவர்களுக்கு உதவுவது?
அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுள் ஒருவர் பூசலார் நாயனார்.
அந்த நாயனார் வசித்த காலத்தில் அரசர் இறைவனுக்கு ஒரு கோவிலைக் கட்டினார். பல வருடங்களாக நடைபெற்று வந்த நிர்மாண வேலைகள் அனைத்தும் நிறைவடைந்தன.
இனிமேல் கும்பாபிஷேகம் நடத்தி இறைவனை எழுந்தருளச் செய்வது ஒன்று தான் பாக்கி. புரோகிதர்களைக் கூப்பிட்டு, கும்பாபிஷேகத்துக்கான நாள் ஒன்றைக் குறித்தார் மன்னர்.
நாள் குறித்த அன்று இரவே அரசனுடைய கனவில் இறைவன் தோன்றினார். அவர், "உமது நாட்டில் பூசலார் நாயனார் என்னும் ஒருவர் இருக்கிறார். அவரும் என் மீது பக்தி கொண்டு எனக்காக ஒரு கோவிலைக் கட்டிவந்தார். நீங்கள் குறிப்பிட்ட அதே நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதாக முடிவு செய்துள்ளார். அவருடைய வேண்டு–கோளை ஏற்று அங்கு வருவதாக நானும் ஒப்புக் கொண்டு விட்டேன். ஆகவே கும்பாபி–ஷேகம் நடத்தும் உங்களுடைய தேதியை மாற்றிக் கொள்ளுங்கள்!"
என்று கூறினார்.
அரசரும் இறைவனுடைய விருப்பப்படி, கும்பாபிஷேகத் தேதியை மாற்றிக் கொண்டார் அதனால் முதலில் குறித்த தேதியன்று அவருக்கு கோவில் சம்பந்தமான அலுவல் எதுவும் இல்லை.
ஆகவே பூசலார் நாயனார் நடத்தும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்தார்.
பூசலார் நாயனாரின் ஊருக்கு சேவகர்கள் புடைசூழ தேரில் வந்து இறங்கினார் அரசர்.
ஆனால் அந்த ஊரில் புதிதாக கோவில் கட்டப்பட்டதற்கான அறிகுறியோ அல்லது கும்பாபிஷேகம் நடப்பதற்கான அறிகுறியோ எதுவுமே இல்லை.
பூசலார் நாயனார் வீட்டைக் கண்டுபிடித்து அவரை விசாரித்தனர்.
அவரும் "அரசே! நீங்கள் வசதி மிகுந்த மன்னர். நான் வெறும் சாதாரண பிரஜை. கோவிலைக் கட்டும் அளவுக்கு எனக்கு ஏது
வசதி? ஆனாலும் இறைவனுக்கு கோயில் கட்டவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. எப்படிக் கட்டுவது? என்னுடைய மனதுக்குள்ளேயே இறைவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தேன். அந்தக் கோவிலுக்கு இன்றுதான் கும்பாபிஷேகம்!"
என்று விளக்கம் கொடுத்தார்.
ஆனால் அவருடைய செயலை இறைவனே ஏற்றுக் கொண்டுவிட்டார்.
நற்செயல்களைச் செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதும்.
நற்செயல் புரிந்ததாக இறைவனே அதனை அங்கீகரித்து விட்டார்.
உலகத்து நடைமுறைகளைப் பார்த்திடும் போது சில சந்தர்ப்பங்களில், அதர்மம் செய்திடுவோர் வசதிகள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்திடுவது போல் தெரியும்.
அது போல் சில சந்தர்ப்பங்களில், தர்ம வழியில் நடந்திடுபவர்கள் சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்திடுவது போலவும் தெரியும்.
கர்ம வினைகளின் ஒழுங்கு முறைகள் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடியாது.
இதனால் விதுர நீதி நூலில், இத்தகைய சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்காமல் பொறுமை காத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஆன்மிக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெய்வங்கள் எல்லாம் என்ன பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கேட்டதைப் பார்த்தோம்.
ஏன் இப்படி கர்மா, கர்ம வினை, பாவம், புண்ணியம் பிறகு அதற்கான கஷ்டநஷ்டங்கள் என்று இப்படி ஓர் உலகைப் படைக்க வேண்டும்?
படைப்பது தான் படைக்கிறோம், நல்லவித–மான ஓர் உலகத்தைப் படைத்திருக்கலாம் அல்லவா?
உலக சிருஷ்டி பற்றியும் பல்வேறுபட்ட கருத்–துக்கள் மற்றும் சித்தாந்தங்களும் உள்ளன.
அதனையும் பார்ப்போம்.
- சிறுதானியம் பெருந்தானியம் எனப் பலவகைத் தானியங்களிலும் கூழ் காய்ச்சுவது வேளாண்குடிகளிடையே உண்டு.
- ஒவ்வொரு ஆண்டிலும் வெயிலும், வறட்சியும் கூடிக்கொண்டு வரும் இக்காலத்தில் முன்னிலும் முக்கியமான உணவாக இருக்கிறது கூழ்.
கோடை அதன் உச்சத்தை நோக்கி நடைபோடத் தொடங்கி விட்டது. வெயிலின் உக்கிரம் கூடக் கூட குளுமையான வேப்பமரத்திற்கு அடியில் உட்கார்ந்திருந்தாலும் வியர்வை அருவியாக வழிந்தோடும். வியர்வை வழிய வழிய உடலின் நீர்ச்சத்துக் குறையும். அப்போது உடலில் குறைவது நீர்ச்சத்து மட்டுமல்ல ஒட்டமொத்த ஆற்றலும் வடிந்து விடும். சோர்வில் எதையும் செய்யத் தோன்றாது. சோர்வு மிகுந்து விட்டால் உடலினுள் நோய் புகுந்து விடும். நமது புற வெப்பச்சூழலில் இழந்த ஆற்றலை உடனடியாக மீட்டுத் தரவல்லது கூழ்.

சோறு, பிரியாணி, களி, இட்லி, தோசை, சப்பாத்தி எதைத் தின்றாலும் அதனை செரிமானமடைவதற்கு உடல் தன்னிடமிருந்து ஒருபகுதி ஆற்றலைக் கொடுத்து தான் உணவில் உள்ள ஆற்றலை எடுக்க முடியும். ஆனால் உடனடியாக செரிமானத்திற்கு எந்த ஆற்றலையும் எடுக்காமல் உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது கூழ்.
இந்த வெயிலுக்கு நம்மக்கள் கூழைக் குடித்துதான் பன்னெடுங்காலத்தைக் கடந்து வந்திருக்கின்றனர். நமது உடலானது பெற்றோர், அவர்களது பெற்றோர், அவர்களைப் பெற்றவர்கள் என மரபுக் கூறுகளைச் சுமந்து தான் வந்திருக்கிறது. எனவே அதற்குவொரு நெருக்கடி ஏற்பட்டால் மரபான உணவின் வழியாகவே தன்னை மீட்டுக் கொள்ள முடியும். தை மாசி மாதங்களில் அறுவடை முடிந்து பங்குனியில் நிலத்தை வெயிலில் ஆறப்போடுவார்கள். இந்த சுழற்பருவத்தில் நிலத்தில் வேளாண் வேலையிருக்காது. அன்றாடம் கூலி வேலை செய்து வயிற்றுப் பசியை ஆற்ற மக்களுக்கு வீட்டில் உலை வைக்க ஏதுமிருக்காது. பசிக்கு உள்ளவர் இல்லாதவர் எனப் பாகுபாடு இல்லை. எனவே சகமனிதன் பசித்திருக்கக் கூடாது என்றும் அதேநேரத்தில் பசித்திருக்கும் மனிதனின் கவுரவத்தையும் பாதிக்க கூடாது என்ற நுட்பமான உளவியல் சிந்தனையோடு ஊர்ப்பொதுவில் கூழ்க் காய்ச்சி ஊற்றுவதைச் சடங்காக வைத்திருந்தது வேளாண் சமூகம். தெய்வத்தின் பெயரால் கூழ்க் காய்ச்சுவது என்றால் குதிரில் (சேமிப்பில்) தானியம் வைத்திருப்போர் தாராளமாக வாரி வழங்குவார்கள்.
கூழ் ஊற்றுவதையும் வெறும் சடங்காக வைத்திருந்தால் ஒருநாளில்லை என்பதாலோ ஒருநாள் அதில் சுணக்கம் காட்டி விடுவார்கள் என்றோ என்னவோ அந்தந்த பகுதியில் உள்ள தெய்வங்களுக்கு படையல் செய்து கூழ் ஊற்று வதை வழிபாட்டு முறையாக, தெய்வீகச் சடங்காக வைத்தார்கள். அதனால் தான் தாழியில் கூழ் காய்ச்சி இரண்டு மூன்று நாட்களுக்கு வேண்டுகிற போதெல்லாம் கரைத்துக் கரைத்துக் குடிக்கும் வழக்கம் இன்று ஒழிந்து விட்டது. ஆனாலும், பங்குனி சித்திரையில் அம்மனுக்குக் கூழ்வார்த்தல் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை இன்றளவும் தவறாது தொடர்கிறது.
பெருந்தெய்வப் படையல் ஆடம்பரமானது. எளிய மக்களின் கைக்குச் சற்றுத் தொலைவிலானது. அதனை அவரவர் வசதி வாய்ப்பிற்கு ஏற்ப சாத்தியப்படும் பொழுது செய்து கொள்வார்கள். ஆனால் இனக்குழுவைக் காப்பாற்றுவதற்காக தம்மையே அர்ப்பணித்த இசக்கி, அம்மன், அய்யனர், வீரன், மாடன் போன்றவர்களை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். இச்சிறுதெய்வங்கள் அனைத்தும் நம் முன்னோர்களே ஆவர். சிறுதெய்வங்களுக்கு வேண்டியதெல்லாம் படைப்பது எளிய மக்களின் கைக்கு சாத்தியமானவை தான். தமக்கு இயன்றவற்றைத் தெய்வத்திற்கு செய்வதன் பேரால் சக மனிதனுக்கும் செய்வதே நம்முடைய பாரம்பரியமான நடைமுறை. அந்தவகையைச் சேர்ந்ததுதான் கூழ் ஊற்றுதலும்.
தமிழகத்தில் காவிரித் தீரம், அதாவது காவிரிப் பாயும் நிலப்பகுதி தவிர மற்றெல்லாப் பகுதிகளிலும் கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு என பத்திற்கும் மேற்பட்ட சிறுதானியங்கள் விளைந்தன. மேட்டுக்காட்டிற்குப் போய் ஆடிமாதம் நிலத்தைக் கீறி பொட்டுநீங்காத தானியத்தைத் தூவி விட்டு வந்தால் போதும். அடுத்தடுத்த இரண்டு மழைகளில் முழங்கால் உயரத்திற்கு வளர்ந்து நிற்கும். ஒருமுறைக்களை எடுத்து விட்டால் போதும். ஐப்பசி அடைமழையில் மணி பற்றி கதிர் பறிந்து குலுங்கும். மார்கழியில் அறுத்து தை மாதத்தில் அடித்து மூட்டை கட்டுவார்கள்.
ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் குறுவிவசாயிகள் வீட்டிலும் பலவிதமான தானியங்களும், பயிறு வகைகளும் குதிர்களிலும், அடுக்குப் பானைகளிலும் சேமிக்கப்பட்டிருக்கும். தலைக்குக் கூரை இல்லை என்றாலும் காலுக்குச் செறுப்பு இல்லை என்றாலும் வயிற்றை நிரப்ப கூழுக்கும், வாயில் கடிக்க வெங்காயம், மிளகாய்க்கு இல்லாமற் போகாது. அதாவது உடலுக்கும் உயிருக்கும் உத்தரவாதமான வாழ்வாதாரம் இருந்து வந்தது. இன்றோ வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி விட்டது போலத் தோன்றினாலும் உயிருக்கு உத்திரவாதமில்லை. நோய்களும் திடீர்ச்சாவுகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன.
பெருகி வரும் நோய்களுக்கு முதன்மைக் காரணி சட்டென்று ஓரிரு தலைமுறைக்குள்ளேயே மாறிவரும் உணவுப் பழக்க வழக்கம். மேலே சொன்னது போல நம்முடைய உடல் மரபுக்கூறுகளைக் கொண்டே பிறக்கிறது. மரபுக்கூறு காலங்காலமாக பின்பற்றி வந்த உணவில் இருந்தே வடிவமைக்கப்பட்டது. அதனை சடுதியில் மாற்றுகிற பொழுது நம்முடைய உயிரணுக்கள் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைக்கும் திறனைப்பெற அவகாசம் இல்லை. ஆகவே தான் உடல் நெருக்கடிகளைச் சந்திக்கிற பொழுது அவற்றை எதிர்கொள்ள இயலாமல் திணறுகிற பொழுது, உயிரணுக்கள் உடலைக் கை விட்டு விடுகின்றன. கூடு இருக்க குருவி விண்ணேகி விடுகிறது. அதாவது…..

நெல், நெல்லில் இருந்து உமி நீக்கிய அரிசியையும் நாம் காலங்காலமாக உண்டு வந்திருக்கிறோம் தான். ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மக்கள் மூன்று வேளையும் நெல்லரிசியைச் சார்ந்திருக்கவில்லை. மேற்சொன்னது போல பல்வகையான தானியங்களை விளைவித்து வந்திருக்கிறார்கள்.
அவற்றையும் சோறாக வடித்து உண்பதோ, இட்லி – தோசை போன்ற பலகாரங்களாக மாவாக அரைத்துச் சமைப்பதோ இல்லை. அரிதாகவே அவற்றைச் சமைத்து உண்டனர். குறிப்பாக வெயில் காலத்தில் கூழே முதன்மை உணவாக இருந்தது. சிறுதானியம் பெருந்தானியம் எனப் பலவகைத் தானியங்களிலும் கூழ் காய்ச்சுவது வேளாண்குடிகளிடையே உண்டு.
பயிரிடலில் இந்த வருடம் கேழ்வரகு என்றால் அடுத்தவருடம் சோளம். வரகு அல்லது சாமை என்ற மாற்றுப் பயிர் என்பது வேளாண் கலாச்சாரம் ஆகும். பல பகுதிகளில் அனைத்துத் தானியங்களையும் கலவையாகவே பயிரிட்டனர். ஒரு தானியம் மட்டுமே நம்முடைய உடலுக்குத் தேவையான சத்துக்களை ஈடுசெய்து விடுவதில்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான தாதுச் சத்து, கனிமச் சத்து என்று இருக்கும். சுவையும் ஒன்றிற்கொன்று மாறுபடும். இவையெல்லாவற்றையும் விட சில தானியங்கள் மூன்று மாதத்தில் உயிர்ப்பண்பை இழந்து புழுப்பிடிக்கும். சிலதானியங்கள் பல பத்தாண்டுகள் மட்டுமல்ல, பலநூறு வருடங்கள் கூட உயிர்ப்புக் கெடாமல் இருக்கும். இத்தானியங்களின் நிறமும் வேறு வேறு. ஒரே தானியத்தில் வெவ்வேறு நிறங்களில் வகைகள் இருக்கும். சோளத்தை எடுத்துக் கொண்டால் வெள்ளைச் சோளம், சிவப்புச் சோளம், கருப்புச்சோளம் எனப் பலநிறங்களில் உண்டு. அவற்றின் வடிவம் ஒன்றாக இருந்தாலும் நிறமும் சுவையும் வேறுவேறு.
காலையில் சூரியனுக்கு முன் மாடுகளைப் பூட்டிக் கொண்டு, உழவுக் கருவிகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு நிலத்திற்குப் போனால் அதனைப் பண்படுத்தும் வேலை, வயதிற்கும், உடல் வலுவிற்கும் ஏற்றாற்போல இருந்து கொண்டே இருக்கும். உள்ள வேலையைக் குடும்பத்தினர் அனைவரும் பகிர்ந்து செய்வார்கள். பொழுது சாய பிற்பகல் மூன்று மணிக்கு வீடு திரும்பியதும் முதல் வேலையாக வீட்டில் உள்ள கம்பு, சோளம் போன்ற தானியத்தை எடுத்து சிறிதளவு நீரில் ஊறப்போடுவார்கள். அதற்கு நேர அளவெல்லாம் இல்லை. அப்படியே வேலைகளுக்கிடையே ஊறும் தானியத்தை எடுத்துக் கடித்துப் பார்ப்பார்கள். பாதியளவிற்குத் தானியம் கடிபட்டதென்றால் அதுதான் பக்குவம். அதனை எடுத்து பனைவோலை அல்லது நார்ப்பெட்டியில் போடுவார்கள். நீர் வடிந்து முக்கால் பதத்தில் இருக்கும்.
அதன் பிறகு அதனைக் கல்லுரலில் போட்டு கருங்காலி அல்லது அதுபோன்ற இறுகலான மரத்திலான பூண் உலக்கையால் இடிப்பார்கள். இடியென்றால் காது தண்டட்டிகள் ஆட இரண்டோ மூன்றோ பெண்கள் கூடி மாறி மாறி லாவகமாக உலக்கையைப் போடுவார்கள். இடிக்கிற நேரத்துல்லியம் இருக்கிறதே மைக்ரான் அளவு கூடப் பிசகாது. அவ்வளவு நுட்பமான பணியது. பேசிக்கொண்டும் பாட்டுப் பாடிக்கொண்டும், பிள்ளைகளை வேலை ஏவிக் கொண்டும் இடிக்கிற வேலை மேகங்கள் கூடி மோதுவதைப் போல தும் தும்துமென்று விழுந்து கொண்டே இருக்கும்.
இடித்த தானியம் மாவாகவும் ஆகாது, ரவைப் பதத்திலும் இருக்காது, கருணையாகவும் இருக்காது. பெருந்தானியம் சிறுதானிய அளவிற்கு உடைபட்ட பின்னர் எடுத்துக் கொதிக்கிற உலையில் சாரளாக உதிர்த்து விடுவார்கள். முறத்தில் இருந்து அள்ளிக் கொட்டினால் கட்டி கட்டியாகப் பிடித்து கிண்டவும் முடியாது, காய்ச்சவும் முடியாது. இடித்த தானிய நொய்யை ஒரு கையால் அள்ளிப்பெய்ய மறுகையால் துடுப்பு கொண்டு கிளறி விட்டுக் கொண்டே இருப்பார்கள். இரண்டு கைகளும் இயந்திர இசைவுடன் வேலையை நளினமாகச் செய்யும்.
அத்தனையும் செய்து முடித்தவுடன் எரியும் தீயைத் தணிப்பார்கள். கொதி டுபுக் டுபுக்கென்று குமிழியிடும். அடுத்த ஓரிரு நிமிடங்களில் எரியும் அடுப்பை அணைத்து விடுவார்கள். என்றாலும் சுள்ளிகளின் தணலில் தாழியில் புழுங்கும் கூழ் டுப் டுப்பென்று வெடித்து ஆவி பறக்கும். அப்பகுதியெங்கும் வாசம் மணக்கும். இயற்கையில் விளைந்த தானியத்தில் காய்ச்சிய கூழில் மேலேடு படியும் பொழுது எண்ணைப் பூசியது போல மினுமினுத்து வெண்ணைக் காகிதம் (பட்டர் பேப்பர்) போல சுருளும்.

போப்பு, 96293 45938
கூழைக் காய்ச்சுதலே ஓர் தனித் தொழில்நுட்பம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இத்தனை நுட்பம் வாய்ந்த கூழைக் காய்ச்சியவன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பைக் காய்ச்சி வார்த்தான் என்ற வரலாற்றில் ஒன்றும் வியப்பில்லை.
கடந்த இரண்டு இதழ்களில் பார்த்ததைப் போலவே நீராகாரத்திலும், மோரிலும் நிறைந்துள்ள குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணியிரிகள் கூழிலும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டிலும் வெயிலும், வறட்சியும் கூடிக்கொண்டு வரும் இக்காலத்தில் முன்னிலும் முக்கியமான உணவாக இருக்கிறது கூழ். வீட்டு உணவாக இருந்த கூழ், இன்று வணிக உணவாக மாறியிருப்பது ஒருவகையில் நல்லதே. ஆனாலும் அதில் உள்ள எதிர்மறையம்சங்கள் குறித்து கவனிக்க வேண்டியுள்ளது. வீட்டிலும் கூழ் எளிதாகக் காய்ச்சும் முறையையும், எந்தெந்த உடல் உபாதைகளின் போது கூழினை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பார்க்கலாம். தானிய வாரியாக கூழின் சிறப்பம்சங்கள் குறித்தும் காணலாம்.
- அசைவ உணவுகள் உண்பதால் செரிமான சக்தி குறைந்து மனக்குழப்பம் அதிகமாகும்.
- தினமும் காலையில் அல்லது மாலையில் நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி செய்வது சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வது புத்துணர்வை ஏற்படுத்தும்.
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம்
வாழ இன்னருள் தா தா
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15ம் நாள், சனிக்கிழமை 29-03-2025 அன்று இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி தனது சொந்த வீடான கும்ப ராசி பூரட்டாதி 3ம் பாதத்தில் இருந்து குருவின் வீடான மீன ராசி பூரட்டாதி 4ம் பாதத்திற்கு பெயர்ச்சி யாகிறார். தனது 3ம் பார்வையால் கால புருஷ 2ம்மிடமான ரிஷப ராசியையும், 7ம் பார்வையால் கால புருஷ 6ம்மிடமான கன்னி ராசியையும்,10ம் பார்வையால் கால புருஷ 9ம்மிடமான தனுசு ராசியையும் பார்க்கிறார்.
வருட கிரகங்களில் சனி கிரக பெயர்ச்சியை பற்றிய எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். ஒரு ராசியில் அதிக வருடம் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் சனி பகவான் என்பதால் சனிப்பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்போது கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லும் சனி பகவான் நமக்கு நல்லது செய்வாரா? என்ற கேள்வி உள்ளது இயல்பு.
ஒரு ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அது அவரவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தை அமையும். இந்த ஜென்மத்தில் ஜாதகர் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான்.
ஒருவர் எந்த மனத்தாங்கலும் இன்றி நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய சுய ஜாதகத்திலும் கோச்சாரத்திலும் சனி கிரகத்தின் பங்களிப்பு சாதகமாக உள்ளது என்று பொருள் அதே நேரத்தில் சதா சர்வ காலமும் நிலையான தொழில் உத்தியோகம் நிம்மதியான வாழ்க்கையில் இல்லாமல் மன நிம்மதியாக இருந்தால் சுய ஜாதகத்தில் கோச்சாரத்திலும் சனி பகவானின் தாக்கம் உள்ளது என்று பொருள். எப்பொழுதுமே யாராக இருந்தாலும்
ஏதாவது ஒரு காலகட்டத்தில் சிறு சிறு மனவேதனை படக்கூடிய சம்பவங்கள் நடந்து தீரும் அப்பொழுது ஆறுதலாக நிழலாக இருப்பது பரிகாரங்களே. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அடுத்த இரண்டரை வருடத்திற்கு அனைவரும் சுகமாக வாழ இங்கே சில எளிய பரிகார முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்தி சிறப்புடன் வாழ நல்வாழ்த்துகள்.
உளவியல் ரீதியான பரிகாரங்கள்
ஒவ்வொருவரும் தமது அன்றாட வாழ்வில் சில எளிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க பெரும்பான்மையான நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும்.
தினமும் காலையில் எழுந்தவுடன் நல்ல தரமான மூலிகைகளை கொண்டு பல் துலக்க வேண்டும். வெது வெதுப்பான தண்ணீர் குறைந்தது 1 டம்ளர் குடிக்க வேண்டும். பின் உடல் கழிவுகளை நீக்க வேண்டும். உடல் கழிவுகளை வெளியேற்றாவிட்டால் மன அழுத்தம் அதிகமாகும்.
குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.
அவரவர் குல சம்பிரதாயப்படி இஷ்ட குலதெய்வத்தை பிரார்த்திக்க வேண்டும். தீராத தீர்க்க முடியாத பிரச்சினைகளை பிரபஞ்ச சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும்.
தினமும் வீட்டில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹிருதயம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும். லலிதா சஹஸ்ரநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்க அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். எதிர்வினைகளின் பாதிப்பு இருக்காது. தினமும் அன்று சமைத்த புதிய உணவுகளை சாப்பிட வேண்டும். இயன்றவரை பழைய உணவுகளை தவிர்த்தல் நல்லது.
அசைவ உணவுகள் உண்பதால் செரிமான சக்தி குறைந்து மனக்குழப்பம் அதிகமாகும். ஏழரைச் சனி அஷ்டம சனி காலங்களில் அசைவ உணவை தவிர்த்தால் மிகவும் நல்லது. அசைவ உணவை சாப்பிடும்போது அந்த பட்சிகள் விலங்குகளின் கர்மாவையும் கலந்து உண்ண நேரும்.
தினமும் இயன்ற தான தர்மங்கள் பண்ண வேண்டும். குறிப்பாக பட்சிகளுக்கு விலங்குகளுக்கு உணவிடுவது வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவது அதிக நன்மையை ஏற்படுத்தும்.
வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடும்போது நல்ல அதிர்வலைகள் உடலிலும் உள்ளத்திலும் சுற்றுப்புறத்திலும் இருக்கும்.

வீட்டில் வேலையாட்கள் சமைத்தால், வேலையாட்கள் என்ன மனநிலையில் உள்ளார்களோ அந்த உணர்வு சமைக்கும் உணவில் கலந்து விடும். அந்த உணவை சாப்பிடும்போது சமைத்தவரின் உணர்வையும் உங்களுள் சென்று உடலாலும் மனதாலும் அசவுகரியத்தை அனுபவிக்க செய்யும். நாள் முழுவதும் சமைத்தவரின் உணர்வுகளை உங்களுள் பிரதிபலிக்கும். எனவே குடும்ப உணர்வு உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து ஸ்ரீ ராம ஜெயம் சொல்லிக் கொண்டே சமைக்க அன்றைய உணவு உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.
பெண்கள் குளிக்காமல் சமைக்கக்கூடாது. மனதில் தான் சமைக்கும் இந்த உணவை தனக்கு புண்ணிய பலன்களை வழங்கும் என்று நம்பிக்கையுடன் சமைக்க குடும்ப உறவுகள் வலுப்படும். உணவு சமைத்த பாத்திரங்களை உடனே சுத்தம் செய்ய வேண்டும். அவரவர் சாப்பிட்ட தட்டுகளை அவரவரே சுத்தம் செய்ய வேண்டும்.
வெளியில் இருந்து வீட்டுக்கு வருபவர்களுக்குக் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். அதே போல் வீட்டை விட்டுவிட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். வெளியில் தண்ணீர் குடிக்காமல் தாகம் எடுக்கும்போது கொண்டு சென்ற தண்ணீரையே குடிக்க வேண்டும்.
தினமும் இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்து அதிகபட்சம் 10 மணிக்குள் படுக்கைக்கு செல்வது நல்லது. செல்போனில் தேவையில்லாத ஷார்ட்ஸ், ரீல்ஸ்கள் பார்க்கும்போது மன பாதிப்பு அதிகமாகும் அதில் பார்த்த கெட்ட சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும்.
அதேபோல் எந்த வீட்டில் 24 மணி நேரமும் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறதோ அந்த சீரியலில் நடக்கும் சம்பவங்கள் நடந்து மன உளைச்சல் அதிகமாகும். அதே கெட்ட சம்பவங்கள் உங்கள் வீட்டில், குடும்பத்தில் எதிரொலித்து பிரச்சினையை அதிகரிக்கும்.

தினமும் காலையில் அல்லது மாலையில் நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி செய்வது சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வது புத்துணர்வை ஏற்படுத்தும். வீட்டில் அனைத்துப் பகுதிகளையும் குப்பை கூலங்கள் சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உடுத்தும் ஆடை மிக சுத்தமாக இருக்க வேண்டும். தலை விரித்து போட்டுக்கொண்டு கோவிலுக்கு செல்லுதல் நிச்சயம் கூடாது. இனி ஜோதிட ரீதியான பரிகாரங்களை பார்க்கலாம். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு சிரமம் இருப்பவர்கள் சனிக்கிழமை மவுன விரதம் இருக்க வேண்டும். சனிக்கிழமை சனி ஓரைகளில் காலை 6 - 7 மதியம் 1 - 2 இரவு 8 - 9 சமைக்கக்கூடாது சாப்பிடக்கூடாது.
நேரம் கிடைக்கும் போது சிவன் கோவில் உழவாரப்பணி செய்தால் சனி பகவான் மிகவும் நல்ல பலனைத் தருவார். சனிக்கிழமை சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும்.
சனிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். சனிக்கிழமை சனி ஓரையில் சிவனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
சனிக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமை பித்ருக்களை வழிபட வேண்டும். சனிக்கிழமை குளத்து மீன்களுக்கு பொரியிட வேண்டும்.
சனிக்கிழமை செவ்வாய் ஓரையில் நல்லெண்ணெய் தீபம் 6 ஏற்றி முருகப் பெருமானை வழிபடவும். சனி தசா, ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி காலங்களில் அசைவ உணவை தவிர்த்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வர வேண்டும்.
சனிக்கிழமை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, கண் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு தேவையான மருத்துவ உணவு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குல தெய்வ கோவில் அல்லது சிவன் கோவிலில் ஆல ,அரச மரங்களை நட்டு வளர்க்கவும்.
ஜென்ம நட்சத்திரம் நாளில் அவரவர் நட்சத்திர விரட்சங்களை வழிபட எந்த தீவினையும் நெருங்காது. பவுர்ணமி நாட்களில் குலதெய்வ, சிவ வழிபாடு செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.
நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்கள்,மேலும் குடும்பத்தில் அனைத்து விதமான உள்ள அசவுகரியங்களும் குறைய பவுர்ணமி நாட்களில் சத்ய நாராயணர் பூஜை செய்தால் உன்னதமான பலன்கள் உண்டாகும்.
சனிக்கிழமை சூரிய ஓரையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
கோசாலையில் உள்ள பசுக்களுக்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை வழங்குவது சிறப்பானதாகும். வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

குறிப்பிட்ட பிரார்த்தனைகள் வேண்டுதல்களை நினைத்து 48 நாள் ஒரு மண்டலம் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது நிச்சயம் நிறைவேறும்.
நவக்கிரக வழிபாட்டு முறையில் எதிலும் வெற்றி பெறலாம். விநாயகர், ஆஞ்சநேயர் இவர்கள் இருவரையும் பூஜித்தால் சனி தோஷம் நெருங்காது சனிக்கிழமை அல்லது சனி ஓரைகளில் விநாயகரையும், ஆஞ்சநேயரையும் தரிசிக்க பூஜை செய்து வழிபட சகல சங்கடங்களும் விலகி நிம்மதி கூடும்.
வயது முதிர்ந்தவர்கள் அனாதை ஆசிரமத்தில் வாழ்பவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் அழுக்கு உடையுடன் இருப்பவர்கள் மனநிலை பாதித்தவர்கள் இவர்களுக்கு உதவ சனி பகவானால் கெடுபலன்கள் நடக்காது.
தொழில், உத்தியோகத் தடை விலக கடன் பிரச்சினை குறைய சனிக்கிழமைகளில் ஒரு மீட்டர் கருப்பு அல்லது நீலத்துணியில் 64 எள் பொட்டலம் செய்து தனிச் சன்னதியாக உள்ள சனி பகவானுக்கு விளக்கேற்ற வாழ்க்கை வளமாகும்.
நல்லெண்ணெய், இரும்பு சட்டி, கைத்தடி, செருப்பு போன்றவற்றை தானம் வழங்க நன்மை பெருக்கும். புனித நீர் நிலைகளில் நீராடுதல் முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணங்கள் செய்து வருதல் சனி கிரகத்திற்கு நல்ல பிரீதியாகும்.
உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவ சகல இடையூறுகளும் தீரும். சனிக்கிழமை 21 முறை வன்னி மரத்தை வலம் வர வளமான எதிர்காலம் உருவாகும்.
சனிப் பிரதோஷ நாட்களில் உண்ணா நோன்பு இருந்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.
சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட சனி தோஷம் குறையும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட சகல காரியத்திலும் வெற்றி உண்டாகும்.
மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால் தந்தை மகன் கருத்து வேறுபாடு அகலும். நளன் சரித்திரத்தை படிப்பதும், கேட்பதும் சிறப்பானது.
வாழும் காலத்தில் ஏற்படும் இன்னல்கள் விலக பரிகாரம் மிக அவசியம். உரிய பரிகாரங்களை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.
- திவ்யா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல சார்.
- ராஜேஷ் கூறிய கதையை கேட்ட எல்லோருக்குமே இதை நம்ப முடியவில்லை.
"இப்ப சொல்லு ராஜேஷ்... யாரு ஹீரோ? - டேவிட் பிஸ்டலை அவன் நெற்றிப்பொட்டில் வைத்தபடி கேட்டான். ராஜேஷ் விக்கித்து நிற்க... சுற்றி நின்ற ராஜேஷ் ஆட்கள், அழகர் ஒரு அடி முன்னால் வைக்க... "யாரும் நகராதீங்க மீறி நடந்தா, இருக்கிற கோபத்துக்கு ராஜேஷ் நெத்தில இந்த பிஸ்டல் ரத்தப்பொட்டு வைக்கும்...!" - டேவிட்டின் கோபமான குரலில் எல்லாரும் உறைந்து நின்றனர்.
"மேரி, போய் இவன்க கார்ல கயிறு இருக்கும் எடுத்துட்டு வா..." - மேரி ஓடினாள்.
"டேய்... போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணுங்க... இவன் சொன்ன குட்டிக்கதையை அவங்களும் கேட்கட்டும்..."
நெல்சன், தியாகு, செந்தில் மூவருமே போனில் அருகில் உள்ள போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு டயல் செய்ய ஆரம்பித்தனர்.
அடுத்த சில நிமிடங்களில், இன்ஸ்பெக்டர் அழகர், ராஜேஷ், அந்த இருபெண்கள் உள்பட மரங்களில் கட்டிபோடப்பட்டிருக்க... மணி மற்றும் கான்ஸ்டபிள்கள் துணையாய் இருக்க, எதிரே நின்றிருந்தான் டேவிட் - கையில் பிஸ்டல்!
"ரொம்ப தப்பு பண்ணிட்ட ராஜேஷ். தப்பான ரெண்டு பெண்களை கூட்டிட்டு... என் திவ்யாவை நீ கடத்தினது தப்பு. அதுக்கு உடைந்தயா அழகர் செயல்பட்டது மாபெரும் தப்பு.!"
இடைமறித்த பெருமாள்...
"என்ன மாப்பிள்ளை பேசிகிட்டு. போலீஸ்ல இவன்களை ஒப்படைச்சாலும், சட்டம், கோர்ட்டுனு தப்பிச்சுடுவாங்க. 'பட்பட்'னு போடு மாப்பிள்ளை. கேட்டா, தற்காப்புக்காக சுட்டோம்னு சொல்லிக்கலாம்" வெறித்தனமாய் கத்தினான்.
சிரித்தபடி டேவிட், ராஜேஷை ஏறிட்டான்.
"பாத்தியா... அரசியல்வாதியா இருந்தாலும், எங்க காதலை எதிர்த்த பெருமாள் எங்களுக்கு எதிரா செயல்படலை. ஆனா... நீ அசிங்கமா நடந்துகிட்ட. பெருமாள் சொல்ற மாதிரி உன்னை சுட்டுடவா...?" ராஜேஷ் நெற்றிப் பொட்டில் பிஸ்டலை வைத்தான்.
"அப்படி சுடணும்னா... நீ உங்கப்பா வேதநாயகத்தைதான் முதல்ல சுடணும். அவருதான் திவ்யாவை கடத்த பிளான் போட்டுக்குடுத்ததே! டேவிட் அதிர்ந்தான்.
"என்னது திவ்யாவ கடத்தச் சொல்லி திட்டம் போட்டு கொடுத்தது, என் அப்பா தேவ சகாயமா?" டேவிட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பேரும், அதிர்ந்து போன அந்த நாளின் அந்த நிமிடத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு...
அன்று ஞாயிற்றுக்கிழமை... காலையில் சர்ச் போய், ஆட்டோவில் வந்து இறங்கி, வீட்டுக்குள் நுழைய முற்பட்ட டேவிட்டின் அப்பா தேவசகாயம் கண்ணில் பட்டான் ராஜேஷ்.

இயக்குநர் A. ெவங்கடேஷ்
பைக்கில் அமர்ந்தபடி யாருடனோ போனில் பேசியபடி, அவ்வப்போது டேவிட்டின் வீட்டை அவன் நோட்டமிடுவதை பலமுறை பார்த்திருக்கிறார் தேவசகாயம். நேரே வீட்டிற்குள் நுழையாமல் ராஜேஷ் நோக்கி வந்தார். தேவசகாயம் தன்னை நோக்கி வருவதை பார்த்ததும், ராஜேஷூக்கு முதுகு தண்டில் ஐஸ்கட்டியை வைத்தது போல் சிலீரென்றது. என்றாலும், காட்டிக் கொள்ளாமல் உதறலை மறைத்தபடி போன் உரையாடலை தொடர்ந்தான். அவன் அருகில் வந்து நின்ற, தேவசகாயம் தொண்டையை செருமினார். அப்போதுதான் அவரை கவனித்த பாவனையில் "மச்சான்... நா அப்புறம் கூப்பிடுறேன்... இங்க ஒரு கெஸ்ட்!" - போனை துண்டித்தான். தேவசகாயத்தை ஏறிட்டான்.
"சொல்லுங்க சார்...!"
"உங்க பேரு என்ன தம்பி?"
"ராஜேஷ்...!"
"தெருவுக்கு புதுசா குடி வந்திருக்கீங்களோ?"
"ஆமா... ஏன் சார்?"
"இல்ல, என் பையன் திவ்யாவை கல்யாணம் பண்ணி கொஞ்சநாள் தான் ஆகுது... அவங்க கல்யாணம் முடிஞ்ச, சில நாள் கழிச்சு இந்த தெருவுக்கு வந்தீங்க... ஆனா வந்த நாள்ல இருந்து கவனிக்கிறேன். என் மருமகளை பாலோ பண்றீங்க... உங்களுக்கு என்ன வேணும்?"
காதுக்குள் 'கரண்ட் ஷாக்' கொடுத்ததுபோல் இருந்தது, ராஜேஷூக்கு! இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
"இல்லியே சார்... அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை..."
"மறைக்காதீங்க தம்பி... உண்மையை சொன்னா உங்களுக்கு உதவியா இருப்பேன்... ஏன்னா, என் பையன் டேவிட், அவளை கல்யாணம் பண்ணது எனக்கு பிடிக்கலை..."
உணர்ந்தான் ராஜேஷ். "ஆமா சார்.. நான் திவ்யாவை பாலோ பண்றது உண்மைதான்! இப்ப சொல்லுங்க... என்ன உதவி பண்ணப் போறீங்க...?" - கேட்டான்.
"இங்க நின்னு ரொம்ப நேரம் பேச வேண்டாம். சாயங்காலமா... ஜங்ஷன்ல இருக்கிற ஓட்டலுக்கு வாங்க... நிறைய பேசலாம்!"
ஓட்டல் பெயரை சொன்னார்.
சாயங்காலம். அந்த ஓட்டல் ரெஸ்டாரண்ட். பேருக்கு எதையோ ஆர்டர் பண்ணிவிட்டு எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரில் தேவசகாயம் பேசினார்.
"தம்பி... நான் தீவிர கிருஸ்டியன். என் பையன் டேவிட், ஒரு இந்துப் பெண்ணை லவ் பண்ணது எனக்கு பிடிக்கலை. என் வீட்டுல உள்ளவங்க முன்னாடி அவங்க காதலுக்கு ஒத்துகிட்ட மாதிரி நடிச்சாலும்... மனசு ஒத்துக்கவே இல்லை. என் மகன் டேவிட் பிடிவாதக்காரன். நான் பேசினாலும் ஒத்துக்க மாட்டான். அதனால அமைதியா நடந்ததை வேடிக்கை பார்த்தான்.
ஆனா - அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது, எனக்கு விருப்பமேயில்லை. சொல்லுங்க... அவங்களை பிரிக்கணும்... அதுக்கு முன்னாடி நீங்க சொல்லுங்க... எதுக்கு நீங்க திவ்யாவை தொடர்ந்து பாலோ பண்றீங்க?"
ராஜேஷ் தொண்டையை செருமி, ஒரு சிப் தண்ணீர் குடித்தான். டம்பளரை கீழே வைத்தவன்... "ஒரு சிப் தண்ணீர் குடிச்சதும்... வேண்டாம்ன்னு இந்த டம்ளரை தள்ளி வைச்ச மாதிரி, என்னை தள்ளி வெச்ச திவ்யாவோட அப்பா ரங்கராஜன் தான் சார் எல்லாத்துக்கும் காரணம்!"
தேவசகாயம் அவனையே பார்த்தார்.
"நான் பாளையங்கோட்டை சார்... என்னைத் தான் ரங்கராஜன் அவரு பொண்ணுக்கு பேசினார். இது விஷயமா எங்க வீட்டுக்கு கூட வந்திருக்காரு. திவ்யா, குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு வருவான்னு தெரிஞ்சு, அங்க போயி... அவருக்குத் தெரியாம அவளை ரெண்டு தடவ பார்த்திருக்கேன் சார்... அவதான் என் மனைவின்னு பிக்ஸ் ஆயிட்டேன்... எங்கப்பா கிட்ட சீக்கிரம் கல்யாணம் முடிங்கன்னு அவசரப்படுத்தினேனா பாருங்க..."
"அப்புறம் வந்து என் பொண்ணு, டேவிட்னு ஒரு பையனை விரும்புறா... அவனுக்கே அவளை கல்யாணம் பண்ணி வைக்க போறேன்... அதனால உங்க பையனுக்கு வேற வரன் பார்த்துக்கோங்க அப்படின்னு உங்கப்பாகிட்ட சொல்லிட்டு போயிருப்பாரே அந்த ரங்கராஜன்!"
ராஜேஷ் 'ஆமா' என தலையாட்டினான்.
"நானும் திவ்யாவோட அண்ணன் பெருமாள் தீவிர மத பற்று உள்ள கட்சிக்காரன். அப்பன்காரனும், அவனும் ஒத்துக்கமாட்டங்கன்னு நெனைச்சேன். ஆனா எல்லாமே கைமீறி போயிடுச்சு..."
சற்று நேரம் அமைதியானார்கள். தேவசகாயம் தொடர்ந்தார்.
"உனக்கு இப்ப திவ்யா கிடைச்சாலும் சம்மதமா?"
சற்று குழம்பினாலும், "இப்ப இல்ல சார்... எப்போ கிடைச்சாலும் எனக்கு சம்மதம்தான்..."
"அப்போ அவளை கடத்திடு!"
தேவசகாயம் இப்படி சொன்னதும், ராஜேஷூக்கு நெருப்புக்குகைக்குள் போனது போல் 'சுரீர்' என்றது.
"என்ன தம்பி பாக்குறே... அவ கழுத்துல இருக்கிற என் பையன் கட்டின தாலியை எடுத்துட்டு, நீ ஒரு தாலிய கட்டிபுட்டா... அவ உன் பொண்டாட்டி... மிரட்டி, உருட்டி இதை நீ பண்ணணும்... அப்புறம் அவளை கூட்டிட்டு தமிழ்நாட்டை விட்டே தூரமா போய், அவளை மனைவியா வெச்சுக்கோ... முதல்ல முரண்டு பிடிச்சாலும்... ஒருகட்டத்துக்கு அப்புறம் சமாதானம் ஆயிடுவா?"
"திவ்யா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல சார். கடைசிவரை ஒத்துக்க மாட்டா... அதுக்கு பதிலா தற்கொலை பண்ணிக்குவா..."
"பண்ணட்டும்... யேப்பா... இங்க பாரு தம்பி, பேசி மசிய வைக்கப்பாரு... இல்லையா தப்பான தொழில் பன்ற பொண்ணுங்க கிட்ட தள்ளிவிட்டுரு... அதுவும் முடியலையா, அவ சாகணும்னு விதி இருந்தா சாகட்டும்!"
அவரது பேச்சில் இருந்த வெறுப்பின் உச்சத்தை ராஜேஷ் கவனித்தான்.
"அவள கடத்திடுவேன்... ஆனா, பின்னாடி பிரச்சினை ஏதும் வந்துடுமோன்னு பயமா இருக்கு..."
"திவ்யா உங்களுக்கு வேணும்னா நீங்க இந்த ரிஸ்க் எடுத்துதான் ஆகணும். பணம் நான் தரேன். ஆளுங்களை செட் பண்றது.. போலீஸ் சமாளிக்கிறது இதெல்லாம் உங்க வேலை. நான் எப்படி கடத்தனும், என்னென்ன பண்ணனும்ன்னு ஐடியாக்கள் தரேன்... வழக்கம்போல எதுவுமே தெரியாத மாதிரி எங்க வீட்ல நல்லவனா நடந்துப்பேன். ம்... என்ன சொல்றீங்க...?"
ராஜேஷ் யோசித்தான்.
"யோசிக்காதீங்க தம்பி... இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருக்கிற திவ்யா அண்ணன் மேலதான், எல்லாருக்கும் சந்தேகம் வரும்... நிச்சயமா உங்க மேலே யாருக்கும் 'டவுட்' வராது. அவ்வளவு ஏன் ராஜேஷ்ன்னு ஒருத்தன் இருக்கான்கிறதே எல்லோரும் மறந்து இருப்பாங்க..."
"என்னை திவ்யாவும், டேவிட்டும் ரெண்டு தடவை பார்த்தாங்க... ஒரு தடவை நான் லேசா பேச்சுக் கொடுத்துட்டு 'டீசெண்டா' நகர்ந்துட்டேன்..."
"அது எதேச்சையா நடந்த சந்திப்புதானே! முகம் எல்லாம் நியாபகத்துல இருக்காது...!"
"சரி... பிளானை சொல்லுங்க..."
"இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. சில ரவுடிகளை 'செட்' பண்ணி, இன்னிக்க நைட், திவ்யாவும் டேவிட்டும் வர்ரப்போ கலாட்டா பண்ண வைங்க..."
"எதுக்கு?"
"நாளைக்கு திவ்யாவை நீங்க கடத்தின பிறகு, இந்த ரவுடிகள் மேல ஒரு 'டவுட்' வரும். அதுக்குள்ள அந்த ரவுடிகளை வெளி மாநிலம் அனுப்பிடலாம்..." "சார்... சூப்பரா பிளான் போடுறீங்க... வெரி குட்... இன்னியிலிருந்து திட்டத்தை செயல்படுத்துறோம்...!"
"எஸ்... நானும் என் செல்வாக்கை பயன்படுத்தி, அவங்க ரெண்டு பேரையும் வேலையை விட்டு தூக்க வைக்கிறேன்... அப்பத்தான் அவங்க 'ரொட்டின்' மாறும்... நம்ம பிளானை நாம வெற்றிகரமா செயல்படுத்த முடியும்..."
இருவரும் கை குலுக்கினார்கள்.
அன்று அவர்கள் போட்டத் திட்டம், இன்று எல்லோரையும் இந்தக் காட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. ராஜேஷ் கூறிய கதையை கேட்ட எல்லோருக்குமே இதை நம்ப முடியவில்லை.
"தேவசகாயமா இப்படி?"
டேவிட் நண்பர்கள், திவ்யா, ரங்கராஜன், ராஜேஸ்வரி, பெருமாள் என அனைவரும் அதிர்ச்சியில் சிலையாய் நிற்க, மேரி கண்ணீர் விட்டாள். "நமக்கும் ஒரு பொண்ணு இருக்கா... அவ மாதிரித்தானே திவ்யாவும்... ஏங்க இப்படி பண்ணினீங்க..." என ஓங்கி குரல் எடுத்து அழுதபடி, தேவசகாயத்தை சட்டையை பிடித்து உலுக்கினாள் லிசா. அமைதியாய் நின்றார் தேவசகாயம். படாரென்று அவரது காலில் விழுந்த மேரி, "அப்பான்னு உங்களை எப்படி கூப்பிடுவேன் இனிமே... மதம் எங்களுக்கும் பிடிக்கும்... ஆனா மதத்து மேல இருக்கிற வெறியில இப்படி ஒரு கேவலமான விஷயம் பண்ண முடிவு பண்ணிட்டீங்களே... சே..." விம்பி வெடித்தாள்.
(தொடரும்)
- ஒரு ஆணும் பெண்ணும் சந்தோஷமாக தாம்பத்திய உறவு கொள்ளும்போது கண்டிப்பாக குழந்தைபேறு பெற முடியும்.
- பல நேரங்களில் குழந்தையின்மை என்று வரும்போது முதலில் ஆண்களின் ஈடுபாடு என்பது பாதிக்கப்படும்.
கணவன், மனைவி இடையேயான பாலியல் உறவு என்பது அடிப்படையில் சரியாக இருந்தால்தான் குழந்தை பேறு உருவாகும். ஆனால் அடிப்படையான பாலியல் உறவு என்பதே ஒரு பிரச்சினையாக இருந்தால் குழந்தைபேறு எப்படி வரும்? இந்த பிரச்சினைகள் இருக்கிற தம்பதியினரை முழுமையாக பரிசோதித்து அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அதுபோன்ற தம்பதிகளுக்கான சிகிச்சைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
தம்பதிகளின் விரிவான தாம்பத்திய வரலாறு:
குழந்தையின்மை சிகிச்சைக்காக வருகிற ஆண்கள், பெண்களிடம் முதலில் நாங்கள், அவர்களின் விரிவான தாம்பத்திய வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இதற்காக அவர்களிடம் பாலியல் தொடர்பாக தெளிவாக சில கேள்விகளை கொடுப்போம். அதன் மூலமாக அவர்களின் பாலியல் உறவு எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். பின்னர் அவர்களை முறையாக பரிசோதித்து அதில் என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை சீர் செய்வோம்.
இதில் பெரும்பாலான தம்பதிகளுக்கு ஒரு விஷயத்தில் மட்டும் சந்தேகம் உள்ளது. முக்கியமாக இந்த தம்பதிகள் சொல்லும் விஷயம், அண்டவிடுப்பு தினத்தில் மட்டும் தானே பாலியல் உறவில் ஈடுபட வேண்டும். அப்படி செய்தால் குழந்தைபேறு வந்துவிடும் தானே என்பார்கள்.
மேலும் அடுத்தடுத்து பல்வேறு கேள்விகளும் அவர்களுக்குள் எழுகிறது. எங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் உச்சகட்டம் வர வேண்டுமா? அப்போதுதான் குழந்தைபேறு கிடைக்குமா? நாங்கள் ஆர்வம் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபடுகிறோம். எனது மனைவிக்கு ஆர்வம் இல்லை. அதனால் குழந்தை பேறு உருவாகவில்லையா? என்று பலவிதமான பிரச்சினைகளுடன் கூடிய கேள்வியை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்கிற ஒரே ஒரு விஷயம், குழந்தைபேறு என்பது இயற்கையாக வருகிற விஷயம். ஒரு ஆணும் பெண்ணும் சந்தோஷமாக தாம்பத்திய உறவு கொள்ளும்போது கண்டிப்பாக குழந்தைபேறு பெற முடியும். ஆனால் அதுவே மன அழுத்தத்தோடு, ஒரு குறிக்கோளை மனதில் வைத்து தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது குழந்தைபேறு பிரச்சினையாகி விடுகிறது. அதாவது தாம்பத்திய உறவு என்பது குழந்தைக்காக என்று நீங்கள் நினைக்கும் நிலையில், அந்த விஷயம் உங்கள் கருத்தில் வரும்போதே அது மன அழுத்தத்தை உண்டாக்குகிற விஷயமாக மாறி விடுகிறது.
திருமணமான புதிதில் விரைவில் கருத்தரிப்பு:
பல தம்பதியினர் திருமணமான புதிதில் குழந்தை தொடர்பாக எந்தவித திட்டமும் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டு சீக்கிரமே கருத்தரித்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அப்போது தாம்பத்திய உறவு கொள்வதில் பிரச்சினை இருக்காது. கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களுக்கு தாம்பத்திய உறவு என்பது ஒரு சந்தோஷமான விஷயமாக இருக்கும்.
தாம்பத்திய உறவு என்பதை கணவன், மனைவி இருவரும் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதற்கும், அவர்கள் இருவருக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகவும் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக அது நல்ல பலனை கொடுக்கும். அவர்கள் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தைபேறு பெறுவதற்கான வழிமுறையாகவும் இருக்கும்.
ஏனென்றால், தம்பதிகளின் தாம்பத்திய செயல்பாடுகளை எடுத்துக்கொண்டால் அதனுடைய முக்கியமான அடிப்படையே இருவரின் விருப்பம் தான். அதன்பேரில் அவர்களின் ஈடுபாடு, நெருக்கம், அன்பு, நேசம், ஆர்வம் எல்லாமே குழந்தை பாக்கியத்துக்கு காரணமாக அமையும்.
பல நேரங்களில் குழந்தையின்மை என்று வரும்போது முதலில் ஆண்களின் ஈடுபாடு என்பது பாதிக்கப்படும். குழந்தைபேறு உருவாக வேண்டும் என்று நினைக்கும் நிலையில், இன்றைக்கு நன்றாக தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் தனது மனைவி கர்ப்பிணி ஆவார் என்று நினைத்தாலே, அந்த கணவருக்கு விறைப்புத்தன்மை குறைந்துவிடும்.
அதேபோல் பெண்களுக்கு உள்ள பாதிப்பு என்னவென்றால், இன்றைக்கு அண்டவிடுப்பு நாள். இன்றைக்கு பாலியல் உறவு வைத்தால் தான் உயிரணுக்கள், கருமுட்டையுடன் சேரும் என்று நினைத்து அதில் ஈடுபடும்போது அந்த பெண்ணுக்கு லூப்ரிகேஷன் வராது. அவர் எப்போதும் அதே சிந்தனையில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு பிரச்சினை உருவாகி விடும்.
இந்த மன அழுத்தம் என்பது அவர்களுடைய ஆர்வத்தை குறைக்கிறது. மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் கவலையானது அவர்கள் தாம்பத்திய உறவு கொள்ளும் ஆர்வத்தை தடுக்கிறது. அவர்களுக்கு அது ஒரு எதிர்பார்ப்பு ஆகும். அந்த எதிர்பார்ப்பு காரணமாக மன அழுத்தம் அதிகமாக எற்படுகிறது.
பாலியல் உறவில் விருப்பம், ஆர்வம் ஆகிய இரண்டும் சீராக இருந்தால் தான் அந்த பெண்ணுக்கு லூப்ரிகேஷன்ஸ் நன்றாக இருக்கும். அந்த ஆணுக்கு விறைப்புத்தன்மை இருக்கும். இவை பாதிக்கப்படுவதால் இந்த தம்பதியினருக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக அமைகிறது.
குழந்தைபேறு, பாலியல் உறவை ஒன்றாக குழப்ப வேண்டாம்:
இதற்கான தீர்வுதான் என்ன? முதலில் இந்த தம்பதியினருக்கு சொல்கிற விஷயமே, குழந்தைபேறு என்பதை எதிர்நோக்கி பாலியல் உறவு கொள்ளாதீர்கள். அது கண்டிப்பாக உங்களுடைய மன அழுத்தத்தை அதிகமாக்கும். குழந்தைபேறு, பாலியல் உறவு ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து குழப்பினாலே பிரச்சினை வரும்.
அடிக்கடி உறவு கொண்டால் குழந்தை பேறு உருவாகும். அண்டவிடுப்பு நாளில் தான் உறவு வைக்க வேண்டும். அன்றைக்குதான் முட்டை வெளிவரும் நாள் என்று பாலியல் உறவுகளை தேதி குறித்து செய்யாதீர்கள்.
இந்த மாதிரி தேதி குறித்து செய்தாலே பிரச்சினைகள் உருவாகும். எனவே உங்கள் மன அழுத்தம் குறைவாவதற்கு முதலில் இந்த கணக்கு, நேரம் எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள்.
உங்களின் உறவு முறைகளை பல வித்தியாசமான வகைகளில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு 14-வது நாள் என்கிற கணக்கீட்டை விட்டு விட்டு சந்தோஷமாக அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும்.
மாத விலக்கு நின்றதில் இருந்து அடுத்த மாத விலக்கு வரும் வரைக்கும் 10 முதல் 15 முறை உறவு கொள்கிறவர்களுக்கு நன்றாக கருத்தரிப்பதற்கு 85 சதவீதம் வாய்ப்புகள் உண்டு.
இதனை கருத்தில்கொண்டு உங்கள் சிகிச்சையையும், உங்கள் பாலியல் உறவையும் சம்பந்தப்படுத்தாதீர்கள். ஒருவேளை 14-வது நாளில் உறவு கொள்ள முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்த நாட்களில் உறவு கொண்டால் கூட கருத்தரிக்கும். எனவே அடிக்கடி உறவு கொள்வதை நல்ல சந்தோஷமான மனநிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
மன அழுத்தம் ஏற்படும் சூழ்நிலைகளை அந்த காலகட்டத்தில் உருவாக்காதீர்கள். தாம்பத்திய உறவை கணவன், மனைவி இடையேயான மகிழ்ச்சியை பெருக்குவதற்கான விஷயமாக மட்டுமே கருத்தில் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் கண்டிப்பாக குழந்தையின்மை பிரச்சினையும் வராது, குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு பாலியல் பிரச்சினைகளும் வராது.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
இயற்கையாகவே குழந்தைபேறு பெறுவது சாத்தியம்:
இன்னொரு முக்கியமான விஷயம், இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தேவைப்பட்டால் பாலியல் தெரபி உள்ளிட்ட தெரபிகளை சீராக கொடுக்கவேண்டும். அதனுடன் நல்ல ஒரு கவுன்சிலிங்கும் கொடுக்கும்போது பிரச்சினைகள் குறைவாகிறது.
எனவே நாங்கள் நோயாளிகளிடம் பாலிக்குலர் ஸ்டடியை பற்றி பேசவே மாட்டோம். பாலிக்குலர் ஸ்டடி என்பது தாம்பத்திய உறவுக்கு நாள் குறிப்பதற்கு அல்ல. அது கருமுட்டைகள் வளர்ச்சி சீராக இருக்கிறதா, அதற்கு என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதை முறைப்படுத்துவதற்கும், சரியான நேரம் கொடுப்பதற்கும் மட்டும் தானே தவிர, தாம்பத்திய உறவுக்குநாள் குறிப்பதற்கு அல்ல.
மாதவிலக்கு நின்றதில் இருந்து அடுத்த மாதவிலக்கு வருவது வரை ஒருநாள் விட்டு ஒருநாள் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள். தேதியில் கவனம் செலுத்தாமல் தாம்பத்திய உறவு கொண்டால் ஆண்களை பாதிக்கின்ற விறைப்புத்தன்மை செயலிழப்பு, விந்து முந்துதல், உறவு கொள்வதில் மன அழுத்தம் ஆகியவை மாறும். பெண்களுக்கும் ஏற்படுகிற வலி, உலர்வுத்தன்மை ஆகிய எல்லாமே சரியாகும்.

கண்டிப்பாக உறவுமுறைகளை மேம்படுத்தினால் குழந்தையின்மையை சரிப்படுத்த முடியும். குழந்தைப்பேறு என்பது இயற்கையாக நடக்கிற விஷயம். உறவு முறைகளில் அடிக்கடி சந்தோஷமாக இருங்கள். பல நேரங்களில் ரொம்ப மன அழுத்தம் இருந்தால் அதற்கான நல்ல தெரபி இருக்கிறது. இந்த தெரபி எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் பாலியல் தெரபி மூலமாக பாலியல் உறவுகளை மேம்படுத்தும்போது இயற்கை யாகவே குழந்தைபேறு பெறுவதும் சாத்தியமாகும். அப்படி நிறைய தம்பதியினர் குழந்தைபேறு பெற்றுள்ளனர். எனவே நாள், நேரம் குறிக்காமல் மகிழ்ச்சியாக தாம்பத்திய உறவில் ஈடுபடுங்கள். மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான தாம்பத்தியமே மழலை பேறு தரும்.
- சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார்.
- ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம்
வாழ இன்னருள் தா தா
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15ம் நாள், சனிக்கிழமை 29.3.2025 அன்று இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி தனது சொந்த வீடான கும்ப ராசி பூரட்டாதி 3ம் பாதத்தில் இருந்து குருவின் வீடான மீன ராசி பூரட்டாதி 4ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நாள் வரலாற்றில் இடம் பெறக்கூடிய நாளாக அமையப் போகிறது. நவகிரகங்களின் விந்தை மற்றும் அதிசயத்தை உலகம் பார்க்கப் போகும் நாள் என்றால் அது மிகையாகாது. இது போன்ற கிரக நிகழ்வுகள் பல முறை ஏற்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு முறை கூட்டு கிரகச் சேர்க்கை உருவாகும் போது ஏதாவது ஒரு பயத்தை அச்சுறுத்தலை மனித குலத்திற்கு பரிசாகத் தந்து விட்டே செல்கிறது.அந்தப் பரிசு பல வருடங்களுக்கு மக்களுக்கு மீள முடியாத சில பாதிப்பாக இருக்கிறது.
சமீபமாக 2019-ல் நடைபெற்ற கிரகணத்தையும் கொரோனா வைரஸ் உருவாகி உலக இயக்கம் ஸ்தம்பித்ததையும் வரலாற்றில் உலகமே மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நிகழ்வாகப் பதிவானதையும் யாராலும் மறக்க முடியாது.
இந்த ஆண்டும் உலகமே சில அச்சுறுத்தலோடு காலத்தை நகர்த்துகிறது. இந்த நாள் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். சனிபகவானும் ராகு பகவானும் நெருக்கமான பாகை இடைவெளியில் பயணிக்கிறார்கள்.
தற்போது கோச்சாரத்தில் சனிபகவானுடன் சூரியன் சந்திரன் புதன், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் சேருகிறது. இந்த கிரக கூட்டணியில் அனைத்து கிரகங்களையும் கேது பகவான் பார்க்கிறார்.இந்த கிரக கூட்டணியில் குருவும் செவ்வாயும் சம்பந்தப்படவில்லை என்று கூறினாலும் இப்போது கோட்சாரத்தில் குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனையில் உள்ளார்கள். ராகு கேதுவின் மையப்புள்ளியில் செவ்வாய் உள்ளது. நவகிரகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு நிலையில்தான் உள்ளது. இது கோட்சாரத்தில் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்குறி அனைவருக்குமே உள்ளது. 29.3.2025 அன்று ஏற்படக்கூடிய இந்த கிரக நிலவரம் சூரிய கிரகணம் மற்றும் அமாவாசையை ஏற்படுத்துகிறது. அன்று சனிக்கிழமையாகவும் இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது.
இந்த கிரக இணைவிற்கு செவ்வாயின் நேரடி பங்களிப்பு இல்லை என்பது மிகுந்த ஆறுதலான விஷயமாக உள்ளது.
ஆனால் சனி பகவானும் ராகு பகவானும் நெருக்கமான டிகிரியில் பயணிப்பதால் இது அச்சப்பட வேண்டிய விஷயமாகவும் உள்ளது. சனி பகவானும் ராகு பகவானும் ஒருவரை ஒருவர் கடக்கும் ஏப்ரல், மே மாதம் வரை வாழ்க்கையை பாதிக்க கூடிய எந்த புதிய முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக திருமணம், தொழில், உத்தியோகம் புதிய தொழில் முதலீடுகள், பெரிய பண பரிவர்த்தனை, நீண்ட தூர பயணம் ஆகியவற்றில் விழிப்புடன் இருப்பது நல்லது.
கூட்டு கிரகச் சேர்க்கை நடைபெறுவது நீர் ராசி என்றாலும் சனி, ராகுவும் 3 பாகை இடைவெளிக்குள் காற்று ராசியான கும்ப ராசிக்கு நெருக்கமான டிகிரியில் பயணிக்கிறார்கள். இங்கே நீர், காற்று இரண்டு தத்துவமும் இணைந்து இயங்குவதால் நீர் காற்று சம்பந்தமான பாதிப்புகள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.
நீர், காற்று சேர்க்கை அதிகமாக ஏற்படும்போது உடலில் வாதத்தன்மை அதிகமாகும். உடலின் கெட்ட நீர் வெளியேற முடியாமல் காற்று அடைக்கும். எனவே உடலில் வாதத் தன்மையை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்த்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இருள் கிரகமான சனி ராகுவின் சேர்க்கை. ராகுவிற்கு நெருக்கமாக பயணிக்கும் கிரகம் ராகுவால் கிரகணப்படுத்தப்படும். சுக்கிரனும் சனியும் ராகுவிற்கு நெருக்கமான பாதையில் உள்ளது. சட்டத்திற்கு புறம்பான விதி மீறல்கள் அதிகமாகும். பெண்களுக்கு பாதுகாப்பு குறையும். அநாச்சாரங்கள் அதிகமாகும். மீனம் ராசி கால புருஷ 12ம் இடம். உடல் உறுப்பில் கால் பாதத்தை குறிக்கும் இடம். எலும்பு நரம்பு , மூட்டு சம்மந்தமான பாதிப்புகள் அதிகரிக்கும். செயற்கை உறுப்புகள் அறுவை சிகிச்சை அதிகமாகும்.
மீனம் கடல், கடல் சார்ந்த பகுதியை குறிக்கும் இடம். மேலும் கடல் நீர் சார்ந்த பகுதிகளில் வாழ்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. நீண்ட தூரம் பிரயாணம் செய்பவர்கள் தக்கப் பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.
உலகில் மிகப்பெரிய கடல் விபத்துகள் ஏற்படலாம். எண்ணெய் கப்பல்கள் விபத்தின் காரணமாகவோ தாக்குதல் காரணமாகவோ மூழ்கி எண்ணெய் கசிவு காரணமாக கடல் உயிரினங்கள் பாதிப்படையும். புதிய கடல் வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும். புதிய எண்ணெய் வளம், புதிய கனிம வள சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். அரசாள்பவர்களின் ஸ்திரதன்மை பாதிக்கப்படும். தகுதியற்றவர்கள் பதவிக்குவர முயற்சி நடக்கும். அரசியலில் பதவியில் உள்ளவர்கள் பதவியை தக்கவைக்க போராடவேண்டும். அரசை கவிழ்க்க சதி நடக்கும்.
உலகில் போர் சம்பந்தமான அசாதாரண சூழ்நிலை நிலவும். பொருளாதார நெருக்கடி உலகை அச்சுறுத்தும். நாடுகளுக்கிடையே கடல் எல்லை சம்பந்தமாக மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும். கடற்கொள்ளையர்களின் அபாயம் அதிகரிக்கும். கடற்படையின் பெருக்கம் அதிகரிக்கும். அதிநவீன ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வரும்.
கடந்த கால வரலாற்று ரகசியங்கள் வெளிவரும். நமது நாட்டில் கொள்ளையடிக்கப்பட்டு காணாமல் போன பல பொக்கிஷங்கள் திரும்ப நம் நாட்டிற்கு வரும். பங்கு சந்தையில் ஏற்ற இறக்கத்திற்கு தகுந்தவாறு கவனமாக முதலீடு செய்பவர்கள் மிகப்பெரிய வளர்ச்சி காண்பார்கள். குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி முதலீடு செய்பவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கடனையும் சந்திப்பார்கள். மக்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி ஏமாறுவார்கள். கள்ள சந்தை,கருப்பு பணம் பெருகும். அது சார்ந்த வழக்குகள் அதிகமாகும். புதிய வகை நீதிமன்றங்கள் பயன்பாட்டிற்கு வரும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
தொழிலாளர்கள் உரிமைக்கு போராட்டங்கள் தொடரும். குளோனிங் குழந்தைகள் உருவாக்கப்படலாம். இது யாரையும் பயம் காட்ட எழுதவில்லை. பொது நலம் கருதி வெளியிடப்பட்டுள்ளது. நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தன் கடமையை செய்யும்போது நாடும் நாமும் நலம் பெற வேண்டும் என்ற சங்கல்பத்தை பிரபஞ்ச சக்தியின் கையில் ஒப்படைக்க வேண்டும்.
ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. ஸ்ரீ சனி பகவான் காற்று ராசியான கும்பத்தை கடக்கும்போது அவரவர் தெரிந்த மந்திரங்களை பாராயணம் செய்வது மிகவும் நன்மை தரும். வீடும் நாடும் நலம் பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர பிரபஞ்ச சக்தி அளவிட முடியாத நன்மைகளை வழங்கும்.
ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்
கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி
இந்த சனிப்பெயர்ச்சி அனைவரின் வாழ்விலும் தித்திப்பான மாற்றமும், மகிழ்ச்சியும் ஆனந்தமும், நிறைந்த செல்வமும், நோயற்ற வாழ்வும் நிரந்தரமாக வழங்க பிரபஞ்ச தாயின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன்.
இனி 12 ராசிகளுக்கும் 6 கிரகச் சேர்க்கைக்கான பரிகாரங்களை பார்க்கலாம்.
மேஷம்: ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் 6 கிரக சேர்க்கையுடன் சூரிய கிரக ணம் சம்பவிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வெளியூர், வெளிநாட்டு பயணம், தீர்த்த யாத்திரைகளை தவிர்த்தல் நல்லது.
முருகன் வழிபாடு அவசியம்.
ரிஷபம்: ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் 6 கிரக சேர்க்கையுடன் சூரிய கிரகணம் சம்பவிக்க உள்ளது.
உப ஜெய ஸ்தானமான 11-ம் இடத்தில் அதிக கிரகங்கள் இருப்பது நன்மை. ஆனாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது
ஸ்ரீ காளியம்மனை வழிபட வேண்டும்.
மிதுனம்: ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் 6 கிரக சேர்க்கை ஏற்படுகிறது. 10ல் அதிக கிரக சேர்க்கை இருப்பது நல்லது.
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். சுய ஜாதத பரிசீலனையில் தொழில் துவங்கினால் நல்லது. ஸ்ரீ மகா விஷ்ணுவை வழிபடவும்.
கடகம்: ராசிக்கு 9ம்மிடமான பாக்கியஸ்தானத்தில் 6 கிரக சேர்க்கையும் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் பெரிய தீங்கு செய்வதில்லை. எனினும் வயதானவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களை அனுசரித்துச் செல்லவும். ஸ்ரீ பராசக்தியை வழிபடவும்
சிம்மம்: ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. சனியும், ராகுவும் ஒன்றையென்று கடக்கும் ஏப்ரல், மே மாதங்களில் யாரையும் நம்பி வாழ்க்கையை பாதிக்க கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது. பயணங்களில் கவனம் அவசியம். யாரையும் சபிக்கக் கூடாது. யாரிடமும் சாபம் வாங்க கூடாது. ஸ்ரீசரபேஸ்வரரை வழிபடவும்.
கன்னி: ராசிக்கு 7ம்மிடமான மீன ராசியில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. சிந்தனை, செயல்பாட்டில் எதிர்மறை எண்ணம் மிகுதியாகும். ஏப்ரல், மே மாதங்களில் திருமணம், கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. நண்பர்கள் தொழில் கூட்டாளிகள், வாழ்க்கை துணையை பகைக்க கூடாது. ஸ்ரீ பிருத்யங்கரா தேவியை வழிபடவும்.
துலாம்: ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சூரிய கிரகணத்துடன் 6 கிரக சேர்க்கை ஏற்படுகிறது. ஏப்ரல்,மே மாதம் வரை கொடுக்கல், வாங்கல், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையை மாற்றக்கூடாது. உயர் அதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரிப்பது நல்லது. ஸ்ரீ மகா கணபதியை வழிபடவும்.
விருச்சிகம்: ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் (ஏப்ரல், மே )அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச்சந்தை, சூதாட்டம், புதிய முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஸ்ரீ வாராகி அம்மனை வழிபடவும்.
தனுசு: 29.3.2025 அன்று ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் 6 கிரகங்கள் ஒன்று சேருகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சொத்து சம்பந்தமான முயற்சிகளை ஒத்தி வைக்கவும்.
தாய், தாய் வழி உறவுகளை பகைக்கக் கூடாது. ஸ்ரீராமரை வழிபடவும்.
மகரம்: ராசிக்கு 3ம்மிடத்தில் 29.3.2025 அன்று 6 கிரகச் சேர்க்கையும் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. இந்தியாவில் கிரகணம் தெரியாது என்றாலும் இந்த காலகட்டத்தில் ராகுவும் சனியும் நெருக்கமாக பயணிப்பார்கள். அதனால் புதிய தொழில் முயற்சியை தவிர்ப்பது நல்லது. அகலக்கால் வைக்க கூடாது.
ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபடவும்.
கும்பம்: அன்று ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானதில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. ராகு கேது பெயர்ச்சி வரை கொடுக்கல் வாங்கல் மற்றும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் தேவை. யாரையும் சபிக்க கூடாது. யாரிடமும் சாபம் வாங்க கூடாது. எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்தான உணவை சாப்பிட வேண்டும்.
காவல் தெய்வங்களை வழிபடவும்.
மீனம்: 29.3.2025 அன்று ராசியில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை நடைபெறுகிறது. செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் தேவை. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம்.
சனியும், ராகுவும் ஒன்றையொன்று கடக்கும் ஏப்ரல், மே மாதங்களில் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும். ஸ்ரீ கால பைரவரை வழிபடவும்.
காலம் ஒரு நாள் மாறும். கவலைகள் யாவும் தீரும். இதுவும் கடந்து போகும். உரிய பரிகாரங்கள் வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பது சிறப்பு.
- பகழிக் கூத்தர் என்ற வைணவ பக்தரிடம் அவர் திருவிளையாடலை நடத்தி தனது பக்தர்களில் ஒருவராக மாற்றிய அற்புதம் சிறப்பானது.
- தமிழ் இலக்கிய வகைகள் தொண்ணூற்று ஆறினுள் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும்.
திருச்செந்தூர் முருகன் பக்தர்களிடம் விளையாடி அவர்களை தன்வசம் ஆட்படுத்திக் கொள்வதை பல தடவை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதிசங்கரர், அருணகிரிநாதர், பகழிக் கூத்தர் போன்றவர்களை திருச்செந்தூருக்கு வரவழைத்து அற்புதங்கள் பல செய்த வரலாறு திருச்செந்தூர் முருகனுக்கு உண்டு. சில சமயம் நினைத்து பார்க்க முடியாத அற்புதங்களையும் திருச்செந்தூர் முருகன் நிகழ்த்தி காட்டுவது உண்டு.
பகழிக் கூத்தர் என்ற வைணவ பக்தரிடம் அவர் திருவிளையாடலை நடத்தி தனது பக்தர்களில் ஒருவராக மாற்றிய அற்புதம் சிறப்பானது. பகழிக் கூத்தர் ராமநாதபுரம் மாவட்டம் சதுர் வேதி மங்கலத்தை சேர்ந்தவர். அந்த ஊர் தற்போது சன்னாசி கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
தீவிர பெருமாள் பக்தரான இவர் இளமையில் கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இலக்கண, இலக்கியங்களை கற்றுத்தேர்ந்த அவர் வேறு எந்த கடவுளையும் வழிபடுவது இல்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்து வந்தார். முருகன் மீது பாடல் பாடுங்கள் என்று பலரும் இவரை வற்புறுத்தியது உண்டு. ஆனால் அவர் முருகப்பெருமானை புகழ்ந்து பாட மறுத்து வந்தார்.
அவரை தன்வசமாக்க முடிவு செய்த திருச்செந்தூர் முருகன் பகழிக் கூத்தருக்கு வயிற்று வலி வருமாறு செய்தார். இதனால் பகழிக் கூத்தர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். எத்தனையோ மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் திடீரென பகழிக்கூத்தர் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றினார். "அன்பனே... என்னைப் பார். உன் வயிற்று வலி தீரும்" என்று கூறினார்.
அதோடு முருகப் பெருமான், ஓர் ஏடும், இலை விபூதியும் கொடுத்தார். கண்விழித்துப் பார்த்த பகழிக் கூத்தரின் தலைமாட்டில் ஏடு இருந்தது. அந்த ஏட்டில், செந்திலாண்டவனே எழுதிய ஓர் அழகிய வெண்பாவைக் கண்டார் பகழிக் கூத்தர்.
அப்பாடலில் பகழிக் கூத்தரைப் புகழ்ந்தும், அவரது பாமாலையைத் தாம் கேட்க விரும்புவதாகவும், காப்பதற்கும், கூற்றுவன் அணுகாமல் தடுப்பதற்கும் தாம் அறிவோம் என்றும் கூறுகிறான் முருகப் பெருமான். அப்பாடல்:
"பூமாது போற்றும் புகழ்பகழிக் கூத்தாவுன்
பாமாலை கேட்கயாம் பற்றேமா - ஏமம்
கொடுக்க வறியேமா கூற்றுவன் வாராமல்
தடுக்க வறியேமா தாம்"

இப்பாடலைக் கண்ட பகழிக் கூத்தர் திருச்செந்தூர் முருகனின் அழைப்பை ஏற்று, திருச்செந்தூர் வந்தார். கடலில் மூழ்கி எழுந்தார். வயிற்றுவலி நீங்கப் பெற்றார். செந்தில் ஆண்டவன் அடியெடுத்துக் கொடுத்த 'பூமாது' என்ற சொல்லாலே தொடங்கி பாடல்களைப் பாடினார். திருச்செந்தூர் முருகனின் சிறப்புகளை போற்றி அவர் பாடிய பாடல்கள்தான் "திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்' என்று அழைக்கப்படுகிறது. இது 103 பாடல்கள் கொண்டது.
தமிழ் இலக்கிய வகைகள் தொண்ணூற்று ஆறினுள் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும்.
பிள்ளைத் தமிழ் நூல் என்பது வழிபடு கடவுளை அல்லது வள்ளல்கள், மன்னர்கள், அருளாளர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவதாகும். குமரகுருபரர் அருளிய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் இரண்டும் பிள்ளைத் தமிழ் நூல்களுள் போற்றத்தகும் சிறப்புடையவை.
பிள்ளைத் தமிழ் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண் பால் பிள்ளைத் தமிழ் என இருவகையாகும். ஆண் பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்று பத்துப் பருவங்களும், பெண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என்று பத்துப் பருவங்கள் கொண்டதாகும். ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பாடல்கள் அமையப் பாடப்பட்டிருக்கும். (பகழிக் கூத்தர் இந்த 'திருச்செந்தூர் முருகன்' பிள்ளைத் தமிழ் நூலில் 'முத்தம்' 'வருகை' அம்புலிப் பருவங்களில் கூடுதலாக ஒரு பாடல் ஆக 11 பாடல்கள் பாடியுள்ளார்)
1. காப்புப் பருவம்- பாட்டுடைத் தலைவனைக் காத்தருள வேண்டிக் கடவுள் வாழ்த்தாகப்பாடுவது, குழந்தை பிறந்த இரண்டாம் மாதம் இதற்கான காலம்.
2. செங்கீரைப் பருவம்- 5-ம் மாதம் குழந்தை ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டி இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தவழும் காலம்.
3. தாலப்பருவம்- 8-வது மாதம். குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் காலம்.
4. சப்பாணிப் பருவம்- 9-வது மாதக் குழந்தை உட்கார்ந்து கை கொட்டும் காலம்.
5. முத்தப் பருவம்- 11-ம் மாதம் முத்தம் தரக் கேட்டுக் குழந்தையைப் பெற்றோர் ெகாஞ்சும் காலம்.
6. வருகைப் பருவம்- ஒரு வயதுக் குழந்தை குறுநடை நடந்து குலாவும் காலம்.
7. அம்புலிப் பருவம்- ஒன்றரை வயதுக் குழந்தைக்கு நிலவை காட்டி குழந்தையோடு விளையாட வா என்று நிலவை அழைக்கும் காலம்.
8. சிற்றில் பருவம்- ஐந்தில் இருந்து ஒன்பது வயதுக்கு உள்ளான பருவம். மணல் வீடு கட்டிப் பிள்ளைகள் விளையாடும் காலம்.
9. சிறுபறைப் பருவம்- ஒன்பது வயதுக் குழந்தை சிறுவறை முழக்கி விளயைாடும் காலம்.
10. சிறுதேர் உருட்டும் பருவம்- ஒன்பது வயது கடந்த பிள்ளை சிறுதேர் ஒட்டித் தெருவில் விளையாடும் காலம்.
இந்த 10 பருவத்திலும் திருச்செந்தூர் முருகனை ஒப்பிட்டு, புகழ்ந்து, பக்தர்களை காக்க வருமாறு பகழிக் கூத்தர் பாடி இருக்கிறார். குறிப்பாக அவர் தனது பாடல்களில் அன்றைய காலக் கட்டத்தில் திருச்செந்தூர் எப்படி இருந்தது என்பதை மிக, மிக அழகாக சொல்லியுள்ளார். பெரும்பாலும் திருச்செந்தூர் கடலில் 15-ம் நூற்றாண்டில் சங்குகள் விளைவதை பகழிக் கூத்தர் தனது பாடல்களில் குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பாடல்கள் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதாக உள்ளது.
ஒரு பருவ பாடலில், "வான் மழை போல அருள் மழை பொழியும் முருகனே" என்று கூறி உள்ளார். மற்றொரு பாடலில், "அலை வீசும் கரையோரம் வீற்றிருக்கும் வேலவா" என்று பாடியுள்ளார். அது மட்டுமல்ல, "சேவல் கொடி உடைய சேவகனே", "செந்நிற கொண்டை உடைய வெண்ணிற சேவல் கொடி ஏந்தியவனே" என்றெல்லாம் திருச்செந்தூர் முருகனை பகழிக் கூத்தர் புகழ்ந்து பாடியுள்ளார்.
பக்தர்களைக் கண்டதும் புன்னகைப் பூக்கும் முருகா
தென்றல் பூ மணம் சுமந்து வந்து வீசும் குன்றுகள் மீது அமர்ந்த முருகனே....
அசுரர்கள் இறைஞானம் பெற உதவிய முருகனே....
கடல் அலைகளில் மிதந்து வரும் சங்குகள் சிதறிக் கிடக்கும் செந்தில் மாநகரில் வீற்றிருப்பவனே....
சூரியன் அஞ்சும் வகையில் பிரகாசமாக ஒளி வீசும் முருகப் பெருமானே....
நீண்ட பனை மரம் போன்ற துதிக்கை உடைய யானைகள் கொண்ட படையை வைத்திருப்பவனே....
பெண் அன்னப் பறவைகள் அதிகம் நிறைந்த செந்தில் மாநகரில் அருள் மழை பொழிபவனே...
வலம்புரி சங்குகள் நிறைந்த திருச்செந்தூர் கடலோரத்தில் ஆட்சி செய்பவனே...
உப்பங்கழிகளும், அவற்றில் நிறைந்த நண்டுகளும், மீன்களும், தாரா பறவைகளும் கொண்ட செந்தில் மாநகரில் வாழ்பவனே....
இப்படியெல்லாம் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் நூலில் முருகப் பெருமானை பகழிக் கூத்தர் வர்ணித்துள்ளார். இந்த பாடல்கள் சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பைப் பெற்றன.
இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பகழிக் கூத்தர் அந்த நூலை பால சுப்பிரமணியனின் திருச்சன்னதியில் வைத்து வணங்கி அரங்கேற்றினார். என்றாலும் பகழிக் கூத்தரின் திறமை மதிக்கப்படவில்லை. அவர் வைணவர் என்று கூறி அவருக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்காமல் புறக்கணித்தனர்.
அதனால் மனம் உடைந்த பகழிக் கூத்தர் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் பாடல் கள் ஏட்டைக்கடலில் எறிந்து விடாலமா என்னும் அளவிற்குச் சிந்திக்கத் தொடங்கினார். அத்தகைய சிந்த னையோடு ஒருவீட்டுத் திண்ணை யில் படுத்து உறங்கினார்
பிள்ளைத் தமிழ்பாடுவதற்கு முன்பாக தம்கனவில் தோன்றிய அதே தோற்றத்தோடு தோன்றி முருகன் சில உத்தரவுகளை பிறப்பித்தார். திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஆத்தூர் என்னும் ஊரில் ஓர் ஆலயம் உள்ளது. அதற்கு அடியில் சென்று இரு என்று கூறி மறைந்தார்.
பகழிக்கூத்தரும் அவ்விடத்தை அடைந்தார். செந்தில் பதியைக் சார்ந்து குலசேகரப்பட்டினம் என்னும் ஊரில் காத்த பெருமாள் மூப்பனார் என்ற பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருடைய கனவில் முருகன் தோன்றி ஆத்தூரில் பகழிக் கூத்தர் இருக்கும் செய்தியை அறிவித்து அவருடைய பிள்ளைத் தமிழ் நூலை அரங்கேற்றம் செய்யுமாறு கூறிமறைந்தார்.
செல்வந்தரும் அவ்வாறே பசுழிக்கூத்தரை கண்டார்.உரியநிலையில் செந்தில் பதியில் அதனை அரங்கேற்றம் செய்வித்தார். புலவருக்கு அருட்புலவர் என்னும் பட்டத்தைக் கொடுத்துப் பல வகைகளில் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
அதன் பிறகும் பகழிக் கூத்தருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. சாதாரண புலவர் தானே என்று கோவில் பணியாளர்கள் புறக்க ணித்தனர்.
பகழிக் கூத்தர் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் முருகனையே சதா துதித்துக் கொண்டிருந்தார். திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே தங்கி இருந்தார். ஒரு நாள் இரவு பகழிக் கூத்தரின் திறமையையும் சகிப்புத்தன்மையையும் பாராட்டி முருகப்பெருமானே தன் கழுத்தில் இருந்த ரத்தின மாலை பதக்கத்தை அவருக்கு சூட்டிவிட்டார்.
மறுநாள் காலை நடை திறந்தவர்கள் முருகன் திருமேனியில் இருந்த ரத்தின மாலை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் முழுக்க ரத்தின பதக்க மாலை யைத் தேடினார்கள். எங்கும் கிடைக்கவில்லை. அப்போது கோவில் பிரகாரத்தில் இருந்து ஒரு அசரிரீ கேட்டது.
"நான் எனது அன்பன் பகழிக் கூத்தனுக்கு அளித்தேன்" என்று குரல் ஒலித்தது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த கோவில் பணியாளர்கள் பகழிக் கூத்தர் தங்கி இருந்த இடத்துக்கு ஓடோடிச் சென்றுப் பார்த்தனர்.
அங்கு பகழிக் கூத்தர் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் முருகனின் ரத்தின பதக்க மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகே பகழிக் கூத்தரின் பக்தி மீது எல்லோருக்கும் மரியாதை வந்தது. அவரைப் பல்லக்கில் ஏற்றி திருச்செந்தூர் முழுக்க சுற்றி வந்து சீரும் சிறப்பும் செய்தனர். பகழிக்கூத்தருக்கு முருகன் அருள்புரிந்த இந்த செய்திகள் இலக்கியங்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன.
சாமானியரின் வாயால் பாடல் பெற விருப்பம் கொண்ட முருகப் பெருமானின் உள்ளம் எத்துணை உயர்வானது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதனால்தான் பகழிக் கூத்தர் எழுதிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழின் 'வருகைப் பருவ'த்தில் இடம் பெற்ற
"பேரா தரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும்பிள்ளைப்
பெருமான் என்னும் பெருமாளே" என்னும் பாடல் இன்றும் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்போது பாடப்படுகிறது.
அடுத்த வாரம் இன்னொரு அற்புதம் பார்க்கலாம்.
- முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்தோம்.
- நாங்கள் சொன்னதும் மோகன்லால் சார் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தார்.
துபாயில் திரிஷ்யம் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. நான், மோகன்லால் சார் எல்லோரும் சென்றிருந்தோம்.
அப்போது துபாயில் வசிக்கும் மோகன்லால் சாரின் நண்பர் ஒருவர் எங்களை சந்திக்க நேரில் வந்தார்.
அப்போது என் மகளுக்காக நிறைய பொம்மை மற்றும் பரிசு பொருட்களை வாங்கி வந்திருந்தார். அதை பார்த்ததும் 'ஏன், சார் இவ்வளவு பொருட்கள்....? என்று தயங்கினேன்.
அவர் சொன்னார் 'எங்கள் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டார்கள். எங்களுக்கு பொம்மை, விளையாட்டு பொருட்களெல்லாம் வாங்கி கொடுக்க சின்ன பிள்ளைகள் இல்லை. எங்கள் பேத்தி போல் உங்கள் பிள்ளைக்கு வாங்கினேன். உங்கள் மகளிடம் கொடுங்கள் என்று மிகுந்த அன்பு காட்டினார். எங்கள் எல்லோருக்கும் விருந்தும் கொடுத்தார்.
அப்போது இன்னொரு விஷயத்தையும் சொன்னார். தான், மோகன்லால் சாரை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த படத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றும் தனது எதிர்பார்ப்பையும் காதில் போட்டார்.
அதற்கான நாளும் விரைவிலேயே வந்தது. மோகன்லால் சார் ஜோடியாக நான் நடித்த 'முந்திரி வள்ளிக்கல் தளிக்கும் போல்' என்ற படத்தின் கதை தயாரானது. கதையை சொன்னார்கள். கதை எனக்கு பிடித்து இருந்தது.
தமிழில் 'திராட்சை கொடிகள் துளிர்க்கும் போது' என்பதுதான் இதன் அர்த்தம். உன்னச்சன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லாலும் அவருக்கு ஜோடியாக ஆமி என்ற பாத்திரத்தில் நானும் நடித்தோம். அழுத்தமான கதை. பெற்றோரின் அன்பையும், பாசத்தையும் பார்த்துதான் குழந்தைகள் வளர வேண்டும் என்பதை உணர்த்துவதான கதை. கோழிக்கோடு பகுதியில் படப்பிடிப்பு. அங்கு மோகன்லால் சாரின் நண்பர் வீட்டில்தான் தங்கி இருந்தோம்.
மோகன்லால் சாருடன் அவருடைய மனைவியும் வந்திருந்தார். படப்பிடிப்பு ஜாலியாக போய்க் கொண்டிருந்தது. அதைவிட ஜாலி என்னவென்றால் மோகன்லால் சார் பிரமாதமாக சமைப்பார். அசைவ உணவில் விதவிதமாக சமைப்பார். ஒவ்வொன்றும் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
ஷூட்டிங் முடிந்ததும் சமையல் கட்டில் புகுந்து விடுவார். அவருடன் அவரது மனைவி, தயாரிப்பாளரின் மனைவி ஆகியோரும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமைத்து அசத்தினார்கள்.
ருசியான சாப்பாடு, ஜாலியான ஷூட்டிங். ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருந்தது. அப்போது மோகன்லால் சார் நடித்த ஒரு படமும் திரைக்கு வந்தது.
முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்தோம். நாங்கள் சொன்னதும் மோகன்லால் சார் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தார்.
ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து தப்பிக்கும் வகையில் தங்கியிருந்த வீட்டின் அருகில்தான் தியேட்டரும் இருந்தது. அங்கிருந்து தனி வழியாக தியேட்டருக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நாங்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த யூனிட்டும் அன்று முதல் ஷோவை பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றிருந்தோம். அந்த படமும் சூப்பராக இருந்தது. மோகன்லால் சாருக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்தோம். கேரளத்தில் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி என்று நான் பார்த்த படமும் அதுதான்.
இந்த படத்தை தொடர்ந்து திரிஷ்யம்-2. அதுவும் மலையாளத்திலும், தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிகளிலும் நான்தான் கதாநாயகி. இரு மொழிகளிலும் திரிஷ்யம்-1ஐ போலவே திரிஷ்யம்-2வும் வெற்றிப் படமாக அமைந்தது.
திருமணத்துக்கு பிறகும் பிசி நடிகையாகவே வலம் வந்தேன். அடுத்து என்ன என்கிறீர்களா? தவறாமல் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்...
(தொடரும்)