search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "split in alliance"

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.
    • என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    புதுவை அமைச்சரவை யில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் 4 அமைச்சர்களும், பா.ஜனதா தரப்பில் 2 அமைச்சர்களும், சபாநாயகரும் உள்ளனர். என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதாவுக்கும் 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.

    இதோடு புதுவை சட்ட மன்றத்தில் உள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவை ஆதரிக்கின்ற னர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஆட்சி அமைந்தது முதலே என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும் சட்ட சபைக்கு வெளியிலும் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    புதிய மது ஆலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக சட்டசபையிலேயே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அதோடு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கூட தங்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை என்றும் புகார் செய்தனர்.

    வளர்ச்சிப் பணிகளில் தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நடத்தியுள்ளனர். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் தொடர்ந்து சலசலப்புகள் இருந்தாலும் ஆட்சி தொடர்ந்தது.

    இந்தநிலையில் பாராளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி சார்பில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வி என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.

    அதோடு தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தி உள்ளனர். தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்தில் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.

    இதன் தொடர்ச்சியாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.

    ஆனால், கவர்னருடனான சந்திப்பு குறித்து கேட்ட போது தொகுதியில் வளர்ச்சி பணிகளை துரிதப் படுத்தவும், குடியிருப்பு, பள்ளி, கல்லூரிகளிடை யிலான ரெஸ்டோ பார் களை அகற்றவும் கவர்னரி டம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் நேற்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்த திருபு வனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசிய ஆடியோ வெளியானது. இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து பேசிய விரங்களை தெரிவித்துள் ளார்.

    அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜனதா அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களையும் புரோக்கர் கள் துணையோடு முதல்- அமைச்சர், அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாகவும் கவர்னரிடம் எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்ததாக பகிரங்கமாக தெரிவித்துள் ளார்.

    இதேநிலை நீடித்து கூட்டணி ஆட்சி தொடர்ந் தால் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்திக்க வேண்டியதிருக்கும். கூட்டணி தர்மத்தை மதிக்காத முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்ததாகவும் அங்காளன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    இந்த ஆடியோ புதுவை மக்களிடம் வைரலானது. மேலும் பா.ஜனதா தலைமையை சந்தித்து பேச எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளனர். இதனால் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    இது புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×