என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amman temple"

    • வெளிநாட்டு பக்தர்களும் மீனாட்சி அம்மன் கோவிலை வியந்து பார்த்து செல்கின்றனர்.
    • வாரங்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 4 வாயில்களிலும் பிரம்மாண்ட ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியே தாமரை வடிவில் மதுரை மாநகரம் உருவானதாக வரலாறு கூறுகிறது.

    வெளிநாட்டு பக்தர்களும் மீனாட்சி அம்மன் கோவிலை வியந்து பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் புதுப்பிக்கப்படும் பழமையான கோவில் ஒன்றை மீனாட்சி அம்மன் கோவில் போன்று வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.

    வாரங்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கி.பி. 1323-ம் ஆண்டில் காகதிய பேரரசு காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

    9 அடி அகலம் 9 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக பத்திரகாளி அம்மன் இந்த கோவிலில் காட்சியளிக்கிறார்.

    தினந்தோறும் இந்த கோவிலுக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் 4 முறை பிரம்மாண்டமாக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

    பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலை பிரமாண்டமாக புதுப்பிக்க வேண்டும். அனைவரும் பிரமிக்கும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை போல இந்த கோவிலை வடிவமைக்க வேண்டும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கோவிலை சுற்றிலும் மாட வீதிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரூ.100 கோடி செலவில் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

    மேலும் 4 புறமும் பிரம்மாண்ட ராஜகோபுரங்கள் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1000 கோடி வரை செலவாகலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவில் போன்று மாதிரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணியில் ஈடுபடும் என்ஜினீயர்கள் கொண்ட குழுவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் அவர்கள் மதுரை, தஞ்சை கோவில்களில் ஆய்வு செய்த பிறகு இதற்கான பணிகள் தொடங்கும்.

    இதற்கு நன்கொடையாளர்கள் உதவியும் நாடாப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.

    • அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார்.
    • அம்மன் 5 முகங்களைக் கொண்டவள்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த கோவில் தென்னந்தோப்புகள், மரங்கள் நிறைந்த தோட்டங்கள், வயல்வெளிகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ்ந்து, அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.

    புற்று வடிவில் அம்மன்

    இந்த கோவிலில் பகவதி அம்மன் வடக்கு முகமாக புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய மண் புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது. அம்மன் 5 முகங்களைக் கொண்டவள். புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர், கடல் நாகர் (கடலில் இருந்து கிடைத்த கடல் நாகர் சிலை) சன்னதிகளும் உள்ளன.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. மண்டைக்காடு காடாக இருந்த போது ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி பரவியதைக் கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார்.

    சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்படி ஒருநாள் கால்நடைகளை அழைத்துச் சென்ற சிறுவர்கள் பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடியுள்ளனர். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது விழுந்தது. அதனால் புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அப்போது ஒருவர் சாமி ஆடி குறி சொல்லியிருக்கிறார். இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் புற்றின் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். அதன்படி சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசியிருக்கிறார்கள். உடனே ரத்தம் வருவது நின்றது என்றும் கூறப்படுகிறது.

    கேரள பக்தர்கள்

    இதேபோல் கேரள மாநிலம் கொல்லம் நகரில் இருந்து பெண் யோகினி மண்டைக்காடு வந்ததாகவும், அந்தப் பெண் கடற்கரையில் தவம் இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததாகவும், அதுவே பிற்காலத்தில் பகவதி தேவியாக வழிபாட்டுக்குரியதானதாகவும் கூறப்படுகிறது. எனவே யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்தில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

    கேரளத்தில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்த காலகட்டத்தில் தமிழக அரசால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கொடிமரமும் நடப்பட்டது. தற்போது தாமிரத்தகடு பொதியப்பட்ட நிரந்தர கொடிமரம் உள்ளது. இந்த கோவிலின் கருவறை, நமஸ்கார மண்டபம் அல்லது பஜனை மண்டபம் அனைத்தும் கேரள பாணியில் ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரையால் ஆனது. கருவறையில் புற்று வடிவில் காட்சி தரும் அம்மனுக்கு 1909-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 30 முதல் 40 துலாம் அரைத்த சந்தனம் பூசப்படுகிறது. வடக்குத் திருமுகம் வெள்ளியிலானது. வெள்ளி மகுடமும் உண்டு. அர்ச்சனா படிமமும், விழாப்படிமும் கருவறையில் உள்ளன.

    மாசி கொடை விழா

    இந்த கோவிலின் நேர்ச்சைகளாக வில்லுப்பாட்டு, மரம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கை, கால் உறுப்பு காணிக்கை, வெடி வழிபாடு, முத்தப்பம், மண்டையப்பம், பொங்கல், கைவிளக்கு, பூமாலை, குத்தியோட்டம், கறுப்பு வளையல், விளைச்சலில் முதல் பொருள் ஆகியன உள்ளன. வில்லிசைக்கலை என்ற கிராமியக் கலைநிகழ்ச்சி பாடுமாறு நேர்ந்து கொள்ளுதல் இந்த கோவிலின் சிறப்பு. காணிக்கை கொடுப்பவரின் ஊரில் இருந்து மண்டைக்காடு வரையுள்ள இடங்களை பாடுவது இதன் சிறப்பு.

    முள்முருங்கை போன்ற மரங்களில் செய்யப்பட்ட சாயம் பூசப்பட்ட கை- கால் உறுப்புகளை வாங்கி கோவில் தட்டுப்பந்தலில் எறிவது மற்றொரு நேர்ச்சை. 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலைநோய் தீர அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வராமலோ, வந்தால் குணமாகவும் முத்தப்பமும் நேர்ச்சையாக படைத்து வழிபடுகின்றனர். இவை தவிர வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் முதலியவையும் நைவேத்தியமாக கொடுக்கப்படுகிறது. எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.

    கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் நடைபெறும் கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த கோவிலில் திதி அல்லது நட்சத்திரம் அடிப்படையில் அல்லாமல் கிழமையை அடிப்படையாகக் கொண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். மாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமைகளில் விழா நிறைவடையும் வகையில் 10 தினங்களுக்கு முன் கொடி ஏற்றுவிழா தொடங்கும். 6-ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அன்று வலிய படுக்கை பூஜை என்ற சிறப்பு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கும்.

    இந்த பூஜையில் திரளி கொழுக்கட்டை, அவல், பொரி, முந்திரி, கற்கண்டு, 13 வகை வாழைப்பழங்கள், இளநீர், பிற பழவகைகள் ஆகியவை அம்மனுக்கு முன் குவியலாக படைக்கப்பட்டு அவற்றின் மேல் தீப்பந்தங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். 9-ம் நாள் திருவிழா அன்று பெரிய சக்கர தீவட்டி நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவன்று ஒடுக்கு பூஜை நடைபெறும். இதில் சாஸ்தா கோவிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உள்பட 11 வகை கறி, குழம்புகள், சாதம் ஆகியவற்றை தலையில் சுமந்து வந்து கோவிலின் கருவறையில் வைப்பார்கள். நள்ளிரவு 1 மணிக்கு பூஜை நடைபெறும். இவற்றை தயாரிக்கும் முறை, கொண்டு வருதல் ஆகியவற்றின் மரபுவழி முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

    பெண்களின் சபரிமலை

    சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி செல்வதைப்போல, மாசிக்கொடை விழாவுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களால் முடிந்த அளவு விரதமிருந்து இருமுடிகட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்வதி நட்சத்திரம் அன்று நடைபெறும் பொங்கல் விழாவும் இந்த கோவிலின் சிறப்பு நிகழ்வாகும். இதில் கோவிலின் முன்பு 4 திசைகளிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    பங்குனி மாதத்தில் பரணி நட்சத்திர கொடை விழா அன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை பூஜை நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கோவிலில் பரணி நட்சத்திரம் தோறும் தங்கத்தேரில் அம்மன் பவனி வருவார். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற ரூ.1,500 கட்டணம் செலுத்தி தங்கத்தேர் இழுக்க அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு கட்டணம் செலுத்துபவர்களுக்கு பிரசாதம், அர்ச்சனைத்தட்டு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும்.

    கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாள பூஜை நடத்தி நடை சார்த்தப்படும்.

    • பெண்களின் சபரிமலை என்று இந்த கோவில் அழைக்கப்படுகிறது.
    • 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது

    கேரளாவில் ஆலப்புழை மாவட்டம் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் புகழ்பெற்ற சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனவும், பெண்களின் சபரிமலை எனவும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

    பம்பை ஆறும், மணிமலை ஆறும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் தேவி சர்வேஸ்வரியும், அன்ன பூரணியும் அருள்பாலிக்கிறார்கள். சக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற பெண்கள் விரதம் இருந்து புண்ணிய சுமையாக இருமுடி கட்டி வந்து சக்குளத்துகாவு பகவதி அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

    பொங்கலிடும் பெண்கள்

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது போல் இந்த கோவிலுக்கு பெண்கள் வருகிறார்கள். அதே போல சபரிமலைக்கு செல்லும் வழியில் அய்யப்ப பக்தர்களும் சக்குளத்துக்காவு அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

    இங்கு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று அம்மனின் இஷ்ட நிவேத்யமான பொங்கல் வைத்து பக்தர்கள் அருளை பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும் இரு புறங்களிலும் திரண்டு புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள்.

    மிகவும் பிரபலமானது

    கோவில் முன்புறம் வைக்கப்படும் பண்டார அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி சுப முகூர்த்த வேளையில் தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும்.

    கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்த பிறகு நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கார்த்திகை அன்று இங்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

    பெண்களுக்கு பாத பூஜை

    மேலும் இங்கு நடைபெறும் பெண்களுக்கான பாதபூஜையும் (நாரி பூஜை) மிக சிறப்பு வாய்ந்தது. அதாவது பெண்களை பீடத்தில் அமரச் செய்து அம்மனாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குவார்கள். எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படும். 2022-ம் ஆண்டின் நாரி பூஜை அடுத்த மாதம் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் சகோதரி கே.ஆர்.கவுரி அம்மாள், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கே.கருணாகரனின் மகள் பத்மஜா ஆகியோருக்கு கடந்த ஆண்டுகளில் பாத பூஜை நடத்தப்பட்டுள்ளது.

    ஒரு லட்சம் கலச அபிஷேகம்

    டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள், ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கும் வித்யாகலசம், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலச பூஜை ஆகியவை நடைபெறும். அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது வேறு எங்கும் நடைபெறுவதில்லை. அன்றைய தினத்தில் தங்கத் தேரில் திருவாபரணங்கள் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

    வெள்ளிக்கிழமை விசேஷம்

    இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும். வெள்ளிக்கிழமை அன்று பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப் பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ததும் அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் தீர்ந்து விடுகிறது என்பது நம்பிக்கை. மேலும் மது குடிப்பவர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வரப்படுகிறார்கள். தலைமை பூசாரி மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, அம்மனின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பிறகு மது குடிப்பவர்கள் குடியை நிறுத்துகிறார்கள் என நம்பப்படுகிறது. மேலும் சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கிறதாம். இங்கு பார்க்கப்படும் ஜோதிட பிரசன்னமும் புகழ்பெற்றது.

    சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நேரடியாக கோவிலுக்கு தினசரி இயக்கப்படுகிறது. திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது. சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலின் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிட மக்கள் சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இது கேரளாவில் முக்கிய ஊர்கள் மட்டுமின்றி புதுடெல்லி, மும்பை, பெங்களூருவிலும் இதன் கிளைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தேனி மாவட்டம் சின்னமானூரிலும் இந்த மக்கள் சேவை மையம் அமைந்துள்ளது.

    • உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது.
    • ஆண்டு தோறும் சித்திரை 1-ந்தேதி மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.

    தென் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரமாண்டமான வடிவில் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

    கேரளாவின் கட்டிடக்கலை வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்தியங்கிரா தேவி மற்றும் கால பைரவருக்கு ஒரே கல்லில் ஆன 11 அடி உயரத்தில் தத்ரூபமான வடிவில் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

    ஆலயத்தின் மூலவராக மகா பிரத்தியங்கிராதேவி வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பத்து கரங்களுடன் கூடிய விஸ்வரூப கோலத்தில் மகா கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆலய வளாகத்தில் தட்சிணாமூர்த்தி குரு மகாலிங்கேஸ்வரராக தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆகம விதிப்படி நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இவரை வணங்கினால் குழந்தைபேறு, தொழில் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    ஆலய வளாகத்தில் மங்கலம் தரும் சனீஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, வீரணார், சரபேஸ்வரர், பஞ்சமுக கணபதி, சூலினி துர்கா, சிம்ம கணபதி, நாகலிங்கம், முனீஸ்வரர், குருபகவான், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், காளி ஆகிய தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். சனிக்கிழமை தோறும் ஆலயத்தில் உள்ள மங்கலம் தரும் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடக்கின்றன.

    இவ்வாலயம் சாஸ்திரப்படி இயற்கையாகவே இடுகாடு, சுடுகாட்டுக்கு எதிரில் அமைந்துள்ளது கூடுதலான சிறப்பம்சமாகும். இங்குள்ள பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும்.

    ஏவல், பில்லி, சூனியம் போன்ற கெடுதல்கள் அண்டாது. அரசியலில் மேன்மை கிடைக்கும். அரசு வேலை, பதவி உயர்வு கிட்டும் என்பது ஐதீகமாகும்.

    இங்குள்ள மகா கால பைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும். முன்னோர்களின் சாபம் நீங்கி, வாழ்வில் மேன்மை கிட்டும் என்பது ஐதீகமாகும். ஞாயிற்றுக் கிழமை தோறும் கால பைரவர், சரபேஸ்வரருக்கு ஹோமத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    மகா பிரத்தியங்கிரா தேவியை வியாழக்கிழமை காலை சந்தனக் காப்பு அலங்காரத்துடன், எள்ளுப்பூ, செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும். வெள்ளிக்கிழமை அன்னையை தாமரை மலர் 'அணிவித்து சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும். மகா பிரத்தியங்கிரா தேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும். கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    மாதம் தோறும் அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு நடத்தப்படுகிறது. ஆடி அமாவாசை, தைத்திருநாள், தை அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை 1-ந் தேதி அன்று மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.

    உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் மக்கள் நோய், நொடியின்றி நலமாக வாழ வேண்டியும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்து பசுமை வளம் சிறக்க வேண்டியும் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது. இதுபோன்றே மிளகாய் வற்றல் யாகம், பச்சை மிளகாய் யாகம், பாகற்காய் யாகம், எலுமிச்சை பழ யாகம் போன்ற சிறப்பு யாகங்கள் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

    தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கோரம்பள்ளம் அருகே அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்குச் செல்ல தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், கோரம்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ, கார், மினி பஸ், வசதி உள்ளது.

    • முழுக்க முழுக்க மூலிகையால் அம்பாள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

    வட திருவானைக்கா என வழங்கும் செம்பாக்கம் என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சி தரும் வயல்வெளி பகுதிகள். நேர்த்தியான தெருக்கள் கொண்ட இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி விசுவரூப மூலிகை அம்மன் கோவில் அழகிய வடிவில் கம்பீரமாக உள்ளது அந்த ஊருக்கே கிடைத்த பெருமை.

    ஒரு பிரமாண்ட அரண்மனை தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் அம்பாள் குழந்தை, குமரி, தாய் என மூன்று வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

    தென் இந்தியாவில் முதல் விசுவரூப மூலிகை அம்பாள் இக்கோவிலில் வீற்றிருப்பது சிறப்பம்சமாகும். 9 அடி உயரத்தில் சர்வலோக மகாராணியாக ஸ்ரீமத் ஔஷத லலிதா மகா திரிபுர சுந்தரி நின்ற கோலத்தில் அங்குச, பாச, மலர், கரும்போடு அன்னை விசுவரூப தரிசனம் தருகின்றாள். முழுக்க முழுக்க மூலிகை யால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது விசேஷ அம்சமாகும்.

    ஔஷத லலிதாம்பிகை யின் சன்னதி அபூர்வ அமைப்புடன் உள்ள ஒரே தலம் இது. ஸ்ரீமத் ஔஷத லலிதாம்பிகை ஒளி வீசும் காந்த புன்னகையோடு மேகலை முதலான அணிகலன்களோடு கிழக்கு நோக்கிய திசையில் வேறு எங்கும் காண கிடைக்காத கலை அழகுடன் பக்தர்களை பரவசமூட்டி ஈர்த்து வருகிறாள்.

    இங்கு மகாராணி தர்பாரில் ஆட்சி செய்வது ேபால கம்பீரமாக அருள் கடாட்சத்துடன் விளங்குகிறாள். தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர அஸ்த்ர, சஸ்திர முறையில் அமையப் பெற்றது. இந்த திருத் தலத்துக்கு விசேஷ சக்தி கள் ஏரா ளம். பக்தர் கள் எண்ணங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வடிவமாக பாலாவின் மூல தேவி லலிதை இங்கு சக்தி படைத்தவளாக திகழ்கிறாள்.

    எப்பேற்பட்ட துன்பத்துடன் இந்த கோவிலுக்கு சென்று மனமுருகி பாலாம்பிகையை வேண்டினாலும் ஒரு மனத்தெளிவும், நேர்மறை சிந்தனையும், முகத்தில் புதுபொலிவும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. வாடிய பயிர்கள் எல்லாம் மழையை கண்டதும் எப்படி மலர்ச்சி அடைகிறதோ, அதே போல் வாடிய முகத்துடன் இங்கு செல்லும் பக்தர்கள் குழந்தை வடிவமாக இருக்கும் பாலாம்பிகையின் முகத்தை பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு பரவசம் அடைவதை நாம் உணரலாம்.

    கால்களில் தண்டையும், கொலுசும் அணிந்து கொண்டு சர்வாபரண அலங்காரத்துடன் விழிகளை திறந்து நம்மோடு பேசும் காந்த உணர்வுடன் ஒரு ஈர்ப்பு சக்தியாய், பொலிவுற அம்பாள் காட்சி தருகிறாள். அம்பாளை ஒரு முறை கண்குளிர பார்த்தாலே அம்பிகையின் ஸ்தோத்தி ரங்கள் நம்மை அறியாமலேயே நம் நாவில் இருந்து வெளிப்படும் என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை.

    இது தவிர இந்த கோவிலில் காலடி எடுத்து வைத்தாலே மனசுக்குள் ஒரு இனம்புரியாத சக்தி ஊடுருவுவதை உணரலாம். அதுவும் அம்பிகையின் சன்னதிக்கு சென்று வழிபட்டால் எந்த பிரச்சினை என்றாலும் அதெல்லாம் நொடிப்பொழுதில் மறைந்து மனசுக்குள் ஒரு அமைதியும், புத்துணர்வும் கிடைப்பதாக இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    இப்படி பல்வேறு சக்திகளை உள்ளடக்கியதாக திகழும் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி, விசுவரூப மூலிகை அம்மன் கோவிலுக்கு திருப்போரூரில் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் ஸ்ரீ அழகாம்பிகை சமேத ஸ்ரீ ஜம்புகேசுவரர் கோவில் நுழை வாயில் வழியாக செம்பாக்கம் ஊருக்குள் 0.5கி.மீ. சென்றால் பெரிய கோவில் எனும்ஜம்புகேசுவரர் கோவில் நம்மை வரவேற்கும்.

    சிவன் கோவில் மதிலை ஒட்டிய சாலையில் 200 மீட்டர் சென்றால் ஸ்ரீபாலா சமஸ்தான திருக்கோவிலை அடையலாம். இத்தலத்தை தரிசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டைமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயத்தின் அமைப்பு

    ஸ்ரீபாலா, ஸ்ரீமத் ஒளஷத லலிதாம்பிகை ஆலயம் செம்பாக்கம் ஊரின் வடகிழக்கு திசையில் கிழக்கு நோக்கியவாறு அரண்மனையைப் போன்ற முகப்புத் தோற்றம் சுதை சிற்பங்களுடன் மிகவும் கலைநயமிக்க வேலைபாடுடன் கிழக்கு திசை நுழைவு வாயில் அமைந்துள்ளது.

    குழந்தை ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி கீழ்சந்நிதி அமைப்பு

    கோவிவை சுற்றி உள்ள வெளிப்புற விமானங்களில் சப்தமாதாக்களின் சுதை சிற்பமும், முன்புறத்தில் ஸ்ரீபாலாம்பிகை கணபதியாக, முருகனாக, கிருஷ்ணனாக, ராமனாக, தட்சிணா மூர்த்தியாக, காளியாக, வாராகி, மாதங்கி, மீனாட்சி அகிலாண்டேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி, சாமரம் வீச ஸ்ரீலலிதாம்பிகை அழகு மிக்க சுதைசிற்ப வேலைபாடுகளுடன் கூடிய முகப்பு தோற்றத்துடனும் உள்ளாள். இருபுறமும் ஐராவதம், ஐராவனம் யானைகள் நிற்க 7 படிகளை கடந்து சென்றால் இருபுறமும் துவார சக்திகள் நின்றிருக்க ஆலயத்தின் முதல் வாயிற்நிலையை கடந்தால் பெரிய மகாமண்டபம் மிகச்சிறப்பான வர்ணவேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

    மகாமண்டபத்திற்கு பிறகு ஊஞ்சல் மண்டபமும், அதற்கு மேல் கருவறையின் இருபுறமும் உத்திஷ்ட கணபதி, முருகன், கலைமகள், அலைமகள், கோஷ்டத்தில் வீற்றிருக்க அர்த்த மண்டபத்தில் மூலவர் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தையாகவும், இவளின் முன் குருமண்டல அசாத்திய ஸ்ரீ சக்கரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபாலாவுக்கு பின்புறத்தில் 3 படிகளை கொண்ட கருவறையில் ஸ்ரீதருணீ திரிபுரசுந்தரி குமரிப்பருவத்திலும் அருள் ஆட்சி செய்கிறாள்.

    மூலவர் ஸ்ரீபாலாவின் இருபுறமும் உற்சவத்திரு மேனியாக ஸ்ரீவாராகி தேவியும், ஸ்ரீமாதங்கியும் வீற்றிருக்க ஸ்ரீபாலாம்பிகை மூல மூர்த்தியாக கீழ்கருவறையில் எழுந்தருள் பாலிக்கின்றாள்.

    தாய் ஸ்ரீமத் ஔஷத லலிதா திரிபுரசுந்தரி அன்னை மேல்தள (மாடிச்சந்நிதி) அமைப்பு

    கீழ் கருவறையின் இருபுறமும் வளர்பிறை (சுக்லபட்சம்) மற்றும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) 16 திதி நித்யா படிகளின் பக்கங்களில் யந்திரங்கள் வலது மற்றும் இடதுபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திதி படிகளின் மூலமாக மேல் கருவறைக்கு சென்றால் ஹயக்கிரீவர், நந்திகேஷ்வரர், மகா மண்டபத்தின் முகப்பின் மேல் பகுதியில் தேவியருடன் கணபதியும், முருகனும் வீற்றிருக்க, நடுவில் கற்பக விருட்சம் கீழ் மகா லட்சுமி, சங்க நிதி, பதும நிதியுடன் வீற்றிருக்கின்றனர். இருபுறமும் பெரிய ரூபமாக சிங்கத்தின் மீது அஷ்டபுஜ வராகியும் கிளியின் மீது அஷ்டபுஜ ராஜ மாதங்கிதேவியும் வீற்றிருக்கின்றனர்.

    மகா மண்டபத்தை சுற்றிலும் அம்பிகையை உபாசனை செய்த குருமார்கள், ஞானிகள் மற்றும் சித்தர்களின் சுதைச் சிற்பங்கள் 16 பேர் சூழ மூலிகை அம்பாள் நேர் எதிரில் சதுர ஆவுடையில் படிகத்தால் ஆன படிக லிங்கம் மகா காமேஸ்வரர் பிரதிஷ்டையாகி உள்ளார்.

    மேல்தள கருவறையில் கிழக்கு நோக்கிய அம்பிகையின் கருவறையின் முன் அர்த்த மண்டபத்தின் நடுவில் வெள்ளி கவசத்துடன் மகாமேரு அமைந்துள்ளது. இருபுறமும் மகாகாளியும், மகா பைரவரும் வீற்றிருக்க கருவறையில் தீப ஒளியில் நம் நேரில் நின்று பேசுவது போல் விஸ்வரூப தரிசனம் தருகிறாள் மூலிகை அம்பாள்.

    மூலஸ்தான சுவர்ண விமானம்

    ஸ்ரீசக்ர ராஜ சிற்சபா விலாச சுவர்ண விமானம் எனப்படும் துவிதள (இரண்டு அடுக்கு) விமானத்தில் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி, அஸ்வரூடா, சம்பத்கரீ தேவியர்கள் நான்கு திசையிலும் சிம்மம் சூழ்ந்திருக்க அமர்ந்துள்ளனர். அதற்கு மேல் உள்ள முதல் அடுக்கு முழுவதும் செப்பு தகடுகள் வெய்து அதற்கு தங்க முலாம் பூசி அழகுடன் அருண நிறத்துடன் பிரகாசமான தோற்றத்துடன் 3 தங்க கலசத்துடன் அமைந்துள்ளது. நாற்புறங்களிலும் பெரிய காமதேனு வாகனங்களால் சூழப்பட்டுள்ளது.

    உற்சவ திருமேனிகள்

    குருபாதுகை, ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி, ரமா வாணி சமேத ஸ்ரீமத் லலிதா மகா திரிபுர சுந்தரி, ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீபால தண்டாயுதபாணி, வேணுகோபால பெருமாள், குழந்தைவேலர், சுவர்ண பைரவர், விபூதி சித்தர், ஸ்ரீகாமேஸ்வரமூர்த்தி, ஸ்ரீ ஆனந்த நடராஜர் ஆகிய உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

    செம்(பியன்)பாக்கம் தலச்சிறப்பு

    சிவன் தானே வந்துறைந்த தொண்டை நாட்டு வைப்பு தலம், வட திருவாணைக்கா என வழங்கும் செம்(பியன்)பாக்கம். சிரம்பாக்கம் என்பது மருவி செம்பாக்கம் என ஆனது. திருச்சி திருவானைக்காவிற்கு இணையான அப்பு (நீர்) தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையே அமர்ந்த நாவல் (ஜம்பு) வனத்தில் உள்ள தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான செம்பியன் கோட் செங்கட் சோழநாயனார் மற்றும் அவரது சோழ வம்சத்தினர்கள், சித்தர்களும், ஞானிகளும், நாகர்களும், சோழ மரபினர், அகத்தியர், லோப முத்திரா தேவியுடன் வழிபட்ட தலம் இந்த நெல் விளையும் செம்பாக்கம் திருத்தலம். இத்தலத்தில் 32 விநாயகர் கோவில்கள், 32 குளங்கள் உள்ளது. இது ஞானபூமி அருள் மிகு ஸ்ரீ அழகாம்பிகை செம்புகேஸ்வர சுவாமி அருள் தரும் புண்ணிய பூமி. அது சமயக்கடவுள்கள் என மொத்தம் 42-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ள தலம்.

    மூலிகைகளால் உருவான ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன்

    சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் "வட திருவானைக்காவு" என அழைக்கப்படும் செம்பாக்கத்தில், ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில், 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

    இந்த திருமேனி பல மூலிகை கள், மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாய கலவைக் கொண்டும், (ரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள், நவரத்தினங்கள்இடம் பெற்றுள்ளன. நமது உடம்பில் உள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டுள்ளது. வளர்பிறை காலங்களில் பலஆயிர மாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார் 8 ஆண்டுகள் கடின உழைப்பில் லலிதாம்பிகை திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, சஸ்த்திரம் என்ற முறையில் அமையப்பெற்றவள் ஆவாள். திதி நித்யா தேவதை களை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் உள்ள கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நின்ற கோலத்தில் அங்குச, பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் புஷ்பபாணம், கரும்பு வில் ஏந்தி அம்பிகை மகா சௌந்தர்ய ரூபத்துடன் அருள்பா லிக்கின்றாள்.

    மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. தினசரி பாதபூஜை உண்டு. குழந்தைகள் நலன் பொருட்டு தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி சவுபாக்கியம், ஆனந்தம், ஆரோக்கியம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல், இங்கு அம்பிகை கோவில் கொண்டிருக்கும் ஆலயம் "ஸ்ரீசக்ரசபை" என்று போற்றப்படு கிறது.

    ஏனென்றால் இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரிபாலனம் செய்வதாக ஐதீகம். ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மும்மூர்த்தி சொரூபிணியாக திகழ்கிறாள். இந்த அம்பிகை திருமேனி 2008-ம் ஆண்டு மாசி பவுர்ணமி ஸ்ரீலலிதா ஜெயந்தி அன்று அம்பிகையின் பத்மபீடத்தில் கற்பபேழை, வலம்புரி சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு மூலிகைஅம்பாள் திருமேனி செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அம்பாள் ஆஞ்ஞையாலும், ஞானாஸ்ரம ஞானிகளின் எங்கள் குருநாதர்களின் வழிகாட்டுதலாலும் மூலிகை திருமேனி பற்றிய ஆய்வுகள் செய்து சித்தர்களின் முறைப்படி குண்டமண்டலங்கள் அமைத்து வேள்விகள் செய்து வளர்பிறை காலங்களில் மட்டுமே இத்திருமேனி அமைக்கப்பட்டது. இத்தகைய பேரழகும் பெருமைக்குரிய மகாசக்தியாகஸ்ரீசக்ரராஜ சபை சந்நிதியில் 15 திதி நித்யா தேவதைகளை படியாக அமைத்து அதன் மேல்தளத்தின் (மாடியில்) கருவறையில் லலிதாம்பிகை திருமேனியை சிற்பாகம ஆய்வரும், ஸ்தபதியும் உபாசகரான சுவாமிஜீ தம் திருக்கரங்களால் அற்புதத்திருமேனி வடிவ மைக்கப்பட்டுள்ளது என்பது போற்று தலுக்கு மட்டுமில்லாமல் வியப்புக்கும் உரிய தகவலாகும்.

    இக்கோவிலில் மூலிகை அம்பாள் ஔஷதத்தால் ஆனவள். ஔஷதம் என்றால் நவபாசாணத்தில் அல்லாமல் முழுமையாக பலவகை மூலிகையினால் மட்டுமே உருவானவள். இந்த அம்பாளின் திருமேனியை வடிவமைப்பதற்கு மட்டும் 8 வருடங்கள் ஆனதாக கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்த மூலிகை அம்பாளின் திருமேனிக்குள் பாணலிங்கம் வீற்றிருக்கிறார். பாண லிங்கம் என்றால் சாளக்ராமம் என்று வைஷ்ணவத்தில் அழைக் கப்படுகிறது. சைவத்தில் பாண லிங்கம் என்றழைக்கப்படுகிறது.

    பாணலிங்கத்தை பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் சிவன் அந்த விக்கிரகத்தில் வீற்றிருப்பார். ஆனால் மற்ற விக்கிரகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தால் மட்டுமே தெய்வங்கள் அதனுள் வீற்றி ருப்பார்கள். அதனால் தான் கோவில்களில் தினமும் 6 கால, 4 கால பூஜை செய்யப்படுகிறது. தெய்வங்களுக்கு ஒவ்வொரு பூஜையை பொருத்தும் தெய்வங்களின் காந்த ஆற்றல் மாறுபடுகிறது. சூரியனிடமிருந்து காலையில் கிடைக்கும் சக்தி வேறு. 11 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, 12,1 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, 3 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, 4 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, எல்லாம் ஒரே சக்தி கிடையாது.

    நேரத்திற்கேற்றவாறு சக்தி மாறுபடுகிறது. இந்த எல்லாக் காலத்தினுடைய சக்தியும் ஒரு மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கோவில்களில் அந்தந்த நேரங்களில் பூஜை செய்து அந்த சக்தியை பெறுவதற்காக 6 கால பூஜை, 4 கால பூஜை, 2 கால பூஜை என செய்யப்படு கிறது. இக்கோவிலில் காலையில் பாலாவிற்கும், மாலையில் லலிதா திரிபுர சுந்தரிக்கும் என இரண்டு வேளை தீபாராதனை காட்டி 2 கால பூஜை செய்யப்படுகிறது. காலை, மதியம், இரவு என 3 கால நைவேத்தியம் செய்யப்படுகிறது.

    லலிதா திரிபுரசுந்தரிக்குள் பானலிங்கர் வீற்றிருக்கிறார். நாம் பூஜை செய்யாவிட்டாலும் அவரே சுயம்புவாக உள்ளார். அந்த பாணலிங்கத்தை உள்ளே வைத்து மேற்புரத்தில் மூலிகையால் கட்டி சிறிது சிறிதாக ஆராய்ச்சி செய்து அம்பாளின் திருமேனியை வடிவ மைத்துள்ளனர். இக்கோவிலில் அம்பாளை 8 வருடங்களுக்கு முன்னரே பிரதிஷ்டை செய்து ஆரம்பித்து ஒவ்வொரு மூலிகைக்கும் தனித்தனியே மந்திரங்களை கூறி ஒரு நாளைக்கு ஒரு இலை அளவு கனமான மூலிகையே அம்பாளின் மீது சாத்த முடியும்.

    அம்பாளின்மீது மூலிகை சாத்தும் போது மழை பெய்தால் என்னென்ன ஆகும். மழை காலத்தில் எப்படி உள்ளது, வெயில் காலத்தில் எப்படி உள்ளது, குளிர் காலத்தில் எப்படி உள்ளது என்பதை ஆராய்ச்சி செய்து, மழைக் காலத்தில் பூஞ்சை பிடிக்கின்றதா எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன என்பது அனைத்தையும் ஆராய்ச்சி செய்துதான் 7 முதல் 8 வருடங்கள் வரை அம்பாளின் திருமேனி உருவாக்கப்பட்டிருக்கிறது.

    மூலிகை அம்பாளுக்கு கோவி லின் தோட்டத்து புஷ்பங்களை வைத்து மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. அதேபோல் மூலிகை அம்பாளுக்கு தனியாக 64 முழம் தனித்தரியில் புடவை நெய்து தான் சாத்த வேண்டும். அம்பாள் பக்தர்களிடம் அவளே கனவில் வந்து கேட்டுத்தான் புடவை சாத்தி கொண்டாள் என்கின்றனர் கோவில் நிர்வாகத்தினர்.

    அம்பாளுக்கு ஸ்ரீவிஜய உபாஸ்மியில் மூன்று மார்க்கம் உள்ளது. ஆரம்ப நிலை, இடை நிலை, உடைநிலை என மூன்று நிலை உள்ளது. ஆரம்ப நிலை என்பது பாலா உபாஸ்மி, இடை நிலை பஞ்சகஸ்த உபாஸ்மி. அவள்தான் கருணை புரியும் திரிபுர சுந்தரி என்பது. உடை நிலை என்பது மஹாஸ் உபாஸ்மி. இதன் பெயர் லலிதா திரிபுர சுந்தரி என்பது. மூன்று அம்பாளுக்கும் மூன்று மந்திரங்களால் யாகம் செய்வது, பூஜை செய்வது நடக்கின்றது.

    மூலிகை அம்பாள் சிறப்புகள்

    * இங்கு ஆண்டுதோறும் 2 முறை மூலிகை தைல காப்பு பச்சை கற்பூரத்தால் மட்டுமே ஆரத்தி நடைபெறும்.

    * மூலிகை அம்பாளுக்கு பிரதி மாதம் பவுர்ணமி மட்டும் 64 முழம் புடவை சாத்தப்படும்.

    * பிரத்யேகமாக தனியாக தறிபோட்டு இந்த அம்பாளுக்கு புடவை நெய்யப்படுகின்றது.

    *பவுர்ணமி திதியில் சர்வ ஆபரண அலங்காரம் மற்றும் 27 வகை ஆரத்திகள் நடைபெறும்.

    * விழா நாட்களை தவிர மற்ற நாட்களில் மூலிகை அம்பாள் தரிசனம் மட்டுமே உண்டு. நினைத்த நேரத்தில் ஆரத்தி இல்லை. நான்கு கால மகா ஆரத்தி தரிசனம் மட்டுமே உண்டு.

    * மூலிகையம்பாள் சந்நிதிக்கு ஆண்கள் சட்டை, பனியன் இல்லாமல் மட்டுமே தரிசிக்க இயலும். (சிறு ஆண் குழந்தை ஆனாலும் அப்படியே)

    * இந்த ஆலயத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல கட்டாயம் அனுமதியில்லை. ஆலய அலுவலகத்தில் செல்போனை கொடுத்து டோக்கன் பெற்று செல்லவும்.

    * செண்பக பூ, தாமரை மாலை, வெட்டி வேர் மாலை தவிர வெளி புஷ்பங்கள் மூலிகை அம்பாளுக்கு சாற்றப்பட மாட்டாது. மூலிகை அம்பாளை தவிர மற்ற தெய்வங்களுக்கு மாலைகள் சாற்றி வழிபடலாம்.

    திதி படி ஏறும் முறை

    திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசை திதி படிவழியே அம்பாளை பார்த்தபடி பின்னோக்கி இறங்க வேண்டும். (முடியாத முதியவர்கள் நேராக இறங்கலாம்).

    மூலிகை திருமேனியில் மும்மூர்த்தி தரிசனம்

    அம்பிகை அலங்காரத்தில் திருமலை பாலாஜியாகவும், அன்னை லலிதாவாகவும் அவளுள் மறைந்திருக்கும் சிவமாகவும் தரிசிக்கலாம். இவளை தரிசனத்தால் ஹரி, ஹரன், அம்பிகை ஆகியோரை தரிசித்த பலன்கிட்டும். இவள் சந்நிதியில் பச்சைகற்பூர ஆரத்தி மட்டுமே நடைபெறும்.

    ஸ்ரீலலிதாம்பிகையின் எளிய 25 நாமஸ்துதிகள்

    1. சிம்ஹாசநேசி 2. லலிதா 3. மஹாராக்ஞீ 4. வராங்குசா 5. சாபிநீ 6. திரிபுரா 7. சுந்தரி 8. மஹாதிரிபுரசுந்தரி 9. சக்ரநாதா 10. சம்ராக்ஞீ 11. சக்ரிணீ 12. சக்ரேஸ்வரி 13, மகாதேவி 14. காமேசி 15. பரமேஸ்வரி 16. காமராஜ பிரியா 17. காமகோடிகா 18. சக்ரவர்த்தினி 19. மகாவித்யா 20. சிவானங்க வல்லபா 21. சர்வ பாடலா 22. குலநாதா 23. ஆம்நாயநாதா 24. சர்வாம் நாய நிவாசிணீ 25. சிருங்கார நாயிகா.

    அமைவிடம்

    ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,

    திருப்போரூர் (ஓ.எம்.ஆர்)- செங்கல்பட்டு சாலை,

    செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா,

    செங்கல்பட்டு மாவட்டம்-603 108.

    (திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.)

    • வடிவாம்பிகை அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.
    • மூலவர் திருப்பெயர் சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.

    தேவாரப்பாடல் பெற்ற, ராஜராஜ சோழன் கல்வெட்டு உள்ள விழுப்புரம் மாவட்ட வானூர் வட்ட திருவக்கரை அருள்மிகு சந்திர மௌளீஸ்வர் கோவிலில் 7 நிலை ராஜ கோபுரம் பிரதானமாக அமைந்துள்ளது. ராஜகோபுரத்தை அடுத்து உட்பகுதியில் இடப்பக்கமாக அருள்தரும் வக்கிரகாளிம்மன் சன்னதி உள்ளது. காளிசன்னதியின் எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் ஆத்மலிங்கம் சன்னதி, காளிசன்னதியின் இடதுபுறம் கிளி கோபுரம் (நடு கோபுரம்), முன்புறத்தில் திருநந்தி, அதற்கு வலப்புறமாக திருகல்யாண மண்டபம் (நூற்றுக்கால் மண்டபம்) அமைந்துள்ளது. நடு கோபுரத்தினை தாண்டி உள்ளே கருவறையில் மூலவ லிங்கம். ஐந்தோ நான்கோ முகம் இல்லாமல் மாறுபட்டு மும்முகலிங்கமாக காட்சி அருளுகிறார். முன் மண்டபத்தில் இருபுறத்தில் பத்து அடி உயரத்தில் இரண்டு சோழர்கால துவார பாலகர்கள் உள்ளனர்.

    மூலவர்

    மூலவர் திருப்பெயர் சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.சந்திரனை முடியிலே சூடியிருப்பவர் என்பது இதன் பொருளாகும். சதுரபீடத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் மூலவர் அழகிய மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான லிங்கம் அமைந்துள்ளது. மேற்குபாகத்தில் அமைய வேண்டிய சத்தியோ- ஜாதம் என்ற முகம் இங்கே அமையவில்லை. கிருதயுகத்திலிருந்து திரேதாயுகம், துவாபரயுகம் என்று ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு முகமாக உண்டாயிற்று என்றும் கலியுக முடிவில் மேற்குப் பக்கத்திலும் முகம் ஏற்படும் என்றும் நம்பிக்கை உள்ளது. சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், ஆகியோரின் இலக்கியக் குறிப்புகளும் வக்கிராசுரன் முதலியோர் வழிபட்டுள்ள சான்றுகளும் கிடைக்கின்றன.

    அம்பாள்

    அம்பாள் உலகை ரட்சிக்கும் அமிர்தேஸ்வரி எனவும்,அழகுமிகு கோலம் கொண்ட வடிவாம்பிகை எனவும் வணங்கப்படுகிறாள். குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது.

    குண்டலிணி முனிவர்

    கருவறையின் தென்திசையில் குண்டலினி முனிவர் எனும் சித்தர் ஜீவசமாதி உள்ளது. குண்டலினி மாமுனிவர் சமாதி மீது சிவலிங்கம் நிறுவப்பட்டு உள்ளது. வக்கிராசூரனுடைய தாத்தாவாக குண்டலினி முனிவர் குறிப்பிடப்படுகின்றார். இதன் வெளிப்பாடாக குண்டலினி முனிவர் அவரது பேரனான வக்கிராசூரன் ஆகியோர் சிற்பங்கள் தென் பிரகாரத்தில் காணப்படுகின்றன. வடதிசையில் மேற்கு நோக்கி வரதராஜ பெருமாள் தனித்து மூர்த்தியாய் நின்றருளுகிறார். வரதராஜ பெருமாள் சன்னதி பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது. இதன் வடதிசையில் மேற்கு நோக்கி நவக்கிரக சன்னதி உள்ளது. அருள்மிகு வடிவாம்பிகை அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. இங்குள்ள சன்னதிகள் அனைத்தும் நேர்நேராக அமையாமல் வக்கிரகதியில் அமைந்துள்ள கோவில் திருவக்கரை எனப்படுகிறது.

    வக்கிராசுரனும் துர்முகியும்

    வக்கிராசூர அரக்கன் சிவனை தனது கண்டத்தில் வைத்து பூஜை செய்து, தவவலிமையால் சாகா வரம் பெற்றான். வலிமை பெற்றதாலே எளியாரை சீண்டும் குணம் வந்தது. தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன் திருமாலிடம் வக்கிராசூரானை சம்ஹாரம் செய்ய வேண்டினார். பெருமாளும் சூரனுடன் போரிட்டு தனது சுதர்சனத்தை வக்கிராசுரன் மீது பிரயோகித்து வதைத்தார். வக்கிராசுரனின் தங்கை துன்முகி அவனைப் போலவே கொடுஞ்செயல் புரிந்து வந்தாள். அரக்கியான அவளை வதம் செய்ய பார்வதிதேவியே சென்றாள். ஆனால் துன்முகி கருவுற்றிருந்தால் பார்வதி துன்முகியின் வயிற்றை கிழித்து, சிசுவை தனது வலதுகாதில் குண்டலமாக்கிக் கொண்டு துன்முகியை வதம் செய்தாள். வக்கிரசூரனின் தங்கையை அழித்ததால் பார்வதி இங்கு வக்கிரகாளியாக சம்ஹாரக் கோலத்தில் அருள்புரிகிறாள். வக்கிரகாளியின் திருவுருவம் மிக்க அழகுடையது. சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய 'வக்கிரலிங்கம்' உள்ளது.

    வக்கிரகாளி சம்காரம்

    பண்ணியதால் ஓங்காரமாக இருந்த காளியை ஆதி சங்கரர் சாந்தம் செய்து இடதுபாதத்தில் ஸ்ரீ சக்ரராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்தாக கூறப்படுகிறது. பிரமிக்க வைக்கும் வக்கிரகாளியின் திருவுரு, சுடர் விட்ட பரவும் தீக்கதிர்களைக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக்கிரீடம் வலது காதில் சிசு-பிரேத குண்டலம், எட்டுத்திருக்கரங்கள் வலக்கைகளில் பாசம், சக்கரம், வாள், கட்டாரி, கபாலம், பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்த தலை மாலை. முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.

    இந்த சன்னதியை வலம் வர நினைப்பவர்கள் ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் வக்கிரன் வழிபட்ட தலம்; வக்கரை என்று பெயர் பெற்றது. வல் + கரை - வலிய கரையையுடைய இடமாதலாலும் சங்கராபரணி நதியின் கரையாக அமைந்தாலும் வற்கரை - வக்கரை என மருவி திரு அடைமொழி சேர்ந்து திருவக்கரை ஆயிற்று.

    தல மரமாக வில்வமும் தீர்த்தமாக பிரமதீர்த்தம், சந்திரதீர்த்தம், சூரியதீர்த்தம் குறிப்பிடப்படுகிறது. "வராகநதி " யெனப்படும் 'சங்கராபரணி ' ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தையுடையது, இவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் வாழ்ந்த மரங்கள்,அவற்றின் பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றத்தோடு இன்று கல்லாக - கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன.

    மூர்த்திகள்

    வக்கிர தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் மூன்று கால பூஜைகளுடன் காலை6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வக்ரசாந்தி திருத்தலம் எனப்படும் இத்திருக்கோயிலில் உள்ள வக்கரகாளியம்மனை தரிசனம் செய்வதினால் எவ்வகை வக்கிரதோஷம் இருந்தாலும் நிவர்த்தியும், திருமணபாக்கியம், மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்றவற்றை செய்து பயன் பெறுகிறார்கள். தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் இரவில் ஜோதிதரிசனம் காண நினைத்த காரியங்கள் முடிவடைகின்றன.

    இக்கோயிலில் பவுர்ணமி இரவு 12மணிக்கு ஜோதிதரிசனமும், அமாவாசை தினத்தன்று பகல் 12 மணிக்கு ஜோதிதரிசனமும் நடைபெறும். சிவன் கோவிலாக இருந்தாலும், காளியும் குடி கொண்டிருப்பதால் இத்தலம் சக்தி தலங்களில் ஒன்றாகவும் புகழ்ப்பெற்று திகழ்கிறது. மனநிம்மதி வேண்டி, கிரக தோஷங்கள் நீங்க, காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

    வக்கிரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர். பிரதோஷம், மாதாந்திரபவுர்ணமி, அமாவாசை, சித்ராபவுர்ணமி உற்சவம் ஆடிக்கிருத்திகை, கார்த்திகைதீபஉற்சவம், தைபூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம், தமிழ் வருடப்பிறப்பு, திருக்குளத்தில் தெப்பல், உற்சவம் ஆகியவை இத்தலத்து முக்கிய விழாக்கள் ஆகும்.

    அமைவிடம்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வழியில், பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் திருவக்கரை உள்ளது.

    • தீராத பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

    ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தலில் மக்களின் குறைதீர்த்து அருள்பாலித்து வரும் இசக்கியம்மன் (கிழக்கு) கோவில் உள்ளது. மூவேந்தர்கள் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை ஒற்றுமையாக்க தமிழ் மூதாட்டியான அவ்வை மன்னர்களை அழைத்து ஒரே இடத்தில் மூன்று பந்தல் அமைத்து அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை அகற்றி ஒரு சேர விருந்துண்ண வைத்து அளவளாவிய மகிழ்ச்சி பெற்ற சிறப்பு தலமே முப்பந்தல் ஆகும். அவ்வையின் வேண்டுகோளை ஏற்று பராசக்தியின் மறு உருவான இசக்கி என்ற இசக்கியம்மனை இங்கு அமர வைத்து கோவில் கொண்டதால் முப்பந்தல் சிறந்த புண்ணிய தலமானதாக கூறப்படுகிறது.

    தல வரலாறு :

    முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர். இந்த ஊரில் நாட் டிய பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் செல்வச் செழிப்பில் வசித்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையால் வீழ்த்தினான். பின்னர் இசக்கியை வீட்டில் உள்ள நகை பணத்துடன் அருகில் இருந்த காட்டுக்கு வரவழைத்தவன், இசக்கி அவன்பால் கட்டுண்டு இருந்த போது தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான். இதில் இசக்கி துடிதுடித்து இறந்துபோனாள்.

    பின்னர் அந்தக் கயவன், நகை– பணத்துடன் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று தீண்டியதில் அவனும் இறந்துபோனான். இந்த நிலையில் தெய்வ பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் தன்னை வஞ்சனையால் கொன்றவனைத் தானே அழிக்க வேண்டும் என்று வரம் பெற்று மீண்டும் தன்னையும், தன்னை ஏமாற்றியவனையும் உயிர்த்தெழச் செய்யுமாறு வேண்டினாள். சிவனும் வரம் கொடுத்தார்.

    கள்ளியை, குழந்தையாக மாற்றி...

    அதன்படி பாம்பு தீண்டி இறந்து கிடந்த இசக்கியை கொன்றவன் வீடு திரும்பினான். இசக்கியோ காட்டில் அலைந்து திரிந்தாள். ஒருநாள், காட்டில் இருந்த கள்ளிச் செடியை ஒடித்து அதனை அழகிய குழந்தையாக மாற்றி னாள் இசக்கி. பின்னர் அந்த குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றிய கயவனின் ஊருக்கு சென்று பஞ்சாயத்தை கூட்டி, தன்னையும், தனது குழந்தையையும் அவன் ஏற்க மறுப்பதாக புகார் கூறினாள்.

    விசாரணைக்கு வந்த இசக்கியை ஏமாற்றியவன், அவள் தனது மனைவியல்ல, அது என் குழந்தை அல்ல என்று மன்றாடினான். ஒரு கட்டத்தில் இசக்கி தனது இடுப்பில் இருந்த குழந்தையை கீழே இறக்கி விட்டாள். அந்த குழந்தை நேராக, குற்றம் சாட்டப்பட்டவனிடம் சென்று அப்பா என்றது. இதனை பார்த்த பஞ்சாயத்து தலைவர், 'குழந்தை பொய் சொல்லாது, எனவே நீ உன் மனைவியுடன் பேசி ஒரு முடிவுக்கு வா' என்று கூறி ஒரு வீட்டில் இருவரையும் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டனர்.

    முப்பந்தலில் அமர்ந்தாள் :

    இந்த நேரத்திற்காக காத்திருந்த இசக்கி, நள்ளிரவு ஆனதும் விஸ்வரூபம் எடுத்தாள். பின்னர் தன்னை ஏமாற்றி கொன்றவனை, தனது கையால் கொன்று பழிதீர்த்தாள். அதன்பிறகு பழவூரை விட்டு, மேற்கு நோக்கி நடந்தாள். அப்போது அவ்வையார் முப்பந்தல் பகுதியில் மூவேந்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற இசக்கியை அழைத்து, சாந்தப்படுத்தி, 'இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். இதனை கயிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதியை நோக்க, உடனே பார்வதிதேவி தன் வீரசக்தியை இசக்கிக்கு அளித்தாள். அன்று முதல் ஊரை காக்கும் தெய்வமானாள் இசக்கி. முப்பந்தலில் அமர்ந்ததால் முப்பந்தல் இசக்கி அம்மன் என்று பெயர் பெற்றாள்.

    அவ்வைக்கு தனி சன்னிதி :

    இசக்கியை, அவ்வையார் சாந்தப்படுத்தியதால் முப்பந்தலில் அவ்வையாரம்மன் என்ற பெயரில் அவ்வைக்கு தனி சன்னிதி உள்ளது. மேலும் இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. திருமாலே இசக்கியின் தமையனாக வந்ததாக கூறப்படுகிறது. 'இசக்கி' என்ற சொல்லுக்கு 'மனதை மயக்குபவள்' என்று பொருள். முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள். வலதுபுறம் பிராமணத்தி அம்மன் உள்ளார். கருவறை சுற்றுச்சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    கோவில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும், அவ்வையாரம்மனும் தனி சன்னிதியில் பாங்குடன் அருள்புரிகின்றனர். முகப்பில் காவல் தெய்வங்களான சுடலைமாடனும், அவருக்கு எதிரில் பட்டவராயரும் தனி சன்னிதிகளில் உள்ளனர்.

    இந்த கோவிலின் அருகில் மற்றுமொரு இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கும் சுடலை மாட சுவாமி காவல் தெய்வமாக கனகம்பீரமாக அமர்ந்துள்ளார். இந்தக் கோவில் கருவறை முன் மண்டபம் கேரள பாணியில் ஓடு வேயப்பட்டுள்ளது. இங்குள்ள இசக்கி அம்மன், ஆதி இசக்கி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய அளவில் இசக்கி அம்மன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.

    இங்கு வந்து அம்மனை வழிபட்டால் தடைபட்டு வரும் திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பகைமை விலகும், தீராத பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இக்கோவிலுக்கு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு பூஜையும், தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. ஆடி மாத கொடை விழா இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவில் ஒன்று.

    • சிங்க வாகனத்தில் அம்மன் அமைந்த நிலையில் உள்ளார்.
    • குண்டம் இறங்கும் விழா பிரசித்தி பெற்றதாகும்.

    ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும்.

    வரலாறு

    இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, "பாரியூர்" என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.

    கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்து அதன் உள்ளே குதித்தார். அந்த நேரத்தில் அந்த புதருக்குள் மறைந்து தாங்கள் களவாடிய பொருட்களை பங்குபோட்டுக் கொண்டிருந்த ஒரு திருடர் கூட்டம் புலி என்றெண்ணி அப்பொருட்களை அங்கேயே விட்டு விட்டு ஓடியது. அந்த பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொண்டுத்தார் என்று வரலாறு.

    கொங்குநாட்டில் பூ மிதித்தல் எனும் குண்டம் இறங்கும் விழா அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றதாகும். பண்ணாரி மாரியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், கணக்கம்பாளையம் பகவதியம்மன், பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் ஆகிய அம்மன்கள் புகழ்பெற்றவர்கள்.

    அவர்களில் பாரியூர் கொண்டத்துக் காளியம்மனும் ஒருவர். பாரியூர் ஆலயத்தில் அமைந்துள்ள 45 அடி நீளம் ஐந்தடி அகலம் கொண்ட குண்டம் பிரசித்தி பெற்றதாகும். கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது, காஞ்சிக் கூவல் நாடு. இதில் அடங்கிய பழைமையான ஊர் பாரியூர் ஆகும்.

    மூலவர், சில வடிவங்களின் அமைப்புகள் பலநூறு ஆண்டுகள் பழைமையானவை என்பதை உணர்த்துகின்றது. இதனைக் கற்கோயிலாக 1942-ல், கோபி புதுப்பாளையம் முத்து வேலப்பர் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கினார். இதேபோல, 1990-ல் இக்கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கோபி-புதுப்பாளையத்தைச் சார்ந்த அடியார் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கினார்.

    72 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, ஆலயமே கம்பீரமாகக் காட்சி தருகிறது. ஆலயம் 240 அடி நீளம், 150 அடி அகலம் கொண்டு, விசாலமாக தெற்கு முகமாக அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் ஆலயத்துக்கு அழகு சேர்க்கிறது. வடக்கு வாயில், தடப்பள்ளி வாய்க்கால் அமைந்துள்ளது. அருகே கல்யாண விநாயகர் அமைந்துள்ளார்.

    ஆலய வளாகத்தில், வன்னி விநாயகர், வரசித்தி விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளன. சப்தகன்னியர், பொன் காளியம்மன், விநாயகர், குதிரைவாகனம், அதையொட்டி முனியப்ப சுவாமி, பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார். இவரை தீய சக்திகள் அழிக்கும் கடவுளாக வணங்குகின்றனர்.

    ஆலயத்தில் நடுநாயகமாக, கொண்டத்துக் காளி சன்னிதி அமைந்துள்ளது. சிங்க வாகனத்தில் அம்மன் அமைந்த நிலையில் உள்ளார். அதைச் சுற்றி கலைநயம் மிக்க 28 தூண்களுடன் கூடிய சுற்று மண்டபம் அமைந்துள்ளது. உள்ளே மகாலட்சுமி, சரசுவதி, ராஜ ராஜேஸ்வரி, பத்திரக்காளி சிலா வடிவங்களும் அமைந்துள்ளன.

    கருவறை முன்புறம் பிரம்மகி, சாமுண்டி வடக்கிலும், மகேசுவரி, கௌமாரி கிழக்கிலும், வராகி தெற்கிலும், வைஷ்ணவி, மகேந்திரி மேற்கிலும், கஜலஷ்மி அதனருகே கொண்டத்துக் காளி சிலையும் அமைந்துள்ளன.

    கருவறைக்குள் கொண்டத்துக் காளியம்மன் அமர்ந்த கோலத்தில் வலது காலை குத்திட்டு, இடது காலை அசுரனை அழுத்தியபடி, வலது கரங்களில், சூலம், உடுக்கை, வாள், கிளி தாங்கி, இடது கரங்களில், தீச்சட்டி, கேடயம், மணி, கிண்ணம் ஆகியவற்றைத் தாங்கியும் வடக்கு முகமாகக் காட்சியளிக்கிறாள்.

    காளியாக இருந்தாலும், அன்னை யின் வடிவம் சாந்தரூபியாகக் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இவளே சேரன் படைத்தளபதிக்கு வீரவாள் வழங்கி வரம் தந்தவள். கருவறை அருகே, அருள்மிகு சின்னம்மன் காட்சி தருகின்றாள்.

    காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். காலை 6.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகம் நடை பெரும். 7 மணி, 9 மணி, 10.30 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என்று 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.

    திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடுகள்

    இந்த திருகோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இது ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெரும். பல லட்சம் பக்தர்கள் இங்கு வந்த பூ மிதிப்பர். குண்டத்திற்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை அன்னை ராஜராஜேஸ்வரியாக புஷ்பத்தேரில் எழுந்தருள்வாள். திருவிழாவில் சிறப்பம்சம் இதுவே. மேலும் நவராத்திரி திருவிழாவின் போது ஒன்பது நாட்களும் அம்பாள் வெவ்வேறு உருவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். சித்திரை திருவிழா மற்றும் பொங்கல் விமர்சிகையாக கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகள் ஆகும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு மக்கள் அம்மனிடம் "வாக்கு கேட்டல்" முறையைக் கடைபிடிக்கின்றனர். அம்மன் சிலையின் இரு பக்கங்களிலும் பூக்கள் வைத்து எப்பக்கத்திலிருந்து பூ கீழே விழுகின்றது என்பதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிறப்பு நாட்களில் அம்மனைச் சந்தனம் அல்லது மஞ்சள் பூசி அலங்கரிக்கின்றனர். திருவிழாவில் குண்டம் இறங்குதல் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    • கடையநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது இந்த கோவில்.
    • இந்த கோவிலில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடையநல்லூர் தாலுகா புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ளது முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.

    இக்கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் வருடம்தோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கால்நாட்டி சித்திரை பெருந்திருவிழா 9 நாட்கள் நடைபெறும். ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல், குங்குமம் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச்செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு ஐப்பசி மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று மகா பெரும்பூஜை என்னும் சிறப்பு திருவிழா நடைபெறுகிறது. ஆன்மிக வாழ்க்கையில் 30-ம் ஆண்டாக தொடர் புனித பயணம் மேற்கொள்ளும் குருநாதர் சக்தியம்மாவின் உடம்பிற்குள் ஸ்ரீ பெரிய பாளையத்து பவானி அம்மன் குடி கொண்ட நாளையே மகா பெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் அம்மாக்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். காலை 8 மணி முதல் குருநாதர் சக்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் தீச்சட்டியுடன் மகாசக்தி வாய்ந்த பவானி அம்மாவாக சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து பக்தர்களுக்கு தலையில் கை வைத்து சொல்லும் அருள் வாக்கு என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    இந்நாளில் முப்பெரும் தேவியர் பவானி அம்மாவாக பெண் உருவத்தில் அருள்வாக்கு வழங்கும் குருநாதர் சக்தியம்மாவிடம் ஆண், பெண் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சேலை எடுத்து கொடுக்கும்போது முப்பெரும் தேவியர் பவானி அம்மாவே ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

    • திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இடையஞ்சாவடி செல்லும் வழியில் அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பஞ்சலோக கருங்கற்களால் திருப்பணி செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது.
    • மேலும் 48 நாட்களுக்கு மூலமந்திர ஹோமங்களுடன் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலில் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானங்கள் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இடையஞ்சாவடி செல்லும் வழியில் அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பஞ்சலோக கருங்கற்களால் திருப்பணி செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது.

    இக்கோவில் கும்பாபிஷேகம்  நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் 9 நவஅக்னி குண்டங்களும், 12 பரிவார யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு கடந்த 23-ந் தேதி முதல்  8 கால விசேஷ ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. யாக பூஜையை அவிநாசி பிச்சை சிவாச்சாரியார் தொடங்கி வைத்தார்.

    கஜ பூஜை, அஸ்வ பூஜை உடன் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையுடன் நடைபெற்றது. 9 மணி முதல் 10.30 மணி வரை அம்மா புவனாம்பிகா முன்னிலையில், சர்வ சாதகம் சிவாகம பூசணம் கணேச சிவாச்சாரியார் தலைமையில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் விநாயகர், சுப்பிரமணியர், சிவலிங்கம், மகாமேரு, சூரியன், சந்திரன், சப்தமாதா, லட்சுமி நாராயணன், சண்டிகேஸ்வரி உள்ளிட்ட பரிவாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று மதியம் 12 மணிக்கு மகா தீபம் நடந்தது.

    மாலை உற்சவர் உட்பிரகார வீதி உலாவும் நடக்க உள்ளது.

    மேலும் 48 நாட்களுக்கு மூலமந்திர ஹோமங்களுடன் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலில் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானங்கள் நடைபெற்று வருகிறது.

    • திருமணத்தடை அகலும்.
    • ஏவல், பில்லி, சூனியம் விலகும்.

    திருவனந்தபுரம் அருகே தொழுவன்கோடு என்ற இடத்தில் சாமுண்டிதேவி கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் அன்னை, மக்களுக்கு அருள்வழங்கி காத்து வருகிறார். இந்த தலத்தில் அந்தணர் அல்லாதவர்களும், அம்மனுக்கு பூஜை செய்யும் சிறப்பு மிக்க வழக்கம் உள்ளது. அன்னை சாமுண்டிதேவியானவர் பொன்னிற தகடுகளால் பொதியப்பட்ட கருவறைக்குள் வீற்றிருந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி வருகிறார்.

    தல வரலாறு :

    தொழுவன்கோடு ஆலய வரலாறு பற்றி கூறும் முன்பு, அதோடு தொடர்புடைய பண்டைய கால திருவிதாங்கூர் மன்னர் குடும்ப வரலாற்றையும் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. அபூர்வ சக்திமிக்க சாமுண்டி தேவி ஆலயம் தோன்றிய முக்கிய காரணமாக திகழ்ந்தவர், மன்னர் மார்த்தாண்டவர்மா. அவர் வீர பராக்கிரமசாலியாகவும், திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரிந்து வரும் பத்மநாப சுவாமியின் பரம பக்தனாகவும் இருந்ததும், திருவிதாங்கூர் நாட்டை விரிவுபடுத்தி வலிமை மிக்கதாக மாற்றியமைத்தவர்.

    ஆதி காலம் முதல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில், மருமக்கள் தாயகம் என்னும் வழக்கம் நிலை கொண்டிருந்தது. ஒரு மன்னர் ஆட்சி காலத்தின் பின்னர், மன்னரின் தங்கை மகன்தான் (மருமகன்) ஆட்சிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் மார்த்தாண்டவர்மா ஆட்சிக்கு வரும் முன், அவரின் தாய்மாமன் ராமவர்மா மன்னராக இருந்தார்.

    ஒரு முறை மன்னர் ராமவர்மா, சுசீந்திரத்தில் நடைபெறும் தேரோட்டத்தைக் காணச் சென்றார். அப்போது கோவிலில் அழகே உருவான அபிராமி என்றப் பெண்ணைச் சந்தித்தார். அவள் மீது மையல் கொண்ட மன்னர், அவளைத் திருமணம் செய்ய நினைத்து, தனது மனதைத் திறந்து அபிராமியிடம் சொன்னார்.

    அபிராமி ஓர் நிபந்தனையை முன்வைத்தாள். 'திருமணம் செய்திட எனக்கு சம்மதமே. ஆனால் என் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்குதான் அரசு உரிமை வழங்க வேண்டும். மக்கள் தாயத்தை நிலை நிறுத்த வேண்டும்' என்றாள்.

    பரம்பரை வழக்கமான மருமக்கள் தாயக வழக்கத்தை மாற்றுவது கடினம். உரிமை மருமகனுக்கு என்ற வழக்கத்தை மீற முடியாது. வேறு எதுவாயினும் கேள்' என்றார் மன்னர் ராமவர்மா.

    ஆனால் அபிராமி ஒத்துக்கொள்ளவில்லை. 'மன்னா! எந்த நாட்டிலும் தந்தையின் சொத்துக்கு உரிமை பிள்ளை செல்வங்களுக்கல்லவா? வரலாறுகளிலும் புராணங்களிலும் அதுவே கூறப்பட்டிருக்கின்றன. தங்களுடைய நாட்டில் மட்டும் இதென்ன வழக்கம்?' எனக்கூறி மருமக்கள் தாயகத்தை அபிராமி புறக்கணித்தாள். தன் கருத்தில் பிடிவாதமாக நின்றாள்.

    மன்னரும் வேறு வழியின்றி, அவள் மீது கொண்ட மையல் காரணமாக நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மணம் முடித்து வாழ்ந்து வந்தனர். ராமவர்மா- அபிராமி தம்பதியருக்கு பப்பு தம்பி, ராமன்தம்பி, உம்மணி தங்கை என்ற மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்தனர். அதே போல் ராமவர்மாவின் சகோதரி உமா தம்பதியருக்கு மார்த்தாண்டவர்மா பிறந்து வளர்ந்து வந்தார்.

    மருமக்கள் தாயகம் நிலை நாட்ட மன்னர் குடும்பத்தினர் முயன்றனர். மக்கள் தாயகத்தை நிலை நாட்ட அபிராமியும், அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் மார்த்தாண்டவர்மா, தனது முறைப்பெண் உம்மணி தங்கையுடன் காதல் கொண்டிருந்தார். இதனை அவளது சகோதரர்கள் கண்டித்தனர். அவர்களின் காதலை பல வழிகளில் தடுத்தனர்.

    மக்கள் தாயகத்தை நிலை நாட்டும் பிரிவில் எட்டு வீட்டுப் பிள்ளைகள் என ஒரு குழு தீவிரமாக ஒத்துழைத்தது. எட்டு வீட்டு பிள்ளைகளில் வீரபராக்கிரமசாலியாகவும், சதி திட்டங்கள் வகுப்பதில் வல்லவராகவும் இருந்த கழக்கூட்டத்து பிள்ளை என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஒரு முறை மார்த்தாண்டவர்மா படைவீரர்கள், கழக்கூட்டத்தப் பிள்ளையைப் பிடிக்க முயன்றனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை ஒரு காட்டில் சென்று மறைந்தார். மார்த்தாண்டவர்மா படையினரும் அவரை காட்டுக்குள் விரட்டிச் சென்றனர். பிள்ளையைக் காணவில்லை. அங்கு ஒரு பெரிய நாகப்பாம்பு படமெடுத்து, படைவீரர்களை தடுத்து நின்றது. இதனால் படைவீரர்கள் திரும்பி வந்து விட்டனர்.

    மற்றொரு முறை விரட்டி வரும் படைவீரர்களுக்கு பயந்து, மேனம் குளம் என்ற இடத்தில் உள்ள மீன குடிசைக்குள் புகுந்தார் கழக்கூட்டத்துப் பிள்ளை. வீரர்களும் அந்த குடிசைக்குள் புகுந்தனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை அங்கு இல்லை. இதனால் படைவீரர்கள் குடிசையை உடைத்தெறிந்தனர். யாரும் இல்லாத வீட்டுக்குள் இருந்து வயதான மீனவப் பெண் ஒருத்தி, தலையில் கூடையை சுமந்தபடி வெளிப்பட்டாள். இதனைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்த மார்த்தாண்டவர்மா, தன் பக்கம் துணைபுரியும் ராமைய்யன் என்பவரிடம் இதற்கு காரணம் கேட்டார்.

    அவரோ, 'கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் (சண்டை பயிற்சி வழங்கும் இடம்) ஓர் அரிய சக்தியாக ஆதிபராசக்தி குடியிருக்கிறாள். கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் பயிற்சி ஆசானாக 'பணிக்கர்' என்னும் திறமைசாலி இருக்கிறார். அங்கே சாமுண்டி வடிவில் அன்னை புவனேஸ்வரியும் அமர்ந்திருக்கிறாள். தேவியையும், குருவான பணிக்கரையும் அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் கழக்கூட்டத்துப் பிள்ளையை வெற்றிபெற முடியாது' என்றார்.

    இதனைக் கேட்ட மார்த்தாண்டவர்மா, அரண்மனை ஜோதிடரை வரவழைத்து ஜோதிடம் கணித்துப் பார்க்கச் சொன்னார்.

    'குருவையும், அம்மனையும் அங்கிருந்து அகற்ற, பத்மநாப சுவாமியின் அருளைத் தேடுங்கள்' என்றார் ஜோதிடர்.

    அதன்படி மார்த்தாண்டவர்மா பத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்று மனமுருக வேண்டினார்.

    மும்மூர்த்திகள் தரிசனம் :

    வழிபடுவோரை கைவிடாத பரந்தாமன், மார்த்தாண்டவர்மாவை காத்திட முன்வந்தார். தன் செயலுக்கு பிரம்மதேவனையும், சிவபெருமானையும் துணைக்கு சேர்த்துக்கொண்டார். மூவரும் இரவு நேரத்தில் பணிக்கர் நித்திரையில் இருக்கும் போது, சாமுண்டியைச் சந்தித்தனர். 'தேவி இந்த வேணாட்டிற்காகவும், பக்தர்களின் நலன் காக்கவும் வேண்டி, இந்த களரியை விட்டு வேறிடம் சென்று குடியிருக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.

    அன்னையும், 'நல்லது. தங்கள் சித்தப்படியே ஆகட்டும். ஆனால் எனது அருள்வடிவம், இனி எங்கே பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ, அங்கு மும்மூர்த்திகளான நீங்கள் மூவரும் முன்னிலை வகிக்க வேண்டும். மேலும் பிரதிஷ்டை வருடாந்திர தினத்தில் மூவரும் வருகை தந்து அருள்பாலிக்க வேண்டும்' என்றாள்.

    அதற்கு திருமூர்த்திகளும் ஒப்புதல் தெரிவித்து மறைந்தனர். இதையடுத்து சாமுண்டி தேவியான, புவனேஸ்வரி தனது பரம பக்தரான குரு பணிக்கருடன், கழக்கூட்டத்துப் பிள்ளையிடம் கூட தெரிவிக்காமல் அங்கிருந்து பயணமானாள். தேவியின் உபதேசப்படி, பணிக்கர் மேடு பள்ளங்களையும், நீர்நிலைகளையும் கடந்து, சாமுண்டி சிலையுடன் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தார். மும்மூர்த்திகளும் அசரீரியாக குறிப்பிட்ட இடத்தில், சாமுண்டியை குடியிருத்தினார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தொழுதபடி நிற்கும் இந்தக் காடு, காலப்போக்கில் தொழுவன்காடு என்று மாறி புனித தலமாக உருவெடுத்தது.

    பணிக்கர் வழக்கப்படி சாமுண்டி தேவியை பூஜித்து வந்தார். பொழுது புலரும் நேரத்தை காட்டிலிருந்த ஒரு கோழி உணர்த்தியது. அதனையே தேவிக்கு சமர்ப்பித்தார் பணிக்கர். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. பக்தர்கள் அன்னைக்கு கோழியை சமர்ப்பித்து வேண்டுதல் செய்கின்றனர்.

    கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் இருந்து சாமுண்டிதேவி மாற்றிடம் சென்றதும், மார்த்தாண்டவர்மா எட்டு வீட்டு பிள்ளைகளையும் வென்று சிறந்த ஆட்சியை தொடர்ந்தார். தொழுவன்காடு என்பது தொழுவன்கோடு என்றானது. அந்த இடத்தில் இருந்து அன்னையானவள், மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    இந்த ஆலயத்தில் உள்ள அன்னையை மனமுருக வேண்டினால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் தீராத நோய்கள் தீரும். ஏவல், பில்லி, சூனியம் விலகும். திருமணத்தடை அகலும். இந்த ஆலயத்தில் திருவிழாக்காலங்களின் போது 'ஔடத கஞ்சி' வழங்கப்படுகிறது. இது நோய் தீர்க்கும் பிரசாதமாக உள்ளது.

    இந்த ஆலயத் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவில், இறுதிநாளான 12-ந் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அதிகாலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடைதிறந்திருக்கும்.

    நவக்கிரக சன்னிதி :

    தொழுவன்கோடு சாமுண்டி தேவி ஆலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, கந்தர்வன், அனுமன், நாகராஜா, நாகயட்னி, துர்க்காதேவி ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. தேவியின் கருவறைக்கு அருகில் கருங்காளி தேவிக்கு தனிக் கோவில் இருக்கிறது. கணபதி மற்றும் நாகராஜா சிலைகள் பஞ்சலோகத்தால் ஆனவை என்பது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரக சிலைகள் பெரிய உருவத்தில் தங்கள் வாகனங்களுடன் இருப்பதைக் காணலாம். இங்கு வந்து சனி தோஷத்திற்காக வழிபட்டு நிவாரணம் பெற்றுச் செல்பவர்கள் ஏராளம்.

    அமைவிடம் :

    திருவனந்தபுரம் கிழங்கு கோட்டையில் இருந்து வடகிழக்காக 7 கிலோமீட்டர் பயணித்தால் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவிலை அடையலாம்.

    • இந்த அம்மன் கோவிலின் மூலக்கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி பகுதியில் உள்ளது.
    • மூலவர் சன்னதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறாள்.

    உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களை தன்பக்கம் ஈர்க்கும் சக்தி தஞ்சை மண்ணுக்கு உண்டு. தஞ்சையிலும், தஞ்சையை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஏராளமான பிரசித்திப்பெற்ற கோவில்கள் உள்ளன.

    தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் உலகமே வியக்கும் பெரியகோவிலை கட்டினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில் கட்டிட கலையிலும், கலை நயத்திலும் சிறந்து விளங்குகிறது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என இக்கோவில் அழைக்கப்படுகிறது. அதேபோல் தஞ்சை மண்ணில் உள்ள சக்தி தலங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை ஆகும்.

    தஞ்சை கீழவாசல் ஒட்டக்கார தெருவில் அமைந்து உள்ளது உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில். தஞ்சை நாடார்கள் உறவின் முறை தர்மபரிபாலன சங்கத்திற்கு சொந்தமானது இக்கோவில்.

    இந்த கோவிலில் மிகுந்த சக்தி வாய்ந்தவளாகவும் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவளாகவும், நம்பிக்கையோடு வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பவளாகவும் அருள்பாலித்து வருகிறாள், உஜ்ஜையினி மாகாளியம்மன்.

    மூலவர் சன்னதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறாள். மூலவர் சன்னதியின் இரு புறமும் உற்சவர் அம்மன், ஏனாதிநாயனார், வராகி அம்மன், சிவதுர்க்கை அம்மன், சரஸ்வதி, லட்சுமி, கல்யாண கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யப்பன், நாகம்மாள், ஆஞ்சநேயர், குபேரன், காலபைரவர், செல்வகணபதி ஆகிய 14 சன்னதிகள் அமைந்து உள்ளன.

    பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைத்து வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வைக்கிறாள் உஜ்ஜையினி மாகாளி அம்மன். இந்த அம்மன் கோவிலின் மூலக்கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி பகுதியில் உள்ளது.

    பிரசித்திப்பெற்ற தஞ்சை கீழவாசல் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவிலில் தற்போது 3-வது குடமுழுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி யானை, குதிரை, கரகாட்டம், கோலாட்டம், மேள, தாளத்துடன் 2 ஆயிரம் பெண்கள் சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, வெள்ளை விநாயகர் கோவில் வழியாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

    குடமுழுக்கை முன்னிட்டு கோவிலில் 6 கால யாகசாலை பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. யாகசாலை பூஜை நேரங்களில் வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது.

    47 அடி உயர கோபுரம்

    மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்திற்கு பிறகு தஞ்சை மாநகரில் 47 அடி உயர கோபுரத்துடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் உஜ்ஜையினி மாகாளிஅம்மன், சான்றோர்(நாடார்) குல பேரரசன் விக்கிரமாதித்தனுக்கு அருள்புரிந்த வரலாறு வண்ணப்படங்களுடன் வசனத்துடன் எழுதப்பட்டுள்ளது.

    அரசன் விக்கிரமாதித்தனுக்கு அருள்புரிந்த அன்னை உஜ்ஜையினி மாகாளி அம்மன் :

    சான்றோர்(நாடார்) குல அரசன் விக்கிரமாதித்தனுக்கு அன்னை உஜ்ஜையினி மாகாளி அம்மன் அருள் புரிந்த வரலாற்றை இங்கே பார்ப்போம்!.

    மன்னன் விக்கிரமாதித்தனின் நல்லாட்சியில் குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்கு திருப்தியில்லை. கன்னிகாபுரம் என்கிற சிறிய ராஜ்ஜியத்துக்குள் கிணற்று தவளைபோல் வாழும் வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. தனது பிரம்மாண்டமான கனவுகளை சாத்தியப்படுத்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

    இதனையடுத்து தனது தம்பி பட்டியை அழைத்த விக்கிரமாதித்தன், பட்டி...'நமது தலைநகரம் இன்னும் விஸ்தாரமாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆறும், மலையும், வனமும் சூழ்ந்த வளமான பகுதியாக இருக்க வேண்டும். அப்படியொரு இடத்தை நீ போய் தேர்ந்தெடுத்து வா' என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

    அதன்படி பட்டி, நாலா திசைகளுக்கும் சென்றான். ஒரு நாள் விஷாலி மலையடிவாரத்தில் சிப்ரா நதியை ஒட்டி ஒரு பெரும் வனப்பகுதியை கண்டான். அந்த அடர்ந்த வனத்தில் பெரும் மலையடிவாரத்தின் கீழ் அம்மன் கோவில் அழகுற அமைந்திருந்தது. கருவறையில் பத்ரகாளியம்மன் கொலுவிருந்தார்.

    அங்குள்ள ஒரு ஆலமரத்தின் மீது உள்ள கிளைகளில் வட்ட வடிவமாக ஏழு உரிகள் கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தன. அந்த உரிகள் மிகச் சரியாக தாமரைக் குளத்துக்கு மேலாக தொங்கிக் கொண்டிருந்தன. அதன் நேர் கீழே தாமரைக்குளத்தின் நடுவில் மிகக் கூர்மையான வேல் ஒன்று நடப்பட்டிருந்தது. கோவில் கருவறைக்கு சென்ற பட்டி, அம்மனை வழிபட்டு கோவிலை சுற்றி வந்தான். அப்படி வந்தபோது ஒரு பெரிய பாறையொன்றில் வீரனோ, சூரனோ, புத்திமானோ. பலவானோ... யாராயிருந்தாலும், எந்த குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, எந்த தைரியசாலி இந்த தாமரை குளத்தில் குளித்து அம்மனை தொழுது, ஆலமரத்தின் மேலே இருக்கும் ஏழு உரிகளையும் ஒரே வீச்சில் துண்டித்து, அந்த உரிகள் கீழே விழும் முன்பாகவே குளத்தின் நடுவில் இருக்கும் கூரிய வேலின் மீது தனது உடலை பாய்ச்சுகிறானோ அத்தகைய அபூர்வனுக்கு தேவி காளியம்மனே காட்சியளிப்பார்.

    அப்படி தரிசனம் கண்டவன் பெரும் சக்கரவர்த்தியாக ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களையும் வென்று தேவியின் இந்தப் பூவுலகை அரசாளுவான். இது உறுதி என்று செதுக்கப்பட்டு இருந்தது. அதை படித்த பட்டி உடனடியாக கன்னிகாபுரம் திரும்பி விக்கிரமாதித்தனிடம் சகலத்தையும் தெரிவித்தான். கூடவே பத்ரகாளியம்மன் வீற்றிருக்கும் அந்தப் பிரதேசமே புதிய தலைநகரம் அமைக்க சிறந்த இடமென்றும் கூறினான். உடனே விக்கிரமாதித்தன் பட்டியுடன் அந்த இடத்துக்குப் புறப்பட்டு வந்தான்.

    தாமரை குளத்தில் மூழ்கி குளித்து காளியம்மனை மனதார தொழுதான். பின்னர் தனது வாளுடன் மரத்தின் மீது ஏறியவன் பாறையில் செதுக்கியிருந்தபடி செய்தான். அப்போது பத்ரகாளியம்மன் அங்கே தோன்றி விக்கிரமாதித்தனை தாங்கி பிடித்து காப்பாற்றினாள். தேவியின் தரிசனம் கண்ட பட்டியும், விக்கிரமாதித்தனும் பரவசம் அடைந்தனர். அவர்களது உன்னத பக்தியினால் மனம் மகிழ்ந்த காளியம்மன் அவர்களை வாழ்த்தி விக்கிரமா... உனது பணிவும், பக்தியும், வீரமும் என்னை மகிழ செய்து விட்டது. உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் என்றார்.

    தாயே! பராசக்தி! நீங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த திருக்கோவிலின் பிரதேசத்திலேயே எனது தலைநகரை அமைத்துக் கொண்டு ராஜ்ஜியம் ஆள ஆசைப்படுகிறேன். வரமளிக்க வேண்டும் தாயே! என்று வேண்டினான். அப்படியே ஆகட்டும் என்று வரமளித்த பத்ரகாளியம்மன், நீண்ட நெடிய காலம் தர்மபரிபாலனம் செய்வாயாக என்று வாழ்த்தி மறைந்தார். விக்கிரமாதித்தன் அந்த நகருக்கு உஜ்ஜையினி மாகாளிப்பட்டணம் என்று பெயர் சூட்டி, தனது குடிமக்களை அங்கே வரவழைத்து குடியமர்த்தி அங்கிருந்தே தனது ராஜ்ஜியத்தை ஆளத் தொடங்கினான்.

    இப்படி அளப்பரிய சக்தி தரும் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவிலின் அசல் வரலாறு புத்தகத்திற்கு பூஜை செய்து அதில் இருந்த அம்மன் உருவத்தை சிலையாக வடிவமைத்து தஞ்சையில் வைத்து வழிபடுகின்றனர்.

    ×