search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் செந்தில் பாலாஜி"

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதை காட்டுகிறது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் மாற்றமில்லை.

    கோவை:

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் கடந்த 23-ந்தேதி அதிகாலை நடந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தமிழக டி.ஜி.பி.யும் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் அந்த கார் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பான முழு விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேரிடம் அந்த கார் கைமாறி உள்ளது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கோவையில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை பாரதிய ஜனதா அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறது. அதன் தலைவர் உண்மைத் தன்மை தெரியாமல் பேசி வருகிறார்.

    காவல்துறை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் உண்மை தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார். எனவே அவருக்கு இந்த ஆதாரங்கள் எப்படி கிடைத்தது, எதன் அடிப்படையில் இவ்வாறு அவர் வெளியிட்டார் என்பது தொடர்பாக என்.ஐ.ஏ. முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெளி மாநிலம் கடந்து விசாரணை நடத்த உள்ளதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் பா.ஜ.க.வினர் கூறியதனால் தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார் என கூறி வருகின்றனர்.

    கோவையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 40 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அரசியலாக்க நினைக்கும் பாரதிய ஜனதா, முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது அவர்கள் வந்து மரியாதை செலுத்தினார்களா அல்லது அதுசம்பந்தமாக ஏதாவது பேசினார்களா?

    இந்த சம்பவத்தால் கோவை மக்கள் பாதிக்கப்படவில்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டும் பா.ஜ.க.வினர் முழு அடைப்பு அறிவித்துள்ளனர். இது தேவையற்றது. சட்டத்துக்கு புறம்பாக கடைகளை அடைக்க சொன்னாலும், மிரட்டினாலோ மக்களை துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது, மக்கள் யாரும் அச்சப்படவில்லை. தமிழகத்தில் ஏராளமான கட்சிகள் உள்ளன. விசாரணை நடக்கும் பட்சத்தில் மற்ற கட்சியினரும் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஆனால் பாஜகவினர் மட்டும்தான் இதனை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அனைத்து கட்சி கூட்டம் தேவையற்றது. கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த சம்பவத்தையும் தற்போது நடந்த நிகழ்வையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர், உண்மைக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற அச்சத்தை உருவாக்க வேண்டாம்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதை காட்டுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் மாற்றமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியில் தான், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
    • சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது.

    சென்னை:

    பாரதிய ஜனதா மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளிக்கு முந்தைய தினம் அக்டோபர் 23-ம் தேதி கார்வெடிப்பு சம்பவம் நடந்து நான்கு நாட்கள், கோவை பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர் செந்தில் பாலாஜி பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததும் கோவைக்கு பறந்து வந்திருக்கிறார்.

    முதலில் இதனை 'சிலிண்டர் வெடிப்பு' எனக் கூறி மறைக்கப் பார்த்தார்கள். ஆனால், பா.ஜ.க. இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு சென்று அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகே உண்மை வெளிவந்தது.

    ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 75 கிலோ வெடிப் பொருட்கள் உள்ளிட்ட தகவல்கள் மக்களின் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தன.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உண்மையை வெளிப்படுத்திய பிறகே, காவல் துறையும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறது. 'கோவையில் எந்த பதற்றமும் இல்லை. எல்லாம் இயல்பாகவே இருக்கிறது, பா.ஜ.க. தான் அரசியல் செய்து வருகிறது' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

    'கோவையில் 3,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர், புறநகர் பகுதிகளில் சுமார் 40 சோதனை சாவடிகள் அமைத்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் கடந்தும் விசாரிக்க வேண்டி இருப்பதால்தான் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு முதல்-அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அதே பேட்டியில் கூறி இருக்கிறார்.

    'கோவையில் எந்த பதற்றமும் இல்லை. இயல்பு நிலை தான் நீடிக்கிறது' என்றால் 3,000 போலீசார் ஏன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்? 40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஏன் கண்காணிக்க வேண்டும்? மாநிலம் கடந்தும் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?

    3,000 காவல் துறையினரை குவிக்க வேண்டிய அளவுக்கு, 40 சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டிய அளவுக்கு, மாநில காவல்துறையால் விசாரிக்க முடியாமல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமானதால்தான், அக்டோபர் 31-ந்தேதி திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த முழு அடைப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார் என்பது அவரது பேட்டியிலிருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது. முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் மிரட்டி இருப்பதாகவும் தகவல் வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

    மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம். அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பா.ஜ.க. ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    அமைச்சர் இப்படி, மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளை இரு பக்கமும் அமர வைத்துக் கொண்டு, பதற்றத்துடன் பேட்டி அளிப்பதற்குப் பதிலாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். கோவையில் ஏன் கார் வெடித்து சிதறியது? அதில் உயிரிழந்தவரின் வீட்டில் எதற்காக 75 கிலோ வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள்?

    இதுபோன்ற நிலை ஏன் தமிழகத்தில் ஏற்பட்டது? இதனை எப்படி தடுப்பது? என்பது பற்றியெல்லாம் அமைச்சர் சிந்திக்க வேண்டுமே தவிர, பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறதே என்று கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க. தான். இதுவரை 200 நிர்வாகிகளை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் இழந்திருக்கின்றன. 1998-ல் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானியை கொல்வதற்காகத்தான், கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. அப்போதும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான் இருந்தது.

    இப்போதும் தி.மு.க. ஆட்சியில் தான், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கோரிக்கை. அதனை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கட்சி தலைமைக்கு தெரியாமல் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்?
    • பா.ஜ.க.வினர் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை முடித்து வரட்டும் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

    கோவை:

    கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்புப் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

    ராமநாதபுரம் 80 அடி சாலையில் சாலை சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தபின், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 44 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகள் முடிவடைந்துள்ளது.

    26 கோடி ரூபாய் மதிப்பில் 6 இடங்களில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. 140 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 210 கோடி மதிப்பிலான நிதியில் 117 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் விடுபட்ட சாலைகள் புதுப்பிக்கப்படும்.

    பல ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் சாலைகள் போடவில்லை. அதனால் சாலைகள் சேதமடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் சாலைப் பணிகளை செய்யக்கூடாது என்றில்லை. எல்லா நாளும் மழை பெய்வதில்லை. நிதி வந்து டெண்டர் முடிந்த பின்னர்தான் பணிகளைச் செய்ய முடியும். மழை பெய்யும்போது சாலை அமைக்கும் பணிகள் நடக்காது.

    கட்சி தலைமைக்கு தெரியாமல் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்? கட்சியை சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்.

    கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்லமுடியும்? கட்சித் தலைவர் என்ன செய்யவேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்யவேண்டும் என சொல்லியிருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன்.

    ஆளுநர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல. ஆளுநருக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளரை அழைத்துப் பேசி, அவரே என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்திருக்கலாம். 4 நாட்களுக்கு பிறகு அரசியல் பேச வேண்டும் என ஆளுநர் பேசியுள்ளார். கோவை காவல்துறை இவ்வழக்கை மிகத் திறமையாக கையாண்டுள்ளது.

    மாதக்கணக்கில் டெல்லியில் இருக்கும் வானதி சீனிவாசன் எத்தனை நாட்கள் தொகுதியில் இருக்கிறார்? அவரது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கே வானதி வரவில்லை. பா.ஜ.க.வினர் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை முடித்து வரட்டும்.

    கார் வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எடுபடாது.

    வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக மக்கள் கருத்து கேட்டு மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.

    • சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
    • அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி கார் வெடித்து ஒருவர் பலியானார். இந்த கோவிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் அங்கு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்.

    இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் பா.ஜ.க. மாநில தலைவர் அரசியல் கோமாளி என விமர்சித்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருமுறை கூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது இல்லை போலிருக்கிறது.

    இந்த கோவிலில் மூலவர் சங்கமேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இவர்கள் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணிய சுவாமி சன்னதி அமைந்துள்ளது. இதை சோமாஸ்கந்தர் வடிவம் என்பவர்.

    சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    நாட்டில் வேறு எங்கும் இப்படி ஒரு தோற்றத்தை காண முடியாது. இந்த கோவில் முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் இப்போது தான் நடந்து முடிந்துள்ளது. முருகனுக்கு தைப்பூச தேரோட்டமும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

    இதை அறியாமல் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாடியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேசி இருக்கிறார்.

    மிகவும் சக்தி வாய்ந்த வரலாற்று பெருமைமிக்க இந்த திருக்கோவில் குறித்து எதுவும் தெரியாமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவரை சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் அமைச்சர் பேசியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும். அவரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு அ.தி.மு.கவினர் பதில் கூற வேண்டும்.
    • ஏதோ குறை சொல்ல வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை கூறக்கூடாது.

    கோவை:

    கோவையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (10-ந்தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    பின்னர் அவர் கார் மூலமாக ஈரோடு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 11-ந்தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு விமான நிலைய விரிவாக்க பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுத்தார். இதில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி 85 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் முழு பணிகளும் நிறைவு பெறும்.

    கோவை மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு அ.தி.மு.கவினர் பதில் கூற வேண்டும். ஏதோ குறை சொல்ல வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை கூறக்கூடாது.

    கோவை மாவட்டத்தில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைவில் முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். குறிப்பாக அவிநாசி ரோடு மேம்பால பணிகளுக்காக சில வழக்குகள் நிலுவையில் இருந்தது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி சுமூக நடவடிக்கை எடுத்ததன் பேரில் தற்போது பாலப்பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அனைத்து மேம்பால பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.
    • அவதூறு பேச்சு குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் தொடர்ந்து நிர்மல்குமார் அவதூறாக பேசிவருவதாக கூறினார்.

    சென்னை:

    தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    மேலும், தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில், தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், அவதூறு பேச்சு குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் தொடர்ந்து நிர்மல்குமார் அவதூறாக பேசிவருவதாக கூறினார்.

    இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதித்தார். மனு குறித்து நிர்மல் குமார் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    பண்டிகை தினங்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • ஆதார் எண் இணைப்பால் ஏற்கனவே உள்ள மின் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
    • வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் அவர்களுக்கு எந்தவிதமான அச்சமும், பயமும் தேவையில்லை.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் கூடுதலாக 4 வணிக வளாகங்களிலும் இந்த சிறப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் பெரும்பான்மையாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

    சென்னையை பொறுத்தவரை இதற்காக 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து கொண்டிருக்கிறது. தலைமை செயலகத்திலும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு மின்வாரியம் தயாராக இருக்கிறது. இதுவரை 2.66 கோடி மின் இணைப்புகளில் 1.03 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

    வருகிற 31-ந்தேதி வரை எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்று பார்க்கப்படும். அதன்பிறகு முதல்-அமைச்சரின் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று அவரது ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.

    தமிழகம் முழுவதும் ஏற்கனவே பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் முகாம்கள் அமைக்கப்படும். இது தொடர்பாக அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் முடிவு எடுத்து அனுமதி வழங்குவார்கள்.

    31-ந்தேதிக்குள் இணைக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பதற்காக என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை உருவாக்க வேண்டாம். எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாக, மிக நேர்த்தியாக விரைவாக பணிகள் நடைபெறுகிறது.

    25-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் அன்று ஒருநாள் மட்டும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இருக்காது. மீதி இருக்கும் விடுமுறை நாட்களிலும் இந்த பணிகள் தொடரும்.

    தமிழகத்தில் நகர் பகுதிகளில் ஒரு கோட்டத்துக்கு 18200 மின் இணைப்புகள் இருக்க வேண்டும். கிராம பகுதிகளில் 140 மின்மாற்றிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பெரும்பாலான நகர்ப்புற கோட்டங்களில் 16 ஆயிரம் மின் இணைப்புகளும், கிராமப்புற கோட்டங்களில் 130 மின் மாற்றிகளும் உள்ளன.

    தொழிலாளர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில கோட்டங்களில் அதிகமாக இணைப்புகள் உள்ளன. எனவே அங்கு தொழிலாளர்களிடம் கருத்து கேட்டு அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு ஏற்ப புதிய கோட்டங்கள் தொடங்கப்படும்.

    மின் வாரியத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் தொழிற் சங்கத்தை கேட்டுத்தான் செயல்பட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அவர்களின் கோரிக்கை சரியானதா என்று பார்க்கப்படும். பேச்சுவார்த்தை நடக்கும் போதே மின் ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல.

    மின் வாரியத்தில் இருக்கும் கடனுக்கு வட்டி கட்டுவது என்பது குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் எந்தெந்த செலவினங்கள் கூடுதலாக இருந்தது. எதையெல்லாம் சீரமைக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு தான் மின் வாரியம் இந்த மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில்தான் ஆதார் எண் இணைக்கக் கூடிய பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    ஆதார் எண் இணைப்பால் ஏற்கனவே உள்ள மின் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் அவர்களுக்கு எந்தவிதமான அச்சமும், பயமும் தேவையில்லை.

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மின்துறை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது.
    • நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மின்வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒவ்வொரு மின் இணைப்புதாரரும் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

    இதனால் ஒவ்வொரு பயனீட்டாளரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல் போனில் 'வெப்சைட்டுக்குள்' சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள்.

    மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.

    வீடு வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் ஒரே வீட்டில் 2 மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்க முதலில் தயக்கம் காட்டி வந்தனர்.

    ஆனால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தி இருந்தார்.

    அதன்பிறகு தான் நிறைய பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஆர்வம் காட்டினார்கள்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    2811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 25 லட்சம் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் 70 லட்சம் இணைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிச.31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்னும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.

    எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தற்போது பொதுமக்கள் ஆர்வமாக ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    இன்னும் 2 நாள் கழித்து எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதை ஆய்வு செய்து கணக்கிட உள்ளோம். அதன் பிறகு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கலந்து பேசி கால நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

    • நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
    • 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.

    கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளரும் சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் என் (பகுதி செயலாளர், 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன்) தலைமையில் வடக்கு பகுதி செயலாளர், 129-வது வார்டு கவுன்சிலர் மு.ராசா முன்னிலையில் நடந்த பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    இந்நிகழ்வில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., சகோதரர் ஏ.எம்.வி..பிரபாகர் ராஜா, கணக்கு நிலைகுழு தலைவர் அண்ணன் க.தனசேகரன், மாநில வர்த்தகரணி செயலாளர் அண்ணன் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பங்கேற்ற நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணன் பிஎஸ்.முருகேசன், அண்ணன் ST.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், பகுதி நிர்வாகிகள் எஸ்.உமாபதி, அஜந்தாரவி, பெ.தியாகு, கனிமொழிதனசேகரன், அ.பாபு, ரஞ்சித்குமார், ஆர்.சசிகுமார், வட்ட செயலாளர்கள் சோ.செந்தில்குமார், மு.அன்பழகன், பூக்கடை ஆர்.பழனிச்சாமி, பிகே.குமார், சதீஷ்கண்ணன் வடக்கு வட்ட செயலாளர்கள் மு.கோவிந்தராஜ், மைக்கேல், விஏ.ராஜா, பழக்கடை பாஸ்கர், தஞ்சை பாபு, ஆர்.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • சட்டசபை உறுப்பினர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி ரோட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக எதிர் அணியில் இருப்பவர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருக்கிறார்கள். சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த தேர்தல் என்பது நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    கிருஷ்ணம்பாளையம், வைராபாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    * மாதாந்திர மின்கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வரும்.

    * மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

    * ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×