என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupavai"

    • குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார்.
    • சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். உடனே அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று வேகமாக தேடினார்.

    அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக்கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கிய அவர், தெய்வீக முகக்களை கொண்ட அந்த குழந்தையை தன் நெஞ்சோடு அனைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.

    இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித்ததாக கருதிய பெரியாழ்வார், அந்த குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார். பிறகு அந்த குழந்தையை தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை வேறு யாருமல்ல; சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம்.

    சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.

    பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்க தொடுத்து வைத்திருக்கும் மாலையை, தந்தைக்கு தெரியாமல் தானே சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். அருகே உள்ள கிணற்றை கண்ணாடியாக நினைத்து அதில் தன் அழகை பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையை கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள். அந்த மாலையை தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் பெரியாழ்வார்.

    பெரியாழ்வார் அதிர்ச்சி

    ஒரு நாள் வழக்கம் போல் பெருமாளுக்கு உரிய மாலையை அணிந்து அழகு பார்த்துவிட்டு கழற்றி வைக்கும்போது அதில் ஆண்டாளின் தலைமுடி சிக்கி கொண்டது. ஆண்டாள் இதைக் கவனிக்கவில்லை. ஆனால், பெரியாழ்வார் கவனித்துவிட்டார்.

    உடனே, அந்த மாலையை பெருமாளுக்கு சாற்றாமல் வேறு ஒரு மாலையை அணிவித்தார். ஆனால் அன்றிரவே பெருமாள் அவரது கனவில் தோன்றி, முடி இருந்த மாலை உனது மகள் ஆண்டாள் சூடிய மாலை தான். அவள் சூடி களைந்த மாலையை அணிவதே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு சாற்ற வேண்டும் என்று அருளினார்.

    இதனாலேயே ஆண்டாளுக்கு சூடி கொடுத்த சுடர்கொடியாள் என சிறப்பு பெயர் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு சாற்றப்பட்டு வருகிறது.

    ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்றுபொருள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஆடிப்பூர நாயகி என பல சிறப்பு பெயர்களும் இவளுக்கு உண்டு.

    திருமண வயதை அடைந்த ஆண்டாள் கண்ணனை அனுதினமும் நினைத்து, தனக்கு ஏற்ற மணவாளன் அவன் தான் என உறுதிகொண்டாள். கண்ணனை நினைத்து மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி விரதம் இருந்து வணங்கி வந்தாள். அதையறிந்த பெரியாழ்வார், மகளின் அந்த விருப்பத்தை ஏற்றபோதிலும், 108 எம்பெருமான்களில் யாரை திருமணம் செய்ய விரும்புகிறாய்? என்று கேட்டார். அப்போது ஆண்டாளிடம் ஒவ்வொரு பெருமாளின் பெருமைகளையும் எடுத்து கூறினார். கடைசியில் ஸ்ரீரங்கநாதரின் சிறப்புகள் அவளுக்கு பிடித்து இருப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினாள் ஆண்டாள்.

    ஆண்டாள் விருப்பப்படி அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவளை ஸ்ரீரங்கத்துக்கு பல்லக்கில் அழைத்து சென்றார் பெரியாழ்வார். தென் காவிரிக்கு அருகில் சென்ற போது ஆண்டாள் தன்னை ஏற்க இருக்கும் ரங்கநாதருக்கு எதிரே பல்லக்கில் சென்று இறங்கினால் கவுரவமாக இருக்காது என கருதினாள். அதனால் அந்த இடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும் என்று விரும்பினாள். அவளது விருப்பத்தை அறிந்த பெருமாளும் அவள் நடந்தால் பாதம் வருந்தும் என எண்ணி யாரும் அறியாதவாறு அவளை அங்கிருந்து ஆட்கொண்டார்.

    பல்லக்கில் இருந்து ஆண்டாள் திடீரென்று மாயமாய் போனதை கண்ட பெரியாழ்வார் திகைப்படைந்தார். பின்னர் தன் மகளை பெருமாள் அழைத்து கொண்டதை அறிந்த அவர் முறைப்படி தன் ஊருக்கு வந்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். பெருமாளும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

    அதன்படி பங்குனி உத்திரம் அன்று ஆண்டாளை ரங்கமன்னராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு பங்குனி உத்திரம் அன்று ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
    • விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டி கையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும். அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    • மார்கழி மாதம் `தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
    • தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம், தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது.

    மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி மாதம் `தனுர் மாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார். சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.

    மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான், வேறெந்த நிகழ்வுகளையும் நடத்தாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன்படியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

    மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

    மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.

    மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது.

    மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.

    மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

    திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான். இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.

    மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது. அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிப்பது இறைவனின் அருளைத் தரும்.

    • பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.
    • இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது.

    திருப்பாவை

    பாடல்

    வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்

    செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

    பையத் துயின்ற பரமன் அடிபாடி,

    நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி

    மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;

    செய்யா தனசெய்யோம்;

    தீக்குறளைச் சென்றோதோம்;

    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

    உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    இந்த பூமியில் பிறந்து வாழ்பவர்களே! மார்கழி மாத பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.

    திருப்பாற்கடலில் பாம்பணையில் துயில்கின்ற பரந்தாமனின் திருவடியை அன்புடன் பாட வேண்டும். நெய், பால் ஆகியவற்றை உண்ணக்கூடாது. அதிகாலையில் எழுந்து நீராடி, கண்ணுக்கு மை தீட்டாமல், கூந்தலில் பூ சூடிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பிற ரைப்பற்றி கோள் சொல்லக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யக்கூடாது. செய்யத்தகாத காரியங்களையும் செய்யக்கூடாது.

    யோகிகளுக்கும், தவசிகளுக்கும் நாமாக சென்று தர்மம் செய்ய வேண்டும். பிறருக்கு கொடுக்கும் போது செருக்கு இல்லாமலும், வெறுப்பு இல்லாமலும், பரமன் அடிபணிந்து செய்ய வேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்

    பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே

    நேசமும் வைத்தனையோ நேரிழையாய்

    நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

    ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

    கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

    தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

    ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது, யாவும் கடந்து நிற்கின்ற ஒளிவடி வான இறைவன் மீது பாசம் வைத்திருப்பதாகச் சொல்வாய். அதே அன்பை இந்த மலர் படுக்கையின் மீது எப்போது வைத்தாய். பெண்களே!

    நீங்கள் கேலியாக பேசி விளையாடுவதற்கு இது ஏற்ற இடம் அல்ல. தேவர்கள் சிவபெருமானை வாழ்த்துவதும், வணங்குவதுமாக உள்ளனர். இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது. ஒளிமயமான ஈசன் தனது திருவடிகளை இம்மண்ணில் படும்படி அருள்புரிய வந்துள்ளார். சிவலோகத்தில் வீற்றிருக்கும் அவர், தில்லை சிதம்பரத்தில் நம்மைக் காக்க எழுந்தருளியுள்ளார். நாம் சென்று வழிபடுவோம்.

    • தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால்.
    • என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன்

    திருப்பாவை

    பாடல்

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

    நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து

    ஓங்குபெருஞ்செந்நெலோடு கயலுகள

    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

    வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    வாமன அவதாரத்தில், மாவலி சக்கர வர்த்தியிடம் மூன்றடி மண்கேட்டு, வானளாவ உயர்ந்து தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால். மேன்மைமிக்க அவருடைய பெயரைப் பாடி நீராடினால், நாடு முழுவதும் மாதம் மூன்று முறை மழை பெய்யும்.

    நீர்வளம் பெருகி நெற்பயிர்கள் செழுமையாக உயர்ந்து வளரும். நெற்பயிர்களின் நடுவே கயல்மீன்கள் துள்ளும்.

    அழகிய குவளை மலரில் புள்ளிகளைக் கொண்ட வண்டுகள் தேன் குடித்து மெய் மறந்து உறங்கும். தொழுவத்தில் புகுந்து பால் கறப்போர் பருத்த மடிகளை பற்றிக் கறக்க, வள்ளல் குணம்மிக்க பசுக்கள் குடம் நிறைய பாலைச் சுரந்து குடங்களை நிரப்பும். இப்படிப்பட்ட நீங்காத செல்வத்தை நாம் இந்த பாவை நோன்பால் அடைவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

    அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்

    தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

    பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்

    புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ

    எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

    சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

    இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    முத்தைப்போன்று வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் எல்லோருக்கும் முன்பாகவே எழுந்திருந்து, இறைவனை 'என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன், இன்பமே வடிவானவன்' என்று இனிக்க இனிக்க பேசுவாய். அப்படிப்பட்ட நீ, நாங்கள் இத்தனைமுறை அழைத்தும் உறங்கிக் கொண்டிருக்கிறாய். வந்து கதவை திறந்து விடு!

    நீங்கள் எல்லாம் இறைவனுடைய பழைய அடியார்கள். இறைவன் அருகில் இருப்பவர்கள். அதிக பற்றுடையவர்கள். அவன் பால் உரிமை உடைய நீங்கள் என்னுடைய தவறை பெரிதுபடுத்தாமல் மன்னித்து ஏற்றால் இழுக்கு ஆகுமா? நீ இறைவனுடன் பற்றும், அன்பும் கொண்டவள் என்று எல்லோரும் அறிவோம்.

    அழகான இதயத்தை உடையவர்கள் சிவபெருமானை நினைத்து பாடாமல் இருக்க மாட்டார்கள்!. உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இதுவும் தேவைதான்.

    • அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே!
    • ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே!

    திருப்பாவை

    பாடல்

    ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

    ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

    ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்

    பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்

    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

    தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    கடல் போன்ற நிலையில் அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே! மழைக்கு அதிபதியாகிய மன்னனே! நீ மழையை பெய்விக்காமல் ஒளிந்து கொள்ளாதே! நீ கடலில் புகுந்து, நீரை முகர்ந்து கொண்டு வானத்தை அடைய வேண்டும். இந்த உலகின் மூல முதல்வனாகிய திருமாலின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறவேண்டும். பெருமையும், எழிலும் பொருந்திய நாராயணனின் கையில் உள்ள சக்கரத்தைப் போல் மின்ன வேண்டும். அவனது மற்றொரு கையில் உள்ள வலம்புரி சங்கு ஒலிப்பதை போல. இடி இடிக்க வேண்டும். பெருமாளின் சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புபோல உலக மக்கள் யாவரும் வாழும் படியாகவும் நாங்கள் மகிழ்ந்து நீராடுவதற்கு தாமதம் செய்யாமல் மழையை பொழியச் செய்யவேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

    வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

    எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

    கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

    விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

    உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

    எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே! இன்னுமா உனக்கு பொழுது விடியவில்லை? கிளிபோல பேசும் நம் தோழியர் அனைவரும் வந்துவிட் டார்களா? என்று கேட்கிறாய். இறைவனைப் பாட வந்தவர்களை கணக்கிட்டு சொல்கிறோம். யார் வரவில்லை என்பதை எண்ணிப்பார்த்து சொல்கிறோம் அதற்கு நேரம் ஆகும். அதுவரைக்கும் நீ தூங்கிக்கொண்டு காலத்தை வீணாக்காதே. தேவருக்கு ஒப்பற்ற மருந்தாகவும், வேதங் களின் சிறந்த பொருளாகவும் கண்ணுக்கு இனிமையாகக் காட்சிதரும் சிவனை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கிறோம். ஆகை யால் நீயே வந்து எண்ணிக்கொள். எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் நீ போய் தூங்கு!

    • ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன்.
    • அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன்.

    திருப்பாவை

    பாடல்

    மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

    தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

    தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

    தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    மாயாஜாலம் செய்வதில் வல்லவன், வடமதுரையில் பிறந்தவன், தூய்மையான நீர் பெருக்கெடுத்து ஓடும் யமுனைக்கரையில் விளையாடி வாழ்பவன், ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன், தான் பிறந்த தாயின் வயிற்றுக்கு பெருமை சேர்த்தவன், அவனே தாமோதரன். அப்படிப்பட்ட கண்ணனை, தூய்மையான மனதோடு சென்று அவன் திருவடிகளில் மலர் தூவி வணங்க வேண்டும். வாயினால் அவன் புகழைப்பாடி, மனதினால் தியானித்து வழிபட்டால், நமது பிழைகள் யாவும் நீங்கும். முற்பிறவியில் நாம் செய்த பாவங்களும், தொடர்ந்து வருகின்ற பாவங்களும் நெருப்பினில் இட்ட தூசியைப்போல் மறைந்துவிடும். ஆகவே அவன் பெருமைகளைப் பாடுவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்

    போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

    பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

    ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

    கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்

    சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய்

    உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    திருமால், நான்முகன் ஆகியோரால் காணமுடியாத இறைவனின் திருப்பாதங்களை, நாம் காணமுடியும் என்று பொய்யாக பிறர் நம்பும் படியாக பாலும், தேனும் ஒழுக பேசிய வாயையுடைய பெண்ணே, கதவைத் திறப்பாயாக! பூமியில் உள்ளவர்களாலும், வானுலகில் உள்ள தேவர்களாலும், பிற உலகத்தில் உள்ளவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன். அவன் எளியவர்களான நம் மீது அன்பும், கருணையும் கொண்டு அருள்புரிகிறான். அவனது பெருங்குணத்தை போற்றுகிறோம். சிவனே... சிவனே.. என்று அவன் திருநாமத்தை உரக்கப்பாடுகிறோம். இதைக்கேட்டும் உணர்ச்சி இல்லாமல் தூங்குகிறாயே! நறுமணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை. நீ எப்போதுதான் இதை உணரப்போகிறாய்! எழுந்திரு.!!

    • வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா?
    • எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!

    திருப்பாவை

    பாடல்

    புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்

    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

    பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

    மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    பெண்ணே! பொழுது விடிந்தது. இதோ பறவைகள் ஒலி எழுப்புகின்றன. கருடனை வாகனமாக கொண்ட பெருமாள் கோவிலில் இருந்து ஒலிக்கின்ற வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா? தூக்கத்தில் இருந்து எழுந்திரு! பூதகி என்னும் ராட்சசியின் மார்பில் சுரந்த விஷப்பாலை குடித்து அவளை அழித்தவன், வண்டிச் சக்கரத்தின் வடிவில் வந்த சகடாசுரனை தன் கால்களால் உதைத்துக் கொன்றவன், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது துயில் கொண்டிருப்பவன். இப்படி பல சிறப்புகள் உடைய திருமாலை, முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து 'அரி அரி்' என்று போற்றி அழைக்கும் பேரொலி உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறதே! நோன்புக்கு செல்வோம் எழுந்து வா!

    திருவெம்பாவை

    பாடல்

    மானேநீ நென்னலை நாளைவந் துங்களை

    நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே

    போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

    வானே நிலவே பிறவே அறிவரியான்

    தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்

    வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

    ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்

    ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    மான் போன்ற சாயலை உடையவளே! நாளைக்கு நானே முதலில் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறினாயே! இப்போது நாங்கள் உன்னைத் தேடி வந்து எழுப்புகிறோம். நேற்று நீ சொன்ன சொல் எந்ததிசையில் சென்றுவிட்டது? நீ பதில் சொல்லமாட்டாய். இன்னும் பொழுது விடியவில்லையா? வானுலக தேவர்களும், மண்ணில் வாழும் மக்களும் மற்ற உலகில் உள்ளவர்களால் கூட அறிய முடியாத தன்மையை கொண்டவன் இறைவன். அப்படிப்பட்டவன் எங்கள் மீது வலிய வந்து கருணைகாட்டுகிறான். அவன் புகழை நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ உறங்குகிறாய்? பதில் எதுவும் சொல்லாமலும், இறைவனைப் பாடி உருகாமலும் இருக்கிறாயே! இது உனக்கு சரிதானா? உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!

    • எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம்.
    • சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம்.

    திருப்பாவை

    பாடல்

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

    வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

    கூவுவான் வந்து நின்றோம் கோதுகுலம் உடைய

    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

    மாவாய்! பிளந்தானை மல்லரை மாட்டிய

    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

    ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கிழக்கு வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்கு கிளம்பிவிட்டன. ஆயர்குல பெண்கள் பாவை நோன்பிற்காக நீராட புறப்பட்டு விட்டனர். உன்னையும் நீராட அழைத்துச் செல்ல வேண்டி, அவர்களைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ளோம். இப்போது உன்னை எழுப்பிக் கொண்டு இருக்கிறோம். எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம். குதிரை வடிவில் வந்த அசுரன் வாயைப் பிளந்து கொன்றவன், மல்யுத்தம் செய்ய வந்தவர்களை வென்றவன், தேவர்களுக்கு தலைவனான கிருஷ்ணனைப் பாடி வணங்கினால் நாம் விரும்பிய அனைத்தையும் கேட்டு அவன் நிறை வேற்றுவான். நாங்கள் சொல்வதை ஏற்று புறப்படு!

    திருவெம்பாவை

    பாடல்

    கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

    வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கோழிகள் கூவுகின்றன. மற்ற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. வீடுகளில் ஏழிசை கருவிகள் முழங்குகின்றன. எங்கும் வெண் சங்குகள் ஒலிக்கின்றன. ஒப்பற்ற பேரருளைக் கொண்ட சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம். இத்தனையும் உனக்கு கேட்கவில்லையா? இதற்குப் பிறகும் தெளியாத உன் உறக்கம் என்ன உறக்கமோ? வாய் திறந்து பேச மாட்டாயா? திருமால், தன் கண்ணை பறித்து சிவபெருமானுக்கு சாத்தி சக்கரத்தை பரிசாகப் பெற்றார். அதேபோன்று இறைவனிடம் அன்பு கொண்டு பெருவாழ்வு பெறுவோம். உலகம் எல்லாம் ஒடுங்கக்கூடிய பிரளய காலத்தில் இறுதியில் தான் ஒருவ னாக நின்று காத்தருளும் தலைவனாகிய சிவனைப் பாடுவோம்.

    • கண்ணனை வணங்கி, இப்பிறவியில் மகிழ்ச்சியாக வாழும் பெண்ணே!
    • அவன் உடம்பில் ஒரு பக்கத்தில் அன்னை பார்வதி உறைகிறாள்.

    திருப்பாவை

    பாடல்

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

    மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்

    நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்

    பண்டுஒருநாள்

    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்

    தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்

    தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்!

    அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    முற்பிறவியில் பாவை நோன்பு இருந்து கண்ணனை வணங்கி, இப்பிறவியில் மகிழ்ச்சியாக வாழும் பெண்ணே! உன்னை நாங்கள் பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. எழுந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை, பதிலாவது சொல்லக்கூடாதா?. மணம் மிக்க துளசி மாலையை தலையில் சூடியிருக்கும் நாராயணன், நாம் வேண்டிய வரங்களைத் தருவார். முன்னோர் காலத்தில் ராமனால் எமதர்மனின் வாயில் விழுந்த கும்பகர்ணன், உனக்கு தூக்கத்தைத் தந்தானா? சோம்பல் குணம் உடையவளே! எங்கள் குலத்திற்கு அருமையான ஆபரணம் போன்றவளே! உன் தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவை திறப்பாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

    ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்

    ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    சிவபெருமானின் திருவடிகள் ஏழு பாதாள உலகங்களையும் கடந்து, சொற்களால் விளக்க முடியாத சிறப்புடன் விளங்குகின்றன. மலர்கள் நிறைய சூடிய அவன் திருமுடி எல்லாப்பொருட்களும் சென்றுசேரும் முடிவாக இருக்கிறது. அவன் ஒரே திருமேனி உடையவன் அல்ல. அவன் உடம்பில் ஒரு பக்கத்தில் அன்னை பார்வதி உறைகிறாள். அவன் அர்த்தநாரீஸ்வரன். வேதங்களும், விண்ணுலகில் உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும் பாடி துதித்தாலும், அவனது பெருமை பேசமுடியாத அளவுக்கு விரிந்து செல்கிறது. அவன் திருதொண்டர் களின் உள்ளங்களில் குடியிருப்பவன். குற்றமில்லாத குலத்தில் பிறந்து சிவாலயத்தில் பணி செய்கின்ற பெண் பிள்ளைகளே! எப்போதும் அவர்களுடன் இருக்கும் நீங்களாவது அவனுடைய ஊர் எது? அவனுடைய பெயர் என்ன? அவனைப் பாடும் தன்மை எப்படி என்று கூறுவீர்களா? அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம்.

    • செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா!
    • சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே!

    திருப்பாவை

    பாடல்

    கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,

    செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

    குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

    புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

    சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ

    எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    இளம் கன்றுகளுடைய பசுக்களிடம் இருந்து பால் கறக்கும் ஆயர் குலத்தினர், வலிய வரும் பகைவர்களை எதிர்த்து அவர்கள் வீரத்தை அழியும்படி செய்வர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பொற்கொடியைப் போன்ற பெண்ணே! மயில் போன்றவளே! புற்றில் வாழும் நாகத்தின் படம் போன்ற பீடம் உடையவளே! செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா! நாங்கள் அனைவரும் உனது வீட்டு முற்றத்தில் நின்று கார்மேக வண்ணன் கண்ணனின் பெயர் சொல்லிப் பாடுகிறோம். ஆனால் நீ எழாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டே இருக்கிறாய். அதன் பொருள் என்ன? எழுந்து வா! இறைவன் புகழ் பாடுவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

    கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

    ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

    செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்

    மையார் தடங்கண் மடந்தை மணவாளா

    ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

    உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்

    உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    நெருப்பை போன்ற சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே! சிறிய இடுப்பையும், மை தீட்டப்பட்ட பெரிய கண்களையும் கொண்ட பராசக்தியின் கணவனே! எல்லா செல்வங்களையும் உடையவனே நீ எங்களை ஆட்கொள்வது உனக்கு ஒரு விளையாட்டு! உன் விளையாட்டினால் அடியார்கள் என்ன அருளைப் பெறுவார்களோ, அவற்றையெல்லாம் நாங்களும் பெற்றோம். வண்டுகள் நிறைந்துள்ள குளத்தில் அவை ஒலி எழுப்பி பறந்து செல்லும்படி நீரில்மூழ்கி எழுந்து உன்னை வாழ்த்திப்பாடினோம்! உன்னை நாடிவந்தோம்! இனியும் நாங்கள் வருந்தாமல் இருக்க எங்களை கைவிடாமல் காத்தருள வேண்டும்!

    • இலங்கை மன்னன் ராவணன் தலையை கிள்ளி எறிந்தவன்.
    • இறைவன் செந்தாமரை மலர் நிறம் உடையவன்.

    திருப்பாவை

    பாடல்

    புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

    வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

    புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

    பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவன், ராமனாக அவதாரம் எடுத்தபோது இலங்கை மன்னன் ராவணன் தலையைக்கிள்ளி எறிந்தவன். இப்படிப் பட்ட ஸ்ரீமன்நாராயணனின் புகழைப் பாடிக் கொண்டு, எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். வியாழன் என்னும் கோள் மறைந்துவிட்டது. வெள்ளி என்ற கோள் உதயமாகிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. பூப்போன்ற கண்களை கொண்டவளே! இந்த குளிர்ந்த நீரில் நீராடி பரந்தாமனை பாடாமல் படுத்தே கிடக்கலாமோ? இது நல்ல நாள்? கண்ணனிடம் வரம்பெறும் நாளில் தூக்கம் என்கிற திருட்டுத்தனத்தை விட்டுவிட்டு எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

    அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

    தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

    பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

    சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

    பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும் கருமையும் கலந்த கருங்குவளை மலர்கள் உள்ளன. செந்தாமரை மலர்களும் உள்ளன. நாம் வணங்கும் உமையவள் குவளை மலர் நிறமுடையவள். இறைவன் செந்தாமரை மலர் நிறம் உடையவன். குருகு எனப்படும் குறுக்கத்தி மாலை அம்பிகையை அலங்கரிக்கிறது. இந்த பொய்கை இறைவியும், இறைவனும் இணைந்தது போல் காணப்படுகிறது. பறவைகளினால் பலதரப்பட்ட ஓசைகள் உண்டாகின்றன. தங்கள் அழுக்கைப் போக்க அங்கு பலர் நீராட வருகிறார்கள். இப்படிப்பட்ட தாமரை மலர்கள் படர்ந்த பொய்கையில், கால் சிலம்புகள் ஒலிக்கவும். சங்குகள் ஒலிக்கவும், மார்பகங்கள் மகிழ்ச்சியில் பூரிக்கவும், நீர்த்துளிகள் சிதறவும் மூழ்கி நீராடுவோம்!

    ×