என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Minister"

    குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக குறுகிய கால ரக விதைகளும், ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டிற்கான குறுவை சாகுபடி தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தித் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் விவசாய வேளாண் பெருங்குடி மக்கள் நடப்பாண்டில் குறுவை சாகுபடி மேற்கொள்ள தயாரான நிலையில் நாமெல்லாம் எதிர்பாராத வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரக்கூடிய நிலையில் மேட்டூர் அணை நிரம்பி வருவதால் முதலமைச்சர் குறுவை விவசாய பணிகளுக்காக மே மாதம் 24 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

    அந்த அறிவிப்பை தொடர்ந்து வேளாண் பெருங்குடி மக்கள் அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி குறுவை விவசாயத்தில் நெல் மற்றும் பிற பயிர்களை பயிரிட ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

     46 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு 4.9 இலட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வரலாற்று சாதனை அடையப்பெற்றது. 

    அதைப்போலவே இந்த ஆண்டும் முதலமைச்சர்  மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்து அதிக அளவில் பயிர் சாகுபடி செய்திட வேளாண் பெருங்குடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் அறிவுரைப்படி குறுவை சாகுபடிக்கான ஆயத்தநிலை தொடர்பாக துறை அலுவலர்களுடலான சிறப்பு ஆய்வு கூட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

    இதில் பேசிய அமைச்சர், டெல்டா மாவட்டங்களில் நெல் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நல் முளைப்புத் திறன் உள்ள நெல் விதைகளை இருப்பு வைக்க வேண்டும் என்றும், விதை ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படும் வாய்க்கால் பணிகளை துரிதப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதை உறுதிபடுத்திட வேண்டும். 

    குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இயந்திரங்களான டிராக்டர், பவர் டில்லர், நிலச்சமன்படுத்தும் கருவி மற்றும் நடவு இயந்திரங்களைவிவசாயிகள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைத்திருந்து தட்டுப்பாடின்றி வாடகைக்கு அளிப்பதுடன் பிற மாவட்டங்களிலிருந்தும் வரைவழைத்து வழங்கிட வேண்டும்.

    வட்டார அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து மண்ணாய்வு அடிப்படையில் உரமிடுதலை ஊக்குவிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்

    மேலும், உழவர் சந்தைகளை சுற்றி உள்ள கிராமங்களில் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மதிக்கப் படுகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    அனைத்து அலுவலர்களும் இணைந்து குறுவைப் பருவத்திற்கான விதைகள், உரங்கள் மற்றும் கால்வாய் தூர்வாருதல் போன்ற பணிகள் செவ்வனே செய்து உணவு தானிய உற்பத்திக்கு பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

    இந்த கூட்டத்தில்குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி போன்ற உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய அளவு இருப்பு வைத்து அவற்றின் விற்பனையையும் தொடர்ந்து
    கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும்.
    • அனைத்துப் பள்ளிகளிலும் உடற் கல்வி மேம்படுத்தப்படும்.

    பெரம்பலூரில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்டத்தில் தனி அலுவலகம் அமைத்து "ஆசிரியர் மனசு" என்ற பெட்டி வைக்கப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

    மேலும் ஆசிரியர் மனசு என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சிறப்பான தேர்வு முடிவுகளை கொடுத்து தமிழ்நாட்டிற்கு முன்னோடி மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்களை பார்த்து மற்ற மாவட்ட ஆசிரியர்களும் தங்களது மாவட்டம் முன்னுக்கு வருவதற்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் செய்தியாளரகளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்சோ சட்டத்தில் கைதான கரூர் மாவட்டம், பொம்மாநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மீது முதன்மை கல்வி அதிகாரியின் அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும் என்றும், ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவையில் உள்ள மானியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றனர். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை அவரது அமைச்சகத்தில் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அமைச்சர்கள் அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதிக்குழு 2017-18-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியத்தின் 2-வது தவணையாக ரூ.1,390 கோடி ஒதுக்குவதற்கு நீங்கள் தலையிட்டு, தொடர்ச்சியாக உதவி புரிந்ததற்காக நன்றி தெரிவிக்கிறோம்.

    2017-18-ம் ஆண்டு செயல்திறன் மானியமாக ரூ.560.15 கோடியும், நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான 2018-19-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ.3,216.05 கோடியும் வழங்கவேண்டியது நிலுவையில் உள்ளது.

    தமிழக மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்குவதற்கு நிதி இல்லாமல் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தவித்து வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியம் மற்றும் செயல்திறன் மானியம் ஆகியவற்றை மத்திய நிதி குழு ஒப்புதல் அளித்து விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் தமிழ்நாடு பொதிகை இல்லத்துக்கு அமைச்சர்கள் திரும்பினர். அப்போது அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    14-வது நிதிக்குழு மானியத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை உடனே பெற்றுத்தருமாறு ராணுவ மந்திரியிடம் கோரிக்கை வைத்தோம். கஜா புயலுக்கும் நிவாரண நிதியை உடனே அளிக்குமாறு கேட்டோம். நிதி கேட்க டெல்லிக்கு தொடர்ந்து வந்ததால்தான் 2 தவணைகள் வாங்க முடிந்தது.

    தேர்தல் கூட்டணி பற்றி முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முடிவு எடுப்பார்கள். கூட்டணி பற்றி நாங்கள் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து, மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக எம்.பி.க்கள் நடத்திய கூட்டத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். தமிழகத்துக்கு எதிரான அந்த கூட்டத்தில் ஏன் பங்கேற்றீர்கள்? என்று அவரிடம் கேட்டீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்டார்.

    அதற்கு வேலுமணி பதில் அளிக்கையில், கர்நாடகத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி. என்ற முறையில் அவர் அந்த கூட்டத்துக்கு போயிருப்பார். மேகதாது அணையால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள், பிரச்சனைகளை சொல்வதற்காகக்கூட போயிருக்கலாம். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அவரும் அப்படித்தான் இருப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

    நிதி தொடர்பான கோரிக்கை வைக்க நிதித்துறை மந்திரி இருக்கும்போது, ராணுவ மந்திரியை சந்திக்க காரணம் என்ன? என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் கூறுகையில், உங்களது கண்ணோட்டமே தவறு. நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். கஜா புயலால் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் அதற்கு தேவையான நிதியை பெற்றுத்தருமாறு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் அவரை சந்தித்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்றார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அமைச்சர் வேலுமணி இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். #TNMinisters #SPVelumani #thangamani
    தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நிதி மந்திரியை சந்தித்து தமிழக அமைச்சர்கள் பேச்சு நடத்தினர்.
    புதுடெல்லி:

    தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நிதி மந்திரியும் மின்சாரத்துறை மந்திரியுமான பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார்கள்.

    அப்போது தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோருதல் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து பேச்சு நடத்தினார்கள்.
    கைத்தறி தொழிலுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை வைத்தார்.
    சென்னை:

    மத்திய அரசின் ஜவுளித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கைத்தறி ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் சார்பில் தேசிய அளவில் 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கான 28-வது ‘கைத்தறி ஏற்றுமதியாளர்கள் விருது’ வழங்கும் விழா சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு கைத்தறி ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் தலைவர் கே.என்.பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சிறந்த முறையில் கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்த நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். அரியானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்கள் அதிக விருதை தட்டிச் சென்றன. தமிழகத்தில் கரூர், கோவையை சேர்ந்த நிறுவனங்கள் விருது பெற்றன.


    விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசும்போது, ‘ ஜவுளித்துறையில் கைத்தறி பிரிவுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில்(ஜி.எஸ்.டி.) இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விற்பனை ஊக்குவிப்பு திட்டத்தின் உச்சவரம்பை நீக்க வேண்டும்’ என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு கோரிக்கை விடுத்தார்.

    பின்னர் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி பேசும்போது, ‘இந்தியாவில் சாதாரண நெசவாளர்களின் மாத வருமானம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தான் இருக்கும். எனவே மாதம் ரூ.20 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் சரக்கு சேவை வரியை செலுத்த தேவை இல்லை என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெளிவாக கூறி உள்ளது. இதனால் சிறு, குறு, நெசவாளர்கள் ஜி.எஸ்.டி.யை பற்றி கவலைப்பட தேவை இல்லை. இந்த கருத்தை நாம் அனைவரிடமும் எடுத்து செல்ல வேண்டும்’ என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு பதில் அளித்தார்.

    நிகழ்ச்சி முடிந்தவுடன் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து, 6 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்.
    ×