என் மலர்
நீங்கள் தேடியது "US Presidential election 2024"
- டொனால்ட் டிரம்ப் சிறை செல்வார் என பலர் நம்புகின்றனர்
- குற்றவாளி என உறுதியானாலும் அதிபர் வேட்பாளராக ஆதரவளிப்பீர்களா என கேட்கப்பட்டது
அமெரிக்காவின் 45வது அதிபராக 2017லிருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவில் அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் சிறை தண்டனை பெறுவது உறுதி என நம்பப்படுகிறது.
ஆனால் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்திருக்கிறார்.
இந்நிலையில் 2024ல் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கிராண்ட் ஓல்ட் பார்ட்டி (GOP) என அழைக்கப்படும் குடியரசு கட்சியின் வேட்பாளராக யாரை அறிவிப்பது என அக்கட்சியில் தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.
குடியரசு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு விவாத நிகழ்ச்சி, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியால் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடத்தப்பட்டது.
இதில் அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் 8 வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.
8 பேரில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரை பிறர் ஆதரிக்க முழு சம்மதம் தெரிவித்து ஒரு ஒப்புதலை அவர்கள் கையெழுத்திட்டனர்.
அந்நிகழ்ச்சியில் 8 வேட்பாளர்களிடமும் அமெரிக்காவை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள், அவற்றை எதிர் கொள்ள அந்த வேட்பாளர்கள் வைத்திருக்கும் திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
ஒரு முக்கிய கேள்வியாக அவர்களிடம், "டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என உறுதியானாலும் அவரை 2024 தேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க ஆதரவளிப்பீர்களா?" என கேட்கப்பட்டது.
8 பேரில் அர்கன்ஸாஸ் மாநில முன்னாள் கவர்னர் அஸா ஹட்சின்ஸன் தவிர அனைத்து வேட்பாளர்களும் டிரம்பை ஆதரிக்க தயார் என கையை உயர்த்தினர்.
ஃப்ளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ், தொழிலதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசுவாமி, நிக்கி ஹேலே, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட டகோடா மாநில கவர்னர் டக்ளஸ் பர்கம், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டீ ஆகியோர் டிரம்பிற்கு ஆதரவாக தங்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.
கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவரையோ, அரசியலமைப்பு சட்டத்தால் அனுமதிக்கப்படாத ஒருவரையோ வேட்பாளராக நிறுத்துவது குடியரசு கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என்பதை தனது எதிர்ப்புக்கு காரணமாக ஹட்சின்ஸன் தெரிவித்தார்.
அமெரிக்க மக்களிடமும், தனது கட்சியினரிடமும் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் டொனால்ட் டிரம்ப் என இதன் மூலம் உறுதியாகிறது என வலைதளங்களில் இது குறித்து கருத்துக்கள் பதிவாகியுள்ளது.
- லட்சக்கணக்கான இந்தியர்கள் ஹெச்-1பி விசாவை நம்பியுள்ளனர்
- விவேக் ராமசாமியின் பெற்றோர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியாளராக முன்னிலையில் உள்ளார். அவர் மீதுள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி உறுதிப்படுத்தப்படும் என்பதால் அவர் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தீவிரமாக தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்ய லட்சக்கணக்கான இந்தியர்கள் அந்நாடு வழங்கும் ஹெச்-1பி விசா எனும் நடைமுறையை நம்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விசா நடைமுறை குறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது:
ஹெச்-1பி விசா அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தீங்கை விளைவிக்கிறது. லாட்டரி திட்டம் பணியாளருக்கு பயனை அளிக்காது. நிபந்தனைக்குட்பட்ட அடிமை முறையாக பணியாளருக்கு இருப்பதனால் பணியமர்த்தும் நிறுவனத்திற்குத்தான் இது பலனளிக்கிறது. பணியாளருடன் வரும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் நாட்டிற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான பயனும் இல்லை. நான் இந்த விசா முறையை நீக்கி விடுவேன்.
இவ்வாறு விவேக் கூறினார்.
2018 தொடங்கி 2023 வரை, விவேக் அவரது முன்னாள் நிறுவனமான ரொய்வான்ட் சர்வீசஸ் சார்பாக இந்தியாவிலிருந்து பணியாளர்களை 29 முறை அமெரிக்காவிற்கு அழைத்துவர விண்ணப்பித்து இத்திட்டத்தால் பயனடைந்தவர். மேலும், அவரது பெற்றோர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்.
இப்பின்னணியில், விவேக் ராமசாமியின் கருத்து, இந்திய எதிர்ப்பு பேச்சாக சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது.
- டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது
- 33-வயதில் தாமஸ் ஜெபர்ஸன் சுதந்திர பிரகடனத்தை எழுதினார்
அமெரிக்காவில், அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பதிவாகியுள்ள கிரிமினல் வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி நிர்ணயிக்கப்படும் எனும் நிலை உள்ளது.
இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான 38-வயதான விவேக் ராமசாமிக்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் தெரிவித்து வரும் ஆணித்தரமான, துணிச்சலான கருத்துக்களால் அவருக்கு எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தனது மீதான விமர்சனங்களை குறித்து விவேக் ராமசாமி கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எனது வளர்ச்சி பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. எனது குறைந்த வயது காரணமாக நான் இந்த பதவிக்கு தகுதியானவன் அல்ல என சிலர் நினைக்கின்றனர். சுதந்திர பிரகடனத்தை (Declaration of Independence) எழுதும் போது அப்போதைய அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், 33 வயதே ஆனவர் என்பதை நாம் அறிவோம். குறைந்த வயதுள்ளவர்கள் அவர்களது வாழ்நாளில் இனிமேல்தான் சிறப்பான நாட்களை எதிர்கொள்ள போகிறார்கள். எனவே, தனது வாழ்நாளின் சிறப்பான நாட்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள ஒருவர்தான் ஒரு நாட்டிற்கு கிடைக்க போகும் சிறப்பான எதிர்கால நாட்களையும் உருவாக்கி தர முடியும். சிறப்பான தகுதி, மேன்மையை தேடுதல், பொருளாதார வளர்ச்சி, கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படையான விவாதம் போன்ற அடிப்படை விஷயங்களைத்தான் அமெரிக்கர்கள் இன்னமும் மதிக்கிறார்கள். இதனை நிலைநிறுத்துவதே எனது லட்சியம். வெறும் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை.
இவ்வாறு விவேக் தெரிவித்தார்.
கணினி மென்பொருள் துறையிலும், பிற உயர் தொழில்நுட்ப துறையிலும் இந்திய இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் பெற போராடும் அமெரிக்காவின் ஹெச்-1பி விசா எனும் அந்நாட்டின் உள்நுழையும் நடைமுறையை நீக்கி விடுவேன் என சில தினங்களுக்கு முன் விவேக் அறிவித்தார். இதற்கு இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
- விவேக்கிற்கு அபூர்வா எனும் மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்
- ஊதியமாக ரூ.83 லட்சம் என்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பாக உள்ள போட்டியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி களத்தில் தீவிரமாக உள்ளார். அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுகிறது.
அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த தனது அதிரடி திட்டங்களால் போட்டியாளர்களிடையே வேகமாக முன்னேறி வரும் விவேக் ராமசாமிக்கு திருமணமாகி அபூர்வா எனும் மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் விவேக் தம்பதியினர் தங்கள் குழந்தைகளை கவனித்து கொள்ள ஒரு பணிப்பெண்ணை தேடி வருகிறார்கள்.
இது குறித்து அவர்கள் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆர்வமும் துடிப்பும் வழிமுறையாக உள்ள ஒரு குடும்பத்துடன் இணைந்து, அவர்களின் உற்சாகமான குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி பணியாற்ற இது ஒரு அரிய வாய்ப்பு. வார காலத்தில் 96 மணி நேரம் வரை வேலை இருக்கும். அதற்கு பிறகு ஒரு முழு வாரம் விடுமுறை. குழந்தைகளுக்கு தடையின்றி தினசரி நடவடிக்கைகள் அமைவதை உறுதி செய்ய இப்பணியில் சேர்பவர் எங்களின் தலைமை சமையற்காரர், பிற ஊழியர்கள், வீட்டின் பாதுகாவலர்கள் மற்றும் மெய்காப்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள், அவர்களின் பொம்மைகள், ஆடைகள் ஆகியவற்றை பராமரித்து குழந்தைகள் ஒரு கட்டுக்கோப்பான சூழலில் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவேக் ராமசாமியின் பெயரோ அல்லது அவரது குடும்பத்தினர் எவரின் பெயரோ வெளியிடாமல் ஒரு வேலை வாய்ப்பிற்கான வலைதளத்தில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டாலும், இது விவேக் ராமசாமியின் குடும்ப விளம்பரம் என தகவல்கள் உறுதி செய்கின்றன.
இந்த பணிக்கு ஊதியமாக இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் ($100,000) வழங்கப்படும் என விளம்பரத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பலர் - குறிப்பாக இந்திய தாய்மார்கள் - சுவாரசியமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- விவேக் ராமசாமிக்கு அமெரிக்கா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது
- எதிரிக்கு புரிந்த மொழியில் பேச வேண்டும் என்றார் விவேக்
அமெரிக்காவில் அடுத்த வருடம், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களத்தில் உள்ளார். டொனால்ட் டிரம்பின் மீது பல வழக்குகள் உள்ளதால், அவர் வேட்பாளராக நிற்பது உறுதியாகவில்லை. இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் களத்தில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, தீவிரமாக தனக்கென ஆதரவு தேடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையே பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க, அந்நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரில் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றிய விவேக் ராமசாமி, இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
தனது கையில் உள்ள அனைத்து அதிகாரங்களையும், பலத்தையும் பிரயோகித்து ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் முற்றிலுமாக நசுக்க வேண்டும். இஸ்ரேல் யூதர்களின் நாடு. புனித நோக்கங்களுக்காக, அந்த புனித தலத்தை புனித பரிசாக பெற்றுள்ளனர் யூதர்கள். பலம் எனும் ஒரு மொழிதான் எதிரிகளுக்கு புரியும் என்றால் தன் நாட்டை காக்க இஸ்ரேல் அதனை பிரயோகிக்க தயங்க கூடாது. இரு நாடு தத்துவம் சரிப்படாது என இஸ்ரேல் கருதினால் அதை செயல்படுத்தலாம். பாலஸ்தீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழையவும், வசிக்கவும் அரபு நாடுகள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீனர்களை பொறுப்பில் எடுத்து கொள்ள தயங்கி, தங்கள் நாடுகளுக்குள் சேர்க்கவும் மறுத்து, இஸ்ரேலை மட்டும் கண்டிக்கும் வழிமுறையை அரபு நாடுகள் கைவிட வேண்டும். எந்த அரசியல்வாதியும் இந்த உண்மையை பேச விரும்புவதில்லை; ஆனால், நான் பேசுவேன். ஹமாஸ் அமைப்பினரின் 100 முதன்மை தலைவர்களின் தலைக்கு விலை வைத்து மீண்டும் ஒரு "அக்டோபர் 7" சம்பவம் நடைபெறாதவாறு செய்து, தனது நாட்டினருக்கான எதிர்கால எல்லையை பலப்படுத்த இஸ்ரேலால் முடியும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு விவேக் பேசியுள்ளார்.
காசாவில் ஹமாஸ் அமைப்பினருடனான தங்களது போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இனி வான், தரை மற்றும் கடல் என அனைத்து வழியாகவும் தாக்குதலில் ஈடுபட போவதாகவும் இஸ்ரேல் ராணுவ படை தெரிவித்துள்ளது. இப்பின்னணியில் விவேக் ராமசாமியின் இந்த அதிரடி கருத்து அரசியல் விமர்சகர்களால் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த இடத்தில் விவேக் ராமசாமி உள்ளார்
- மலையேறுதலை போன்ற சவாலான போட்டி இது என பென்ஸ் கூறினார்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அமெரிக்காவில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் தற்போதைய அதிபராக உள்ளார். வரவிருக்கும் தேர்தலில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பல வழக்குகள் உள்ளதால், அவர் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதில் உறுதியற்ற தன்மை நீடிக்கிறது.
இதனால், அக்கட்சியில் அவருக்கு அடுத்து பல முன்னணி தலைவர்கள் ஆர்வமுடன் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, டொனால்ட் டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலை வகிக்கிறார்.
அந்நாட்டு மரபுப்படி அமெரிக்காவிற்கு உள்ள சிக்கல்கள், அந்நாடு சந்தித்து வரும் சவால்கள், அவற்றுக்கான தங்களது தீர்வுகள் ஆகியவற்றை பல கூட்டங்களில் வேட்பாளர் போட்டியில் இடம்பெறுபவர்கள் விளக்க வேண்டும். இதில் அவர்களுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பொறுத்து அவர்களுக்கு இறுதி வேட்பாளராக களம் இறங்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence), 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பி களத்தில் இருந்தார்.
இந்நிலையில், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த மைக் பென்ஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசிய போது, "விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளுக்கு பிறகு நான் போட்டியிலிருந்து விலகுகிறேன். மலையேறுதலை போன்ற கடினமான சவாலான போட்டி இது என்பது தெரிந்தே இருந்தது. விலகுவதால் எனக்கு எந்த வருத்தமுமில்லை" என அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த போது, அவரது நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட மைக் பென்ஸ், தற்போது போதுமான மக்கள் ஆதரவு இல்லாததாலும், நிதி நெருக்கடியினாலும் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அவரது ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
- மீண்டும் அதிபரானால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் ஆட்சி அமைப்பார்
- டிரம்பின் செயல்திட்ட வடிவம் அஜெண்டா-47 என அழைக்கப்படுகிறது
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார். மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவி வகிப்பார்.
அதிபர் தேர்தலில் வென்றால், நாட்டின் வளர்ச்சிக்காக டிரம்ப் எடுக்க போகும் முக்கிய நடவடிக்கைகளை 'அஜெண்டா 47' (Agenda 47) என அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். அதன்படி, தனது முந்தைய பதவி காலத்தில் தனது திட்டங்களுக்கு நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கமும் தடையாய் இருந்ததாக கருதும் டிரம்ப், இம்முறை அவ்வாறு நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தயார் செய்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நகரங்களில் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களை அமெரிக்க நகரங்களுக்கு வெளியே குடியமர்த்துவது, தேசபக்தி உள்ள ஆசிரியர்களையே கல்வி நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவது, அனைத்து இறக்குமதிகளுக்கும் ஒரு உலகளாவிய அடிப்படை கட்டணத்தை நிர்ணயிப்பது, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் மெக்சிகோ நாட்டினரை மீண்டும் அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்த தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை ரத்து செய்வது, ரஷியாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுக்கான பல கோடி மதிப்பிலான உதவிகளை நிறுத்துவது, எரிசக்திக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் அரசுக்கு எதிராக செயல்படும் அரசாங்க அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்வது என பல அதிரடி நடவடிக்கைகள் இந்த 'அஜெண்டா 47' மூலம் எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
அமெரிக்க வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் வகுக்கும் இந்த திட்டங்களுக்கு ஜனநாயக கட்சியிலும் ஒரு சிலர் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் மீது அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளில் வரும் தீர்ப்பை பொறுத்தே அவர் அதிபராவது முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிக்டாக் செயலியில் இணைந்து விட்டதாக விவேக் செப்டம்பரில் கூறியிருந்தார்
- அவரது மகளே இதை பயன்படுத்துகிறார் என விவேக் பதில் கூறினார்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த இரு வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் இறங்குவார்கள். தற்போது அங்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார்.
வரவிருக்கும் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் எவரை முன்னிறுத்துவது என அக்கட்சியினர் முடிவு செய்ய, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பங்கு பெறும் பல விவாத நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கம். அவற்றில் பங்கு பெறும் ஓவ்வொருவரும் அமெரிக்காவின் முன் உள்ள சவால்களையும், அதனை எதிர்கொள்ள அவர்கள் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும், தங்கள் கருத்துக்களை விரிவாக விளக்குவார்கள். இந்த விவாதத்திற்கு பிறகு கட்சியில் ஒரு இறுதி முடிவு எட்டப்படும். அதன் பின் ஒருமனதாக ஜனநாயக கட்சிக்கு எதிராக அந்த வேட்பாளர் களம் நிறுத்தப்படுவார்.
தற்போதைய நிலவரப்படி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுவரை குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் பங்கு பெறும் விவாத நிகழ்ச்சிகள் 2 நடந்து முடிந்து விட்டன. தற்போது மூன்றாவதாக அமெரிக்காவின் மியாமி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சந்திப்பு நேற்று நடந்தது.
இதில் விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி, ரான் டிசான்டிஸ், கிரிஸ் கிரிஸ்டீ, டிம் ஸ்காட் ஆகிய வேட்பாளர்கள் பங்கு பெற்றனர்.
விவேக் ராமசாமி, கடந்த செப்டம்பர் மாதம், சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) உருவாக்கிய பிரபல டிக்டாக் (TikTok) எனும் செயலியை பயன்படுத்த அதில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், இதன் மூலம் இள வயது வாக்காளர்களுக்கு தனது கருத்துக்கள் எளிதாக சென்றடையும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், சீன மென்பொருள் செயலிகளில் உள்ள பயனர் தகவல்களை சீனா களவாடி, தவறாக பயன்படுத்துவதாக ஒரு பிரச்சாரம் அமெரிக்காவில் பரவி வருகிறது. இச்செயலியை தடை செய்யவும் அங்கு பலர் அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், விவேக் இந்த செயலியை பயன்படுத்தி வருவது குறித்து நிக்கி ஹேலி விமர்சித்திருந்தார்.
நேற்றைய சந்திப்பில் இது குறித்த விவாதம் நடைபெற்றது.
அப்போது பதிலளித்த விவேக், "நான் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதை கடந்த விவாதத்தின் போது நிக்கி கேலி செய்தார். ஆனால், அவரது மகளே அந்த செயலியை நீண்ட காலமாக பயன்படுத்தி வருவது உண்மை. எனவே நிக்கி அவர்களே, முதலில் குடும்பத்தை சரி செய்ய பாருங்கள்" என கூறினார்.
அப்போது இடைமறித்த நிக்கி, "என் மகளை விவாதத்தில் இழுக்காதீர்கள். நீங்கள் ஒரு கழிவு" என கடுமையாக கூறினார்.
இதனை கேட்ட பார்வையாளர்கள் கை தட்டி இக்கருத்தை வரவேற்றனர்.
அதற்கு மீண்டும் பதிலளித்த விவேக், "அடுத்த தலைமுறையினர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதனையே நான் குறிப்பிட்டேன்" என பதிலளித்தார்.
மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் விவாதங்கள் மேடை நாகரிகத்திற்கு ஏற்ப கண்ணியமான முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்கும் சமீப காலமாக தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வைப்பதும், ஒருவரையொருவர் கடும் சொற்களால் தாக்கி கொள்வதும் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
- இரு கட்சி ஜனநாயக முறையை கடைபிடித்து வரும் நாடு, அமெரிக்கா
- 'இப்போது வேண்டாம் டிம்' என மக்கள் கூறுவதாக டிம் தெரிவித்தார்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே அதிபர்களாக மாறி மாறி பதவி வகிப்பது வழக்கம்.
தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
அந்நாட்டு வழக்கப்படி, அதிபர் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியின் சார்பில் களமிறங்க விரும்புபவர்கள், நாட்டின் பல இடங்களில் அக்கட்சியின் சார்பாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அப்போது அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதனை கையாள தங்கள் முன்வசம் உள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து அவர்கள் விளக்க வேண்டும். அது குறித்து வரும் கேள்விகளையும் திறமையாக கையாண்டு சிறப்பான முறையில் பதிலளிக்க வேண்டும். இதற்கு பிறகே யாரை கட்சிகள் அதிபராக களம் இறக்க போகின்றன என்பது தெரிய வரும்.
குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருந்தாலும், அவர் மீது அந்நாட்டின் பல மாநிலங்களில் கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுவதால், அந்த வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.
டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலையில் உள்ளார்.
இவர்களை தவிர, இப்போட்டியில் பங்கு பெற்று பிரச்சாரம் செய்து வந்தவர்களில் ஒருவர், அமெரிக்க செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott). தொடக்கத்தில் பல இடங்களில் அவருக்கு இருந்து வந்த ஆதரவு, நாட்கள் செல்ல செல்ல குறைய ஆரம்பித்தது.
டிம் தற்போது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மற்றொரு குடியரசு கட்சி போட்டியாளரான நிக்கி அதே மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"பூமியிலேயே அற்புதமான மனிதர்களான வாக்காளர்கள் என்னிடம் 'இப்போது வேண்டாம் டிம்' என கூறுவதாக தெரிகிறது" என தனது முடிவு குறித்து டிம் தெரிவித்தார்.
மே மாதம் முதல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த டிம், "டொனால்ட் டிரம்ப்பை விட தான் எந்த வகையில் சிறப்பானவர்" என்பதை விவாதங்களில் விளக்க தவறியதால், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், டிம் ஸ்காட்டை இதுவரை ஆதரித்து பிரச்சாரங்களுக்கு நிதியுதவி செய்து வந்த தொழில் நிறுவனங்கள் மற்றொரு போட்டியாளாரான நிக்கிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- வெற்றிகரமான கதாநாயகனாகவும், கலிபோர்னியா கவர்னராகவும் இருந்தார் ஆர்னால்ட்
- கென்னடி மற்றும் ரீகன் காலம் போன்று பிரசாரம் நடக்கவில்லை என்றார் ஆர்னால்ட்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், இருவரும் இப்போதே தங்களுக்கு ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா உட்பட உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட தொழில்முறை பாடிபில்டரும், பிரபல ஹாலிவுட் முன்னணி கதாநாயகனும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (76) அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்கர்களை குறித்து கவலைப்படுகிறேன். 2024 தேர்தலில் மீண்டும் ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் போட்டி என்பது ஏமாற்றமடைய செய்கிறது. இருவருக்கும் அதிக வயதாகி விட்டது என்பதனால் மட்டுமல்ல; அவர்கள் சிறப்பானவர்கள் என்று நான் கருதவில்லை.
வெள்ளை மாளிகையில் புதிய ரத்தம் வேண்டும். புதிய சிந்தனைகளை உடைய தலைவர்கள் வேண்டும். இரு கட்சிகளிலும் அப்படி ஒரு புதிய முகம் இல்லாதது கவலை அளிக்கிறது.
பைடன் பேட்டி அளித்தால் அனைத்து பத்திரிகையாளர்களும் அதை படம் பிடிக்கின்றனர். டிரம்ப் எது கூறினாலும் அதையும் படம் பிடிக்கின்றனர். தலைப்பு செய்திகள் முழுவதும் பைடன் அல்லது டிரம்ப் குறித்தே உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு புதிய முகம் எவ்வாறு உருவாக முடியும்?
நாட்டின் முன் உள்ள பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள மிகுந்த திறன் படைத்த ஒருவர் வேண்டும். ஜான் கென்னடி மற்றும் ரொனால்ட் ரீகன் காலகட்ட பிரசாரம் போன்று தற்போது நடைபெறுவதில்லை. இரு கட்சிகளிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒன்றிணைக்கும் புதிய முகம் வேண்டும்.
இவ்வாறு ஆர்னால்ட் தெரிவித்தார்.
வாக்காளர்களின் மனநிலை குறித்த ஆய்வுகளில் பல அமெரிக்கர்கள், பைடனின் மன ஆரோக்கியம் மற்றும் டிரம்ப் மீது உள்ள வழக்குகள் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். வேறு சிலர் மாறி மாறி வரும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இப்பின்னணியில், ஆர்னால்டின் கருத்தும் இதனையே பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- வாக்களிப்பவர்களுக்கு பொது அறிவு இருப்பதை சோதிக்க வேண்டும் என்கிறார் விவேக்
- வாக்களிக்கும் உரிமையை கல்வியறிவுடன் கலப்பதை விமர்சகர்கள் எதிர்க்கின்றனர்
அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் வரப்போகும் தீர்ப்பினை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் நிலை உள்ளது.
இதனால் குடியரசு கட்சி வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் அதிக ஆதரவு உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
பல்வேறு நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அமெரிக்காவை சூழ்ந்துள்ள சிக்கல்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் பேசி வரும் விவேக் ராமசாமி, முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறுகிறார்கள்.
ஆனால், விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாற்று திட்டத்தின்படி, 18 வயதை எட்டியவர்கள் தேர்தலில் வாக்களிக்க அடிப்படை பொது அறிவிற்கான ஒரு தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் அல்லது 6 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது முதல்நிலை அவசர சேவை பணியாளர்களாக சில காலங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.
தனது இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள விவேக், வாக்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு அடிப்படை பொது அறிவு அவசியம் என கூறுகிறார். தான் வென்றால் இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதல்களை கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விவேக்கின் இந்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது கருப்பினத்தவர்களுக்கான வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி என்றும் பல்வேறு பயனற்ற மற்றும் பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றிற்கு பதிலளிக்க முடியாததால், வாக்குரிமை இழக்கும் அபாயம் தோன்றும் என கருத்து தெரிவிக்கும் கருப்பின பிரதிநிதிகள், கல்வியையும் வாக்களிக்கும் உரிமையையும் ஒன்றுடன் ஒன்று கலக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதலை கொண்டு வர அமெரிக்க பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிட்ட வேண்டியது அவசியம் என்றும், 4ல் 3 மாநில சட்டசபைகளிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அதனால் இது நிறைவேறுவது கடினம் என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாறுதல்கள் அதிபர் தேர்தலில் அவருக்கும் அவரது குடியரசு கட்சிக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
- 52 வயதான நிக்கி ஹாலே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
- "அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" என்றார் நிக்கி
வரும் நவம்பர் இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களத்தில் தீவிரமாக போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

குடியரசு கட்சியின் சார்பில், டிரம்பை தவிர, இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் தென் கரோலினா மாநில கவர்னரும், ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்கா தூதருமான 52 வயதான நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 2016 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க வழிவகுத்த "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்றுங்கள்" (Make America Great Again) எனும் முழக்கத்தையே இவ்வருட தேர்தலுக்கும் முழக்கமாக கையில் எடுத்துள்ளார், டிரம்ப்.
தற்போதைய நிலவரப்படி, வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள தலைவராக டிரம்ப் பார்க்கப்படுகிறார்.
ஆனால், டிரம்புடன் போட்டியிட முன்வந்த பிற தலைவர்கள் பின்வாங்கி விட்ட நிலையிலும் நிக்கி ஹாலே தொடர்ந்து ஆதரவு தேடி பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரசாரத்தில் நிக்கி தெரிவித்ததாவது:
"அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" (Make America Normal Again).
80-வயதுடைய இருவர் பணியாற்றியதை விட நாம் சிறப்பாக பணியாற்ற முடியும்.
அவர்கள் இருவரின் பரஸ்பர தாக்குதல் மக்களை களைப்படைய செய்து விட்டது. இதில் குழப்பமும் சச்சரவும் மட்டுமே மிஞ்சுகிறது.
தங்களின் சின்னஞ்சிறு நோக்கங்களுக்காக சண்டையிடும் தலைவர்கள் மக்களுக்கு வேண்டாம். அமெரிக்க மக்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துபவர்களே அவர்களுக்கு அதிபர்களாக வேண்டும்.
நீங்கள் பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் ஒரு அதிபராக நான் நிச்சயம் பணியாற்றுவேன்.
இவ்வாறு நிக்கி கூறினார்.
இதற்கிடையே, "நிக்கி ஹாலே அதிபரானால் அமெரிக்காவை முடிவில்லா போர்களுக்கு தள்ளி விடுவார். ஏனெனில், நிக்கி போர்களையே விரும்புகிறார். தன்னை ஏன் மக்கள் ஏற்க வேண்டும் எனக் கூற அவரிடம் இதுவரை சரியான வாதங்கள் ஏதுமில்லை" என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
77 வயதான டொனால்ட் டிரம்ப் மற்றும் 81 வயதான ஜோ பைடன், இருவருமே முதுமை நிலையை அடைந்து விட்டதால், வேறு ஒரு இளம் தலைவர் அதிபராக வேண்டும் என பல வாக்காளர்கள் கருதுவதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.