என் மலர்
நீங்கள் தேடியது "weight loss"
- பலரின் பிரச்சனையாக இருப்பது அதிகமான உடல் எடை.
- மருத்துவர்கள் முடிவு செய்யும் நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை.
இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சனையாக இருப்பது அதிகமான உடல் எடை. என்னதான் முறையான டயட் பின்பற்றினாலும், உடற்பயிற்சி செய்தாலும், சாப்பிடாமலே கூட இருந்தாலும் உடல் எடை குறைவதில் முன்னேற்றமே இருக்காது. அதற்கு ஒவ்வொருவரின் உடலமைப்பை பொறுத்து பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், அவர்களுக்காகவே இன்னொரு வழியும் இருக்கிறது. அதுதான் பேரியாட்ரிக் சர்ஜரி. பேரியாட்ரிக் என்று சொல்லக் கூடிய அறுவை சிகிச்சை தெரபி இது. ஆனால், இதுவும் கூட அனைவருக்கும் செய்ய முடியாது. இந்த அறுவை சிகிச்சைக்கென்று ஒரு சில அளவுகோல்கள் உள்ளது. அதற்கு பொருந்தி, இவருக்கு இது உதவும் என்று மருத்துவர்கள் முடிவு செய்யும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
அப்படி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்றால் என்ன? யாருக்கெல்லாம் அதை செய்யலாம்? இந்த அறுவை சிகிச்சையில் என்னென்ன வகைகள் உள்ளது? அறுவை சிகிச்சைக்கு பிறகான குணமாகும் காலம், அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கல்கள், பக்கவிளைவுகள் என்ன என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
ஒவ்வொருவருக்கும் தங்கள் எடை குறித்து ஒரு கருத்து உண்டு. அதனால், சரியான எடையில் இருப்பவர்கள் கூட தங்களை அதிக எடை கொண்டவர்களாக நினைத்து கொண்டு அதை குறைக்க ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், நீங்கள் அதிக எடையா இல்லையா என்பதை உங்கள் பிஎம்ஐ அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.
பிஎம்ஐ என்பது உங்கள் உயரம் மற்றும் எடையின் அளவீட்டு விகித நிலை தான். பிஎம்ஐ அளவு 20 முதல் 25 வரை இருப்பது நார்மல். அதற்கு மேல் 26 முதல் 30 வரை செல்வது நார்மலை விட கூடுதல் எடை. இதற்கு மேல் இருப்பவர்கள் அனைவருமே கூடுதல் எடை உடையவர்கள்தான்.
குறிப்பாக பிஎம்ஐ 40-க்கு மேல் இருப்பவர்கள் அதிக எடை கொண்டவர்கள். இந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்கள் இவர்களே. இவர்கள் என்னதான் உடற்பயிற்சி டயட் என்று பின்பற்றியிருந்தாலும் இவர்களின் உடல் எடை குறைந்திருக்காது.
அதேபோல் பிஎம்ஐ 30 முதல் 40-க்குள் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் சில சிக்கல்கள் ஏற்படும். இவர்களுக்கு சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, முடக்கு வாதம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும்.
குறிப்பாக இந்த தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருப்பவர்கள் அடிவயிறு எடை அதிகமாக இருப்பதால் தூங்கும்போது மூச்சு விட சிரமப்படுதல், குறட்டை விடுதல், ஏதோ அடைப்பது போல் உணர்வு ஏற்பட்டு இரவில் விழித்தல் மற்றும் இரவில் தூங்கும்போதே இதயத்துடிப்பும் மூச்சும் நிற்பது போல தோன்றும்.
இந்த அனைத்து சிக்கல்களும் தனித்தனியாக கவனிக்க பட வேண்டிய பிரச்சனைகள். எனவே, உங்களுக்கு பிஎம்ஐ 40-க்கு மேல் இருந்தாலோ அல்லது 30 முதல் 35-க்குள் இருந்து இந்த சிக்கல்களும் இருந்தாலோ உங்கள் மருத்துவர் இந்த அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.
- அதிக உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.
- ஒருமுறை வயிற்றை வெட்டி எடுத்து விட்டால் மீண்டும் பொருத்தமுடியாது.
நாம் எடுத்துக்கொள்ளும் உணவு வாய் வழியாக தொண்டைக்குள் இறங்கி உணவுக்குழாய்க்குள் இறங்கும். அங்கு உணவுகள் உடைக்கப்பட்டு அதன் சத்துக்கள் குடல் வழியாக உறிஞ்சப்பட்டு எஞ்சியிருப்பவை மலக்கழிவாக வெளியேறும்.
எந்த ஒரு சர்ஜரியையும் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நமது உணவுகளின் அளவை குறைக்க வேண்டும். உணவு அளவுகளை குறைக்க வேண்டுமென்றால் வயிறு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்கு வயிற்றின் அளவை சுருக்க வேண்டும்.
அப்போதுதான் குறைந்த உணவு எடுத்துகொண்டாலே வயிறால் நிறைந்த உணர்வை பெற முடியும். எளிய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் கோட்பாடு. இந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் மூன்று வகைகளும் கூட உள்ளன. இந்த மூன்று பற்றியும் அதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வகைகள்
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையை பொறுத்தவரை முழுக்க முழுக்க அனஸ்தீஸியா கொடுக்கப்பட்டு மயக்க நிலையில்தான் செய்யப்படும். பெரும்பாலும் லேபராஸ்கோபி முறையில்தான் செய்யப்படுகிறது. காரணம், இதன் மூலம் குணமடையும் காலம் வேகமானதாக இருக்கும். முன்பே சொன்னது போல் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் மூன்று வகைகள் உள்ளன.
ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி
இரைப்பை என்றாலே வயிறு என்று அர்த்தம். எக்டோமி என்றால் ரிமூவ் செய்வது, ஸ்லீவ் என்றால் வெட்டி எடுத்தல் என்ற பொருள்படும். இந்த ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி நிலையில் வயிற்றில் 80 சதவீதம் பகுதியை வெட்டி எடுத்து விட்டு மீதி உள்ள 20 சதவீதம் பகுதியை தையல் போட்டு விடுவார்கள். இதன் அடிப்படையே பெரிதாக இருக்கும் வயிற்றை சிறிதாக மாற்றுதல். அப்படி உங்கள் வயிறு சிறிதாக மாறிவிட்டால் உங்கள் உணவு உட்கொள்ளும் அளவும் குறைந்துவிடும். உங்கள் வயிற்றுப்பகுதியில் சுரக்கும் கிரெலின் என்ற ஹார்மோனும் கூட குறைவாகவே சுரக்கும்.
ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி நன்மைகள்
* அதிக உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது
* மிக குறைந்த நாட்களே மருத்துவமனையில் இருக்க வேண்டிய தேவை வரும்
* மிக எளிய மற்றும் மற்ற வகைகளோடு ஒப்பிடும் போது இது ஒரு சிறிய அறுவை சிகிச்சையே..
ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி பக்கவிளைவுகள்
* ஒருமுறை வயிற்றை வெட்டி எடுத்து விட்டால் மீண்டும் பொருத்தமுடியாது.
* இந்த அறுவை சிகிச்சையில் வயிறு உறிஞ்சக்கூடிய நியூட்ரிஷன்ஸ், ஜூஸ்கள் அனைத்தும் உறிஞ்சப்படுவதற்குள் வெளியேறி விடும்.
* இதனால் சிலருக்கு நியூட்ரிஷியன் குறைபாடு ஏற்படலாம்.
* அமில எதிர்வினை ஏற்படும் வாய்ப்புண்டு.
- குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். அதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று நம்புகிறார்கள். அப்படி கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. உடற்பயிற்சி வழக்கத்தை முறையாக பின்பற்றி வருவதுடன் மேலும் சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
1. தண்ணீர்:
காலையில் எழும்போது பலருக்கும் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். பல் துலக்கியதும் தண்ணீர் பருகுவதன் மூலம் அதனை விரட்டியடிக்கலாம். ஒரு டம்ளர் சூடான நீருடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். சியா விதை அல்லது ஆளிவிதையை சூடான நீரில் கலந்தும் பருகலாம். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்யலாம். உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தலாம்.
2. உடற்பயிற்சி:
தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் ஏதாவதொரு யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். அது சுறுசுறுப்பாக உணர வைக்கும். அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு மன ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.
3. புரதம்-நார்ச்சத்து:
காலை உணவை ஒரு போதும் தவிர்க்கக்கூடாது. அது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாக அமைந்திருப்பது சிறப்பானது. நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை அவை தரும். மதிய உணவுக்கு இடையே தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையும் தடுக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
4. நீர்ச்சத்து:
எல்லா பருவ காலநிலையிலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறி எலக்ட்ரோலைட் சம நிலையின்மை மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அடிக்கடி பருக வேண்டும். அவை உடல் எடையை குறைப்பதற்கும் வித்திடும்.
5. நீச்சல்:
நீச்சல் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமையும். கோடையில் ஏற்படும் சோர்வை விரட்டி உற்சாகத்தையும் கொடுக்கும். நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது டோபமைன் வெளியீட்டை தூண்டும். தொப்பை கொழுப்பை எரிப்பதற்கு இது நல்ல பயிற்சியாகவும் அமையும்.
6. இரவு உணவு:
கோடை காலத்தில் இரவு உணவை குறைவாகவே சாப்பிட வேண்டும். அவை எளிதில் செரிமானமாகும் விதமாகவும் இருக்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
7. தூக்கம்:
முறையான தூக்கம் முக்கியம். அது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். போதுமான நேரம் தூங்காதது எடை அதிகரிப்பு மற்றும் பசிக்கு வழிவகுக்கும்.
- பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும்.
- முழு நேரமும் ஓய்வில் இருப்பதால் கூட எடை அதிகரிக்கலாம்.
பிரசவத்துக்கு பிறகு இளம் தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும். கொஞ்சம் கவனமெடுத்தால் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.
கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு போஷாக்கான உணவு தேவை என்பதால் எடுத்துகொள்ளும் அதிகப்படியான உணவுகள் கர்ப்பகாலத்தில் அதிக எடையை உண்டாக்குகிறது. ஆனால் பிரசவத்துக்கு பிறகும் எடை கூட வாய்ப்புண்டு என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அதற்கு காரணமாக உடல் சோர்வு, மனசோர்வு குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு போன்றவையே காரணமாக சொல்லப்படுகிறது. இவை தவிர பிரசவக்காலத்துக்கு பிறகு முழு நேரமும் ஓய்வில் இருப்பதாலும் கூட சமயத்தில் எடை அதிகரித்துவிடுகிறது.

உடற்பயிற்சி செய்யுங்கள்
பிரசவம் சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு உடற்பயிற்சி செய்யலாம். சுகப்பிரசம் ஆன பெண்கள் 7 நாட்களுக்கு பிறகு மிதமான உடற்பயிற்சி செய்யலாம்.
நடைபயிற்சி, வயிறு, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைப்பகுதியை இறுகச் செய்யும் பயிற்சிகள் செய்யலாம். அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை செய்து இரண்டு மாதங்களில் உடல்நிலையை பொறுத்து பயிற்சி செய்யலாம்.
படிப்படியாக சில மாதங்களுக்கு பிறகு ஏரோபிக் பயிற்சியான ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங் போன்றவற்றை செய்யலாம். இவை பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம், சிறுநீர் தானாக வெளியேறும் பிரச்சனை போன்றவற்றை உண்டாக்காது.
தாய்ப்பால் கொடுக்க தவிர்க்க வேண்டாம்
பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனில் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது நாள் ஒன்றுக்கு 2000 முதல் 2500 கலோரிகள் வரை உட்கொள்ள வேண்டும். அப்பொதுதான் தாய்ப்பால் குறைவில்லாமல் கிடைக்கும். அதே போன்று தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கலோரிகள் எரிக்க முடியும். அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் நிறைவாக தந்தாலே உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
உணவில் கவனம்
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அதிகமாக உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றில்லை. பிரசவம் முடிந்த கையோடு ஒரு டயட்டீஷியனை தொடர்பு கொண்டு ஆலோசித்து குழந்தைக்கு வேண்டிய சத்தான உணவு வகைகளை பட்டியலிடுங்கள். தாய்மார்கள் சத்தான உணவை எடுத்துகொள்வதன் மூலம் அந்த சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் செல்லும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், உலர் பருப்புகள், கீரைகள் நிச்சயம் ஆரோக்கியம் காக்கும். உடல் எடை குறைப்பிலும் உதவக்கூடும். ஏனெனில் உடல் எடையை குறைக்கும் போது உணவுகள் மீது அதிக கவனம் இருக்க வேண்டும்.
திரவ ஆகாரங்கள் அவசியம்
திரவ ஆகாரங்கள் உடலுக்கு நீர்ச்சத்து தரக்கூடியவை மட்டுமே அல்ல. இவை உடலுக்கு வேண்டிய சத்துகளையும் கொடுக்க கூடியவை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் உணவை தாய்மார்கள் எடுத்துகொள்ள வேண்டும். அதே நேரம் அந்த உணவுகள் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான சாய்ஸ் திரவ ஆகாரங்கள் தான்.
தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது கூட முதலில் ஒரு டம்ளர் நீர் குடித்தபிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சுரப்பு வேகம் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறையவும், கட்டுக்குள் வைக்கவும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் என பலவிதமான திரவ ஆகாரங்கள் உண்டு. இவை எல்லாமே பக்கவிளைவுகளையும் உண்டாக்காது என்பதால் இதை முயற்சி செய்யலாம்.
உதாரணத்துக்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, தேன், சீரகம், மிளகுத்தூள், புதினா, கறிவேப்பிலை சேர்த்த பானம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதோடு இவை உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்தும் வெளியேற்றும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகள் மற்றும் பிரச்சனையும் அதிகரிக்காது.
தவிர்க்க வேண்டியது
கர்ப்பகாலத்தில் அதிக எண்ணெய் பொருள்கள், கொழுப்பு பொருள்கள், துரித உணவுகள், பேக்கரி உணவுகள், நொறுக்கு தீனிகள், பாக்கெட் உணவுகள், உடனடி தயாரிப்பு உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், செயற்கை குளிர்பானங்கள் என எதையெல்லாம் தவிர்த்தொமோ அதை இப்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை எல்லாமே கொழுப்பு நிறைந்தவை உடலில் கொழுப்பை அதிகரிக்க கூடியவை.
- சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள் தான்.
- சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது.
உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்கு போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் இல்லையா?
இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது வைட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.

ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் மட்டுமல்லாமல் இதயக் கோளாறுகள், புற்றுநாய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இந்த வைட்டமின் டி நேரடியாக நன்மை தருவதோடு மறைமுகமாகப் பல வேலைகளை செய்கிறது. வைட்டமின் டி நமது உடலில் கேல்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியமும் குறையும். அதனால்தான் எலும்பு வலி இருப்பவர்களுக்கு முதலில் வைட்டமின் டி டெஸ்ட் எடுக்கிறார்கள்.
வைட்டமின் டி குறைபாட்டால் எப்படி உடல் பருமன் ஆகிறது?
உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது.
உடலில் உள்ள கொழுப்பின் அளவயும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைய டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக வைட்டமின் டி அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடை குறையாது. மேலும் கால்சியமும் குறைந்து போய், உடல் மிகுந்த சோர்வுற்றும், எலும்புகளில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
வைட்டமின் டி அதிகம் உடலில் சேர என்ன செய்யவேண்டும்?
முதலில் உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
இந்த வகை வைட்டமின்கள் வெயில் தவிர உணவுகளில் மிகவும் குறைவு என்பதால் உங்களுக்கு வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள். தயவுசெய்து நீங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இந்த வகை வைட்டமின் உடலில் அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறிவிடும். இது மிகவும் கெடுதலான விஷயம்.
பொதுவாகவே தினமும் வைட்டமின் டி கிடைக்கவேண்டும் என்றால், அதிகாலை வெயில் படுமாறு நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். முடியாவிட்டாலும் காலையில் செய்தித் தாளையாவது வெயிலில் உக்கார்ந்து படியுங்கள்.
தினமும் 20-30 நிமிடங்கள் காலை வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைவது வயிறுதான் என்பதால், வைட்டமின் டி குறைந்தால் முதலில் எடை கூடுவது வயிற்றுப்பகுதிதான். அதனால் வயிறு தொப்பைப் போடுகிறது என்றால் உடனே மருத்துவரிடன் சென்று ஆலோசனைக் கேளுங்கள்.
- தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கிறது மைதா.
- மைதா மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது.
ஊட்டச்சத்துமிக்க பொருட்களை உட்கொண்டால்தான் உடல்நலனை பாதுகாக்கலாம் என்பது தெரிந்திருந்தும் பலராலும் தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கிறது மைதா. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடியது என்று தெரிந்திருந்தும் அதன் சுவைக்கு அடிமையாகி பலரும் விரும்பி உட்கொள்கிறார்கள்.
அவர்களின் ருசிக்கு தீனிபோடும் விதமாக மென்மையான பரோட்டா முதல் பலதரப்பட்ட பேக்கரி பலகாரங்கள் வரை மைதாவில் தயாராகின்றன. இந்த மாவை ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன நல்ல மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
எடை குறையும்
சுத்திகரிக்கப்பட்ட இந்த மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்துவிடும். குறுகிய காலத்திற்குள் உடலுக்கு அதிக அளவு ஆற்றலையும் வழங்கிவிடும். அதனால் சில மணி நேரத்துக்குள் பசி உணர்வை தூண்டிவிடும். அதிக அளவு சாப்பிடுவதற்கும் வழிவகுத்துவிடும்.
மைதாவை விலக்கி வைப்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பேணலாம். அதிகம் பசி எடுப்பதை குறைத்து உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். மைதாவுக்கு மாற்றாக முழு தானிய உணவுகளை தேர்ந்தெடுத்தால் அதிலிருக்கும் அதிக நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடப்பதற்கு வழிவகுக்கும்.
பசியை தூண்டாமல் வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும்.

செரிமான ஆரோக்கியம்
முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது மைதாவில் நார்ச்சத்தோ, ஊட்டச்சத்துக்களோ இல்லை. செரிமான அமைப்பை பராமரிக்க அவை அவசியம். மைதாவை தவிர்ப்பதன் மூலம் குடல் நலனை பேணலாம். அவை சிறப்பாக செயல்படவும் ஊக்குவிக்கலாம். உணவு உட்கொண்ட பிறகு வயிறு வீக்கம், அசவுகரியம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
நாள்பட்ட நோய்களை குறைக்கலாம்
மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் டைப்- 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களுடன் தொடர்புடையவை. உணவுப்பட்டியலில் இருந்து மைதாவை நீக்குவதன் மூலம் நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கலாம். முழு தானியங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேணி நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கின்றன.
சருமம் பொலிவாகும்
மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கும் வித்திடும். மைதாவை தவிர்ப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அதற்கு மாற்றாக முழுதானியங்களை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் தோல் மீளுருவாக்கம் பெறுவதற்கு உதவி புரியும். தோலின் நிறமும் மேம்படும்.
மனநிலை மேம்படும்
மன ஆரோக்கியத்திற்கும் உண்ணும் உணவிற்கும் கூட தொடர்பு இருக்கிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு மனநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிடும். அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதிக்கும். மூளைக்கு சீரான ஊட்டச்சத்துக்களை வழங்கும் முழு தானியங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம், மனநிலை மேம்படும். மனத்தெளிவும் கிடைக்கும்.
மந்த உணர்வு
சுத்திகரிக்கப்பட்ட மாவை உட்கொள்வது மந்தமாக உணர வைக்கும். ஆற்றலை மெதுவாகவும், சீராகவும் வெளியிடும் முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை பெறலாம்.
மேம்படுத்தப்பட்ட சுவை
சுத்திகரிக்கப்பட்ட மாவில் முழு தானியங்கள் தரும் சுவையை உணர முடியாது. முழு கோதுமை, ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்றவைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அவற்றின் மேம்பட்ட சுவையை முழுமையாக உணரலாம்.
நோய் எதிர்ப்பு செயல்பாடு
முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின்கள் பி, ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவில் அதிக முழு தானியங்களை சேர்ப்பதன் மூலமும், மைதாவை தவிர்ப்பதன் மூலமும், நோய்த்தொற்றுகளை தடுக்கலாம். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கிடைக்க செய்யலாம்.
- தொப்பையை குறைக்க மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான்.
- சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறையும்.
உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின்னர் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.
* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, லவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2 அல்லது 3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.
* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
* தொடர்ந்து 3 அல்லது 4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.
* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானை போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
- தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்.
- தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும்.
* தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது.
* தினமும் வெறும் வயிற்றில் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதற்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று ஸ்பூன் எடுத்து ஆறிய சுடுதண்ணிரில் கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி, வயிற்றுப் புண், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
* தேனுடன் வெங்காய சாறை கலந்து சாப்பிட்டு வர இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது, இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிற்று வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது.
* எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலைவலி சரியாகும்.
* கண்பார்வை பிரகாசமாக தெரிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.
* தேனுடன் முட்டை மற்றும் பாலை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்
* உடல் ஆரோக்கியத்திற்கு தேன் மிகவும் நல்லது. தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.
* இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் பார்லி கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
* தேனையும் மாதுளை ஜூசையும் சம அளவு சேர்த்து தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
* உடம்பில் ரத்தக் குறைவு அல்லது ரத்தசோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் நீங்கும்.
* தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூசி வர கட்டிகள் பழுத்து உடையும்.
* மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
* கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
* வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்கு தொப்புளை சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
* தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
* ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, ரத்த சுத்திகரிப்பும், ரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
* அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
* முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
* தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டு சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
* ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்னர் அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண்காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.
* குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம்பெறும். புதிய ரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களை துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
* என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
* சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன் தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.
* நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களை தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.
* மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன் தான். வலி உள்ள இடத்தில் நன்றாக தேனை தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டு எலும்புகள் வலிமையாக இருக்கும்.
* படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.
* கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகை தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு. ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளில் இருந்து விடுபட தினமும் தேனை பருகி வரவேண்டும்.
தேன் நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல ரத்த விருத்தி ஏற்படும்.
ஒரு ஸ்பூன் தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
- ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை.
- உடலை ஸ்லிம்மாக இருக்க வைக்கும் உணவுகள்.
ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை. எத்தனை மணி நேரம் ஜிம்மில் நேரம் செலவழித்தாலும், வீட்டுக்கு வந்தவுடன் பசிக்கு தேவையான உணவை உடனே அள்ளி இரைத்துக் கொள்கிறோம். எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ, அதிக எடையையோ சேர்க்காது என்பதை தெரிந்து கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். ஸ்லிம்மாக இருக்க வைக்கும் சில உணவுகள் இதோ...

பாதாம்
பாதாமில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான கொழுப்பைத் தரும். தேவையில்லாத கொழுப்பை உடலில் சேர விடாது. புரதம், வைட்டமின்-இ, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம். இரவில் ஊறவைத்த பாதாமை தோல் உரித்து மறுநாள் சாப்பிடுவது நல்லது. ஒருநாளைக்கு ஐந்து பாதாம்களுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பசி உணர்வை போக்கும் `ஆப்பிள்'
ஆப்பிளில் உள்ள பெப்டின், மெதுவாக செரிமானமாக உதவும். வயிறு நிறைந்த உணர்வைத் தரும். வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பசியின்மை பிரச்சினையை போக்கும். வாரத்தில் மூன்று நாட்கள், ஆப்பிளை சாப்பிடலாம்.

ஆற்றல் தரும் 'ப்ரோக்கோலி'
புற்றுநோயை எதிர்க்கக் கூடியது, ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பகப் புற்றுநோயை தடுக்கும் வல்லமை பெற்றது. நூறு கிராம் ப்ரோக்கோலியில், 30 கலோரிகள் கிடைக்கும். இதனுடன் கால்சியம், நார்ச்சத்து கிடைப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

கலோரிகளை குறைக்கும் `கேரட்'
நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பசித்த நேரத்தில் சாப்பிட பசியும் போகும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும். கலோரிகளை எரிக்கும் துரித உணவாக இருக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டீன் பார்வை திறனை கூர்மையாக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எடையை பராமரிக்கும் `அத்தி'
புதிதாக பறித்த அத்தியில் அதிகளவு நார்ச்சத்து இருக்கும். செரிக்கும் போது ரத்தத்தில் மெதுவாக சர்க்கரையின் அளவு சேரும். இதனால் உடல் எடையும் அதிகரிக்காது. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதால் அத்திப்பழம் அல்லது ஜூசாக அடிக்கடி பருகலாம்.
- ஆரோக்கியமான கொழுப்புகள் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- முழு தானியங்களை உட்கொள்வது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
தொப்பை கொழுப்பைக் குறைப்பது ஒரு முழுமையான அணுகுமுறையை உள்ளடக்கியது, இதில் சீரான உணவுப்பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை அடங்கும்.
நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அதிகப்படியான வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவும்.
கீரை மற்றும் காலே போன்ற இலை கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்சல்ஸ் முளைகள் போன்ற க்ரூசிஃபெரஸ் காய்கறிகளுடன் சேர்த்து உண்பது, மனநிறைவை மேம்படுத்தவும், எடை இழப்புக்கும் உதவும்.
கூடுதலாக, கோழியின் மார்பக இறைச்சி, மீன் மற்றும் டோஃபு போன்ற புரதத்தில் குறைவானகலோரிகள் உள்ளதால் இது தசை வளர்ச்சியை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். வெண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகளில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு வகைகளை கொடுக்கின்றன.
மேலும், குயினோவா, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுப்பத்தினால் ஒல்லியான இடுப்பை அடைவதற்கும், அவற்றை பராமரிப்பதற்கும் உதவும்.
வழக்கமான உடல் செயல்பாடு, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான உணவு ஆகியவை எடை மேலாண்மையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வைக்கின்றன.
- உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு உதவும்.
- கட்டுடல் அழகை பேண ஆசைப்படுபவர்கள் ஸ்கிப்பிங் செய்யலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். ஆனால் அத்தகைய பயிற்சிமுறைகளை எல்லோரும் கடைப்பிடிப்பது சாத்தியமில்லாதது.
உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், உடற்பயிற்சிகளை சரியாக மேற்கொள்ள முடியாதவர்கள் எளிமையான பயிற்சி முறைகளை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு ஏற்றவையாக `ஜம்பிங் பயிற்சிகள்' அமைந்திருக்கின்றன. அவற்றுள் என்னென்ன பயிற்சிகள் எடை குறைப்புக்கு சிறந்த பலனை தரும் என்று பார்ப்போம். அதே போல உங்கள் உடல் நலனுக்கு ஏற்ற பயிற்சிகள் எவை என்பதை மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்வது நல்லது.

ஸ்கிப்பிங்:
உடல் பருமனை குறைப்பதற்கு எளிமையான பயிற்சியை தேடுபவர்களுக்கு `ஸ்கிப்பிங்' பயிற்சிதான் பொருத்தமானதாக இருக்கும். இதனை பயிற்சியாக மட்டுமல்லாமல் குடும்பத்தினருடன் விளையாட்டாகவும் மேற்கொள்ளலாம். அவர்களுக்கும் ஸ்கிப்பிங் கயிற்றை கொடுத்து துள்ளி குதிக்கச் செய்து உற்சாகமாக பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த பயிற்சி உதவும். இதனை தவறாமல் செய்து வந்தால் உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும். கட்டுடல் அழகை பேண ஆசைப்படுபவர்களுக்கு இந்த பயிற்சி உதவும். உடல் பருமனால் ஏற்படும் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றை நெருங்க விடாமல் தடுத்துவிடலாம்.

ஜம்பிங் ஜாக்ஸ்:
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை தினமும் மேற்கொள்வது நல்ல பலனை தரும். இந்த பயிற்சியும் எளிமையானதுதான். முதலில் கால்களை நேராக வைத்தபடி நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இரு கைகளையும் தொடைப்பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும். அதே வேகத்திற்கு கைகளையும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். படிப்படியாக கால்களை நன்றாக விரித்தபடி உற்சாகமாக துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும்.
சில நிமிடங்கள் கழித்ததும் குதிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அப்படி துள்ளிக் குதிக்கும்போது கால் தரைக்கு வரும் சமயத்தில் மட்டும் வேகத்தை குறைக்க வேண்டும். அது கால்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவும். இந்த பயிற்சி செய்யும்போது பொருத்தமான காலணிகள் அணிவதும் அவசியம். ஆரம்ப கட்டத்தில் உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அவர்களின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி செய்வது நல்லது. பின்பு சுயமாகவே பயிற்சியை தொடரலாம்.

பர்பீஸ் பயிற்சி:
இதுவும் கூட எளிமையான பயிற்சி முறைதான். சமதள தரையில் நேர் நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு கைகளை தரையில் ஊன்றியபடி இடுப்பு பகுதி வரை உடலை நிமிர்த்த வேண்டும். பின்பு கைகளை நன்றாக அழுத்தி கால்களுக்கும் அழுத்தம் கொடுத்து குதித்த வாக்கில் எழுந்து நிற்க வேண்டும். இந்த பயிற்சியை தினமும் 50 முறை செய்து வரலாம். அதன் மூலம் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் எடையும் குறைய தொடங்கிவிடும்.

முழங்கால் பயிற்சி:
`ஹை க்னீ' என்று அழைக்கப்படும் இந்த முழங்கால் பயிற்சியையும் எளிமையாகவே செய்து விடலாம். நேர் நிலையில் நின்றபடி இரு கைகளையும் இடுப்பு பகுதியை ஒட்டி வைத்தபடி நேராக நீட்ட வேண்டும். பின்பு துள்ளிக்குதிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தொடைப்பகுதி மேல் நோக்கி வந்து கைகளை தொட்டுவிட்டு செல்லுமாறு பயிற்சி முறை அமைய வேண்டும்.
கைகளை மேலும், கீழும் அசைக்காமல் நேர் நிலையில் வைத்தபடியே தொடைப்பகுதியை தொட்டுச் செல்வதுதான் சரியான பயிற்சி முறை. அதனை கவனமாக மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தொடைப்பகுதியை மேல் நோக்கி உயர்த்தியும் பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது பயிற்சி செய்து வருவது உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.
- உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.
- கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.
எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அது நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சியால் உண்டாகும் சிறந்த பலனை அடைவதற்கு நேரம் முக்கியம். அதிலும் உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.
பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள அதிக கொழுப்பு கரைவதாகவும், இதுவே ஆண்கள் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது நிகழ்வதாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பாலினத்திற்கும் வேறுபடும் ஹார்மோன்கள் மற்றும் உறங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம், உணவு உண்ணும் நேரம் என அனைத்து உடல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நம் 'உடல் கடிகாரம்' ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
நல்ல ஆரோக்கியமான, சுறுசுறுப்பான 30 ஆண்கள் மற்றும் 26 பெண்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் 25 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 வாரங்கள் அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்ட்ரெச்சிங், ஓட்டம், ரெசிஸ்டன்ட் எனப்படும் எதிர்ப்பு பயிற்சி, தசையை வலுவாக்கும் பயிற்சிகள் என, பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் கண்காணிக்கப்பட்டன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் ஒரு குழுவினர் காலை 8:30 மணிக்கு முன்னதாக உடற்பயிற்சி செய்தனர். மற்றொரு குழுவினர் அதே உடற்பயிற்சிகளை மாலை 6 மணி முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மேற்கொண்டனர். அனைத்து பங்கேற்பாளர்களும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுமுறையைக் கடைபிடித்தனர்.
பங்கேற்பாளர்களின் ரத்த அழுத்தம் மற்றும் உடல் கொழுப்பின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகாலத்தில் பரிசோதித்து வந்தனர். மேலும், இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல் நெகிழ்வு தன்மை, பலம், ஏரோபிக் ஆற்றல் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்பட்டுள்ளது.

"ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு நேரம் சிறந்தது"
"உங்களால் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியுமோ, அந்த நேரம்தான் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரமாகும். உங்களின் நேரத்திற்கு ஏற்ப உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்பும் மற்றும் தங்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயலும் பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்வதை இலக்காக வைக்க வேண்டும்.
கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.
எனினும், உடலின் மேல்பகுதியில் தசை பலத்தை அதிகரிக்க முயற்சிக்கும் பெண்கள் மற்றும் தங்களின் மனநிலை, உட்கொள்ளும் உணவை மேம்படுத்த விரும்பும் பெண்களும் மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஆண்கள் காலை, மாலை என எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களின் உடல்பலம் அதிகரிக்கும்.
ஆனால், "தங்களின் இதயநலன், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) மற்றும் மனநலனை மேம்படுத்த விரும்பும் ஆண்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி சிறந்ததாக உள்ளது.
மாலை நேர உடற்பயிற்சி வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துவதுடன், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்துகளையும் குறைக்கிறது.
பெண்களுக்கு அதிகளவில் வயிற்றுப்பகுதியில் கொழுப்புகள் இருப்பதால், அவர்கள் காலையில் அதிகளவிலான கொழுப்பை எரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே கூறப்பட்டதுபோல உடல் கடிகாரமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.