search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியாருக்கு கோடை திருவிழா நாளை தொடக்கம்
    X

    ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியாருக்கு கோடை திருவிழா நாளை தொடக்கம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியாருக்கு கோடை திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெங்கநாதருக்கு கோடை திருவிழா நடந்து முடிந்தது. இதனைதொடர்ந்து தாயாரான ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு பூச்சாற்று உற்சவம் எனும் கோடை திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. நாளை முதல் வருகிற 29-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். அந்த நாட்களில் மாலை 6.30 மணிக்கு ஸ்ரீரெங்க நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபம் வந்து சேருகிறார்.

    இரவு 8.30 மணிக்கு பூக்கள் சாத்துப்படி கண்டருளிய பிறகு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மேற்கண்ட நாட்களில் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது.

    வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி வரை உள்கோடை நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினங்களில் மாலை 6 மணிக்கு ஸ்ரீரெங்க நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபம் வந்து சேருவார். இரவு 7.30 மணிக்கு பூக்கள் சாத்துப்படி கண்டருளிய பிறகு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு ஆஸ்தான மண்டபம் வந்து சேருகிறார்.

    இரவு 8.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மேற்கண்ட நாட்களில் மாலை 4.30 முதல் 6.30 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற நாட்களில் இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. வருகிற 3-ந்தேதி அன்று வீணை வாத்தியம் கிடையாது.

    வருகிற 4-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு ஸ்ரீரெங்க நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேருகிறார். இரவு 8.30 மணிக்கு அலங்காரம் வகையறா கண்டருளி மேற்படி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மேற்கண்ட நாட்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற நாட்களில் வழக்கம் போல இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×