என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சமையல்
- ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.
- நெய் மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.
* தேங்காய் மூடியை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
*கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை வாழை இலையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.
* பயிறு வகைகளை புழு, பூச்சி சேதப்படுத்தாமல் இருக்க விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைக்கவும்.
* எந்த சட்னி செய்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணம் கமகமக்கும்.
* ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.
* தோசை சுடும்போது வாசனையால் ஊரையே ஈர்க்க வேண்டுமா? தோசை வார்க்கும் முன் தோசைக்கல்லில் சிறிது நல்லெண்ணெய் தேய்க்கவும்.
* நெய் 'கமகம'வென மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.
* முறுக்கு, சீடைக்கு மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்து பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் சேர்க்கவும்.
* வாடிய கொத்தமல்லித் தழையை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் புதிது போல் மாறிவிடும்.
* வாணலியை சூடாக்கி பின்பு அதில் சாம்பார் வெங்காயத்தை போட்டு சூடு வர புரட்டினால் அதன் தோலினை சுலபமாக உரிக்க இயலும்.
* தோசை தயாரிக்கும்போது உளுத்தம் பருப்புடன் ஒரு கப் ஜவ்வரிசியையும் கலந்து அரைத்தால் தோசை நன்கு வார்க்க வருவதுடன் மெல்லியதாகவும், ருசியாகவும் இருக்கும்.
* தேங்காய் துவையல் அரைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* குழம்புக்கோ, கூட்டிற்கோ துருவிய தேங்காயில் ஒரு ஸ்பூன் தேங்காய் பால் எடுத்து அடுப்பில் இருந்து இறக்கும்போது அதில் விடுங்கள். ருசியோ ருசி தான்.
* அவியல் செய்யும்போது அரைத்த தேங்காய் விழுதை தயிரில் கலக்காமல் வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து பிறகு தயிர் சேர்க்க வேண்டும். இதனால் அவியல் நீர்த்துப் போவதை தவிர்க்கலாம்.
* தயிரில் தக்காளி துண்டுகள், சர்க்கரை ஏலத்தூள், சிறிது உப்பு சேர்த்து ஸ்வீட் பச்சடி செய்யலாம். விருப்பமானால் வாழைப்பழம், ஆப்பிள் துண்டுகளையும் சேர்க்கலாம்.
* மஞ்சள் பூசணி வாங்கினால் அதை சமைத்து விட்டு நடுவில் உள்ள குடல் போன்ற பாகத்தை வீணாக்காமல் அதை எண்ணெய் விட்டு வதக்கி அத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், புளி, உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிடலாம். மிகவும் ருசியாவும் மணமாகவும் இருக்கும்.
* மழை, குளிர் காலங்களில் வடகம் சரியாகப் பொரியாது, அவ்வாறு நமத்து விட்டால் பொரிப்பதற்கு முன் வாணலியை சூடாக்கி அதில் வடகத்தை போட்டு சற்று புரட்டி எடுத்துக் கொண்டு பிறகு எண்ணெய்யில் பொரித்தால் நன்கு பொரியும்.
* பச்சரிசி தோசை அரைக்கும் போது கூடவே நாலைந்து ஓம இலைகளையும் சேர்த்து அரைத்தால் தோசை வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். ஓமம் குளிர் காலத்தில் நல்ல மருந்தும் கூட.
* தேங்காய் துவையலுக்கு தேவையான பொருட்களை தாளித்து எடுக்கும் போது சிறிது தனியாவையும் சேர்த்து வறுத்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.
* கடலைப்பருப்பை போளி பூரணம் செய்யும்போது அதற்கு தேவையான பூரணத்திற்கு வெல்லத்துக்கு பதில் பொடித்த சர்க்கரையை பயன்படுத்தினால் போளி சுவையாக இருக்கும். போளி மெல்லியதாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.
* சாம்பார், மோர், குழம்பு ஆகியவற்றிற்கு பருப்பு உருண்டை செய்து போடும் பொழுது ஒரு டீஸ்பூன் அரிசி மாவை உருண்டைக் கலவைடன் கலந்து உருட்டி செய்தால் அவை கரைந்து போகாமல் முழுசாக இருக்கும்.
- மீந்து போன சப்பாத்தியை மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள்.
- சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.
பெரும்பாலானோர் வீட்டில் தினமும் சப்பாத்தி செய்து சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அப்படி சப்பாத்தி செய்யும் போது பல நேரங்களில் சப்பாத்தி மீந்து போயிடும். அப்படி மீந்து போன சப்பாத்தியை நிறைய பேர் பாதுகாப்பாக எடுத்து வைத்து, மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட பலருக்கு பிடிக்காது. அப்படி போன சப்பாத்தியை வைத்து நூடுல்ஸ் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி
முட்டை-4
பெரிய வெங்காயம்-3
தக்காளி-3
இஞ்சி- சிறிது
பூண்டு- சிறிது
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை பொரித்து எடுத்துவைக்கவும். பிறகு சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.
கடாயை சூடுசெய்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதக்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து குறைவான தணலில் மூடிவைக்கவும். பச்சை வாடை போனவுடன், வெட்டி வைத்த சப்பாத்தி, முட்டைப் பொரியல் போட்டு, மிளகுத் தூள், உப்பு இட்டு, கிளறி எடுத்து சுடச்சுட பரிமாறவும்.
- தேவையற்ற நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது முற்றிலும் குறையக்கூடும்.
- புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காம்பினேஷன், உடலுக்கு நிலையான ஆற்றலை தரக்கூடும்.
வேர்க்கடலை வெண்ணெயில் வைட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை காலை உணவு முறையில் சேர்ப்பதால், வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தக்கூடும். இதனால், தேவையற்ற நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது முற்றிலும் குறையக்கூடும்.
வேர்க்கடலை வெண்ணெயில் நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளது. அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திட உதவக்கூடும். இதில் நார்ச்சத்து உள்ளடக்கம் அதிகமாகவே உள்ளது. அவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமின்றி குடல் இயக்கத்தையும் மேம்படுத்தக்கூடும். இதனால், மலச்சிக்கல் அபாயம் முற்றிலும் குறையக்கூடும். புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காம்பினேஷன், உடலுக்கு நிலையான ஆற்றலை தரக்கூடும். இதனால், பிற பணிகளில் எவ்வித சோர்வும் இன்றி கவனத்தை செலுத்த முடியும்
இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய பீனட் பட்டரை (வேர்க்கடலை வெண்ணெய்) 2 நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம். வாங்க பார்க்கலாம்...
![](https://media.maalaimalar.com/h-upload/2025/01/21/8413360-peanut.webp)
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை- 1 கப்
சமையல் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு
2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை (உங்கள் சுவை விருப்பத்திற்கு ஏற்ப)
முதலில் மிக்சியில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். மென்மையான, கிரீமி பதத்திற்கு வரும் வரை அரைக்கவும். கட்டியாக இருந்தால் எண்ணெயை சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் அரைத்தால் பீனட் பட்டர் ரெடி. இதனை ஒரு ஜாரில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.
- உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
- பன்னீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் கலப்படம் செய்யப்பட்ட மளிகைப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுவது பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். பருப்பு வகைகள் முதல் மசாலாப் பொருட்கள் வரை எதுவும் பாதுகாப்பானது அல்ல, அவற்றை வாங்குவதற்கு முன் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அதேபோல தான் பனீர். இந்திய உணவு வகைகளில் பிரதானமான பனீர் அதன் மென்மையான மற்றும் கிரீமி சுவைக்காக விரும்பப்படுகிறது. இருப்பினும், உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
நீங்கள் அடிக்கடி பேக் செய்யப்பட்ட அல்லது கடையில் விற்கப்படும் பனீர் வாங்குபவராக இருந்தால், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க சில எளிய டிபஸ் இதோ...
![](https://media.maalaimalar.com/h-upload/2025/01/21/8409380-panneer01.webp)
1. பாலை திரைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை பன்னீர் உறுதியான அமைப்பையும், பால் வாசனையையும் கொண்டிருக்கும். ஒரு பனீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
2. பேக் செய்யப்பட்ட பனீர்களுக்கு, லேபிள் அதன் நம்பகத்தன்மைக்கு ஒரு பெரிய அடையாளமாக இருக்கலாம். FSSAI குறி போன்ற தரச் சான்றிதழ்களை எப்போதும் சரிபார்க்கவும். தயாரிப்பு தூய பாலில் இருந்து தயாரிக்கப்படவில்லை என்றால் உற்பத்தியாளர்கள் காட்ட வேண்டிய "சாயல்" (imitation) அல்லது "அனலாக்" (analogue) போன்ற குறிப்பிட்ட சொற்களை இருக்கிறதா என்பதை பாருங்கள்.
3. ஒரு சிறிய துண்டு பனீர் உலர்ந்த பாத்திரத்தில் சூடாக்கவும். உண்மையான பனீர் சிறிது பழுப்பு நிறமாகி, பாத்திரத்தில் நொறுங்கலாம், அதே நேரத்தில் போலி பனீர் சீரற்ற முறையில் உருகலாம், அதிகப்படியான தண்ணீரை வெளியிடலாம் அல்லது எண்ணெயாகவும் தோன்றலாம். இந்த எளிய சோதனை பனீரின் தரத்தை உறுதிப்படுத்த உதவும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/01/21/8409441-panneer.webp)
4. பனீரின் நம்பகத்தன்மையை சோதிக்க மற்றொரு வழி, அதில் ஸ்டார்ச் உள்ளதா இல்லையா என்பதை அறிய அயோடின் சோதனையைச் செய்வதாகும். ஒரு துண்டு பனீரை வேகவைத்து, அதை ஆறவிடுங்கள், பின்னர் தண்ணீரில் சில துளிகள் அயோடின் டிஞ்சரைச் சேர்க்கவும். கரைசல் நீல நிறமாக மாறுவதை நீங்கள் கண்டால், அது உங்கள் கடையில் வாங்கிய பனீரில் ஸ்டார்ச் இருப்பதைக் காட்டுகிறது.
5. இந்த சோதனைக்கு, பனீரை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்வித்து, பின்னர் சிறிது துவரம் பருப்பு பொடியை பனீரின் மீது தெளிக்க வேண்டும். அதை 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பனீரின் நிறம் வெளிர் சிவப்பாக மாறினால், அது பெரும்பாலும் சோப்பு அல்லது யூரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை.
- எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
- கீரை சமைக்கும் போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.
* தினமும் குடிக்கும் டீயில் இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்தால் ருசியாக இருக்கும். உடலுக்கும் நன்மை பயக்கும்.
* ஆம்லெட் செய்யும் போது கொஞ்சம் வெங்காயத்துடன் தக்காளி சேர்த்தால் முட்டை வாசனை வராது. ருசியும் கூடும்.
* புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. நன்கு கழுவி மின் விசிறியில் காயவைத்த பின் இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் போதும். ஒரு வாரம் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.
* பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசிறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.
* கூட்டு, பொரியலுக்கு தேங்காய் துருவலுக்கு மாற்றாக புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவி இறக்கினால் போதும். தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.
* கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கெட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.
* எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
* ரவா தோசை செய்யும் போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.
* கீரை சமைக்கும் போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.
* பருப்பு வேகவைக்கும் போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.
* வீட்டில் எறும்பு நடமாட்டம் இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.
* சாதம் வடிக்கும்போது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து இறக்கினால் அதிகம் குழையாமல் இருக்கும்.
* கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
- 5 நிமிடங்களில் தயாராகும் சம்மந்தியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..
- தண்ணீர் சேர்க்காமல் செய்வதால் இது விரைவில் கெட்டுப்போகாது.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பலரால் அதிகம் தேடியது 'கேரளா சம்மந்தி'. 5 நிமிடங்களில் தயாராகும் சம்மந்தியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் -1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -6
இஞ்சி - 1 துண்டு
தேங்காய் - 1
சின்ன வெங்காயம் - 10
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அம்மி அல்லது மிக்சி ஜாரில், காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், புளி, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும். அடுத்து இதை நன்கு கலந்து உருட்டி வைத்தால் ருசியான கேரளா சம்மந்தி தயார்.
இதை சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு சுவைக்கலாம். தண்ணீர் சேர்க்காமல் செய்வதால் இது விரைவில் கெட்டுப்போகாது.
- தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
- கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
சமையல் பணியை விரைவாகவும், ருசியாகவும் செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேவேளையில் ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி அதையே வாடிக்கையாக பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
அவை சமைக்கும் நேரத்தையும், சமைக்கும் பொருட்களையும் விரயமாக்கும் என்பதை அறியாமல் அந்த கட்டுக்கதைகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அப்படிப்பட்ட கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/22/7381519-newproject9.webp)
கட்டுக்கதை:
மைக்ரோ ஓவனில் சமைப்பது உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகள் இழப்புக்கு வழிவகுக்கும்.
உண்மை:
சமைக்கும் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகளை மைக்ரோ ஓவன் அழித்துவிடும் என்பது பொதுவான கட்டுக்கதையாகும். உண்மையில் மைக்ரோ ஓவன் நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான சி, ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை அதன் தன்மை மாறாமல் தக்கவைத்துக்கொள்ள உதவும். அத்துடன் விரைவாக சமைப்பதற்கு உதவிடும். ஊட்டச்சத்துகள் இழப்பையும் குறைக்கும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/22/7381520-newproject14.webp)
கட்டுக்கதை:
சமைக்கும்போது எப்போது வேண்டுமானாலும் மசாலாப்பொருட்களை சேர்க்கலாம்.
உண்மை:
இந்த கட்டுக்கதையும் ஏற்புடையதல்ல. அதற்கு மாறாக சமைக்கத் தொடங்கும்போதே மசாலா பொருட்களை சேர்ப்பது சுவையை கூட்டி, சிறந்த பலனை தரும் என்பது சமையல் நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
அதாவது உப்பு, மஞ்சள், சமையல் பொடி வகைகள் உள்ளிட்ட மசாலா பொருட்களை ஆரம்பத்திலேயே சேர்க்கும்போது அவை சமைக்கும் பொருட்களில் ஆழமாக ஊடுருவும். அதனால் சுவையும், ருசியும் அதிகரிக்கும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/22/7381566-newproject13.webp)
கட்டுக்கதை:
கியாஸ் அடுப்பில் நெருப்பின் அளவை அதிகரிப்பது வேகமாக சமைத்து முடிப்பதற்கு உதவும்.
உண்மை:
அடுப்பில் இருந்து நெருப்பு அதிகம் வெளிப்படுவது சீரற்ற சமையலுக்குத்தான் வித்திடும். சமைக்கும் பொருள் தீயில் கருகக்கூடும். பாத்திரமும் கடினமாக மாறக்கூடும்.
மிதமான தீயில் சமைப்பது உணவுப்பொருட்களை சமமாக வேகவைக்க உதவும். அவை மென்மையாகவும் இருக்கும். பாத்திரங்களில் ஒட்டுவதும் தவிர்க்கப்படும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/22/7381580-newproject11.webp)
கட்டுக்கதை:
வேக வைக்கும் பொருட்களை ஒருமுறை புரட்டிப்போட்டாலே போதுமானது.
உண்மை:
இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருட்களை அடிக்கடி திருப்பி போடுவது இருபுறமும் சமமாக வேகுவதற்கு உதவும். அவை ஒரே பக்கத்தில் வெந்து கொண்டிருந்தால் அந்த பகுதி கருகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.
அடிக்கடி திருப்பி போடுவதுதான் சரியானது. குறிப்பாக ஒவ்வொரு 30 விநாடிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் திருப்பி போடுவது இறைச்சி மென்மையான பதத்தில் வேகுவதற்கும், சுவையாக இருப்பதற்கும் உதவிடும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/22/7381581-newproject12.webp)
கட்டுக்கதை:
தண்ணீரில் உப்பு சேர்ப்பது வேகமாக நீர் கொதிப்பதற்கு உதவிடும்.
உண்மை:
சமைக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்துவதற்கு முன்பு உப்பு சேர்ப்பது விரைவாக நீர் கொதிப்பதற்கு உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் ஒரு கட்டுக்கதைதான்.
உண்மையில் நீர் கொதிக்கும்போது உப்பு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். உண்மையில் உப்பு நீரின் கொதிநிலை நன்னீரை விட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் சமையல் விஷயத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏதும் இருக்காது. அதனால் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
- சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று.
- அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. காளான் வைத்து சுவையான காளான் மசாலா, கிரேவி, காளான் 65, காளான் மஞ்சூரியன் என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு ரெசிபியை பார்க்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
காளான்- 100 கிராம்
பெரிய வெங்காயம் -1
தக்காளி- 1
உப்பு தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க:
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்- 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-1
பூண்டு - ஒரு பல்
தாளிக்க:
எண்ணெய்- 2 தேக்கரண்டி
பட்டை - 1 (சிறியது)
லவங்கம் -2
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/10/6086027-newproject30.webp)
செய்முறை:
முதலில் காளானை நீளமாகவும், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பின்னர். வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வாசம் வரும் வரை வறுத்து, சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளானைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும். பின்னர் வறுத்து அரைத்த கலவையைப்போட்டு 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் சுவையான காளான் தொக்கு ரெடி. இது சூடான சாதத்துக்கும் சப்பாத்திக்கும் ஏற்றது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/10/6086028-newproject29.webp)
- டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா?
- தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் பருகக்கூடாது.
பால், தேயிலை, சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் டீ உலகெங்கும் பரவலாக பகிரப்படும் பானமாக விளங்குகிறது. டீ பருகிவிட்டுத்தான் அன்றைய நாளை தொடங்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி ருசிக்கப்படும் டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா?
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/10/6081911-newproject4.webp)
''பாலில் இருக்கும் கால்சியம் எலும்புகளை கொஞ்சம் வலுவடைய செய்யும். வயதாகும்போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாட்டை தடுக்க இது உதவும். வளர்சிதை மாற்றம் சீராக இயங்க உதவும்.
மேலும் தேநீரில் இருக்கும் காபின் அதிக விழிப்புடனும், கவனத்துடனும் இருக்கச் செய்யும். அத்துடன் தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் சிறு கவசங்கள் போன்று செயல்படும்.
டீ பருகும் விஷயத்தில் கவனமாக இருக்காவிட்டால் அதில் இருக்கும் தேயிலை உடலில் இரும்பை உறிஞ்சும் திறனை குழப்பிவிடும்'' என்கிறார், பெங்களூருவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் இப்சிதா சக்கரவர்த்தி.
இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
* தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் கண்டிப்பாக பருகக்கூடாது.
* டீயில் கூடுமானவரை இனிப்பு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். அது முடியாதபட்சத்தில் சிறிதளவு இனிப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
* விரும்பிய நேரமெல்லாம் டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். தாகமாக இருக்கும்போதும் பருகக்கூடாது. நிறைய தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
* செரிமான கோளாறு போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை சந்தித்தால் டீயை தவிர்த்து விடுவது நல்லது. மாற்று பானத்தை தேர்ந்தெடுப்பது சிறப்பானது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/10/6081963-newproject6.webp)
காபினால் பிரச்சினை ஏற்படுமா?
பால் டீயை தினமும் பருகும்போது உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்கும். சோர்வை போக்கி செய்யும் வேலையில் கவனம் செலுத்த உதவும். ஆனால் டீயில் அதிகப்படியான காபின் இருந்தால் கவலை, அமைதியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயை உண்டாக்குமா?
டீயில் அதிக சர்க்கரை சேர்ப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீர்குலைத்துவிடும். காலப்போக்கில் டைப்-2 நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்க செய்துவிடும். அத்துடன் டீயில் இருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பு கலவையானது வயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடக்கூடும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/10/6081964-newproject5.webp)
பாதிப்பை ஏற்படுத்துமா?
சிலருக்கு பாலும், தேநீரும் ஒத்துக்கொள்ளாது. வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும். பால் கலந்த டீக்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் நிரம்பியிருக்கும். அதிலிருக்கும் அதிகப்படியான இனிப்பு உடல் எடை அதி கரிப்புக்கு வழிவகுக்கும். டீ மட்டுமே பருகிவிட்டு போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாவிட்டால் நீரிழப்புக்கும் வழிவகுக்கும்.
- ஒரு தடவை செஞ்சு பாருங்க ருசியா இருக்கும்.
- சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
வெண்டைக்காய் துவையல் அப்படின்னு சொன்ன உடனே அது எப்படி இருக்கும்? நல்லாருக்குமா அப்படின்னு ஒரே யோசனையா இருக்கும். ஆனா ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க ருசியா இருக்கும்.
நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க. நம்ம கொள்ளு பருப்புல துவையல், துவரம் பருப்புல துவையல், தேங்காய் துவையல், மல்லி துவையல், புதினா துவையல், அப்படின்னு நிறைய துவையல் செஞ்சிருப்போம். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இது வெண்டைக்காய் துவையல் அப்படின்னே தெரியாது. ரொம்ப ரொம்ப ருசியா இருக்க கூடிய இந்த வெண்டைக்காய் துவையல சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்- 1/4 கி
கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
வர மிளகாய்- 2
பெரிய வெங்காயம்-1
பூண்டு- 3 பல்
புளி- நெல்லிக்காய் அளவு
கடுகு- 1 டீஸ்பூன்
பூண்டு-5
புளி- சிறிதளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/07/6003451-newproject39.webp)
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெண்டைக்காயை வதக்குவதிலேயே முக்கால் பதம் வெந்துவிட வேண்டும் அந்த அளவிற்கு வதக்க வேண்டும்.
பிறகு அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து வெண்டைக்காயையும் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்தால் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார்.
- பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம்.
- பனீரில் கால்சியம் சத்தும் அதிகம்
பசும்பால் அல்லது எருமைப் பாலைக் காய்ச்சி, அதில் எலுமிச்சைப்பழச் சாறோ, வினிகரோ சேர்த்துத் திரியவைத்து பனீர் தயாரிக்கிறார்கள். இது சரியான முறைதான். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/06/5975038-newproject41.webp)
பாலைத் திரித்து பனீராக மாறியதும் அதை எவ்வளவு நேரத்துக்கு அழுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது மிக மென்மையாகவோ, மிதமான மென்மைத்தன்மையுடனோ அல்லது கடினமாகவோ வரும்.
பனீர் புதரச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. தவிர அது எந்த மாதிரியான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் கொழுப்பு அளவும் வேறுபடும்.
சைவ உணவுக்காரர்களுக்கு பாலில் இருந்து பெறப்படும் பனீரின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கும்.
பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/06/5975039-newproject42.webp)
எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் பனீர் மிகச் சிறந்த உணவு. பனீரை கிரேவி, புலாவ், டிக்கா, புர்ஜி என விதம் விதமாகச் சமைக்க முடியும் என்பதால் குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் செய்து தந்து அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கும் பனீர் நல்லது. இத்தனை நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் பால் அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் பனீரை தவிர்ப்பது நல்லது.
- அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.
- டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.
* ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறு வென்றிருக்கும்.
* ஜாங்கிரி செய்யும்போது, பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு ஊறவைத்துச் சாப்பிட்டுப் பாருங்களேன். சூப்பர் ருசி!
* தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.
* மாதுளம்பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
* பருப்பு ரசம் நுரையுடன் பொங்கிவரும் போது கொத்தமல்லித்தழையை உடனே போடாமல் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, ஐந்து நிமிடம் தாமதித்து ரசத்தில் கிள்ளிப்போட்டால் மல்லி அதன் பசுமை மாறாமல் ரசம் கமகமவென்று வாசனையுடன் இருக்கும்.
* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித்தால் மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
* அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.
* டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.
* ஒரு கப் நல்லெண்ணெய்யை சூடாக்கி, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து, மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணெய்யை தலைக்குதேய்த்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது, புத்துணர்வும் கிடைக்கும்.
* வெண்ணெய் பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைத்தால், வெண்ணெய் கையிலோ, பேப்பரிலோ ஒட்டாமல் வரும். மேலும் வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வைத்தால், நெய் வாசனையாக இருக்கும்.
* இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது அரிசியோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊற வைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும்.
* காய்கறி, பருப்பு, ரசம் இவற்றிற்கு அளவாக நீரைச்சேர்த்து கொதிக்கவிடவும். வெந்தபிறகு நீரை வடித்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி விடும். அப்படி நீரை வடித்தால் அந்த வடிநீரை குழம்பு, கூட்டு இவற்றில் சேர்த்து விடவும்.
* பால் லேசாகத்திரிந்து விட்டால், அதில் சிறிது சமையல்சோடா சேர்த்து கலந்து உறை ஊற்றவும். கெட்டித்தயிராகி விடும்.
* குளிர்காலத்தில் தயிர் எளிதில் உறையாது. பாலை ஒரு ஹாட்பாக்ஸில் ஊற்றி, உறை ஊற்றி மூடி வைத்து விட்டால் மூன்று மணி நேரத்தில் உறைந்து விடும்.
* பொரித்தெடுத்த ஜாமூனை சூடான சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவைக்காமல் நன்கு ஆறிய சர்க்கரைப்பாகில் சேர்த்தால் ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்கும்.
* தேன்குழல், சீடை ஆகியவற்றைச்செய்யும் போது மாவை வெந்நீர் ஊற்றிப்பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.
* வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.
* வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களில் மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.