என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்க உத்தரவு.
    • கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுசுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன.

    இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது. அதன்படி பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்க கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில், கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கவும், கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசிக்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுசுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

    • திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார்.
    • தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் ரோட்டினை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அஷ்வந்த்(வயது 25). திருமங்கலம் பழனியாபுரத்தினை சேர்ந்த கவிராஜன் மகள் அனிதா(23). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் காதல் திருமணத்தினை அனிதா வீட்டில் ஏற்கவில்லை. அதனால் இரண்டு குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

    போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அனிதா பெற்றோரிடம் செல்ல மறுத்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் 2 தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து செல்வம் ஏற்கனவே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இந்த நிலையில் செல்வத்தின் மூத்த மகள் பிரியதர்ஷினியின் மாமியார் உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று அவரை பார்த்துவிட்டு மீண்டும் திருமங்கலத்திற்கு திரும்பினர்.

    திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார். இதில் கல்லை எடுத்து எறிந்ததில் செல்வம், அவரது பேத்திக்கு காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் இவர்களின் தகராறினை தடுத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வம் அவரது பேத்தியை அழைத்து கொண்டு அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

    இந்தநிலையில் இரவு 11 மணியளவில் திருமங்கலம் எட்டுபட்டரை மாரியம்மன் கோவில் அருகேயுள்ள அஷ்வந்த் சகோதரி பிரியதர்ஷினி வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை வீசி தப்பியோடிவிட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. அதே நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவி அங்கிருந்த கட்டில், பீரோ, பிரியதர்ஷினியின் மாமியாரின் மருத்துவ செலவிற்கு வைத்திருந்த ரொக்கபணம் 2 லட்சம் மற்றும் சுமார் 35 பவுன் நகைகள் எரிந்து நாசமாகின.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி அணைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து செல்வம் திருமங்கலம் டவுன் போலீசுக்கு புகார் கொடுத்தார். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பிரியதர்ஷனியின் கணவர் பாலமுருகன் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசியது கவிராஜன் அவரது மகன் கௌசிக் ஆகியோர் தான் காரணம் என தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் திருமங்கலத்தில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
    • கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

    பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

    மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.

    எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்! என்று கூறியுள்ளார். 



    • மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் லோகேஷ் (வயது22) நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    இதே கல்லூரியில் வந்தவாசியை சேர்ந்த சாஹித் பாரான்(22) என்பவரும் படித்து வந்தார். நண்பர்களான இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    நேற்று இரவு லோகேசும், சாஹித் பாரானும் மகேந்திரா சிட்டி அடுத்து உள்ள வணிக நிறுனத்திற்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர். மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.

    அப்போது பின்னால் திண்டிவனத்தில் இருந்து மாதவரம் நோக்கி வந்த மற்றொரு பஸ் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இழுத்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்த அரசு பஸ்சுக்கும், மோதிய அரசு பஸ்சுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் லோகேசும், சாஹித் பாரானும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
    • கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு முருகனை வழிபடக் கூடிய உகந்த நாளான வளர்பிறை சஷ்டி மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை முன்னிட்டு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 1 மணி முதல் கடலில் புனித நீராடி நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராட சுமார் 500 மீட்டர் தூரம் வரை காத்திருந்து புனித நீராடி வருகின்றனர்.

    மேலும் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த தரிசன வரிசையானது கோவில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மூத்த குடிமக்கள் வரிசையில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்து வருகின்றனர்.

    கோவில் வளாகத்தின் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்து வருகிறது. கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவிழா போல காட்சியளித்தது. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும் புதிய வாகன நிற்கும் இடங்கள் இல்லாமல் ஆங்காங்கே சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், நகர் பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.
    • சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.

    வீரமங்கை ராணி வேலு நாச்சியார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்படுகிறது.
    • 62 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டம் செல்கிறார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்று வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடனும், அரசின் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 தளங்கள் கொண்ட மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    இந்த மாவட்ட கலெக்டர் அலவலகக் கட்டிடம் 13.86 ஏக்கர் பரப்பளவில் (மாவட்ட ஆட்சியரகம் தவிர்த்து பிற அலுவலகம் அமைப்பதற்கான மொத்த இடப் பரப்பளவு 39.81 ஏக்கர்) பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.100 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2525 திட்டப் பணிகள் திறந்து வைக்கப்படுகின்றன. ரூ.81 கோடியே 59 லட்சத்து 24 ஆயிரம் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் திறக்கப்படுகின்றன.

    ரூ.7 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் செலவிலான ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டாரப் பொது சுகாதார ஆய்வக கட்டிடங்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடிநீர் திட்டப் பணி ரூ.6 கோடியே 62 லட்சம் மதிப்பீடு திறக்கப்படுகின்றன.

    ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்படுகிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சங்கராபுரம் பேரூராட்சியில் கட்டப்பட்டு உள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் திறக்கப்படுகிறது.

    ரூ.386 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    நாளை மறுநாள் (27-ந்தேதி) திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு, மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.631 கோடியே 48 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு ரூ.1400 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    243 முடிவுற்றப் பணிகள் உட்பட மொத்தம் ரூ.571 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 312 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    ரூ.63 கோடியே 74 ஆயிரம் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.1,400 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.

    இத்தகைய பல்வேறு திட்டங்களுக்குப் பெருமை சேர்த்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக இந்த கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மக்கள் எழுச்சி கொண்டுள்ளனர். அதனால், விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

    அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பேருந்தை இயக்குவதற்கு முன்பாக உரிய முறையில் சோதனை செய்யத் தவறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    29 மற்றும் 31-ந்தேதிகளில் தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    இதனிடையே, இன்று முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 29-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர்.
    • கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை உறுதிப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    ஏற்கனவே 2021 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. 2024 பாராளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டது.

    இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை பலமான கூட்டணியுடன் சந்திக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா உருவாக்கினார்.

    முன்கூட்டியே உருவான இந்த கூட்டணி அரசியலில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவதில் டெல்லி பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது மற்ற கட்சிகளை சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ.க. 35 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி குழுப்பிய போது அவர் உறுதியாக எதையும் கூறவில்லை. ஆனால் தனது தலைமையிலான இந்த காலகட்டத்தில் பா.ஜ.க. அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

    முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அ.ம.மு.க., ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது அந்த கூட்டணியில் இல்லை. அதேபோல் தே.மு.தி.க.வும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எனவே கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவுகின்றன.

    இதற்கிடையில் கூட்டணியை உறுதிப்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது.

    பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த பிரசார பயணத்தை பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந்தேதி புதுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். இந்த இரு விழாக்களையும் ஒரு சேர நடத்தவும் இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் அழைக்கவும் முடிவு செய்து இருந்தார்கள்.

    ஆனால் பிரதமர் மோடியின் வருகை உறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு 9-ந்தேதி அமித்ஷா வருகை உறுதியாகி இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்போதைக்கு கூட்டணி கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் சில கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி இருப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடப்பதால் எந்தெந்த கட்சிகள் வரும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

    • மாவட்ட பிதிநிதிகள் சத்தியவாணிமுத்து நகர் குஜலாத்தி, எண்ணூர் நேரு நகர் ஆனந்தசேகர், டி.எஸ்.கோபால் நகர் பாரதிராஜா.
    • தகவல் தொழில் நுட்பப் பிரிவு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, அம்மா பேரவை உள்ளிட்டவைகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    திருவொற்றியூர் பகுதி அ.தி.மு.க. 4 ஆக பிரிக்கப்பட்டு புதிய பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு திருவொற்றியூர் கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டு வடக்கு பகுதி, தெற்கு பகுதி என கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் பகுதி கழக பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவை வருமாறு:-

    திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன்.

    திருவொற்றியூர் வடக்கு பகுதி கழக அவைத் தலைவர் எர்ணாவூர் நேதாஜிநகர் வி.பரசுராமன், பகுதி செயலாளர் எண்ணூர் நெட்டுக்குப்பம் எம்.கே.கண்ணன் (முன்னாள் கவுன்சிலர்) பகுதி இணைச் செயலாளர் எண்ணூர் காட்டுக்குப்பம் ஹேம பிரியா, பகுதி துணைச் செயலாளர்கள் திருவொற்றியூர் சிவசக்தி நகர் 6-வது தெரு எல்.ஜெசிந்தா, சக்தி கணபதி நகர் தாமோதரன், பகுதி பொருளாளர் எண்ணூர் நெட்டுக்குப்பம் சச்சிதானந்தம்.

    மாவட்ட பிதிநிதிகள் சத்தியவாணிமுத்து நகர் குஜலாத்தி, எண்ணூர் நேரு நகர் ஆனந்தசேகர், டி.எஸ்.கோபால் நகர் பாரதிராஜா.

    திருவொற்றியூர் தெற்கு பகுதி அவைத் தலைவர் சி.பி.சி.எல்.நகர் முன்னாள் கவுன்சிலர் நாகப்பன், பகுதி செயலாளர் மணலிபாட சாலை தெரு சாரதி பார்த்தீபன்.

    பகுதி இணைச் செயலாளர் மணலி பெரிய தோப்பு சித்ரவள்ளி, துணைச் செயலாளர்கள் சின்னசேக்காடு முன்னாள் கவுன்சிலர் குப்பம்மாள், மணலி எம்.ஜோசப், பகுதி பொருளாளர் ராஜா தோட்டம் வினோத்குமார் மாவட்ட பிரதிநிதிகள் சின்னசேக்காடு மேரி, மணலி முருகானந்தம் முல்லை கார்டன் ரத்தினம்.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மஞ்சம்பாக்கம் சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அண்ணாமலைநகர் ரவிச்சந்திரன்.

    மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்கள் நெட்டுக்குப்பம் ஜி.சாந்தா, முகத்துவார குப்பம் செல்வி, மோரை அஜிதா, பாலவேடு காமராஜ் நகர் தீபிகா. இதேபோல் மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, அம்மா பேரவை உள்ளிட்டவைகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருவொற்றியூர் மேற்கு பகுதி 1 கிழக்கு வட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கே.கண்ணன் விடுவிக்கப்பட்டு, 1 கிழக்கு வட்ட கழக வட்ட செயலாளராக எண்ணூர் தாளங்குப்பம் லைபான் நியமிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் நேற்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் வந்தது.
    • கல்குகையில் இருந்த கருஞ்சிறுத்தை குட்டி மாயமாகி இருந்தது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, காட்டெருமை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் நேற்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் வந்தது.

    பின்னர் கருஞ்சிறுத்தை அங்குள்ள யாரும் வசிக்காத ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. அங்கு தனது குட்டியை விட்டு விட்டு தாய் சிறுத்தை அங்கிருந்து சென்று விட்டது.

    குட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கருஞ்சிறுத்தை குட்டி இருந்தது.

    அதிர்ச்சியான அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு கூண்டுடன் விரைந்து வந்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் இருந்த கருஞ்சிறுத்தை குட்டியை மீட்டு கூண்டுக்குள் அடைத்தனர்.

    பிடிபட்ட கருஞ்சிறுத்தை குட்டியை எடுத்து கொண்டு மருதமலை அடிவாரத்தையொட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுத்தை குட்டியை அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக அங்கு ஒரு கல்குகையின் அருகே சிறுத்தை குட்டியை விட்டனர்.

    5 மணிக்கு அங்கு சிறுத்தைகள் வந்தது. ஆனால் கருஞ்சிறுத்தை குட்டி அவற்றுடன் செல்லவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் அதனை கண்காணித்தனர்.

    மாலை 5.15 மணிக்கு மீண்டும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கல்குகையில் இருந்த கருஞ்சிறுத்தை குட்டி மாயமாகி இருந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் வனத்திற்குள் சென்று பார்த்தனர். அப்போது கல்குகை இருந்த இடத்தில் இருந்து 300 அடி தூரத்தில் கருஞ்சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து கருஞ்சிறுத்தை குட்டியை பார்த்தனர். தொடர்ந்து சிறுத்தை குட்டி எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×