என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
பிரபலங்களின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கிய பாலா!
- நிறைய பிரபலங்கள் ஸ்ரீபாலாவை கண்ட மாத்திரத்தில் கண்ணீர் ததும்ப நின்றுள்ளனர்.
- உள்ளம் உருகச் செய்யும் இந்த அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1945ம் ஆண்டு பல்லக்கு ஒட்டகம்,
குதிரைகள், சேவகர்கள், யானைகள் என சகல பரிவாரங்களும் புடைசூழ நெமிலிக்கு வந்தார்.
மூன்று நாட்கள் அவர் அம்பாளின் பீடத்திலே தங்கி ஆனந்தமடைந்தார்.
அந்த பசுமையான நிகழ்ச்சி எல்லோர் மனதிலும் சுவையாகப் பதிந்து விட்டது.
வைத்த விழி வாங்காமல் நெமிலி ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியின் பேரழகைப் பருகிய ஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
"இந்த பாலா திரிபுர சுந்தரி பீடத்திலே எல்லா தெய்வங்களையும் ஒருசேரக் காண்கிறேன்" என மெய்மறந்து கூறினார்.
மயிலை குருஜி ஸ்ரீ சுந்தர ராம சுவாமிகள் "எனது குருநாதர் வள்ளிமலை சுவாமிகளுக்கு பாலா திரிபுர சுந்தரிதான் இஷ்ட தெய்வம்.
இந்த பாலாவைப் பார்க்கும்போது எனது குருநாதரைக் காண்கிறேன்" எனக் குதூகலம் பொங்கக் கூறினார்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பரம ஹம்ச புவனேஸ்வரி சுவாமிகள் ஒவ்வொரு ஆண்டும் "பாலா திரிபுர சுந்தரி ஹோமம்,
ஸ்ரீவித்யா ஹோமம், ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமம்" என பல ஹோமங்களைப் புரிந்து நெமிலி ஸ்ரீபாலாவின்
திவ்ய தரிசனத்திலே மனம் களித்து நின்று மந்திரகோஷம் புரிந்தார்.
காளிகாம்பாள் தேவஸ்தான ஸ்ரீ சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் தமது சகதர்மிணியின் பிரார்த்தனைக்கு இரங்கி
தமது இரண்டு மகள்களின் திருமணத்தை அன்னை நெமிலி ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி முடித்து வைத்தாள்
என்பதை அறிந்து நன்றியாக அந்த அன்னையின் சன்னிதியிலே 'த்ரிசதி'யை முழங்கி
அன்னையின் பீடத்திலே ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றார்.
ஸ்ரீ சாம்ப மூர்த்தி சிவாச்சார்யாருடன் வந்த திருவேற்காடு ஸ்ரீ ராமதாச சுவாமிகள் அன்னையின் அருளில் திளைத்து மனமெல்லாம் மகிழ்ந்து நின்றார்.
கொடுவிலார்பட்டி ஸ்ரீ சச்சிதானந்த ஆசிரமம் ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் அன்னையின் சன்னதியிலே
தீபாராதனைக் காட்சியைக் கண்டவுடன் குலுங்கிக் குலுங்கி அழுது அம்பாளின் சன்னதியிலே உளமுருகிப் போனார்.
நிறைய பிரபலங்கள் ஸ்ரீபாலாவை கண்ட மாத்திரத்தில் கண்ணீர் ததும்ப நின்றுள்ளனர்.
இப்படி அந்த சன்னிதியிலே எத்தனையோ அற்புதங்கள் நடந்துள்ளன!
"எனது ஊமைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்" என்று வேண்டிய பாடகர் அமரர் கே.வீரமணியின் குறையினை நீக்கினாள்.
"எனது பையனுக்குத் திருமணம் தள்ளிப் போகிறது. கண் திறந்து பாரம்மா பாலா" என வேண்டிக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதனுக்கு பாலா அருள்புரிந்தாள்.
"எனக்கு ஒரு திரைப்படம் கூட இல்லையே பாலா! நான் 45 நாட்களாக ஒருவித வேலையுமின்றி இருப்பதும் சரியா? தாயே! நீதானே என்னைக் காக்க வேண்டும்"
என்று முறையிட்ட இசையமைப்பாளர் சந்திரபோஸ் வாழ்க்கையிலே அன்னை புரிந்த விளையாட்டு அற்புதமானது.
இசைமணி பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனை தனது பீடத்திலே பல ஆண்டுகளாகப் பாட வைத்த பாலா,
ஒரு குறிப்பு தந்து அவர்களது மறைவை உணர வைத்த ஒரு பெரிய அதிசய நிகழ்ச்சியினை ஏற்படுத்தினாள்.
உள்ளம் உருக செய்யும் இந்த அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.