சினிமா செய்திகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-03-03 12:18 IST   |   Update On 2025-03-03 12:18:00 IST
  • தனபாக்கியம் நிறுவனத்திற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு.
  • ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட்டியுடன் சேர்த்து ரூ. 9.39 கோடியை வசூலிக்க ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்திற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி பங்குதாரராக இருக்கும் ஈசன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான "ஜகஜால கில்லாடி" என்ற படத்தை தயாரித்தது.

இந்தப் படத்தை தயாரிக்க தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ. 3 கோடியே 74 லட்சம் கடன் பெற்று இருந்தனர். கடன் ஒப்பந்தத்தின் படி இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி அளிப்பதாக உறுதியளித்து இருந்தனர். எனினும், இந்த கடனை திருப்பி அளிக்காததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

மத்தியஸ்தராக இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி இந்த விவகாரத்தை விசாரித்து, கடன் பாக்கி தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக "ஜகஜால கில்லாடி" படத்தின் மொத்த உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்க கடந்த ஆண்டு 2024-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டு இருந்தார். இந்த உரிமைகளை பெற்றுக்கொண்டு விற்று அந்த கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் என்றும் மீதித் தொகையை ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும் மத்தியஸ்தர் உத்தரவிட்டு இருந்தார்.

உத்தரவின் படி படத்தின் உரிமையை ஒப்படைக்கும் படி தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் கேட்டது. எனினும், படத்தின் பணிகள் முழுமை பெறவில்லை என்பதால் அதனை ஒப்படைக்க முடியாது என்று ஈசன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில் ராம்குமார் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து புதிய ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் தற்போது வரை கடன் தொகையில் 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 43 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் தெரிவித்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல், "இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஈசன் புரொடக்ஷன்ஸ் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. எனினும், இதுவரை பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News