ஆன்மிகம்
புனித அந்தோணியார்

தூய அந்தோணியார் நவநாள் செபம்

Published On 2020-06-23 15:06 IST   |   Update On 2020-06-23 15:06:00 IST
புதுமைகள் புரிய அருள்பெற்ற புனித அந்தோணியாரே எங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும்.
புதுமைகள் புரிய அருள்பெற்ற புனித அந்தோணியாரே எங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும். குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும் பேறுபெற்ற புனித அந்தோணியாரே, துன்பப்படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே, ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ உமது மன்றாட்டின் பயனை உணர்ந்து, அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உம்மிடம் வருகின்றோம். நீர் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி, எம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வேண்டிய வரங்களைப் பெற்றுத்தாரும். இறையருளை நிரம்பப் பெற்ற புனித அந்தோணியாரே, நாங்கள் உம் வாழ்வைப் பின்பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே அன்பு செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நாங்கள் வந்தடைய எங்களுக்கு இறையருளைப் பெற்றுத்தாரும்.

எங்கள் பாதுகாவலரான புனித அந்தோணியாரே, மகிமையில் விளங்கிடும் புனித லீலியே, துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே, அழுவோரின் ஆறுதலே, உம்மை நாடிநிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும். எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும். நீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால் எங்களிடமிருந்து நீக்கியருளும்.

ஆமென்.

*தூய அந்தோணியார் மன்றாட்டு மாலை* :

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய தமதிரித்துவமாயிருக்ககிற ஒரே இறைவா
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தூய மரியாயே
கன்னியரில் உத்தம கன்னிகையே
பதுவைப் பதியரான தூய அந்தோணியாரே
பரத்தின் சீர்மிகு பெட்டகமான தூய அந்தோணியாரே
தூய்மையில் லீலி மலரான தூய அந்தோணியாரே
தவ வலிமை மிக்க தூய அந்தோணியாரே
தருமத்தை விரும்பிச் செய்து வந்த தூய அந்தோணியாரே
திருச்சிலுவையை மிகவும் நேசித்தவரான தூய அந்தோணியாரே
தரும நெறியில் மாறா மனத்தினை உடைய தூய அந்தோணியாரே
சிற்றின்ப ஆசையினை வென்றவரான தூய அந்தோணியாரே
போர்ச்சுக்கல் நாட்டின் நவ விண்மீனான தூய அந்தோணியாரே
நற்செய்தியை ஊக்கமுடன் பிரசங்கித்த தூய அந்தோணியாரே
இறைவனின் திருவாக்கில் குரல் ஒலியான தூய அந்தோணியாரே
தூய ஆவியானவரின் படிப்பினைகளை விரும்பியவரான தூய அந்தோணியாரே
விசுவாசமில்லாதவர்களுக்கு வாய்மையாய் உபதேசம் செய்கிறவரான தூய அந்தோணியாரே
பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான தூய அந்தோணியாரே
புண்ணியவான்களுக்கு நிறைவான படிப்பினையான தூய அந்தோணியாரே
மீனோரென்கிற துறவிகளுக்குப் படிப்பினையான தூய அந்தோணியாரே
அப்போஸ்தலர்களின் கொழுந்தான தூய அந்தோணியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் தருகிறவரான தூய அந்தோணியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான தூய அந்தோணியாரே
வழிதவறிப் போவோர்க்குத் துணையான தூய அந்தோணியாரே
சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் தூய அந்தோணியாரே
குற்றமற்ற மக்களின் ஆறுதலும் பாதுகாவலுமான தூய அந்தோணியாரே
ஊமைகளைப் பேசச்செய்கிறவரான தூய அந்தோணியாரே
உண்மையைப் போதிக்கும் உபதேசியான தூய அந்தோணியாரே
பசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான தூய அந்தோணியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான தூய அந்தோணியாரே
பிணியாளர்களைக் குணமாக்குகிறவரான தூய அந்தோணியாரே
மரணமடைந்தோர்க்கு இறைவன் உதவியால் உயிர்கொடுத்தவரான தூய அந்தோணியாரே
பிறவிக் குருடருக்குப் பார்வை அளித்த தூய அந்தோணியாரே
காணாமற் போனவைகளைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோணியாரே
இழந்துபோன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோணியாரே
வழக்காளிகளுடய உண்மையைப் பாதுகாக்கிறவரான தூய அந்தோணியாரே
பரத்திற்கு சுதந்திரவாளியான தூய அந்தோணியாரே
தரித்திரருக்கு இரத்தினமான தூய அந்தோணியாரே
கடலில் மீன்களுக்கு உபதேசித்தவரான தூய அந்தோணியாரே
விஷஉணவு அருந்திய தூய அந்தோணியாரே
அப்போஸ்தலர்களின் குறைவற்ற தூய்மையை நேசித்தவரான தூய அந்தோணியாரே
புண்ணியமென்கிற ஞான வேளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான தூய அந்தோணியாரே
உலகமென்கிற அபத்தத்தை விட்டகன்ற தூய அந்தோணியாரே
கடலில் தத்தளித்த வீரர்களை மீட்ட தூய அந்தோணியாரே
உம்மை வேண்டுவோரின் அன்பரான தூய அந்தோணியாரே
எண்ணிறந்த ஆன்மாக்களை பரத்திற் சேர்த்த தூய அந்தோணியாரே
நன்னாக்கு அழியாத நற்றவரான தூய அந்தோணியாரே
பிரான்சிஸ் அசியாரின் சபை அரணான தூய அந்தோணியாரே
சிறுகுழந்தை வடிவில் வந்த தேவபாலனைத் தாங்கிய தூய அந்தோணியாரே
நீர் இறந்ததை சிறு குழந்தை வழியாக தெருக்களில் இறைவனால் அறிவிக்கப்பட்ட பேறுபெற்றவரான தூய அந்தோணியாரே
இறந்த ஓர் ஆண்டிற்குள் பீடத்தின் மகிமைக்கு உயர்த்தப்பட்ட தூய அந்தோணியாரே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
மன்றாடுவோமாக:
தூய அந்தோணியாரே, வீரமிகும் ஆயரே, துன்புறுவோருக்கு மகிழ்வு தருபவரே, பாவிகளை மீட்டிட அரும்பாடுபட்டவரே, இவ்வுலக துன்பங்களுக்குப் பின் எங்களுக்கு முடிவில்லா பேரின்ப வாழ்வு தரவும் இக்கட்டுகள் நீங்கப் பெறவும் வேண்டும் வரங்கள் கிடைக்கவும், எங்கள் ஆண்டவரும் இறைவனின் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடும். இயேசு கிறிஸ்துநாதர் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படியாக தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

Similar News