ஆன்மிகம்
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை யொட்டி கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம்.

பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-05-03 08:47 IST   |   Update On 2017-05-03 08:47:00 IST
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் பூவராகசுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பூவராகசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இரவு சிம்ம வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.



சித்திரை திருவிழாவை யொட்டி தினமும் அன்னம், சேஷ, அனுமந்த, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

10-ந்தேதி மட்டையடி உற்சவமும், நித்திய புஷ்கரணியில் தீர்த்தவாரியும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் மதனா, ஆலய தக்கார் சீனுவாசன், உபயதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News