ஆன்மிகம்
வெறிச்சோடிய ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை

வெறிச்சோடிய ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை

Published On 2020-06-22 10:38 IST   |   Update On 2020-06-22 10:38:00 IST
கொரோனா ஊரடங்கால் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் மற்றும் கடற்கரை பகுதி பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் கடந்த 89 நாட்களாக ராமேசுவரம் கோவிலின் ரத வீதிகள் மற்றும் அக்னிதீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

வழக்கமாக ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் வந்த அமாவாசை அன்றும் பக்தர்கள் வராமல்அக்னிதீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்தநிலையில் ஆனி மாதத்தின் சர்வ அமாவாசையான நேற்றும் பக்தர்கள் இல்லாமல் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை பகுதி, கோவிலின் ரத வீதிகள் வெறிச்சோடின.

மண்டலங்களுக்குள் வாகனங்களில் செல்லலாம் என்ற அரசின் அறிவிப்பால் நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு கார், வேன் மற்றும் அரசு பஸ்கள் மூலமாகவும் மதுரை, சிவகாசி, சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் பக்தர்கள் ராமேசுவரம் வந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் நீராடி விட்டு கோவிலின் கிழக்குவாசல் முன்பு தேங்காய் உடைத்தும், சூடன் ஏற்றியும் கோபுர தரிசனம் செய்தனர்.

கொரோனாவால் கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்ய, கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக வந்த அமாவாசை நாட்களில் கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்யும் புரோகிதர்கள் மற்றும் பக்தர்களை நம்பி கோவிலை சுற்றி உள்ள ஓட்டல் மற்றும் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். 

Similar News