இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியாது: பழனி முருகன் கோவிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி
- இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 முதல் மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
- நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும்.
பழனி:
இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்வு தெரியாது என்பதால் நாளை பழனி முருகன் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வானியல் நிகழ்வுகளில் கிரகணங்கள், கிரகண காலங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வகையில் நாளை (29-ந் தேதி) இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும்போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழனி முருகன் கோவிலில் அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
கிரகணம் முடிந்து பரிகார பூஜைகளுக்கு பின்னே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உப கோவில்களான திருஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.