உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம்: தி.மு.க. கவுன்சிலர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Published On 2025-02-18 11:23 IST   |   Update On 2025-02-18 11:23:00 IST
  • போலீசார் மற்றும் தி.மு.க.வினர் வக்கீலை தாக்கியுள்ளனர்.
  • திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லை சேர்ந்தவர் வக்கீல் உதயகுமார். இவர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இருந்து மாலை தனது குழந்தையை அழைத்து வரச்சென்றார். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் சாலையோரம் கிடந்தது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது.

பள்ளி முன்பு சாலையோரம் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றக்கோரி கட்சி அலுவலகத்தில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்திக்க உதயகுமார் சென்றார். அப்போது அவரை வழிமறித்த அமைச்சரின் பாதுகாப்பு போலீசார் இதுகுறித்து நாங்களே மாநகராட்சியிடம் கூறி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம் என்று சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஆனால் நான் அமைச்சரை சந்தித்து புகார் செய்துவிட்டு தான் செல்வேன் என கூறி கட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றுள்ளார். இதை தடுத்ததில் பாதுகாப்பு போலீசாருக்கும் வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் மற்றும் தி.மு.க.வினர் வக்கீலை தாக்கியுள்ளனர்.

இதனால் உதயகுமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சக வக்கீல்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஏராளமான வக்கீல்கள் அங்கு திரண்டு தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்கீல்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பு அமைச்சர் இ.பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் சென்றுவிட்டார்.

இதையடுத்து கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய வக்கீல்கள் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல வக்கீல்கள் அதிகம் பேர் வரத்தொடங்கி போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதை கண்ட வக்கீல்கள் திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. தெய்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வக்கீலை தாக்கிய அமைச்சரின் பாதுகாப்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என கூறி இரவு 11 மணி வரை அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து காலையில் பேசிக்கொள்ளலாம் என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. உறுதி அளித்தார்.

இன்று காலையிலும் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு வக்கீல்கள் ஏராளமானோர் குவிந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனையடுத்து 7வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுபாஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இருந்தபோதும் அதில் சமாதானம் அடையாத வக்கீல்கள் அவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன் திண்டுக்கல்லில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags:    

Similar News