கைது செய்யப்பட்ட பார்வதி, சித்ரா.
உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பெண்கள் கைது
- ஜோத்தம்பட்டி பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவான வேளையில் 4 பெண்கள் வந்துள்ளனர்.
- 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடுமலை :
உடுமலை ஜோத்தம்பட்டி பகுதியிலுள்ள சங்கர் என்பவர் தனது மகளுடன் தோட்டத்து பகுதியில் வசித்து வருகிறார். அவர் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.ஆள் நடமாட்டம் குறைவான வேளையில் அங்கு 4 பெண்கள் வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் வெளியே நின்று கொண்டு நோட்டமிட மற்ற 2 பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அருகிலுள்ள தோட்டத்திலிருந்த ஒருவர் இந்த பெண்களைப் பார்த்து சந்தேகமடைந்து அங்கே சென்றுள்ளார். உடனடியாக ஆடைகளைக் களைந்து அரை நிர்வாண கோலத்தில் நின்ற பெண்கள் அவரின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.
அப்போது வீட்டின் உரிமையாளரான சங்கரியும் அங்கே வந்துள்ளார்.வீட்டுக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பெண் போலீசாருடன் அங்கு சென்ற சப் -இன்ஸ்பெக்டர் தனசேகரன் 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர்கள் சேலத்தைச் சேர்ந்த பார்வதி (வயது 32), சித்ரா(வயது 30) என்பது தெரிய வந்தது.மேலும் அவர்கள் ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருடுவதும், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களுடன் வந்த பெண்கள் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. பார்வதி,சித்ரா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.