உள்ளூர் செய்திகள் (District)

பாலக்கோடு பகுதியில் இரவு நேரத்தில் விபத்துகளை தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கிற்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

Published On 2023-11-15 09:38 GMT   |   Update On 2023-11-15 09:38 GMT
  • பாலக்கோடு பகுதியில் வாகனஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கிற்கு கருப்பு ஸ்டிக்கரோ அல்லது கருப்பு பெயின்ட் எதுவும் ஒட்டாமல் அப்படியே இரவு நேரங்களில் ஓட்டி செல்கின்றனர். இதன் காரணமாக அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
  • பாலக்கோடு பகுதியில் இரவு நேரத்தில் விபத்துகளை தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கிற்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, வெள்ளிச்சந்தை, பாலக் கோடு, காரிமங்கலம், பெரியம்பட்டி, புலிகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களில் முகப்பு விளக்குகள் கண்கள் கூசும் அளவிற்கு பிரகாசிப்பதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது.

மாவட்டத்தில் கனரக வாகனங்கள் பஸ், கார், இருசக்கர வாகனங்கள் என தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் வாகனங்களுக்கு முகப்பு விளக்கிற்கு நடுவில் கருப்பு பெயின்ட் அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் இதுபோன்று வாகன முகப்பு விளக்கிற்கு கருப்பு ஸ்டிக்கரோ அல்லது கருப்பு பெயின்ட் எதுவும் ஒட்டாமல் அப்படியே இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளிர விட்டு ஓட்டி செல்கின்றனர்.

இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசுவதுடன் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. மேலும் பல வாகனங்களில் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதால் அதிகமாக கண் கூசுவதாகவும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருவதாகவும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போலீசார் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News