இந்தியா

சண்டிகரில் துணிகரம்: பட்டப்பகலில் நீதிமன்றத்தில் ஐஆர்எஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற மாமனார்

Published On 2024-08-03 20:49 IST   |   Update On 2024-08-03 20:49:00 IST
  • இரு குடும்பத்தினருக்கு இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளது.
  • இதுதொடர்பாக சமரசம் பேசுவதற்காக சண்டிகர் குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்தனர்.

சண்டிகர்:

முன்னாள் போலீஸ் அதிகாரியான மல்விந்தர் சிங் சித்துவுக்கும், அவரது மருமகன் ஹர்பிரித் சிங் குடும்பத்துக்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

இரு தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக சமரசம் பேசுவதற்காக சண்டிகர் குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது கழிவறை செல்ல வேண்டும் என மல்விந்தர் சிங் கேட்டுள்ளார். அவருக்கு வழிகாட்ட மருமகன் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் நீதிமன்றத்தின் உள்ளேயே துப்பாக்கி சுடும் சத்தம் திடீரென கேட்டது.

மாமனார் மல்விந்தர் சிங், மருமகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 5 குண்டுகள் பாய்ந்து மருமகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

துணிச்சலான சில வக்கீல்கள் மாமனாரை மடக்கிப் பிடித்து அருகிலுள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினர். இதுதொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து மல்விந்தர் சிங்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் மருமகனை மாமனார் சுட்டுக் கொன்ற சம்பவம் சண்டிகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News