புதுச்சேரி

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

Published On 2024-08-28 07:00 GMT   |   Update On 2024-08-28 07:00 GMT
  • வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.
  • குடிசை தொழில், தோட்டக்கலை, பண்ணைகளுக்கான மின்சார கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை.

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

மின்துறையின் வரவு - செலவு கணக்குகளை கணக்கிட்டு கட்டணத்தை உயர்த்த கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்துறை கோரிக்கை வைக்கும்.

ஆணையம் கட்டண உயர்வு தொடர்பாக பொது மக்களிடம் கருத்துகேட்டு கட்டணங்களை உயர்த்த அனுமதி அளிக்கும். ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு வழக்கமாக அமலுக்கு வரும்.

ஜூன் மாதம் முதல் உயர்வு இந்த நிதியாண்டிற்கான (2024-25) கட்டணத்தை நிர்ணயிக்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் மின்கட்டணத்தை உயர்த்த புதுவை மின்துறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது.

ஜனவரி மாதத்தில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுவை வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது.

இதனைதொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடர் நடந்ததால் மின் கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல், அதாவது 2 மாதம் முன்கூட்டியே நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை 50 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ. 1.45 ஆக இருந்தது. அது ரூ.1.95 ஆக உயர்ந்துள்ளது.

100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான்கட்டணம் ரூ.2.25-லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.25-லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.5.40-லிருந்து ரூ.6 ஆகவும், 301 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-லிருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது.

வர்த்தகபயனபட்டிற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேநேரத்தில் அவர்களுக்கான நிலைக்கட் டணமானது கிலோவாட் டுக்கு ரூ.75-லிருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. உயர் மின் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.60-லிருந்து ரூ.6ஆகஉயர்ந்துள்ளது. அவர்களுக்கான நிலைக் கட்டணம் ரூ. 420-லிருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது.

சிறு விவசாயிகளுக்கான நிலைக் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், இதர விவசாயிகளுக்கு ரூ.75- லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குடிசை தொழில், தோட்டக்கலை, பண்ணைகளுக்கான மின்சார கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை.

குறைந்த மின் அழுத்ததொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.35-லிருந்து ரூ.7 ஆகவும், உயர்மின் அழுத்ததொழிற்சாலைகளுக்கான கட்டணம் ரூ.5.45-லிருந்து ரூ.6.00 ஆகவும், நிலைக்கட்டணங்களும் கிலோவாட்டுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News