மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- முதுநிலை மாணவர் 6 மாதம் சஸ்பெண்டு
- கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
- கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சமீப காலமாக உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் செயல்கள் நடந்து வருகிறது.
எனவே மாணவிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் எம்.பி.பி.எஸ். பயிற்சி மருத்துவ மாணவிகள் 2 பேருக்கு முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். அதன் பேரில், கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மருத்துவ மாணவரை 6 மாதம் சஸ்பெண்டு செய்துள்ளது.
இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.