கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா- நியூசிலாந்து

Published On 2025-03-06 12:12 IST   |   Update On 2025-03-06 12:12:00 IST
  • இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது.
  • நியூசிலாந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

துபாய்:

8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது. லீக் போட்டிகள் கடந்த 2-ந்தேதி முடிவடைந்தது.

லீக் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன. கடந்த 4-ந் தேதி துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. லாகூரில் நடந்த 2-வது அரையிறுதியில் நியூசிலாந்து 50 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.

இறுதிப்போட்டி வருகிற 9-ந்தேதி துபாயில் நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. 2000-ம் ஆண்டு கென்யாவில் 2-வது ஐ.சி.சி. நாக் அவுட் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா-நியூ சிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதுவரை 8 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற்றுள்ளன. தற்போது தான் முதல் முறையாக ஏற்கனவே இறுதிப்போட்டியில் மோதிய அணிகள் மீண்டும் மோதுகின்றன.

இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதற்கு முன்பு 2000,2002,2013,2017 ஆகிய ஆண்டுகளில் முன்னேறி இருந்தது. இதில் 2002,2013-ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நியூசிலாந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்பு 2000,2009-ல் இறுதிப்போட்டியில் ஆடியது.

Tags:    

Similar News