செய்திகள்

வில்லியனூர் மாதா ஆலயத்தில் கவர்னர் கிரண்பேடி சிறப்பு பிரார்த்தனை

Published On 2017-05-14 16:19 IST   |   Update On 2017-05-14 16:19:00 IST
வில்லியனூர் மாதா கோவிலுக்கு கவர்னர் கிரண்பேடி இன்று காலை சைக்கிளில் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
வில்லியனூர்:

கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் புதுவையின் பல்வேறு இடங்களுக்கும் சென்று தூய்மை பணியை ஆய்வு செய்து வருகிறார்.
மேலும் கோவில் குளங்களையும் பார்வையிட்டு நீராதாரத்தை பாதுகாக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

அதுபோல் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் வில்லியனூர் லூர்து மாதா ஆலயத்துக்கு வந்தார். அங்கு ஆலயம் முழுவதையும் சுற்றி பார்த்த கவர்னர் பின்னர் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பிரார்த்தனை கூடத்தில் மாதாவை வணங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
அதனைத்தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை மற்றும் நிர்வாகிகளிடம் ஆலய சிறப்புகள் பற்றி கேட்டறிந்தார். கிறிஸ்தவ ஆலயங்களில் எங்குமே குளம் இல்லாத நிலையில் வில்லியனூர் லூர்து மாதா ஆலயத்தில் மட்டும் குளம் அமைந்துள்ளதற்கான வரலாறுகளையும் கேட்டறிந்தார்.

பின்னர் ஆலயத்தையும், குளத்தையும் சுத்தமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர் சைக்கிளிலேயே கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாஸ் புறப்பட்டு சென்றார்.

Similar News