தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றாவிட்டால் கடையடைப்பு போராட்டம்... அன்புமணி ராமதாஸ்

Published On 2024-09-08 08:55 GMT   |   Update On 2024-09-08 08:55 GMT
  • இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது.
  • தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.

தருமபுரி:

தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள பா.ம.க. கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று தருமபுரிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் இன்று வருகை தந்தனர்.

அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. அது தண்ணீர் பிரச்சனை. இந்த பிரச்சனை தீர்க்க பா.ம.க.வினர் பல கட்டங்களாக போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அரங்கேற்றி இருக்கிறோம். அதன் விளைவாக நிறைவேற்றப்பட்டது தான், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாயம் நிறைந்த மாவட்டம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால், 2, 3, அல்லது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து முதலாளியாக இருந்த விவசாயிகள் தற்போது கூலி ஆட்களாக திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினக்கூலிகளாக வேலைக்கு செல்கின்றனர்.

தருமபுரி மாவட்டத்திலேயே அவர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேறுவதற்காக பல திட்டங்களை பா.ம.க. முன்னெடுத்தது. இதில் எண்ணகோள்புதூர் திட்டம், ஆணைமடுவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முக்கிய திட்டமான காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தோம். இதுபோன்று பல கட்டங்களாக போராட்டம் நடத்தியதன் விளைவாக சென்ற ஆட்சியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றுவதாக அவர் அறிவிப்பையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு காவிரி உபரி நீர் திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை.

இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.

இதைக்கூட நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அதனால் அகிம்சை முறையில் முதற்கட்டமாக அடுத்த மாதம் 4-ந்தேதி தருமபுரியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை அனைத்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு அரசுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News