தமிழ்நாடு (Tamil Nadu)

பாக்ஸ்கானில் திருமணமான பெண்களுக்கு வேலை மறுப்பு: தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் மத்திய அமைச்சகம்

Published On 2024-06-26 14:58 GMT   |   Update On 2024-06-26 14:58 GMT
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது.
  • உதிரிபாகங்களை கொண்டு ஐபோன் செல்போன்களை தயாரித்து வருகிறது.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது.

இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது. அப்போது திருமணம் ஆன இரண்டு பெண்கள் வேலை கேட்டு நேரில் சென்றுள்ளனர். அப்போது கேட் அருகில் நின்ற அதிகாரிகள் திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேட்டுள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இங்கு வேலை கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

இது அந்த பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பான செய்தி மெல்லமெல்ல பரவியது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் கட்டுரையாக எழுதி உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் திருமணம் செய்த பெண்களுக்கு வேலைகிடையாது என்ற பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக விமர்சித்திருந்தனர்.

இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது. மண்டல தலைமை தொழிலாளர் அலுவலக ஆணையரும் அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.

திருமணமான பெண்களுக்கு வீட்டு பொறுப்பின் காரணமாக அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேலை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஐ-போன், பாக்ஸ்கான் நிறுவனங்கள் இதுபோன்ற நடைமுறை எங்கள் நிறுவனத்தில் இல்லை என இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

சம ஊதியச் சட்டம் 1976-இன் பிரிவு 5 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது என்று தெளிவாக குறிப்பிடுகிறது என்று தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News