தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றப்படுவாரா? டெல்லி மேலிடத்தில் மூத்த நிர்வாகிகளும் புகார்

Published On 2024-09-22 05:19 GMT   |   Update On 2024-09-22 05:19 GMT
  • தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது ரூ.100 கோடி கேட்டு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
  • கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சில எம்.பி.க்கள் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.

தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெட்டி கொல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் மாயாவதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாநில காவல்துறை நடவடிக்கை எடுத்து பாரதிய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 28 பேரை கைது செய்துள்ளது . ஒரு ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கைதாகி இருப்பதால் அரசியல் ரீதியாகவும் பலரது தலைகளை உருட்டுகிறது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஸ்வத்தாமன் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கிறார். அவரை பதவியில் இருந்தும் கட்சி நீக்கி இருக்கிறது.

இதற்கிடையில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது பகுஜன் சமாஜ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. அவரையும் விசாரிக்க வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் என்பவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த கடிதம் வெளியானபோது டெல்லி காங்கிரஸ் பார்வையாளர்கள் அஜய்கு மார், சூரஜ்ஹெக்டே ஆகியோர் சென்னையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இருக்கிறார்கள். இதுபற்றி அவர்களும் விசாரித்து டெல்லி மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மாநில செயற்குழு கூட்டம் நடந்த போது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக மாநில காங்கிரஸ் கமிட்டி கூறி இருக்கிறது.

தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது ரூ.100 கோடி கேட்டு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் செல்வப்பெருந்தகை சந்தித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

செல்வப்பெருந்தகை மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் அந்த கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சில எம்.பி.க்கள் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது தலைவர் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்து இருப்பது துரதிருஷ்டவசமானது. கட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் உருவாகும். எனவே அவர் பதவியில் தொடர்வது நல்லதல்ல என்று தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக டெல்லி தலைமையும் தமிழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News