முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு ஏமாற்றுக்காரர் - அண்ணாமலை
- வழக்கமாக, ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களை ஏமாற்றுவார்கள்.
- தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது.
சென்னை :
தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக பதிலளித்தார். அதில், "இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது. இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?" என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை மேற்கொள் காட்டி கூறியிருப்பதாவது:-
"திரு. மு.க. ஸ்டாலின், நீங்கள் நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாவலர் என்று வேடமிட்டு ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர். வழக்கமாக, ஏமாற்றுபவர்கள் பணக்காரர்களைத் தான் ஏமாற்றுவார்கள். ஆனால் தி.மு.க. எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை; அவர்கள் பணக்காரர்களையும் ஏழைகளையும் சேர்த்தே ஏமாற்றுகிறார்கள்.
தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது. ஆனால் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்த கொள்கையை எதிர்க்கிறது என்பதை இப்போது மொத்த நாடும் அறிந்திருக்கிறது. அவர்கள் உங்களை ஒரு நயவஞ்சகர் என்று அழைக்கிறார்கள், மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் தனது கட்சிக்காரர்கள் அங்கும் இங்கும் திட்டமிட்டு நடத்திய நாடகம் முழு தமிழகத்தின் குரலையும் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறார். மக்களின் கவனத்தை முக்கியமற்ற விஷயங்களில் திசைதிருப்ப நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அம்பலமாகிவிட்டன என்பதை நீங்கள் உணரவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது.
உங்கள் அறியாமையின் பேரின்ப உலகில் வாழ்க, மு.க. ஸ்டாலின். நாங்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம்," என்று கூறியுள்ளார்.