மக்களிடம் அறநெறிகளை வளர்த்தவர் அய்யா வைகுண்டர்- அண்ணாமலை
- சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர்.
- அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்று அன்பு நெறிகளை போதித்து, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் அய்யா வைகுண்டர் அவர்களின் 193 ஆவது அவதார தினத்தைக் கொண்டாடும் உலகளாவிய பக்தர்கள் அனைவருக்கும், பா.ஜ.க. சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்ற ஞானத்தைப் போதித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர்.
உடல் தூய்மையையும், உள்ளத் தூய்மையையும் வலியுறுத்தி, மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் போன்ற அறநெறிகளை வளர்த்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள்.
அதிகாரத்துவம், சமூக ஏற்றத்தாழ்வு, கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், அய்யா வைகுண்டர் அவர்களின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாக இருக்கிறது.
அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினமான இன்று, அவரின் கருத்துகளைப் பின்பற்றி, அவர் காண விரும்பிய, ஏற்றத்தாழ்வற்ற, அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம்.
அய்யா உண்டு!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.