ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் யாரும் இல்லாததால் திமுக போலி வெற்றி- இபிஎஸ்
- இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதால் சவுக்கடி கொடுத்துள்ளனர்.
- ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பியதால் டெல்லியில் பாஜக வென்றுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் 3 ஆசிரியர்கள் இணைந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது தொடர் கதையாகி வருகிறது.
வேலூரில் ஓடும் ரெயிலில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் தள்ளிவிடப்பட்டதில் 4 மாத கரு சிதைவு செய்தியால் வேதனை அடைந்தேன்.
காவல்துறையில் உயர்பதவியில் உள்ள ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து என கூறுவது மிகுந்த அச்சத்தை தருகிறது.
சிவகங்கையில் காவல் நிலையத்திலேயே பெண் எஸ்.ஐ தாக்கப்படுகிறார்.
தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பற்ற நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எந்த நிலை இருக்கும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடந்துள்ளது என்பதே திமுகவின் மோசமான ஆட்சிக்கு சான்று.
ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பியதால் டெல்லியில் பாஜக வென்றுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் யாரும் இல்லாததால் போலி வெற்றியடைந்துள்ளது. நெல்லையில் சென்று அல்வா சாப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்துவிட்டார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது அல்வா கொடுத்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல், திமுக அரசு கடன் வாங்குவதற்கான அவசியம் என்ன ?
2020- 21ல் அதிமுக ஆட்சியில் வந்த வருவாயைவிட தற்போது ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் வருகிறது.
இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதால் சவுக்கடி கொடுத்துள்ளனர். டெல்லி தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி இருக்கிறதா இல்லையா என்கிற சந்தேகம் எழும்புகிறது.
இந்தியா கூட்டணி எப்படி ஒற்றுமையாக இருந்து செயலாற்ற முடியும்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பலமாக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு என செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.