கருப்பசாமி பாண்டியன் மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்
- பல பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.
- அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழகத்தின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவரும், அனைவராலும் 'கானா' என்று பாசத்தோடு அழைப்பவருமான ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உடன் மிகவும் நெருங்கிப் பழகியவரும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா பேரன்பைப் பெற்றவருமான அன்பு அண்ணன் கருப்பசாமி பாண்டியன், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர், கழக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவர்.
1998-ல் திருநெல்வேலியில் கழக வெள்ளிவிழா மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றதற்கு இவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை. அன்பு அண்ணன் கருப்பசாமி பாண்டியன் இழந்து வாடும். அவரது மகனும், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளருமான வி.கே.பி. சங்கர், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.