தனியாரிடம் அதிக விலைக்கு வாங்குவதற்காக தாமதிக்கப்படுகிறதா வடசென்னை அனல் மின்நிலையம்?- அன்புமணி கேள்வி
- மின் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசுக்கு ஆர்வமில்லை.
- தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதில் தான் ஆர்வம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
ஓராண்டாகியும் மின்னுற்பத்தி தொடங்காத வடசென்னை அனல் மின்நிலையம்: தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தாமதமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் ரூ.10.158 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம்-3 திறக்கப்பட்டு ஓராண்டாகும் நிலையில், இன்று வரை அதில் வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.
மின் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசுக்கு ஆர்வமில்லை. தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதில் தான் ஆர்வம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. வடசென்னை அனல் மின் நிலையம்-3 கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் மார்ச் 7-ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரம் அவசரமாக தொடங்கி வைக்கப்பட்டது.
பொதுவாக அனல் மின் நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு சில வாரங்களில் வணிக ரீதியிலான மின்சார உற்பத்தியை தொடங்குவது வழக்கம். ஆனால். வடசென்னை அதி உய்ய அனல் மின் நிலையம்-3 திறக்கப்பட்டு ஓராண்டாகியும் அங்கு மின்னுற்பத்தி தொடங்கப்படாததற்கு மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடுகளும் ஒரு காரணம் என்றால்.
இன்னொரு காரணம் அங்கு மின்னுற்பத்தி தொடங்கப்பட்டால் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க முடியாது என ஆட்சியாளர்கள் கருதுவது தான். அதனால் தான் பெயரளவில் தொடங்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலையம் -3 இல் இப்போது வரை வணிக அடிப்படையிலான மின்னுற்பத்தி தொடங்கப்படாமல் தாமதம் செய்யப்படுகிறது.
ஒரு மின்நிலையம் தொடர்ந்து 3 நாட்களுக்காவது, அதாவது குறைந்தது 72 மணி நேரத்திற்கு அதன் முழுத் திறனில் இயங்கினால் தான் அது செயல்பாட்டுக்கு வந்ததாக பொருள் ஆகும். ஆனால், 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின் நிலையம்- 3 இன்று வரை ஒருமுறை கூட 72 மணி நேரம் அதன் முழுத்திறனில் இயங்கவில்லை.
அதனால் தான் வடசென்னை அனல் மின்நிலையத்தால் வணிக அடிப்படையிலான மின்னுற்பத்தியைத் தொடங்க முடியவில்லை. வட சென்னை அனல் மின்நிலையம் கடந்த 11 மாதங்களில் இயல்பாக இயங்கியிருந்தால் 1200 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால், 100 கோடி யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை மட்டுமே வடசென்னை அனல் மின்நிலையம் உற்பத்தி செய்திருக்கிறது.
வடசென்னை அனல் மின்நிலையத்தின் தோல்விக்கு இதை விட சான்று தேவையில்லை. வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை கையாள்வதற்கான தளம். நிலக்கரியை மின்நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான கன்வேயர் பெல்ட், எரிக்கப்பட்ட நிலக்கரியின் சாம்பல் வெளியில் பரவாமல் தடுப்பதற்கான சேமிப்புக்குளம் ஆகியவை கட்டமைக்கப்படாதது தான் அங்கு மின்னுற்பத்தி தொடங்கப்படாததற்கான முதன்மைக் காரணம் ஆகும்.
இந்தக் குறைகளை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலும் இவற்றை சுட்டிக்காட்டிய நான். இவற்றை சரி செய்து விரைவாக மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், அதன்பின் 5 மாதங்களாகி விட்ட நிலையில் இன்று வரை அந்தக் குறைகள் சரி செய்யப்படவில்லை. குறைகளை களைவதற்காக ரூ.50 கோடி தேவைப்படுவதாகவும், அந்த நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் அனல் மின்நிலையத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்களுக்கு மேலாகியும் அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்குவதில் அரசு திட்டமிட்டே தாமதம் செய்வதாகத் தோன்றுகிறது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் வணிக அடிப்படையில் மின்னுற்பத்தியைத் தொடங்குவதை விட, நாடகங்களை நடத்துவதில் தான் தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது. வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பாட்டுக்கு வருவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தைச் சுட்டிக்காட்டி கடந்த நவம்பர் 29-ம் நாள் மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், டிசம்பர் 7-ம் தேதி அறிக்கை வெளியிட்ட மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வட சென்னை அனல்மின் நிலையம் வணிக ரீதியில் மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டதா? என்பது குறித்து எந்த பதிலையும் தெரிவிக்காமல், ஜூலை 27-ம் தேதி 800 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனை எட்டி விட்டதாக மழுப்பலான பதிலைக் கூறினார்.