தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழக 2-ம் ஆண்டு தொடக்க விழா: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்

Published On 2025-02-25 10:51 IST   |   Update On 2025-02-25 10:51:00 IST
  • 3 ஆயிரம் பேருக்கு சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
  • நாளைய கூட்டத்தில் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் வகுத்து வருகி றார்.

இதற்காக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் கைகோர்த்துள்ளார். அவர் ஏற்கனவே சென்னை வந்து இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நாளை நடைபெறுகிறது. அங்குள்ள 'கான்புளுயுன்ஸ்' ஓட்டலில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் விஜய் பங்கேற்று பேசுகிறார்.

அப்போது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் அவர் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளையும் வெளிடுகிறார்.

இந்த கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கருத்துக்களை தெரிவிக்கிறார். இதனால் நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி நிர்வாகிகளுடன் புதிதாக போடப் பட்ட 28 அணிகளின் நிர்வாகிகளும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்காக 3 ஆயிரம் பேருக்கு சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏற்கனவே சென்னைக்கு வந்து விட்டனர். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அவர்களுக்கான அனுமதி சீட்டை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட கட்சி நிர்வாகிகள் மாமல்லபுரத்துக்கு நேற்றே சென்று விட்டனர்.

இவர்களின் வசதிக்காக திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கி கொடுக் கப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை துபாயை சேர்ந்த பாதுகாவலர்கள் 300 பேர் மேற்கொண்டு உள்ளனர்.

அவர்கள் கூட்டம் நடக்கும் அரங்கத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

விஜய் மற்றும் முன்னணி நிர்வாகிகள் செல்வதற்கு தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விஜய் செல்லும் வழியில் யாரும் நுழைந்து விடாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

தொடக்க விழாவை யொட்டி சிறப்பு சைவ விருந்துக்கு விஜய் ஏற்பாடு செய்துள்ளார். 17 வகையான அறுசுவை உணவு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகிறது.

தொடக்க விழாவை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப் பட்ட 18 பேர் கொண்ட குழுவும் விழாவுக்கான ஏற்பாடுகளை பம்பரமாக சுழன்று செய்து வருகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது என்பது பற்றிய முக்கிய அறிவிப்பையும் நாளைய கூட்டத்தின் போது விஜய் வெளியிடுகிறார்.

விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டை விஜய் வெற்றிகரமாக நடத்தினார். அதில் அவர் பேசிய பேச்சுக்கள் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

2-ம் ஆண்டு தொடக்க விழாவிலும் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது அரசியல் களத்தில் மீண்டும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளைய கூட்டத்தில் பங்கேற்கும் விஜய்க்கு சிறப்பான வரவேற்பை அளிப்பதற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மயிலாட்டம், ஒயிலாட்டம் மூலமாக வழிநெடுக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் விஜய்யின் அரசியல் வேகம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிராக களம் கண்டுள்ள அவர் புதிய கூட்டணியை அமைத்து வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

இது தொடர்பாகவும் நாளைய கூட்டத்தில் விஜய் ஆலோசனை நடத்துகிறார். தனது பேச்சின் போது கூட்டணி அரசியல் பற்றி விஜய் மீண்டும் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டம் நடைபெறும் ஓட்டலின் நுழைவு வாயிலில் வேலுநாச்சியார், காமராஜர், தந்தை பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மையார் படங்களுடன் விஜய்யும் இருப்பது போன்ற 'கட்அவுட்' வைக்கப்பட்டு உள்ளது.

விழா நடைபெறும் அரங்கம் அருகே 500-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிர முகர்கள் வருகை தருவதால் செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணீத் தலைமையில் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழா நடைபெறும் அரங்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தனியார் பாதுகாவலர்களுடன் சென்று ஆய்வு செய்ததுடன் விழாவுக்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறார்.

Tags:    

Similar News