அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா?.. நத்தம் விஸ்வநாதன் பதில்
- தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று இ.பி.எஸ். தெரிவித்தார்.
- கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார்.
இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக "கடந்த காலங்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே.." என்று கேள்விக்கு பதில் அளித்த அவர் "தலைமை எந்தக் கூட்டணி அமைத்தாலும் மகிழ்ச்சிதான். கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது" என்று தெரிவித்தார்.