காசாவில் 413 பேர் கொன்று குவிப்பு: இது வெறும் ஆரம்பம்தான் என இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு - அமெரிக்கா இசைவு
- இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
- 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் நேற்று காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
"கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் எங்கள் கையின் வலிமையை ஏற்கனவே உணர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும். இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய பிணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் போர் நிறுத்தம் முடிந்ததும் மேற்கொண்டு அமைதி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
இந்த நிலையில்தான் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. "ஹமாஸ் எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க பலமுறை மறுத்ததைத் தொடர்ந்து" இந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
இன்னும் 59 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போதைய காசா தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹமாஸ், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தர தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தடுக்கிறது. இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவை அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளது.
மேலும் மற்றோரு அறிக்கையில், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய முயற்சியில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியடிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. வன்முறையை மீண்டும் தொடங்கினால் மீதமுள்ள உயிருள்ள பணயக்கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே 400 பேரை கொன்ற இந்த தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு இஸ்ரேல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மீண்டும் போர் தொடங்குவதற்கு ஹமாஸ் முழுப் பொறுப்பையும் ஏற்கிறது என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.