என் மலர்
ஐ.பி.எல்.
- ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான்.
- அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் செயல்பட உள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மா, சூர்யகுமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இந்திய அணியையே வழி நடத்தும் 3 பார்மட் கேப்டன்கள் (ஒருநாள், டி20, டெஸ்ட்) மும்பை அணியில் இருப்பதால் தமக்கு கவலையில்லை என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சூர்யகுமார் இந்திய டி20 அணியையும் வழி நடத்துகிறார். எனவே நான் இல்லாத போது டி20 கிரிக்கெட்டில் மும்பை அணியை வழி நடத்துவதற்கு அவரே சரியானவர். அது சுவாரசியமானதாக இருக்கும். கடந்த வருடம் ஒரு போட்டியில் தடைப் பெற்றது எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம்.
2 - 2.5 நிமிடங்கள் தாமதமாக நாங்கள் பௌலிங் செய்தோம். அப்போது இந்த விதிமுறைகள் பற்றி எங்களுக்குப் பெரிதாக தெரியாது. அது துரதிஷ்டவசமானது என்றாலும் விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இம்முறை ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான். அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.
எனக் கூறினார்.
- சான்ட்னெர், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என 4 சர்வதேச கேப்டன்கள் இடம் பிடித்துள்ளனர்.
- பும்ரா தொடக்க போட்டிகளில் விளையாடாதது அந்த அணிக்கு கடும் சவாலானதாக இருக்கும்.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் சர்வதேச போட்டியில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அணி வீரர்கள் விவரம்:-
பேட்ஸ்மேன்கள்
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கெல்டன், ஸ்ரீஜித் கிருஷ்ணன், பெவன்-ஜான் ஜேக்கப்ஸ், திலக் வர்மா.

ஆல்-ரவுண்டர்கள்
ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், வில் ஜேக்ஸ், மிட்சல் சான்ட்னெர், ராஜ் அங்காட் பவா, விக்னேஷ் புதுர், கார்பின் போஸ்ச்.
பந்து வீச்சாளர்கள்
டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீசே டாப்ளே, அர்ஜுன் தெண்டுல்கர், பும்ரா, வெங்கட சத்யநாராயன பென்மெட்சா, கரண் சர்மா, அஷ்வினி குமார், முஜீப் உர் ரஹ்மான்.

தொடக்க பேட்ஸ்மேன்கள்
ரோகித் சர்மா, ரியன் ரிக்கெல்டன் ஆகிய இரண்டு முக்கிய தொடக்க பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. ரோகித் சர்மா உடன் இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரியான் ரிக்கெல்டன் களம் இறங்குவது சாதகமாக இருக்கும் என அணி நிர்வாகம் கருதும்.
சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்ஆப்பிரிக்கா அணிக்காக ரிக்கெல்டன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். ரோகித் சர்மா இறுதிப் போட்டியில் அரைசதம் விளாசினார். வலது இடது காம்பினேசனை கருத்தில் கொண்டு இருவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
தொடக்க வீரராக களம் இறங்கி ரன் குவிக்காததால், கடந்த காலங்களில் ரோகித் சர்மா பின்வரிசையில் களம் இறங்கியுள்ளார். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் திலக் வர்மா தொடக்க வீரராக களம் இறங்கப்பட்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இல்லையெனில் புதிய வீரர்களில் ஒருவரை முயற்சி செய்து பார்க்கலாம்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்
திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வில் ஜேக்ஸ் போன்றோர் உள்ளனர். திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஃபார்மில் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக கடந்த சில போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடியது இல்லை. இந்த ஐபிஎல் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும். திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள்.
வேகப்பந்து வீச்சாளர்கள்
பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீசே டாப்ளே, அஷ்வினி குமார், வெங்கட சத்யநாராயண பென்மெட்சா, அர்ஜூன் தெண்டுல்கர், கார்பின் போஸ்ச் (ஆல்ரவுண்டர்) என நீண்ட வேகப்பந்து வீச்சாளர் பட்டியலை கொண்டுள்ளது. பும்ரா தொடக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அந்த அணிக்கு சற்று சவாலானதாக இருக்கும்.
புதுப்பந்தில் டிரென்ட் போல்ட், தீபக் சாஹர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். புதுப் பந்தை சிறந்த முறையில் ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர்கள் என்பதால் பவர் பிளேயில் ரன் கொடுப்பதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுடன் ஹர்திக் பாண்ட்யாவும் உள்ளார்.
ஒருவேளை தீபக் சாஹர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அஷ்வினி குமார், அல்லது வெங்கட சத்ய நாராயண பென்அட்சாவை பயன்படுத்தலாம்.

சுழற்பந்து வீச்சாளர்கள்
கரண் சர்மா, மிட்செல் சான்ட்னெர், முஜீப் உர் ரஹ்மான் என மூன்று பேர் உள்ளனர். மிட்செல் சான்ட்னெர், முஜீப் உர் ரஹ்மான் சர்வதேச போட்டிகளில் அசத்தி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களுடன் இவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் கொடுப்பார்கள்.
வெளிநாட்டு வீரர்கள்
ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்), பெவன்-ஜான் ஜேக்கப்ஸ் (பேட்ஸ்மேன்), வில் ஜேக்ஸ் (ஆல்ரவுண்டர்), மிட்செல் சான்ட்னெர், கார்பின் போஸ்ச், டிரென்ட் போல்ட், ரீசே டாப்ளே, முஜீப் உர் ரஹ்மான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
இவர்களில் 4 பேரை மட்டுமே ஆடும் லெவன் அணியில் சேர்க்க முடியும். 3 பேரை சேர்த்தால் இம்பேக்ட் வீரராக மற்றொருவர் களம் இறங்கலாம். இவர்களை ஹர்திக் பாண்ட்யா எப்படி கையாள்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
ரிக்கெல்டன், முஜீப் உர் ரஹ்மான், டிரென்ட் போல்ட், சான்ட்னெர் ஆகியோரை தேர்வு செய்தால் வில் ஜேக்ஸ் விளையாட முடியாது. முஜீப் உர் ஹர்மான், சான்ட்செர் ஆகியோரில் ஒருவர் மட்டும் ஆடும் லெவனில் இறக்கப்பட்டால், இம்பேக்ட் வீரரான வில் ஜேக்ஸ்-ஐ பயன்படுத்த முடியும். இவர் பகுதி நேரமாக சுழற்பந்தும் வீசக் கூடியவர்.
ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர்தான் சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய முடியும். எப்படி இருந்தாலும் ஏராளமான சர்வதேச கேப்டன் என நட்சத்திர பட்டாளங்களை கொண்டு அணியாக வளம் வரும் என்பதில் சந்தேகமில்லை.
- கிளார்க், கணித்த அணியில் சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் இல்லை.
- கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
18-வது ஐபிஎல் சீசன் தொடரானது வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், மற்றும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப்களுக்கு முன்னேறும். இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிவரை முன்னேறிய நிலையிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் கணித்த அணியில் சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் இல்லாதது அவர்களது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.
- கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை களமிறங்கிய உள்ளார்.
- மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்கத்தில் சில போட்டிகளை ராகுல் தவறவிடுகிறார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதவுள்ளது.
இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பதவியை அவர் நிராகரித்தார். மேலும் ஒரு வீரராக அணிக்கு பங்காற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்க போட்டிகளை தவறவிடுகிறார். இதனையடுத்து அக்ஷர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கேல் ராகுல் பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்காமல் நடுவரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்-க்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடுவரிசையை சமாளிக்க கேஎல் ராகுல் அந்த வரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை இந்திய அணிக்காக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரகானே, டி காக், குர்பாஸ், சுனில் நரைன் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.
- ஹர்ஷித் ராணா, வரண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு.
ஐபிஎல் 2025 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
சாம்பியன் பட்டத்திற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தா முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. கடந்த வருடத்தை போன்று இந்த வருடம் ஒரு அணியை மதிப்பிட இயலாது. ஏனென்றால் மெகா ஏலம் நடைபெற்ற பல வீரர்கள் மாறியுள்ளன.
பேட்ஸ்மேன்கள்
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் குறித்து ஒரு பார்வை...
ரகானே தலைமையில் கொல்கத்தா அணி களம் இறங்க உள்ளது. அந்த அணியில் ரகானே, டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பொவேல், மணிஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, ரிங்கு சிங் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள்
வெங்கடேஷ் அய்யர், அனுகுல் ராய், மொயீன் அலி, ராமன்தீப் சிங், அந்த்ரே ரசல் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள்
அன்ரிச் நோர்ஜே, வைபவ் ஆரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் சமநிலையான ஆடும் லெவன் அணியை தேர்ந்தெடுப்பதுதான் அந்த அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
தொடக்க வீரர்கள்
தொடக்க வீரராக ரகானே, குர்பாஸ், டி காக் ஆகிய மூன்று பேர் உள்ளனர். இவர்களுடன் சுனில் நரைன் உள்ளார். இவரை தொடக்க வீரராக களம் இறக்கி பவர் பிளேயில் முடிந்த அளவிற்கு ரன்கள் குவிப்பதுதான் கொல்கத்தா அணியின் நோக்கம். கடந்த பல சீசன்களில் அவர் அதை சரியாக செய்துள்ளார்.
ரகானே தொடக்க வீரராக களம் இறங்கினால் பவர் பிளேயை சரியாக பயன்படுத்திக் கொள்வார். மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்படுவாரா? என்பது ஆடும்போதுதான் தெரியும்.
டி காக் தொடக்க வீரராக களம் இறங்கக்கூடியவர். இவர் விக்கெட் கீப்பர் பணியையும் செய்வதால் குர்பாஸ், டி காக் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்களில் ஒருவர்தான் ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இரவரிடையே கடும் போட்டி நிலவும்.
ஒருவேளை ரகானே தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டால், சுனில் நரைன் கடைநிலை வீரரான களம் இறங்குவார்.
மிடில் ஆர்டர் வரிசை
மிடில் ஆர்டர் வரிசையில் துணைக் கேப்டன் வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, மணிஷ் பாண்டே, ரிங்கு சிங், ராமன்தீப் சிங், ஆந்த்ரே ரஸல் என ஒரு பட்டாளத்தை கொண்டுள்ளது. அவர்களுக்கு மிடில் ஆர்டரில் எந்த சிரமும் இருக்க வாய்ப்பில்லை.
வேகப்பந்து வீச்சு
இந்திய வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா, சக்காரியா ஆகியோரில் ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா ஆடும் லெவனில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஹர்ஷித் ராணா ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியிலும் சிறப்பான விளையாடினார். இதனால் அவருக்கு கூடுதல் அனுபவம் ஏற்பட்டிருக்கும். விக்கெட் வீழ்த்தும் திறன் அவருக்கு உள்ளது. வைபவ் ஆரோராவும் நல்லவிதமாக உள்ளார்.
அன்ரிச் நோர்ஜே, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இவர்களுடன் ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரசல் உள்ளார்.
இதனால் மூன்று முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். இவர்களுடன் தேவைப்பட்டால் ஆந்த்ரே லஸல், வெங்கடேஷ் அய்யராலும் பந்து வீச முடியும். வெங்கடேஷ் அய்யர் மிதவேக பந்து வீச்சாளர் ஆவார்.
சுழற்பந்து வீச்சு
சுழற்பந்து வீச்சில் மிஸ்ட்ரி ஸ்பின்னர் என அழைக்கப்படும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தியை கொண்டுள்ளது.
இதனால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் கூடுதலாக இரண்டு ஆல்-ரவுண்டர் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க இருப்பதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிக சமநிலை கொண்ட அணியாக திகழும் என்பதில் எந்த ஐயம் இல்லை..
ஆனால், பந்து வீச்சாளர்கள் அளவிற்கு பேட்ஸ்மேன்கள் அணிக்கு கைக்கொடுப்பார்களா? என்பது சற்று சந்தேகம்தான்.
இதனால் நடப்பு சாம்பியமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வெல்ல ஆர்வமாக களம் இறங்கும்.
- ஐபிஎல் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
- 23-ந் தேதி சென்னை- மும்பை அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகின்றன.
சென்னை:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் கேப்டனாக செயல்படுவார்.
கடந்த ஆண்டு மும்பை அணி விளையாடி கடைசி போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 18வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
- விராட் கோலி ஆர்.சி.பி. அணிக்காக விளையாடுகிறார்.
விளையாட்டுத் துறையில் எதுவும் நடக்கலாம். 2008ம் ஆண்டு ஐ.சி.சி. நடத்திய அண்டர் 19 (U19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அன்று தொடங்கி விராட் கோலியின் இன்று சர்வதேச கிரிக்கெட் இதுவரை கண்டிராத தலைசிறந்த வீரராக உருவெடுத்துள்ளார்.
எனினும், அண்டர் 19-இல் விராட் கோலியுடன் விளையாடிய அனைவரும் இன்று கிரிக்கெட் துறையில் சாதனையாளர் ஆகிவிடவில்லை. எனினும், விராட் கோலி தற்போது 18-வது ஐ.பி.எல். தொடரில் விளையாட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிக்காக உள்ளார். இந்த நிலையில், அண்டர் 19 இந்திய அணியில் தன்னுடன் விளையாடிய தன்மே ஸ்ரீவஸ்தவா விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் அம்பயராக களமிறங்குகிறார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தன்மே ஸ்ரீவஸ்தவா தனது 35-வது வயதில் இருந்து அம்பயரிங் செய்து வருகிறார். இவர் 2008-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு அதிக ஸ்கோர் அடித்த வீரராக திகழ்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் விளையாடினார்.
அம்பயரிங் செய்வது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்மே ஸ்ரீவஸத்வா கூறும் போது, "நான் தலைசிறந்த வீரராக இருந்ததை புரிந்து கொள்கிறேன். ஒருகட்டத்தில் ஐ.பி.எல். விளையாட முடியுமா என்ற சூழல் உருவானது. அப்போது, தொடர்ந்து வீரராக விளையாட வேண்டுமா அல்லது வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்ஸில் கவனம் செலுத்த வேண்டுமா என முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது," என்று தெரிவித்தார்.
- www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்
- ஒரு நபரால் 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அடுத்த நாளில் ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23-ந் தேதி நடக்கிறது.
இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நபரால் 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் சினேகா சிஸ் கங்குலி கொல்கத்தா போலீசாருடன் 2 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
- கடந்த ஆண்டு ராமநவமியின் போது இதே மாதிரி போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது.
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இரு அணிகள் மோதும் போட்டி ஏப்ரல் 6-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அன்று ராமநவமி என் தால் தங்களால் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர். மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் சினேகா சிஸ் கங்குலி கொல்கத்தா போலீசாருடன் 2 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இது குறித்து அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் அளித்துவிட்டனர்.
இதனால் கொல்கத்தா-லக்னோ மோதும் போட்டிக்கான தேதி மாற்றப்படுகிறது. கடந்த ஆண்டு ராமநவமியின் போது இதே மாதிரி போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த சீசனில் கொல்கத்தா-ராஜஸ்தான் மோதும் ஆட்டத்திற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
- கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும்.
ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு சந்திக்கிறது.
17 வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாததால் கிண்டலடிக்கப்பட்டு வரும் அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
கடந்த வருடம் விராட் கோலி 741 ரன்கள் அடித்து ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனாலும் அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது ஒருபுறம் பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அதனால் விராட் கோலி விமர்சனங்களையும் சந்தித்தார்.
இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சினையில்லை என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் மற்றும் இதர தொடர்களில் பிலிப் சால்ட் மிகவும் அட்டாக் செய்யக்கூடிய ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் விராட் கோலி மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன்.
அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும். எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் எப்போது கூடாது என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தொடரில் அவர் பெங்களூரு அணியின் பேட்டிங் துறையின் கேப்டனாக செயல்பட்டு புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
ஏனெனில் இம்முறை பெங்களூரு அணி நிறைய மைதானங்களுக்கு பயணித்து விளையாட உள்ளது. அங்கே பேட்டிங் ஆர்டரில் குறைந்த ரன்களுக்குள் சரிவு ஏற்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருப்பதால் விராட் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
என்று டிவில்லியர்ஸ் கூறினார்.
- தொடர் தோல்வியையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
- இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பத்தை அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமாக டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முக்கியமான ஒன்றாக வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பம் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என்று கூறியது.
இதனைப் போலவே தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் துபாய் பயணம் செய்த இந்திய அணி, வீரர்களின் குடும்பங்கள் அவர்களோடு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்கவில்லை என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி அந்த விதியில் தனக்கு உடன்பாடு இல்லை என சில முக்கிய விஷயங்களை கூறினார்.
அதில், எந்த வீரையாவது உங்களின் குடும்பம் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்டால் அவர்கள் ஆமாம் என்று தான் கூறுவார்கள். போட்டி முடிந்த பிறகு நான் என் ரூமுக்கு சென்ற தனியா சோகமாய் இருக்க விரும்பல. நான் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் வகையில் பிசிசிஐ விதிகளை தளர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட நாட்கள் குடும்பத்தினர் வீரர்களுடன் இருக்க விரும்பினால் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- நான் ஆர்சிபியில் விளையாடிய போது 2-3 வீரர்களுக்கு மட்டுமே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது.
- பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஒருமுறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றது கிடையாது. இத்தனைக்கும் அந்த அணியில் முக்கிய வீரரான விராட் கோலி தொடர்ந்து 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஆர்சிபி கோப்பையை வெல்லாததற்கான காரணம் குறித்து அந்த அணியில் விளையாடிய முன்னாள் வீரர் சதாப் ஜகாதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் ஆர்சிபியில் விளையாடிய போது 2-3 வீரர்களுக்கு மட்டுமே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது. இந்த வியூகம் இதுவரைக்கும் பெங்களூரு அணிக்கு பலம் அளிக்கவில்லை. பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது. அணி என்ற அளவில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. நீங்கள் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்றால் வீரர்கள் குழுவாக விளையாட வேண்டும். இரண்டு மூன்று வீரர்களை மட்டுமே நம்பி கோப்பையை வெல்ல முடியாது.
இந்த விஷயத்தில் சென்னை அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து வீரர்களுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த சிறிய அளவிலான முயற்சி மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கிறது.
சென்னை அணியை பார்த்தால் உள்ளூர் வீரர்கள் வலிமையாக உள்ளனர். மிதமாக விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள். இந்த காம்பினேஷன் மிகவும் முக்கியம்.
என்று சதாப் ஜகாதி கூறினார்.
சதாப் ஜகாத் பெங்களூரு மற்றும் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.