உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்: 6 பேர் பலி
- உக்ரைனின் பெரிய நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியாகினர்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் போரை எதிர்கொண்டு வருகிறது.
உக்ரைனின் பெரிய நகரங்களில் ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷிய ராணுவம் உக்ரைனின் பொல்டாவா நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிதத்திலிருந்து சுமார் 22 பேர் மீட்கப்பட்டனர்.
அதேபோல், உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் இடிபாடுகளில் விழுந்ததில் 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் இன்று மட்டும் 6 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் ராணுவமும் பதிலுக்கு ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் 9 டிரோன்களை இடைமறித்து தாக்கி அழித்தனர்.