என் மலர்
பெரம்பலூர்
- மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நடந்த சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழக அரசால் தமிழ் மொழி வளர்க்கப்படவில்லை. மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. தார் ஊற்றி அழித்தாலும் நாட்டில் 70 கோடி மக்கள் பேசும் இந்தி மொழியை அழிக்க முடியாது. பழமையான தமிழ் மொழியையும் யாராலும் அழிக்க முடியாது. மத்திய அரசு எந்தவொரு சிறந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்பது என்று தி.மு.க. எடுத்துக்கொள்கிறது. அது போல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் எதிர்க்கிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை மறைக்க பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மாநில தலைவரும், தேசிய தலைவர்களும் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன். பா.ஜ.க மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலை வரும்போது அவரை முதலமைச்சர் அரியணையில் அமர்த்துவது எனது கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீசி முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- ஏட்டு ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ்பசேரா உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலுார்:
பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 36), மணிகண்டன் (35) ஆகியோர் டிரைவர்களாக வேலை செய்தனர். நேற்று முன்தினம் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை கை.களத்துார் ஏட்டு ஸ்ரீதர் சமாதானப்படுத்தினார்.
பின்னர் மணிகண்டனை அவரது வீட்டிற்கு ஸ்ரீதர் அழைத்து சென்றார். அப்போது அங்கு வந்த தேவேந்திரன், மணிகண்டனை போலீஸ் கண்ணெதிரே வெட்டிக் கொன்றார். இதையறிந்த மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீசி முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார், எஸ்.பி. ஆதர்ஷ்ப சேரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இது குறித்து மணிகண்டன் மனைவி மீனா (25) கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மணிகண்டனின் மனைவி மீனாவிற்கு அரசு சார்பில் முதற்கட்ட நிதி உதவியாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரித்து கை களத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொளஞ்சியப்பன், மணிவேல், குமார் ஆகியோரை ஆயுதபடைக்கும், சண்முகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றி உத்தரவிட்டார்.
கை.களத்துார் ஸ்டேஷனில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏட்டு ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ்பசேரா உத்தரவிட்டுள்ளார்.
- தொடர்ந்து கைகளத்தூர் போலீசார் விரைந்து சென்று மணியை கொலை செய்த தேவேந்திரனை மடக்கி பிடித்தனர்.
- கொலை செய்யப்பட்ட மணியின் உறவினர்கள் கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தடை வட்டம், கைகளத்தூர் கிராமத்தில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு 2 சமூகத்தினருடைய பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற கொண்டிருக்கும் பொழுதே ஒரு தரப்பை சேர்ந்த தேவேந்திரன் மற்றொரு தரப்பை சேர்ந்த தொழிலாளி மணி என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் உண்டானது. அங்கு கூடி இருந்தவர்கள் நாலாபுறமும்சிதறி ஓடினர். மேலும் அங்கு மோதல் அதிகரிக்கும் சூழல் உண்டானது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கபப்ட்டனர்.
இதனை தொடர்ந்து கைகளத்தூர் போலீசார் விரைந்து சென்று மணியை கொலை செய்த தேவேந்திரனை மடக்கி பிடித்தனர். பின்பு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட மணியின் உறவினர்கள் கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- லாடபுரம் மயிலூற்று அருவி பிரசித்தி பெற்றது.
- அருவி பகுதிகளில் சென்று பொதுமக்கள் குளிப்பதற்கு பெரம்பலூர் மாவட்ட வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்துடன் மேற்கு எல்லையாகவுள்ள பச்சைமலைத் தொடர்ச்சியில் மலையாளப்பட்டி அருகே எட்டெருமைப்பாழி அருவி, தொண்டமாந்துறை அருகே கோரையாறு அருவி, பூலாம்பாடி அருகே இரட்டைப் புறா அருவி போன்றவை உள்ளன.
அதுப்போல லாடபுரம் மயிலூற்று அருவியும் பிரசித்தி பெற்றது. லாடபுரத்தின் அருகேயுள்ள பச்சை மலையில், பாறை மீதிருந்து அருவியாகக் கொட்டுகிற மழைநீர், பாறை மீது அமர்ந்துள்ள மயில் தனது தோகையை விரித்துத் தொங்க விட்டது போல் காணப்பட்டதால் இந்த அருவிக்கு மயிலூற்று அருவி எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
லாடபுரம் அருவிக்கு லாடபுரத்தில் இருந்து, சரவணபுரம் வழியாக பைக்கிலோ, காரிலோ 3 கிமீ தூரம் சென்றபிறகு 10 நிமிடத்தில் பால்போல் கொட்டும் அருவிக்குச் சென்று விடலாம் என்பதாலேயே எளிதில் சுற்றுலா அந்தஸ்து பெற்றுத் திகழ்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்ட மலையேற்ற பாதைகள் பட்டியலின்படி லாடபுரம் மயிலூற்று அருவி மலையேற்ற பாதைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பெரம்பலூர் வனச்சரகம், மயிலூற்று அருவி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதால் கரடு முரடான மலைப்பாதை வழியாக மேலே ஏறிச்செல்லும்போது நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படலாம்.
மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அருவிப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக வரும்போது அபாயகரமான நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன்கருதி அருவி பகுதிகளில் சென்று பொதுமக்கள் குளிப்பதற்கு பெரம்பலூர் மாவட்ட வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி உள்ளே செல்பவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 22 (டி)-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இப்போது சாலையில் செல்லும் 10 கார்களில் 8 கார்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகளைக் கட்டி செல்கின்றன.
- இன்னும் 16- 17 மாதங்கள் கடுமையாக பொறுமையாக இருந்து பாடுபட வேண்டும்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பேசினார்.
தமிழக வெற்றி கழகத்தினர் முதல் மாநாட்டை எப்படி நடத்த போகிறார்கள் என்று உலகமே உற்று நோக்கி வந்த நிலையில் ஒவ்வொரு தொண்டரும், நிர்வாகிகளும் ஒற்றுமையோடு ஒவ்வொருவரின் குடும்பத்தில் நடக்கும் விழாவாக நினைத்து கடுமையாக உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.
யார் என்ன சொன்னாலும் சரி, தமிழக வெற்றிக் கழத்தினருக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் விஜய் தான். உங்களுக்காக முதலில் வந்து நிற்பதும் அவர்தான். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18. மாதங்கள் மட்டுமே உள்ளன. 2026-ல் முதலமைச்சர் இடத்தில் விஜய்யை உட்கார வைப்பதற்கு நாம் உழைக்க வேண்டும்.
நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதனை செயல்படுத்த வேண்டும். நல்ல விஷயங்களுக்காக நல்ல முறையில் நமது கட்சியை பயன்படுத்தி தமிழக வெற்றி கழகத்தை வளர்ப்பதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
இப்போது சாலையில் செல்லும் 10 கார்களில் 8 கார்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகளைக் கட்டி செல்கின்றன. இன்று உச்சத்தில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு தலைவர் உண்டு என்றால் அது விஜய்தான். இனி வரும் காலங்களில் இது போன்ற மாநாடுகள் நிறைய நடத்தப்பட உள்ளது.
அதற்கும். தொண்டர்கள் ஓத்துழைப்பு தர வேண்டும். வருகிற 16, 17,23,24-ந் தேதிகளில் நடக்கவுள்ள வாக்காளர் பெயர் சேர்க்கை, திருத்தம் முகாம்களில் தமிழக வெற்றி கழகத்தினர் கலந்து கொண்டு வாக்குச்சாவடி வாரியாக சென்று பொதுமக்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கவும் திருத்தம் செய்வதற்கும் உதவ வேண்டும்.
இது போன்ற விஷயங்களுக்கு மக்களுக்கு உதவுவதோடு மக்களோடு மக்களாக தமிழக வெற்றி கழக தொண்டர்கள் இருக்க வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொறு தொகுதிக்கும் விஜய் வர உள்ளார். அப்போது நம் கட்சியினர் மக்களுக்கு செய்த உதவிகளை அவரிடம் தெரிவிக்கும் வகையில் உதவ வேண்டும்.
இன்னும் 16- 17 மாதங்கள் கடுமையாக பொறுமையாக இருந்து பாடுபட வேண்டும். தமிழக வெற்றி கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விஜய் படத்தை வைத்து உள்ளாட்சிகளில் 127 இடங்களில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், துணைத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளோம். தற்போது கட்சியாக ஆரம்பிக்கப்பட்டதால் இனி எல்லாமே வெற்றி தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை.
- முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது.
பெரம்பலூர்:
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் 24-ந்தேதி ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்போன் செயலி மூலமாக பதிவு செய்து பயணிப்பவர்களை அரசால் எதுவும் செய்ய முடியாது. அதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,
விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை. அந்த வகையில் கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறோம். சில நேரங்களில் பஸ்கள் தேவைப்படும் வழித்தடங்களில் புதிதாக சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், நாள் முழுவதும் பஸ்களை இயக்கிய பணியாளர்களைக் கொண்டு மீண்டும் இயக்குவதும் பாதுகாப்பற்றது.
அதனால், முக்கியமான விழா காலங்களில் தனியார் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின்போது பரீட்சர்த்தா முறையில் அந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அதில், எந்தவித சிரமமும் ஏற்படவில்லை.
எனவே தீபாவளி பண்டிகையின்போது, தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசின் முக்கிய நோக்கம், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு எவ்வித சிரமமும் இன்றி செல்ல வேண்டும் என்பது தான். விழாக்களை அவர்கள் விருப்பம் போல கொண்டாடுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.
வழக்கமாக தமிழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் கூடுதலாக 4 அல்லது 5 ஆயிரம் பஸ்கள் இயக்க வேண்டும் என்றால், அதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் பஸ்களை வாங்கி நிறுத்தி வைத்திருக்க முடியாது. அதுபோன்ற நாள்களில் ஊழியர்களையும் நியமிக்க முடியாது.
அதனால் இடைக்கால நிவாரணமாகவே தனியார் பஸ்களை அரசு ஒப்பந்த அடிப்படையில், அந்தந்த வழித் தடங்களில் இயக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பொதுமக்கள் தனியார் பஸ்களை விட, அதிகமாக அரசுப் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.
முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு, இதுபோன்ற இடைக்கால ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
பேட்டியின்போது கலெக்டர் கிரேஸ் பச்சாவ், அருண் நேரு எம்.பி., பிரபாகரன் எம்.எல்.ஏ. உடனிருந்தனர்.
- மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
பெரம்பலூர்:
மக்காச்சோள பயிரை அனைத்து விதமான மண்ணிலும் சாகுபடி செய்வதோடு, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்த சாகுபடி செலவே. மேலும், இந்தப் பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது.
கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில், தற்போது மக்காச்சோளத்துக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இதை கருத்தில்கொண்டு ஆற்றுப்பாசனம் இல்லாதபோதிலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர்.
இங்குள்ள 90 சதவீத விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியே உள்ளனர். இந்த மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்ட ஆடிப்பட்டத்தில் 1.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.
விதைத்து 2 மாதம் ஆகிய பயிர்கள் 2 அடி உயரம்வரை வளர்ந்து விட்டன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போதிய மழை பெய்யாததாலும், வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருந்த காரணத்தாலும் கடந்த ஓரிரு வாரங்களாக மக்காச்சோளப் பயிர்கள் கருகத் தொடங்கின.
இதனால் கவலையடைந்த விவசாயிகள் இனிமேல் மழை பெய்தாலும் மக்காச்சோளப் பயிரைக் காப்பாற்ற முடியாது எனும் சூழலில் வயல்களில் டிராக்டரை உழவு ஓட்டி மக்காச்சோளப் பயிர்களை அழித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயி ஒவர் கூறும்போது,
கை.களத்தூர், காரியனூர், நெற்குணம், பாதாங்கி, மரவநத்தம், பசும்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளப் பயிர்கள் இவ்வாறு உழவு ஓட்டி அழிக்கப்பட்டன.
மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
- போலீசார் உடன்டியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
- ஊர் மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
குன்னம்:
பெரம்பலூர் அருகே வேப்பூர் ஏரியில் இருந்த மனித எலும்புக்கூட்டை எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் பெரிய ஏரி உள்ளது.
ஏரியில் தற்போது தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிளாஸ்டிக் சாக்கில் மண்டை ஓட்டுடன் மனித எலும்புக்கூடுகள் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சாக்கினை ஏரி பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் இழுத்துக் கொண்டு வந்தது.
இதைக்கண்ட ஊர் மக்கள் நாய்கள் இழுத்து கொண்டிருந்த சாக்கில் என்ன இருக்கின்றது என்று பார்த்தனர். அப்போது ஒரு மண்டை ஓடு, கை, கால்கள், எலும்பு துண்டுகள் மற்றும் முழுக்கை சட்டையுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து குன்னம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் உடன்டியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஏரியில் சாக்கில் இருந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
ஏரியில் புதைந்து மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு சாக்கில் இருந்தது ஊர் மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்து ஏரியில் புதைத்து சென்றார்களா? அல்லது மாந்திரீ கத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? என சந்தேகிக்கின்றனர்
- போலீசார் சமீம் கடையை ஆய்வு செய்ததில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
லப்பைக்குடிக்காட்டில் போலியாக வாக்காளர் அட்டையை தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அபுபக்கர் தெரு பேரூரை சேர்ந்தவர் முகமது சமீம் (வயது 33). இவர் அங்கு கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தெற்கு தெருவை சேர்ந்த அபுதாஹிர் மகன் சாஜித் என்பவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணபிக்க வாக்களர் அடையாள அட்டையை பதிவு செய்து உள்ளார்.
3 மாதமாகியும் அட்டை வராததால், கம்பியூட்டர் சென்டரில் சென்று கேட்டுள்ளார். முகமது சமீம் உடனடியாக வாக்காளர் அட்டையை தயார் செய்து கொடுத்துள்ளார். இதனை கொண்டு சாஜித் பாஸ் போர்ட் பெற விண்ணப் பித்துள்ளார்.
பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்பின் போது, சாஜித்தின் வாக்காளர் அட்டை போலி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வேறு ஏதேனும் அரசு ஆவணம் உள்ளதா என கேட்டுள்ளனர். பின்னர், தபாலில் வந்த வாக்காளர் அட்டையை கொடுத்துள்ளார்.
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முதலில் கொடுத்த வாக்காளர் அட்டை போலி என்பதால் இது குறித்து, லப்பைக் குடிக்காடு வி.ஏ.ஓ ஐயப்பனிடம் புகார் செய்யப்பட்டது. அவர் இதுபற்றி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் முகமது சமீம் கடையை ஆய்வு செய்ததில் அங்கு இதுபோல ஏராளமான போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் வீரன் (47), என்பவர் பக்ரைன் நாட்டில் இருந்து, தனது மனைவி விஜயலட்சுமி மூலம் பாஸ்போர்ட்டை போலி வாக்களர் அட்டை மூலம் விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதை தொடர்ந்து முகமது சமீம் மீது குற்றப்பிரிவு 330/2024 u/s 318(2), 318(4), 336(3),340(2) பி.என்.எஸ். ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்பு அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு.
- பள்ளி வேலை நேரங்களில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆடிப்பெருக்கையொட்டி வரும் தொடர் விடுமுறையால் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
பள்ளி வேலை நேரங்களில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கவனம் செலுத்தி கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.
- அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார் பழனியப்பன், கீழக்கரை விஏஓ நல்லுசாமி ஆகியோர் கடந்த 1-ந்தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரை பெரம்பலூர் தாசில்தார் சரவணன் பொறுப்பில் ஒப்படைத்து, அவருக்கு உரிய சிகிச்சை அளித்து 2-ந்தேதி விசாரணைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய துணை தாசில்தார் பழனியப்பனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.
- இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி.
- நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 40 சதவீதம் வாக்கு வங்கி நாம் வைத்திருந்தோம். தற்போது எந்த அளவிற்கு உள்ளது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். குறை நம்மிடம் தான் உள்ளது. நாம் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை காங்கிரஸ் கட்சியில் சேருங்கள்.
நம்மிடம் கட்டமைப்பு உள்ளது. இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி, பதவி வாங்கி வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருப்பவர்களின் பதவி பறிக்கப்படும். நாம் கட்சி பணி செய்யவில்லை என்றால் பெருந்தலைவர்கள், தியாகிகளின் ஆன்மாக்கள் நம்மை மன்னிக்காது.
ராகுல்காந்தி என் ரத்தம் இந்த மண்ணில் உள்ளது என்று கூறியுள்ளார். அது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அவரைப்போல் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மிடம் செல்வாக்கு இல்லாத காரணத்தினால் தான் அண்ணாமலை இறுமாப்புடன் நம் கட்சியை பற்றி பேசி வருகிறார்.
ஒற்றுமை இருந்தால், செல்வாக்கு இருந்தால் நம் மீது கை வைக்கும் பொழுது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் பஸ், வேன், லாரி ஏன் விமானத்தை கூட மறித்தால் நம் பலம் அவர்களுக்கு புரியும்.
நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள். சமயங்களில் கூட்டணி கட்சிகளுடன் சிறு மனக்கசப்புகள் ஏற்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 23 மாதங்கள் இருந்தாலும் 18 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் காய்ச்சல் வந்துவிடும். ஆகவே நமக்கு இன்னும் 18 மாதங்கள் தான் உள்ளது. அதற்குள் நாம் கட்சியை வளர்த்தாக வேண்டும்.
பெரம்பலூர் சிறிய மாவட்டம் என்பதால் முதலில் இங்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். அண்ணாமலை, இந்திரா காந்தியை பற்றியும், நேருவை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நாட்டை விட்டு ஓட பார்த்தார்களாம். இவரா பிடித்து அழைத்து வந்தார்.
என்ன அப்பட்டமான பொய் சொல்கிறார், 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு என்று ஓர் இடத்தை நாம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.