என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![பழனி முருகன் கோவிலில் எடப்பாடி பக்தர்கள் குழு சார்பில் 15 டன் பஞ்சாமிர்தம் பழனி முருகன் கோவிலில் எடப்பாடி பக்தர்கள் குழு சார்பில் 15 டன் பஞ்சாமிர்தம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/10/1833793-palani-pan.webp)
பழனி முருகன் கோவிலில் எடப்பாடி பக்தர்கள் குழு சார்பில் 15 டன் பஞ்சாமிர்தம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பஞ்சாமிர்தம் தயாரித்த பின்பு அவற்றை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபடுகின்றனர்.
- பஞ்சாமிர்தத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் சேலம், தர்மபுரி, நாமக்கல், எடப்பாடி பகுதிகளில் இருந்து பருவத ராஜகுல காவடிக்குழுவை சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருவார்கள். தைப்பூச திருவிழா முடிந்த பின்பு பழனிக்கு வரும் அவர்கள், மலைக்கோவிலில் தங்கியிருந்து, தங்கரதம் இழுத்து வழிபடுகின்றனர். இவர்களில் அன்னதான குழு, பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழு என பல்வேறு குழுக்கள் உள்ளன.
இதில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழுவினர் சாமி தரிசனம் செய்யும் நாளுக்கு முன்னதாக பழனிக்கு வந்து பஞ்சாமிர்த தயாரிப்பு பணியில் ஈடுபடுவர். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். காங்கேயம், தாராபுரம், மானூர் வழியாக வரும் அவர்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பழனி சண்முகநதி வந்தடைகின்றனர். அங்கு காலை மகாபூஜை நடத்திவிட்டு காவடிகளுடன் புறப்பட்டு பழனி முருகன் கோவில் வருகின்றனர். பழனிக்கு வரும் இவர்களுக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.
இந்நிலையில் பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 200 கிலோ தேன், 200 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது.
இதேபோல் அடிவாரத்திலும் ராட்சத அண்டாக்களில் வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பஞ்சாமிர்தம் தயாரித்த பின்பு அவற்றை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபடுகின்றனர். பின்னர் பஞ்சாமிர்தத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த எடப்பாடி ஸ்ரீ பருவத ராஜகுல காவடிக்குழுவினர் கடந்த 363 ஆண்டுகளுக்கும் மேலாக பழனி கோவிலுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே எடப்பாடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாரம்பரிய முறையில் மாட்டுவண்டியில் பழனிக்கு வந்தனர்.