என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா](https://media.maalaimalar.com/h-upload/2023/01/17/1822475-tiruvannamalai.webp)
திருவூடல் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் மத்தியில் நடைபெற்ற போது எடுத்த படம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியக்கால பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை தாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை கூறப்படுகிறது. அதாவது பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், பழங்கள் மற்றும் பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர். அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணியளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். அங்கிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நடக்கும். இதனுடன் திருவூடல் திருவிழா நிறைவு பெறுகிறது.
மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் திருவூடல் விழாவை முன்னிட்டு நந்திக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சாமியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நந்திக்கு காய்கறி, பழ வகைகள், இனிப்பு, கரும்பு உள்ளிட்ட வைகளால் அலங்கரித்து இருந்தனர். சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோட்டை கைலாயநாதர் கோவில், பூமிநாதர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், அம்மையப்பர் கோவில், சேவூர்- பையூர் பகுதியில் உள்ள விருப்பாச்சீஸ்வரர் கோவில், எஸ்.வி.நகரம் பகுதியில் உள்ள திரைகேபேஸ்வரர் கோவில், அடையபலம் காலகண்டேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் கோவில், முள்ளிப்பட்டில் உள்ள ஆபத்த சகாயேஸ்வரர் கோவில், அக்ராபாளையம் பகுதியில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் கோவில், காமக்கூரில் உள்ள சந்திரசேகரன் கோவிலிலும் திருவூடல் விழா நடந்தது.