search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்க உத்தரவு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
    X

    தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்க உத்தரவு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

    தென்னையில் இருந்து நீரா எனும் தென்னம்பால் இறக்க அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் பரவலாக தென்னை பயிரிடப்படுகிறது. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்கள் உட்பட டெல்டா மாவட்டங்களில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி என மாநிலத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் தென்னை பிரதான பயிராக இருக்கின்றது.

    பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றபோது தென்னை சாகுபடியும் முக்கிய சாகுபடியாக விவசாயிகளுக்கு திகழ்கிறது.

    கடும் வறட்சியினால் பாதிக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் பட்டுப் போய் விட்டன. மீதியுள்ள தென்னையில் நீரா என்ற சுகாதாரமான, இயற்கையான, சத்தான, தாய்பாலுக்கு நிகரான, லாரிக் அமிலம் உள்ள இதனை இறக்க அனுமதி கிடைத்தால் தென்னை விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

    மேலும் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் நீண்டகாலமாக தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஜூலை 2017-ல் சட்டமன்றத்தில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நீராவைப் பற்றி ஆலோசித்து, நீரா பருக கொடுக்கப்பட்டு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பேராதரவோடு நீரா இறக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடவில்லை.

    தற்போது தென்னை விவசாயிகளுக்கு தென்னை சாகுபடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் நோக்கத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

    அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிராவில் நீரா இறக்க அனுமதி வழங்கப்பட்டதால் கடந்த பல வருடங்களாக அங்கே நீரா விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    எனவே தென்னை சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்த வகையில் தென்னையில் இருந்து நீரா எனும் தென்னம்பால் இறக்க அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    Next Story
    ×