என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டி அருகே 17 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

- சிறுமியுடன் இருந்த தாயார் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார்.
- அதிகாரிகளுக்கும் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நாகர்கோவில்:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பூதப்பாண்டி அருகே தெள்ளந்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதுபற்றி சமூக துறைக்கு புகார்கள் வந்தது. சமூகநல அதிகாரிகள் தூத்துக்குடிக்கு சென்று அந்த சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். சம்பந்தப்பட்ட வாலிபரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது வாலிபரிடம் விசாரணை நடத்திவிட்டு அவரை அனுப்பி விட்டதாக தெரிகிறது. சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இரவு வரை அலுவலகத்திலேயே வைத்திருந்தனர்.
அப்போது சிறுமியுடன் இருந்த தாயார் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார். அப்போது அதிகாரிகளுக்கும் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சிறுமியின் தாயார் அலுவலக வாசலில் அழுது புரண்டார். இதையடுத்து நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை இன்று விசாரணைக்கு அழைத்து வர வேண்டும். வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
திருமணத்தை நடத்தக்கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.