என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/06/06/1893327-summer.webp)
தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சென்னையில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது
- சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னையில் நேற்றும் வெயில் வறுத்தெடுத்தது. பிற்பகல் முதல் மாலை வேளை வரை நகரின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. அதனால் எந்த பலனும் இல்லை. சில நிமிடங்கள் பெய்த லேசான மழையும் சூட்டை கிளப்பி, மக்களின் வேதனையைத்தான் வாங்கியது.
இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகீர் தகவலால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் - 104.18 டிகிரி - (40.1 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)
கடலூர் - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)
ஈரோடு - 101.12 டிகிரி - (38.4 செல்சியஸ்)
கரூர் - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)
மதுரை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)
நாகை - 102.38 டிகிரி - (39.1 செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 104 டிகிரி - (40 செல்சியஸ்)
தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)
திருப்பத்தூர் - 101.84 டிகிரி - (38.8 செல்சியஸ்)
திருச்சி - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)
திருத்தணி - 105.08 டிகிரி - (40.6 செல்சியஸ்)
தூத்துக்குடி - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)
வேலூர் - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)