search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் நடைபெற்ற தேங்காய் சுடும் விழா: எதற்கு தெரியுமா?
    X

    சேலத்தில் நடைபெற்ற தேங்காய் சுடும் விழா: எதற்கு தெரியுமா?

    • சேலத்தில் மட்டும் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடபடுவது தனிச்சிறப்பு.
    • மகாபாரத கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

    அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ''ஆடி-18'' அன்று முடிவுக்கு வந்தது.

    இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள்.

    இந்த பூஜையின்போது படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.

    ஆண்டாண்டு காலமாக அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் ஆடி மாத பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்ப்பார்கள்.

    ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தேய்க்கப்பட்டதும், அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும். பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமர குச்சியில் அந்த தேங்காயை சொருகுவார்கள்.

    பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவர்.

    தமிழகத்திலேயே சேலத்தில் மட்டும் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடபடுவது தனிச்சிறப்பு.

    இந்த நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று தேங்காய் சுடும் விழா நடந்தது. அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள அரசமரத்து காட்டூர் பகுதியில் தேங்காய் சுட்டு மகிழ்ந்த பொதுமக்கள்.

    Next Story
    ×