என் மலர்
கோயம்புத்தூர்
- பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
- விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வடவள்ளி:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று நடந்தது.
விழாவுக்கு கவர்னரும், வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில் முதன்மை விருந்தினராக, சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் மொத்தம் 4 ஆயிரத்து 434 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
அதன்படி இளம் அறிவியல் பிரிவில் 1,263 பேரும், முதுநிலை பிரிவில் 225 பேர், முனைவர் படிப்பில் 48 பேர் என மொத்தம் 1,536 மாணவ, மாணவிகளும், உறுப்பு மற்றும் இணைக்கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் 2,877 பேரும், முதுநிலை பிரிவில் 13 பேரும், முனைவர் படிப்பில் 6 பேர் என மொத்தம் 2,898 பேர் என இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 434 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், இணை வேந்தருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
- நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர்.
- உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மலைகோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.
இந்த மலையில் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை துருவம் பகுதியை சேர்ந்தவர் சிவா(வயது43). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
சிவா, தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக திருவண்ணாமலையில் இருந்து நேற்று கோவைக்கு வந்தார்.
நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர். 6 மலைகளை கடந்து 7-வது மலைக்கு சென்ற அவர்கள், அங்கு சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம் முடித்த பின்னர் இன்று காலை அவர் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர். 3-வது மலையில் வந்தபோது, சிவாவுக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் அப்படியே மயங்கினார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை கீழே தூக்கி வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் சிவாவை ஏற்றினர்.
அப்போது ஆம்புலன்ஸ் உதவியாளர் அவரை பரிசோதித்தபோது, சிவா உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் ஆஞ்சியோ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த சிவா, பெங்களூருவில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.
- மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர்.
- மாணவர் பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
கோவை:
கோவை அருகே தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரி விடுதியில் அடிக்கடி பணம் திருடுபோனது. எம்.எஸ்.சி. படிக்கும் சென்னை மாணவர் தான் இதில் ஈடுபட்டதாக நினைத்த, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, மாணவரை தாக்கிய 13 மாணவர்களையும் இடைநீக்கம் செய்தது. அத்துடன் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் க.க.சாவடி போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர். இதில் 5 பேர் மைனர் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், ஒருவர் கோவை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட எம்.எஸ்.சி மாணவரை அவரது பெற்றோர் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
மாணவர் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து அந்த மாணவருக்கு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளனர். கவுன்சிலிங் அளித்து அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
- பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
- மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார். மேலும் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
நீலகிரி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 6-ந்தேதி மாலை கோவை வருகிறார். கோவையில் 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் வள்ளி-கும்மி நடனத்தை அவர் நேரில் பார்வையிடுகிறார்.
இந்த நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் நித்தியானந்தம் நிருபர்களிடம் கூறிய தாவது:-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளி-கும்மி நடனம் நடந்தது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் அசாம் மாநிலத்தில் 11 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற நடனமே சாதனையாக இருந்தது.
அதை பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சி முறியடித்து உள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் பங்கேற்ற 16 ஆயிரம் பேருக்கு பாராட்டு விழா வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் வள்ளி-கும்மி நடனமும் நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிடுகிறார்.
வள்ளிக்கும்மி ஆடுவதால் பெண்களுக்கு உடல் வலிமையும், மன வலிமையும் அதிகரிக்கிறது. தற்போது அதை பாரம்பரிய கலையில் ஏராளமான கிராமங்களில் பெண்கள் இந்த கலையை கற்று வருகின்றனர்.
இந்த கலையை ஊக்கப்படுத்த கொங்குநாடு கலைக்குழு தொடங்கப்பட்டு உள்ளது. பாராட்டு விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, துணை செயலாளர் பிரேம், மாவட்ட செயலாளர்கள் தனபால், ரமேஷ், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சம்பவத்தை மாணவர்களில் ஒருவரே வீடியோவாக எடுத்து வெளியே பரப்பி விட்டுள்ளார்.
- வீடியோவை பார்த்த கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
கோவை:
கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து நின்று தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாக்கப்பட்ட மாணவர் சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர். 21 வயதான அவர் அந்த கல்லூரியில் முதுகலை கிரிமினாலஜி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரை தாக்கியவர்கள் அதே விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு என்ஜினீயரிங் மாணவர்கள் ஆவர்.
என்ஜினீயரிங் மாணவர்கள் அறையில் அடிக்கடி பணம் திருட்டுப் போய் உள்ளது. ஆயிரம், ரூ.2 ஆயிரம் என தொடங்கி மொத்தம் ரூ.22 ஆயிரம் திருடு போய் இருக்கிறது.
இந்த பணத்தை முதுகலை கிரிமினாலஜி படிக்கும் மாணவர் திருடி இருக்கலாம் என என்ஜினீயரிங் மாணவர்கள் சந்தேகப்பட்டுள்ளனர். இதனால் சம்பவத்தன்று இரவு விடுதியில் இருந்த அந்த மாணவரை என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி உள்ளனர்.
சட்டை அணியாமல் இருந்த அந்த மாணவரை முட்டிப்போட வைத்தும், கைகளை மேலே தூக்கச் சொல்லியும் தாக்கி இருக்கிறார்கள். இனி இதுபோல் செய்ய மாட்டேன் என கூறி மன்னிப்பு கேள் எனவும் கூறி சரமாரியாக தாக்கினர். அந்த மாணவர் கண்ணீர் விட்டு கெஞ்சி கதறி அழுதபிறகும் அவரை விடாமல் அவர்கள் அடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை மாணவர்களில் ஒருவரே வீடியோவாக எடுத்து வெளியே பரப்பி விட்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தார். வீடியோவை பார்த்த கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 13 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 13 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. 13 பேரும் இன்று பெற்றோருடன் கல்லூரிக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதன்படி இன்று மாணவர்கள், பெற்றோருடன் கல்லூரி நிர்வாகத்தினர் முன்பு ஆஜராகினர். பெற்றோர் முன்னிலையில் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்களிடம் அவர்கள் விளக்க கடிதம் எழுதி வாங்கிக் கொண்டனர். இன்று 11 மாணவர்கள் பெற்றோரை அழைத்து வந்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினர். 2 மாணவர்களின் பெற்றோர் வரவில்லை. அவர்கள் நாளை வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கல்லூரி தரப்பில் விடுதி வார்டன் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இந்த சம்பவம் ராகிங் அல்ல. பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டு தாக்கி உள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என கூறி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர், காயம் அடைந்துள்ளதால் சொந்த ஊரான சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் போலீசில் புகார் அளிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- குற்றவாளிகளை தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு.
- குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை.
கோவை:
தமிழகத்தில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச் செயல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
இவ்வாறு பணிக்காக வருபவர்களுடன் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் கலந்து விடுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கடலூர் திட்டக்குடியை சேர்ந்த தனிப்படை போலீசார், சிறுமிகளை கடத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்திய நபரை கைது செய்தனர்.
இதனால் வெளி மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கோவையில் பதுங்கிய நபர்கள் குறித்து சோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கோட்டங்களிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் 80 தாபாக்காள், ஓட்டல்களில் போலீசார் சோதனை செய்தது, 350 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் இருப்பிடம், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்தும் விசாரித்தனர். இதில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகள் குறித்து சோதனை நடத்தினர். இதில் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் 32 பேர் மீது ஆயுத வழக்கு, கஞ்சா, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 32 பேரை ஜெயிலில் அடைத்தனர். 12 பேர் நன்னடத்தை பிணைய சான்றிதழின் கீழ் விடுவித்தனர்.
இதேபோல் காந்திபுரம் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையங்களிலும் போலீசார், போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தி ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே கோவை மாநகரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஓராண்டுக்கு கோவையை விட்டு வெளியேற வேண்டும் என போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரிலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர் வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறாதவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இப்படி கோவை மாவட்டம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக போலீசார் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகள் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் இங்கிருந்தால் நம் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என பயந்து கோவையில் உள்ள பல ரவுடிகள் ஊரை காலி செய்து, விட்டு வெளியூர்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.
கோவையில் நடந்து வரும் சோதனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-
பல மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், கோவையில் வந்து பதுங்கி கொள்கிறார்கள்.
அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். முக்கிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
- ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன், முன்மாதிரி சுகாதார நிலையமாக இருப்பதாக அங்கிருந்த டாக்டர்களை பாராட்டினார்.
கோவை:
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை கோவை மாவட்டம் புகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்த டாக்டர்களுடன் இணைந்து திடீர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அவசரகால இதய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருந்த நோயாளிகளின் பெயர் விவரங்களை குறித்துக்கொண்டார்.
பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட நோயளாளிகளை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார். மேலும் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த நோயாளிகளிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களின் சிகிச்சை முறை எப்படி இருந்தது, உங்களின் உடல்நிலை தற்போது எந்த வகையில் மேம்பட்டு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
அதன்பிறகு அந்த நோயாளிகளிடம் தொடர்ந்து மேல்சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களா என்ற தகவலையும் உறுதிப்படுத்திக்கொண்டார். அப்போது அவர்கள், தாங்கள் பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பதாக அமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு இருந்த மேலும் பல்வேறு பதிவேடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன், முன்மாதிரி சுகாதார நிலையமாக இருப்பதாக அங்கிருந்த டாக்டர்களை பாராட்டினார்.
சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தியபோது அவருடன் மாவட்ட சுகாதார நல அலுவலர் டாக்டர் பாலுசாமி, புகலூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், உதவி மருத்துவர் டாக்டர் இலக்கியா மற்றும் நர்சுகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் சுப்பிரமணியன் ஊட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று கோவை வழியாக சென்றார். அப்போது அவர் அதிரடியாக புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
- துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
- 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை காலை 11 மணிக்கு கோவைக்கு வருகை தருகிறார்.
கோவை விமான நிலையத்தில் அவருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து அவர் கார் மூலமாக வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரிக்கு செல்கிறார்.
அங்கு நடைபெறும் வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் அவர், வனக்காவலர்களுக்கு ஆயுதங்கள் வழங்குகிறார்.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுமுகை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டையில் ரூ.19.50 கோடி மதிப்பில் 20 ஹெக்டேர் பரப்பளவில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஆக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அத்துடன் கோவை மாவட்டத்தில் ரூ.38.08 கோடி மதிப்பில் 69 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.61.15 கோடி மதிப்பில் 140 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், வன உயிரின காப்பாளர், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ளும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார்.
ஆக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையொட்டி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மைதானத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
விழாவில் கோவை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி மற்றும் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடும் பணியும் நடந்து வருகிறது. அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.
- தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார்.
கோவை:
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது. புதிதாக 7000 தெர்மல் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி, 2000 பேட்டரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 2030-ம் ஆண்டு வரை பிரச்சனை இருக்காது.
எங்காவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்பட்ட மின்தடை உடனே சரி செய்யப்பட்டு இருக்கும்.
பொதுமக்கள் இதுகுறித்து உடனே புகார் கூறினால் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து நடவடிக்கை எடுத்து சரி செய்வார்கள். இதற்காக மின்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிலர் இந்த அரசு குறித்து ஏதையாவது தெரிவித்து, இவர்கள் கீழே விழமாட்டார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடக்காது. தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலமைச்சர் எடுத்து வரும் சீரிய திட்டங்களால் தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. இதை வெல்ல தமிழக முதலமைச்சர் மாநில முதல்-மந்திரிகள், அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். இதிலும் வெற்றி பெறுவோம்.
மதுவிலக்கு பொறுத்தவரை ஒரு தலைவர் 2023-ம் ஆண்டில் கூறிய கருத்தையும், இப்போது அவர் கூறிய கருத்தையும் நாம் பார்த்து வருகிறோம். அடிக்கடி பேச்சை மாற்றிக் கொள்ளக் கூடாது.
இன்று நடைபெறும் போராட்டம் குறித்து கேட்கிறீர்கள். கோமாளிகள் செயல்களுக்கு நான் பதில் கூற முடியாது. அரசு நிகழ்ச்சி இதில் அரசியல் பேச வேண்டாம்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வனத்துறை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.108 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.67 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 39 ஆயிரத்து 494 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் பவன் குமார், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர்.
கோவை:
சென்னையை தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலை பகுதிகளில் 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்புதலோடு, கையகப்படுத்த தேவையான நிலங்கள் சர்வே செய்வது, நிலத்திற்கு கீழ் உள்ள சேவைகள் என்னென்ன என்பதை அறிவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளது.
இந்த பணியை மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உள்ள சந்திப்பில் தொடங்கியுள்ளது.
மெட்ரோ ரெயில் இயங்க உள்ள 2 வழித்தடங்களிலும் நிலத்துக்கு கீழ் உள்ள பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் கியாஸ் குழாய்கள், மின்புதை வடம், தொலை தொடர்பு வயர்கள் போன்ற சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குழுவினர் சரியாக பணிகளை செய்கிறார்களா என, மெட்ரோ ரெயில் நிறுவன துணை மேலாளர் கோகுல், உதவி மேலாளர் வினோத்குமார் ஆகியோர் கோவையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு.
- உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம்
நீலாம்பூர்:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விசைத்தறி கூடங்கள் அனைத்து மூடப்பட்டு அந்த பகுதியே தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடியது. கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று 3-வது நாளாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.
- காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னாஜிராவ் பகுதியை சேர்ந்தவர் ராஜீக் அகமது. இவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார்.
இதுதவிர ராஜீக் அகமது அந்த பகுதியில் சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்து கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை, இவரது வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.
அவர்கள் நேராக வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாதபடி மூடினர். பின்னர், வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் இந்த சோதனையானது நடந்தது.
இந்த சோதனையின்போது, வீட்டில் ராஜீக் அகமதுவும் வீட்டில் இருந்தார்.
அவரிடம் அமலாக்கத்துறையினர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவரும் அவர்கள் கேட்டவற்றுக்கு பதில் அளித்தார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.
இவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் எதற்காக சோதனை மேற்கொள்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. சோதனை முடிவில் தான் எதற்காக இந்த சோதனை நடந்தது. வீட்டில் இருந்து ஏதாவது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பதும் தெரியவரும்.
அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு ராஜீக் அகமதுவின் வீட்டின் முன்பு 18 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவரது வீட்டில் சோதனை நடப்பது அறிந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முற்றுகையிட்டு, எதற்காக சோதனை என கேட்டனர்.
அவர்கள் உரிய பதில் அளிக்காததால் வீட்டின் முன்பு நின்று கண்டன கோஷங்களை கட்சியினர் எழுப்பினர்.
இதேபோல் மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.