என் மலர்
கோயம்புத்தூர்
- தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
- மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா அரங்கத்தில் வள்ளி கும்மபி நடனம் மூலம் கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற 16,000 பெண்களுக்கு வாழ்த்துகள். வள்ளிக்கும்மி விழாவில் 16,000 பெண்கள் பங்கேற்றது என்பது மிகப்பெரிய சாதனை.
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்.
2026 சட்டமன்ற தேர்தலி்ல திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மேற்கு மண்டல வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி உள்ளது.
தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.
தொகுதி மறுவரையறை மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்.
40க்கு 40 வெற்றி என்பது மக்கள் நமது திராவிட மாடல் ஆட்சிக்கு கொடுத்த அங்கீகாரம்.
நமக்கு நிதியை முறையாக வழங்கும் மத்திய அரசு இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை படைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டன.
- கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் சிறப்பு நீதிபதி முன்பு 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமார், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் கொடுத்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை நடந்துள்ளது. 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டன.
2 மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அரசு தரப்பு சாட்சியங்கள் முடிந்த நிலையில், இருதரப்பிடமும் கேள்விகள் கேட்டு பதில் பெறுவதற்காக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதற்காக குற்றம் சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமார், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேரும் சேலம் மத்திய ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் சிறப்பு நீதிபதி முன்பு 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
இதையடுத்து வழக்கு விசாரணையை 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- இரும்பு கம்பியை எடுத்து வந்து ரம்யாவை தாக்க முயன்றார்.
- 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை உருமாண்டம்பாளையம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை ரம்யா வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டிற்கு எரிவாயு சிலிண்டர் போடுவதற்காக ஆட்டோ ஒன்று வந்தது.
அப்போது அந்த சாலையில் ஆட்டோ வர முடியாதபடி இருசக்கர வாகனம் ஒன்று நின்றிருந்தது. குறுகலான சாலை என்பதால் 2 வாகனங்கள் வரமுடியாது. இதை பார்த்த அந்த பெண், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம், வாகனத்தை எடுத்து அருகே உள்ள வீட்டின் முன்பு சாக்கடை மேல் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் சிலாப்பில் நிறுத்துமாறு கூறியதாக தெரிகிறது.
இவர் கூறியதை அந்த வீட்டின் உரிமையாளரான செங்காளியப்பன் (வயது60), அவரது மகன் ராஜேஷ்(37), ஆகியோர் யாரை கேட்டு எங்களது வீட்டின் வாசலில் உள்ள சிலாப் மேல் வண்டியை நிறுத்த கூறினாய்? என ரம்யாவிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளாலும் வசைபாடினர்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜேஷ் இரும்பு கம்பியை எடுத்து வந்து ரம்யாவை தாக்க முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து, ரம்யாவை காப்பாற்றி அங்கிருந்து அனுப்பினர்.
அவர் அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு செங்காளியப்பனின் உறவினரான காப்பீடு ஏஜென்சி முகவரான சுந்தர்ராஜன்(50) வந்தார்.
அவர் இங்கு என்ன நடந்து என தெரியாமேலேயே வந்த வேகத்தில் ரம்யாவை தனது காலால் எட்டி உதைத்தார். மேலும் ரம்யாவின் கையை பிடித்து முறுக்கி, அவரை கீழே தள்ளி தாக்கினார்.
இதை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினர், எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் ஓடி சென்று தடுத்தார். ஆனாலும் அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். பெண்ணை தாக்கும் வீடியோவை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ரம்யா கூறியதாவது:-
செங்காளியப்பன் எப்போதும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் என்று கூட பாராமல் பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும் செங்காளியப்பனின் மகன் ராஜேஷ் என்னை அடிக்க இரும்பு ராடை எடுத்து வந்ததாகவும், சுந்தரராஜன் அடித்தபோது, அருகில் இருந்தவர்கள் என்னை காப்பாற்றினர். இல்லையென்றால் அவர்கள் என்னை கொன்று இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணை தாக்கிய சுந்தர்ராஜன், செங்காளியப்பன், அவரது மகன் ராஜேஷ் ஆகிய 3 பேர் மீதும் பொது இடத்தில் பெண்ணை மானபங்க படுத்துதல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண்ணை தாக்கிய சுந்தர்ராஜன் வெள்ளகிணர் பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார்.
- ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர்.
- எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
வடவள்ளி:
கோவை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என இந்த கோவில் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்கள் நிறைவு பெற்று விட்டது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கல இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. மேலும் முதல் கால வேள்வி, 2-ம் கால வேள்வி, 3-ம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றது.
திருச்சுற்று தெய்வங்கள், அடிவாரத்தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் எண் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது.
இதையடுத்து கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல், மூலவரிடம் இருந்து யாகசாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று 4 மற்றும் 5-ம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமறை பாராயணம் மற்றும் 6-ம் கால வேள்வி பூஜை நடந்தது.
அதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜபெருமாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடும் நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை யொட்டி அதிகாலை முதலே மருதமலை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணித்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.

கோவில் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் முருகப்பெருமனை சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதனை பக்தர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை யொட்டி கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவில் படிக்கட்டுகள், மலைப்பாதைகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

பக்தர்கள் வசதிக்காக மலைப்படிக்கட்டுகளில் பச்சைப்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே குடிநீர் வசதியும், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை 4.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் பகுதியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
- யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன.
- நாளை முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வடவள்ளி:
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 7-ம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது.
இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை (4-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. கோவிலில் பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன.
கோபுரங்களில் புதிய கலசங்கள் பொருத்துதல் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவில் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
நேற்று மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை 9 மணிக்கு 4-ம் கால வேள்வி பூஜை நடத்தப்பட்டது. மாலை 4.30 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை (4-ந் தேதி) காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது.
முன்னதாக நாளை அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கு, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து மூலவருக்கு திருக்குடங்கள் ஏந்தி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி, காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி கோபுர விமானம், ஆதி மூலவர் கோபுர விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், 9 மணிக்கு ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பா பிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடக்கிறது.
டிரோன் உதவியுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
படிப்பாதை வழியாக வரும் பக்தர்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில் வழிதோறும் பச்சைப்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவை-மருதமலை சாலையில் நாளை முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்த பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட பல இடங்களில் வாகன நிறுத்த வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
- ஆன்மிக அறிவு இருந்தால் மட்டும்தான் ஒரு வாழ்க்கையை சமமாக பார்க்கக்கூடிய ஒரு பண்பு கிடைக்கும்.
- நம்முடைய மதத்தை உயர்வாக நினைக்கும் ஒரு சிலர் மற்ற மதத்தை பற்றி தாழ்வாக நினைக்கிறார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரையில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
கற்றல் என்பது 20 சதவீதம் மட்டுமே பள்ளிக்கூடத்தில் கிடைக்கிறது. 80 சதவீதம் வெளியே கிடைக்கிறது. வெளியே கிடைக்கும் அறிவை ஊட்டுகின்ற பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
டவுன் பஸ்சில் ஒரு குழந்தை ஏறி இறங்குகிறது என்றால் அந்த அறிவு கிடைக்கிறது. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் அதை ஒரு குழந்தை பார்த்தால் அங்கு அறிவு கிடைக்கிறது. ஒரு வீட்டிற்குள் தந்தை, தாய் எப்படி நடந்து கொள்கிறார்கள் அதை பார்த்து குழந்தைக்கு அறிவு கிடைக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம். வீட்டில் அப்பா அம்மாவை சரியாக நடத்தவில்லை என்றால் ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்ற அறிவு குழந்தைக்கு மனதுக்குள் போய்விடும். வீட்டில் அப்பா அம்மாவை எப்படி அழைத்து பேசுகிறார், வேலைகளை எப்படி பகிர்ந்து செய்கிறார்கள், அந்த வீட்டில் பெரியோர்களுக்கான மரியாதை எப்படி இருக்கிறது. இந்த 80 சதவீதம் கற்றல் என்பது பள்ளிக்கூடத்திற்கு வெளியே தான் நடக்கிறது.
ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது. நாம் குழந்தைக்கு கற்றல் அறிவை வெளியே கொடுத்தால் மட்டும் தான் இங்கே கிடைக்கக்கூடிய 20 சதவீத கற்றலை முழுமையாக கிரகித்து அந்த குழந்தை சுவாமி விவேகானந்தர் கேட்ட முழுமையான ஒரு குழந்தையாக இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வரும்.
ஆன்மிக அறிவு இருந்தால் மட்டும்தான் ஒரு வாழ்க்கையை சமமாக பார்க்கக்கூடிய ஒரு பண்பு கிடைக்கும்.
secular education என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அதன் அர்த்தம் எந்தவொரு மதத்தையும் சிறுமைப்படுத்தாமல் இருப்பது தான். எந்தவொரு மதத்தை பற்றியும் பேசாமல் இருப்பது secular education கிடையாது.
ஒரு மதத்தை சிறுமைப்படுத்தாமல் எல்லா மதத்தையும் சமமாக மதிக்கக்கூடிய ஒரு கல்வி secular education.
இன்றைக்கு ஒரு மதத்தை சார்ந்த, எல்லா மதத்தையும் சொல்லிக்கொடுக்கக்கூடிய கல்வி ஒரு பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டும்.
அரசு சொல்கிறதோ இல்லையோ, பகவத் கீதையின் 18 அத்தியாயத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
8 முதல் 12-ம் வகுப்பு முடிக்கும்போது அந்த குழந்தைக்கு ஸ்லோகம் தெரிந்து இருக்கும். பகவத் கீதையின் கருப்பொருள் தெரிந்து இருக்கும். மகாபாரதம் ஒரு பாடமாக சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த குழந்தை மேடையில் நாடகம் போடும்போது ஒரு பகுதியை எடுத்து செய்ய வேண்டும். அதே குழந்தைக்கு குரானில் என்ன சொல்கிறார்கள் என்ற புரிதல் இருக்க வேண்டும். அது இந்து மதத்தை பின்பற்றக்கூடிய குழந்தையாக இருந்தாலும் மற்ற மதத்தின் அடிப்படையை சொல்லிக்கொடுத்து தான் பள்ளிக்கூடத்தை விட்டு அனுப்ப வேண்டும். கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையும் அந்த குழந்தைக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
Lent என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? 7-வது நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சினகாக் யூத கம்யூனிட்டி சொல்கிறார்களே அது என்ன? இதை எல்லாம் அந்த குழந்தைக்கு சொல்லிக்கொடுத்து அனுப்பினால் தான் இந்து, முஸ்லீம் சண்டை வராது.
நம்முடைய மதத்தை உயர்வாக நினைக்கும் ஒரு சிலர் மற்ற மதத்தை பற்றி தாழ்வாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு மதத்தை பற்றிய புரிதல் இல்லை.
நாம் secular education என்ற போர்வையில் பள்ளிக்கூடத்தில் அதை எல்லாம் பிடுங்கி எறிந்து விட்டோம்.
பள்ளிக்கூடத்தில் எல்லா மதத்தை பற்றியும் அடிப்படை புரிதல் ஒரு குழந்தைக்கு தெரிந்தால் மட்டும் தான் அந்த குழந்தை ஒரு மனிதனை சகோதரனாக, சகோதரியாக, எல்லா மனிதனையும் சமமாக, இன்னொரு மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கையில் எடுக்கும்.
நான் எல்லா பள்ளிக்கூடத்திலும் என்னுடைய பேச்சில் இதை சொல்கிறேன். குழந்தைக்கு ஆன்மிகத்தை, தர்மத்தை, மாற்று மதமாக இருந்தாலும் எடுத்து சொல்லிக்கொடுங்கள். 12-ம் வகுப்பிற்குள் அவர்களுக்கு என்ன மனது உருவாகிறதோ அது தான் அவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு அது உருவாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்கள் நிலையான நீர் மேலாண்மை, பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் குறித்து கிராமவாசிகளுடன் விவாதித்தனர்.
- நிலையான நீர் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக கிராம சபை செயல்பட்டது.
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 29, 2025 (நேற்று) அன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள சமூக மண்டபத்தில் நீர்ப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மாணவர்களையும் உள்ளூர்வாசிகளையும் ஒன்றிணைத்து கிராம சபை கூட்டத்தை நடத்தின.
மாணவர்கள் நிலையான நீர் மேலாண்மை, பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் குறித்து கிராமவாசிகளுடன் விவாதித்தனர்.

மழைநீர் சேகரிப்பு, திறமையான நீர்ப்பாசன முறைகள் மற்றும் நீர் வீணாவதைக் குறைத்தல் உள்ளிட்ட நீர்ப் பாதுகாப்பிற்கான நடைமுறை நடவடிக்கைகளை வலியுறுத்தினர்.
நிலையான நீர் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக கிராம சபை செயல்பட்டது.
எதிர்கால சந்ததியினருக்கு நீர் வளங்களைப் பாதுகாக்க சமூகம் தலைமையிலான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த நிகழ்வு வலுப்படுத்தியது.
- யாக பூஜைகளுக்காக கோவில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- வருகிற 1-ந்தேதி மாலை 4.35 மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி தொடங்குகிறது.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடைசியாக கடந்த 18.3.2013 அன்று கும்பாபிஷேகம் நடந்தது.
12 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன.
திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று மாலை தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, கிராமசாந்தி பூஜை ஆகியவை நடக்கிறது.
நாளை (31-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள் மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.
யாக பூஜைகளுக்காக கோவில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வருகிற 1-ந்தேதி மாலை 4.35 மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி தொடங்குகிறது.
அன்று முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருளச் செய்தல், மூலாலயத்தில் இருந்து யாகாலயத்துக்கு திருக்குடங்கள் எழுந்தருளுதல் உள்ளிட்டவை நடக்கின்றன.
2-ந் தேதி காலை 2-ம் கால யாக வேள்வி, மாலை 3-ம் கால யாகவேள்வி, 3-ந் தேதி காலை 4-ம் காலயாக வேள்வி, மாலை 5-ம் கால யாகவேள்வி, 4-ந் தேதி காலை 4.30 மணிக்கு ஆறுமுகனுக்கு 6-ம் கால யாகவேள்வி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
தொடர்ந்து அன்று காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் சமகால திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.
காலை 9.05 மணிக்கு ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேசுவரர் ஆகியோருக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளன.
கும்பாபிஷேகத்தை ஒட்டி ராஜகோபுரத்தின் மீது 8 அடி உயரம், 6 அடி அகலத்தில் ஓம் என்ற எழுத்தும், அதன் மீது 24 அடி உயரம், 8 அடி அகலத்தில் வேல் வடிவமும் எல்.இ.டி.யால் தயாரித்து பொருத்தப்பட்டு உள்ளது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், அறங்காவலர் குழுவினரும் செய்து வருகிறார்கள். அதிகாரிகள் கூறுகையில் கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளின் மண்டபங்கள் மீது சுமார் 750 பேரும், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் நின்று கும்பாபிஷேகம் காண 1,500 பேரும் அனுமதிக்கப்படுவர்.
மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. யாக சாலை பூஜைகள் 50 சதவீதம் தமிழ் மொழியிலும், 50 சதவீதம் வழக்கமான முறையிலும் நடத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக படியில் மண்டபம் பகுதி உள்ளிட்ட இடங்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- போராட்டம் காரணமாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
- கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.
வால்பாறை:
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக வால்பாறையில் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் தரப்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தங்கள் பணியை புறக்கணித்து, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கார், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் வால்பாறை நகரில் உள்ள ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. நகராட்சி மார்க்கெட்டில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
இந்த கடையப்பு போராட்டம் காரணமாக வால்பாறையில் உள்ள நகராட்சி மார்க்கெட் மற்றும் கடைவீதி பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
இதேபோல் வால்பாறை நகரை சுற்றியுள்ள முடீஸ், சோலையார் அணை உள்பட வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் எஸ்டேட்டுகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.
- யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.
- மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடவள்ளி:
கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மருதமலை முருகன் கோவிலில் வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.
மேலும் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அறங்காவலர் குழுவினர் கும்பாபிஷேக அழைப்பிதழையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் சக்தி கலசங்களை வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் மாலை 5 மணி முதல் 3-ந்தேதி வரை பக்தர்கள் அனைவரும் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை யாக சாலையில் தரிசனம் செய்யலாம்.
ஏப்ரல் 4-ந்தேதி கும்பாபிஷேக விழா முடிந்ததும் மீண்டும் வழக்கமான நடைமுறையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு சன்னதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் மலை மீது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.
பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், கோவில் பஸ்கள் மூலமாகவும் மலைக்கோவிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருகிறது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 30 விமானங்கள் சேவை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 179 சர்வதேச விமானங்களும், 1,651 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 1,830 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
இது கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.43 சதவீதம் அதிகமாகும்.
சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 31.23 சதவீதம் கூடுதலாகும்.
இதேபோல சர்வதேச விமானங்களில் 180.1 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு விமானங்களில் 764.7 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 944.8 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.52 சதவீதம் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருவதாகவும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமான நிலைய முனையத்தை விரைவாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர்.
- சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கஞ்சா, போதைப்பொருள் விற்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகர போலீசாருக்கு கோவை மாநகர பகுதிகளில் உயர் ரக போதைப்பொருட்கள் விற்க கும்பல் ஒன்று இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் தனபால் தலைமையிலான போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட், அம்மா உணவகம் கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக 7 பேர் நின்றிருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர். பின்னர் அவர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் எம்.டி.எம்.ஏ. பவுடர், கொகைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள் இருந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி இத்தலார் போத்தியாடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது39), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆனந்தூரை சேர்ந்த விநாயகம் (34), கோவை பி.என்.பாளையம் கிருஷ்ணகாந்த் (35), வடவள்ளி மகாவிஷ்ணு (28), சுங்கம் பைபாஸ் ஆதர்ஷ் (24), நஞ்சுண்டாபுரம் ரித்தேஷ் லம்பா (41), ரோகன் செட்டி (30) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
கைதான மணி கண்டன் என்பவர், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ரிதேஷ் லம்பா மூலமாக மகராஷ்டிராவை சேர்ந்த ஜேக்கப் பிராங்களின் என்பவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள் மற்றும் கொகைன் வாங்கி, இவர்களுடன் சேர்ந்து இங்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் கிரிஷ் ரோகன் செட்டி என்பவர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து கஞ்சா மற்றும் கிரீன் கஞ்சா, உயர் ரக போதைப்பொருட்களை கோவைக்கு வாங்கி வந்து, அதனை இங்கு பதுக்கி வைத்ததும், அதனை கோவையில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
போதைப்பொருள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவர்கள் அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்று சம்பாதித்த பணத்தில் கோவைப்புதூரில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகின்றனர். அத்துடன் காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிதாக வீடும், ஒரு வீட்டு மனை வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
மேலும் போதைப்பொருள் விற்று அதில் சம்பாதித்த அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு 12 வங்கி கணக்குகள் இருப்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், அதனை முடக்குவதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
கைதானவர்களில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விஜயலட்சுமியின் மகன் ஆவார்.
கைதானவர்களிடம் இருந்து போலீசார் 24.40 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், 12.47 கிராம் எம்.டி.எம்.ஏ. பவுடர், 92.43 கிராம் கொகைன், 1.620 கிலோ கிரீன் கஞ்சா, 1 கிலோ 16 கிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப்பணம், பணம் எண்ணும் எந்திரம், போதை பொருள் எடை பார்க்கும் எந்திரம், பீர் பாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள் என ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.