search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ``ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டினார்: கொடுக்காததால் பாலியல் புகார்- போலீஸ் இணை கமிஷனரின் மனைவி பேட்டி
    X

    ``ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டினார்: கொடுக்காததால் பாலியல் புகார்"- போலீஸ் இணை கமிஷனரின் மனைவி பேட்டி

    • முகம் தெரியாதவர்களுக்கு கூட, உதவிகளை செய்துள்ளார்.
    • குடும்பமே சிதைந்து போய் நிற்கிறது.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்குமார் மீது 2 பெண் போலீசார் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக அவர் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பரபரப்பு திருப்பமாக போலீஸ் அதிகாரி மகேஸ்குமார் மனைவி அனுராதா பெண் போலீஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

    எனது கணவரை திட்டமிட்டு பழிவாங்கி உள்ளனர் என்றும் பாலியல் புகார் அளித்த பெண் போலீஸ் எனது கணவரோடு நெருங்கி பழகியவர் எனவும் அவர் கூறியிருப்பது, காவல்துறை வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது.

    இதுதொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியின் காதல் மனைவியான அனுராதா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    எனது திருமண நாளான நேற்று இடி விழுந்தது போன்று உணர்கிறேன். இது போன்று ஒரு பழிவாங்கும் செயலை அந்த பெண் செய்திருப்பது எனக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

    எனது கணவரை நள்ளிரவு 12 மணிக்கு எழுப்பி அவரது சஸ்பெண்டு உத்தரவை வழங்கியதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரது சின்சியரான உழைப்புக்கு கிடைத்த பெரிய அவமானமாகும்.

    எனது கணவர் வேலை செய்த இடங்களில் எல்லாம் தங்கமாகவே வேலை செய்துள்ளார். 'தெய்வமே' என்று அழைக்கும் அளவுக்கு அவர் எல்லோருக்கும் நல்லது செய்துள்ளார்.

    முகம் தெரியாதவர்களுக்கு கூட, உதவிகளை செய்துள்ளார். பெண் காவலரின் செயலால் எனது கணவர் பாதிக்கப்பட்டு குடும்பமே சிதைந்து போய் நிற்கிறது.

    பெண் போலீசுக்கு எனது கணவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார் என்று கூறுகிறார்கள்.

    ஆனால் அதுபோன்று எதுவுமே இல்லை. இருவருக்கும் இடையே தவறான உறவு இருந்தது.

    இது தெரிந்ததும் பலமுறை இருவரையும் கண்டித்துள்ளேன். அந்த பெண்ணிடம் போனில் கெஞ்சியுள்ளேன். எனக்கும் ஒரு குடும்பம் உள்ளது. உனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எனவே இது போன்று செய்யாதீர்கள் என்று கூறியுள்ளேன்.

    எங்கள் குடும்பமே போலீஸ் குடும்பம் என்பதால் அநீதி நடந்தால் அதனை எதிர்த்து கேட்பதே எனது குணமாக உள்ளது.

    இதுபோன்ற சூழலில் எங்கள் குடும்பத்தை பிரிக்கும் எண்ணத்தில் புகார் அளித்திருப்பது தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    எனது கணவரிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவரும் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார். தற்போது மறைமலைநகரில் பெண் போலீஸ் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு எனது கணவர் பல வழிகளிலும் உதவிகளை செய்துள்ளார்.

    இருப்பினும் வீடு கட்டுவதற்காக ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த பணத்தை கொடுக்காத காரணத்தாலேயே அவர் புகார் அளித்துள்ளார்.

    கடந்த ஓராண்டாகவே எனது கணவருக்கும் பெண் போலீசுக்கும் இடையே பழக்கம் இருந்து வரும் நிலையில், நாளடைவில் அது சரியாகிவிடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த பெண் இப்படி செய்துள்ளார்.

    இதன் மூலம் காவல் துறையில் 25 ஆண்டுகளாக வளர்த்தெடுத்த எனது கணவரின் பெயர் சிதைந்து போயுள்ளது. அவரது காக்கி சட்டையை கழற்ற நினைப்பது உயிரை பிச்சி எடுப்பது போல உள்ளது.

    காக்கிச் சட்டையில்தான் எங்களது காதலே மலர்ந்தது. எனவே பெண் காவலர் அளித்துள்ள புகாரில் அவசரப்பட்டு எனது கணவரின் பெயரை கெடுக்கக் கூடாது என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

    பெண் காவலர் எனது கணவரிடம் ஐ.பி.எல். டிக் கெட்டை இலவசமாக கேட்டு வாங்கிச் சென்று கிரிக்கெட் பார்த்துள்ளார். நகை-பணத்தை பறித்துள்ளார்.

    மறைமலைநகரில் கட்டி வரும் வீட்டுக்கு பெண் காவலர் ரூ.25 லட்சம் கேட்டதும் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய எனது கணவர் உள் அலங்கார பணிகளுக்காக ஒருவரை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

    இருவரும் விருப்பப்பட்டு ஒன்றாக பழகிய பின்னர் எப்படி பாலியல் துன்புறுத்தல் என புகார் அளிக்க முடியும்?

    சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் எனது கணவருடன் சொகுசு விடுதிக்கும் சென்று தங்கியுள்ளார். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். நல்லபடியாக பேசக்கூடிய விஷயங்கள் என்றால் அலுவலகத்தில் வைத்தே பேசிக் கொள்ளலாமே. இப்படி பலமுறை வெளியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

    எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்? என ஐ.பி.எஸ். அதிகாரி மீது புகார் அளித்துள்ள பெண் அவர் அறை எடுத்து வெளியில் தங்குவதற்கு என்னை அழைத்தார் என கூறி புகார் அளிக்காதது ஏன்? தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எனது கணவர் மீது காழ்ப்புணர்ச்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

    என்ன நடந்தது? என்பது பற்றி எங்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் அளிக்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் போலீசுக்கு ஜிமிக்கி உள்ளிட்ட பல நகைகளையெல்லாம் வாங்கி கொடுத்துள்ளார்.

    இதுபோன்ற பரிமாற்றங்கள் அடிக்கடி நடந்துள்ளன. ரூ.5 ஆயிரம் 10 ஆயிரம் என அடிக்கடி கேட்டு வாங்கியுள்ளார்.

    கடந்த 7-ந் தேதி கூட எனது கணவருடன் வெளியில் சென்று பெண் போலீஸ் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். (இதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.) இருவரும் விரும்பியே இப்படி வெளியில் சென்று வந்தார்கள்? என்பதை வெளி உலகுக்கு தெரியப்படுத்தவே இதையெல்லாம் தெரிவித்துள்ளோம்.

    இவ்வாறு ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி தெரிவித்துள்ளார்.

    அதிகாரி மனைவி பேட்டியின் போது வெளியிட்ட வீடியோவில் ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ் குமாரும், பெண் போலீசும் விடுதியில் தங்குவதற்காக ஒன்றாக செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இதன் மூலம் சென்னை காவல் துறையில் ஐ.பி.எஸ். அதிகாரி-பெண் போலீஸ் இடையே இருந்து வந்த காதல் விவகாரம் பூதாகரமாக வெடித்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    Next Story
    ×